சங்கரனின் வைரக் கூடம் – 4 – வாழக்கையெனும் ஓடம்

வலைதள தமிழ் ஒலிப்பதிவு தொடரின் இணைப்பு

https://soundar53.substack.com/podcast

முகவுரை

சங்கரரின் வைரக்கூடத்தில், வைராக்கியம் எனும் வைரத்தை பட்டை தீட்டி மெருகேற்றிட,  நிலையாமையை உணர்ந்து, உடல், ஈட்டிய தனம் (செல்வம்),  உடல் மீதுள்ள பற்றுதலின் அடிப்படையிலான காமம் என்ற மூவகைப் பற்றினை விட வேண்டும் என்ற மூன்று செயல்முறைகளை அறிந்து, மன உறுதியுடன், மறுபடியும் கூடத்திற்கு விஜயம் செய்யும் அனைவருக்கும் மிக்க நன்றி. வருக, வருக!

நம் சொந்த (குடும்பம், உடல்நலம் மற்றும் செல்வம்) பாதுகாப்பு, மன அமைதி என்று வரும்போது அன்றாட வாழ்வில் நாம் இதை முழுமையாகப் புரிந்து கொள்கிறோம்; இல்லையெனில், காப்பீடு மற்றும் ஓய்வூதிய நிதி நிறுவனங்கள் எதுவுமே இவ்வுலகில் தேவையில்லை/இருக்காது.

ஒருபுறம், வாழ்வு நிலையற்றது, அதற்காக காப்பீடு தேவை என்று உணர்ந்த நாம், மறுபுறம் நம்மை அறிய, வாழ்வில் மறைகள் கூறியபடி நடக்க வேண்டும் என்று வரும்போது, எந்த மனநிலையில் இருக்கிறோம்?

“மகனே! வாரம் ஒருமுறையாவது பகவத் கீதையைப் படிக்கலாம் வா” - தந்தையோ அல்லது தாத்தாவோ,

“இதெல்லாம் உங்களைப் போன்ற ஓய்வு பெற்றவர்களுக்காக அப்பா/தாத்தா. எங்களுக்கு தலைபோகும் வேலைகள் உள்ளன, தீர்க்க வேண்டிய சிக்கல்கள் மற்றும் சமாளிக்க ஏராளமான போட்டிகள் மற்றும் சவால்கள் உள்ளன. உங்கள் டீன் ஏஜ் பருவத்தில் இருந்ததைப் போல், வாழ்க்கை எளிதானது அல்ல” - மகன்/மகள்/பேரக்குழந்தைகள்

நம் இல்லங்களில் அடிக்கடி கேட்கப்படும் உரையாடல், அல்லவா! இன்றைய காலக்கட்டத்தில் வீட்டில் ஒரு பெரியவருக்கும் இளைஞனுக்கும் இடையே நடைபெறும் மிகவும் பொதுவான உரையாடல் இது. இங்கே அடிப்படைக் கருப்பொருள், நாங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம், பகவத் கீதை போன்றவற்றைப் படிக்கும் நேரம் ஓய்வுக்குப் பிறகுதான், ஆக வாழ்க்கை கணிக்கக்கூடியது என்று முடிவு செய்கிறோம்.

ஆதிசங்கரர் இந்த இருவேறுபாட்டைப் புரிந்து கொண்டு நிலைமையின் அவசரத்தை உணர்த்துகிறார். ஆன்மிகக் குணத்தை வளர்த்துக்கொள்ள இப்போது உங்களுக்கு ஆரோக்கியம், மன மற்றும் அறிவுசார் திறன்கள் உள்ளன. எதிர்காலத்தில் என்ன இருக்கிறது என்று யாருக்குத் தெரியும்? எனவே, இந்த பொன்னான நேரத்தை உள்நோக்கிப் பார்த்து, உங்களைப் பற்றி அறிந்துகொள்ள பயன்படுத்துங்கள் என்று சங்கரர் அறிவுறுத்துகிறார்.

வாருங்கள், சங்கரனின் இந்த செயல்முறையை அறியலாம்.

சமஸ்க்ருத ஸ்லோகம்

नलिनीदलगतजलमतितरलं

तद्वद्जीवितमतिशयचपलम् |

विद्धिव्याध्याभिमानग्रस्तं

लोकं शोकहतं समस्तम् ||

தமிழ் ஒலிபெயர்ப்பு

நளினி த3ளக3த ஜலமதி தரளம்

தத்3வத் ஜீவித மதி3ச’ய சபலம் |

வித்3தி4 வ்யாத்4யபி4மான க்3ரஸ்தம்

லோகம் சோ’கஹதம் ச ஸமஸ்தம் ||

தமிழ் மொழிபெயர்ப்பு

தாமரை இலைமேல் தண்ணீர் போல

வாழ்க்கையில் என்றும் மிகவும் சஞ்சலம்

நோயும் பற்றும் விழுங்கிடும் உலகம்

துன்பம் ஒன்றே நிறைந்திடும் அறிவாய்

சமஸ்க்ருத சொற்களின் பொருள்

नलिनीदलगतजलमतितरलं - नलिनी दल गत जलं अति तरलं - நளினி த3ளக3த ஜலம் அதி தரளம் - தாமரை, இலையில,  நீர், நிலையற்ற

तद्वद्जीवितमतिशयचपलम् - तद्वद् जीवितं अतिशय चपलम् - தத்3வத் ஜீவிதம் அதி3ச’ய சபலம் - அது போல, வாழ்க்கை, மிகவும், நிலையற்றது

विद्धिव्याध्याभिमानग्रस्तं - विद्धि व्याधि अभिमान ग्रस्तं - வித்3தி4 வியாதி அபி4மான க்3ரஸ்தம் - அறிவாய், நோய், பற்று, விழுங்கிடும் (ஆளாகும்),

लोकं शोकहतं च समस्तम् - लोकं शोक हतं च समस्तम् - லோகம் சோ’க ஹதம் ச ஸமஸ்தம் - உலகம், துன்பம், பீடித்திருத்தல், முழுவதும்

விளக்கவுரை

தாமரை இலைமீது உள்ள நீர்த்துளியைப் போன்றே மனித வாழ்வும் நிலையற்றது. எங்கு நோக்கினும் நோய்களும், கர்வமும் தான் காணப்படுகின்றன. யாருமே தான் இன்பமாக இருப்பதாக நினைப்பது இல்லை. உலக வாழ்க்கைக்காக வீணாக அலையாதே! இது தான் இந்தப் பண்ணின் சாரம். இதை இப்போது ஆராய்வோம்.

இந்த ஸ்லோகத்தை விளக்க நாம் வேறெங்கும் செல்ல வேண்டாம். நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைப் பார்தாலே போதும்.

கொடிய வைரஸின் வருகை, அதைத் தொடர்ந்து வந்த கொரோனா தொற்றுநோய் (இப்போது கூட அது முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதா என்று கடவுளே அறிவார்) - இந்த உலகத்தில் நம்முடைய இந்த நிச்சயமற்ற காலத்திலும் கூட, பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களுக்கு பஞ்சமில்லை என்பதை நம் அனைவருக்கும் உணர்த்திடும் ஒரு வாழ்க்கைப் பாடம். உடல் ரீதியில் நோய், உணர்ச்சித் தளத்தில் பதற்றம், அறிவார்ந்த நிலையில் ஆணவம் தலைவிரித்தாடுவதைக் கண்டோம்.

இவை அனைத்தும் நமது அன்றாட அனுபவங்களே. இந்த மூன்று வகை மனக் கிளர்ச்சிகளுடன் வாழ நாம் பழகிவிட்டோம். அவைகளைக் கடந்து செல்ல முயற்சிக்க வேண்டும் என்ற உணர்வு இல்லாமல் வாழ்கிறோம். ஆகையினால் அதை கடக்க முயல்வதும் இல்லை.

பஜ கோவிந்தம் ஸ்லோகம் 4 இல், ஆதி சங்கரர், இந்த நமது அறியாமை மனதை தட்டி எழுப்ப முயற்சிக்கிறார். நமது வாழ்க்கை அநித்தியம் என்றும், அது வியாதி, ஏக்கம், மமதை, துக்கம் முதலிய பிணிகளைக் கொண்டதும் ஆக அமைந்துள்ளது என்ற தத்துவத்தை சுட்டிக்காட்டுகிறார் ஸ்ரீ சங்கரர்.

தடாகத்தில் மிதக்கும் தாமரை இலயில் தங்கி நிற்க்கும் நீர்த்துளிகள் போல, எப்படி அந்த தாமரை இலை காற்றில் ஆடும்போது தத்தளிக்கிறதோ அதுபோல்தான் நம் வாழ்க்கையும். எந்த நேரமும் அந்த நீர்த்துளிகள் தடாகத்தில் விழ்நேரிடலாம். அதுபோல் தத்தளித்துக் கொண்டிருக்கிற நம் வாழ்வு , எந்த நிமிடமும் முடியலாம். சாஸ்வதமில்லாத, துக்ககரமான உலக வாழ்க்கையை நம்பி ஏமாறாதே என்கிறார். இதைவிட வேறு உகந்த உவமை கிடைக்குமா? எவ்வளவு நளினமாக இந்த மிக பெரிய தத்துவத்தை போதிக்க இந்த உவமையை கைய்யாண்டிருக்கிறார்!

வாழ்க்கை என்பது அதிசய-சபலம் என்று ஸ்ரீ சங்கராச்சாரியார் கூறுகிறார். இதற்கு என்ன பொருள்? வாழ்க்கையை வீணடிக்க நேரம் இல்லை என்று அர்த்தம். செய்ய வேண்டியதை எதிர்காலத்திற்கு தள்ளிப் போடாதீர்கள். பொதுவாக விரும்பத்தகாத அல்லது கடினமானதை நாம் தள்ளிப்போடுவது இயல்பு. ஸ்ரீ சங்கராச்சாரியார், இது குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என்று கூறுகிறார்.

வியாதி (உடலில் நோய்) மற்றும் அபிமானம், (மனதில் உள்ள நோய்களான பற்றுதல் மற்றும் தற்பெருமை) தவிர, நம் வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும் மற்றொரு விஷயம் உள்ளது என்று ஸ்ரீ சங்கராச்சாரியார் சுட்டிக்காட்டுகிறார். மக்கள் எப்போதும் சோகத்தின் மயக்கத்தில் இருக்கிறார்கள்; இந்த உலகம் எப்பொழுதும் துக்கம் நிறைந்தது. இந்த தொற்றுநோய்களின் போது இவை ஒவ்வொன்றும் உலகம் முழுவதும் முழு காட்சிக்கு வைக்கப்பட்டன அல்லவா.

எனவே, எதற்காக நாம் காத்திருக்கிறோம்? கோவிந்தன் துதிக்கு வாழ்க்கையில் ஏன் முன்னுரிமை இல்லை? கடவுளை வழிபடுவதை விட வாழ்க்கையில் மிகவும் பயனுள்ள நாட்டங்கள் உள்ளன என்று நீங்கள் நினைத்தால், அந்த நாட்டங்கள் பெருமையையும், பற்றுதலையும், நோயையும் கொண்டு வந்து, துக்கத்தையோ அல்லது சோகத்தையோ ஏற்படுத்துகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள். எனவே, வாழ்க்கையின் உண்மையான தன்மையை உணர்ந்து, உங்களுக்கு கிடைக்கும் நேரத்தை சரியாகப் பயன்படுத்துங்கள்.

இதுவே இப்பண்ணின் சாரம்

தமிழ் இலக்கியத்தில் வாழ்வின் நிலையாமை

திருக்குறள்

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்பெருமை உடைத்துஇவ் வுலகு.

“உறங்குவது போலுந் சாக்காடுறங்கிவிழிப்பது போலும் பிறப்பு” (குறள் - 339)
என்ற குறள் சுட்டுகின்றது. எனவே இவ்வுலக வாழ்க்கை நிலையில்லாதது.

தொல்காப்பியம்
” பாங்கருஞ் சிறப்பி பல்லாற்றானுநில்லா வுலகம் புல்லிய நெறித்தே ” (தொல். பொருள். நூற். 78)என்ற தொல்காப்பிய அடிகள் நிலையாமைக் குறித்து குறிப்பிடுகின்றது. இதற்கு நச்சினார்க்கினியர் “ உயிரும் உடம்பும் செல்வமும் இளமையும் முதலியவற்றாலும் நிலைபேறில்லாத உலகம்” என்று குறிப்பிடுகின்றார்.

பட்டினத்தார் பாடல்

"பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்,
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்,
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்,
உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்,
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்”

“நீரில் குமிழி – நீர் மேல் எழுத்து
கண்துயில் கனவில் கண்ட காட்சி”

சித்தர் பாடல்

''நந்த வனத்திலோர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதைக்
கூத்தாடி கூத்தாடிப் போட்டு உடைத்தாண்டி''

என்ற சித்தர் பாடிய பாட்டினை நாட்டுப்புற மக்கள் தங்கள் பாட்டாகவே கருதி வாழ்ந்து வந்தமையை நாம் காணமுடிகிறது.

வாழ்க்கை நிலையற்றது என உணர்ந்து, வாழ்கின்ற நாட்களில் பயனுடையதாய் ஆக்காத, வாழ்வியல் தத்துவத்தை உணராத, மாந்தர்கள் இவ்வுடலை வீண் செய்து அழித்து விடுவதையே ''கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி'' என்ற வரி உணர்த்துகிறது.

அம்பலவாணக் கவிராயர்

இந்த உடம்பு ஒரு நீர்க்குமிழி போன்றது. புதல்வர், கிளை, மனை, மனைவி இவையெல்லாம் கானல் நீர். உயிரோ வெட்ட வெளிதனில் வைத்த தீபம். எனவே வீண்பொழுது போக்காமல் ஆண்டவனை நேயமொடு வழிபட அவனிடமே அருள் வேண்டி நிற்க வேண்டும் என்கிறார்.

காயமொரு புற்புதம் வாழ்வு மலைசூழ் தரும்காட்டில் ஆற்றின் பெருக்காம்கருணைதரு புதல்வர் கிளை மனை மனைவிஇவையெலாம்கானல் காட்டு ப்ரவாகம்மேயபுய பல வலிமை யிளமை அழகு இவையெலாம்வெயில் மஞ்சள், உயிர் தானுமேவெட்ட வெளிதனில் வைத்த தீபமெனவே கருதிவீண்பொழுது போக்காமலேநேயமுடனே தெளிந்து அன்போடுஉன் பாதத்தில்நினைவு வைத்து இரு போதிலும்நீர் கொண்டு மலர் கொண்டு பரிவு கொண்டர்ச்சிக்கநிமலனே யருள் புரிவாய் (19)
(காயம் = உடம்பு; புற்புதம் = நீர்க்குமிழி; பெருக்கம் = வெள்ளம்; கிளை = சுற்றம்; மனை = வீடு; ப்ரவாகம் = வெள்ளம்

முடிவுரை

பகவத் கீதையில் [13-9], பகவான் கிருஷ்ணர், எல்லா நேரத்திலும் நமக்கு பல்வேறு வகையான வலிகள் {ஜென்மத்தில்/பிறப்பில், ம்ருத்யு/மரணத்தில், ஜரத்தில்/முதுமையில், மற்றும் வியாதி/நோய், (ஜென்ம-மிருத்யு-ஜர-வியாதி-துக்கதோஷனு-தர்சனம்)} இருப்பதைப் பற்றி தொடர்ந்து சிந்தி என்று அறிவுரை வழங்குகிறார்.

இறைவனின் இந்த அறிவுரையைத் தான், ஆதி சங்கரர் இந்த பண்வழியாக நம் மூட மனதிற்கு நான்காவது செயல்முறையாகக் கொடுத்து நம்மை சிந்திக்க வைக்கிறார்.

சிந்திப்போம். செயல்படுவோம். அடுத்த செயல்முறைக்குத் தயாராகுவோம். அதுவரை

இறையருள் பெருக. வாழ்க வளமுடன்.

சங்கரனின் வைரக் கூடம் – 2 – செல்வம் நிலையாமை

தமிழ் வலைதல ஒலிப்பதிவுத் தொடர் இணைப்பு (Tamil Podcast Link)

https://soundar53.substack.com/podcast

முகவுரை

உடலுக்கும், உயிருக்கும் உள்ளது வெறும் குத்தகை ஒப்பந்தமே என்றும், யாக்கை நிலையற்றது என்றும் அறிந்து உணர்ந்து, இரண்டாவது முறையாக சங்கரனின் வைரக் கூடத்திற்கு பட்டை தீட்டி மெருகேற்றிக் கொள்ள வருகை தந்த, உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

இன்று நாம் அனைவரும் எதிர்கொள்ளும் செயல்முறைக்கு (diamond cutting and polishing process), செல்வம் நிலையாமை என்று பெயர். “ஸரீர அநித்யம்” என்பதை முதல் செயல்முறையில் வழங்கிய ஆதி சங்கரர், “தன அநித்யத்தை” இரண்டாவது செயல்முறை வழியே நம் மூட மனத்திற்கு கொடுக்கிறார்.

இந்த செயல்முறையை உள்வாங்கினால், பணம்/செல்வம் என்பவை, நிரந்தரமான மகிழ்வைத் தேடும் நமக்கு ஒரு கருவிகளே அன்றி அவைகளை அடைவதே நமது குறி அல்ல என்பது ஆழமாகப் பதியும்.

சமஸ்க்ருத ஸ்லோகம்

मूढ जहीहि धनागमतृष्णां

कुरु सद्बुद्धिं मनसि वितृष्णाम् ।

यल्लभसे निजकर्मोपात्तं

वित्तं तेन विनोदय चित्तम् ||

தமிழ் ஒலி பெயர்ப்பு

மூட4! ஜஹீஹி த4நாக3ம த்ருஷ்ணாம்

கு1ரு ஸத்3புத்3தி4ம் விஷயவித்ருஷ்ணாம் |

யல்லப4ஸே நிஜகர்மோபாத்தம்

வித்தம் தேன வினோத3ய சித்தம் ||

தமிழ் மொழிபெயர்ப்பு

மூடனே வெல்வாய் செல்வத் தாகம்

மனதினில் தணித்திடும் நல்லறி ஞானம்

மறை வழி ஈட்டிய செல்வம் போதும்

நிறைவடை என்றும் சிந்தையில் செல்வம்

சமஸ்க்ருத சொற்றொடர்களின் பொருள்

முதல் சொற்றொடர்

मूढ - மூட - ஏ அறிவிலியே, ஏ மூட மனமே !

जहीहि - ஜஹீஹீ - விட்டுவிடு, வென்றுவிடு

धनागमतृष्णां = धन + आगम + तृष्णां
1. धन - தன - செல்வம். தனம் என்று சொல்வது, பணத்தால் கிடைக்க கூடிய எல்லா பொருட்கள், வசதிகளைக் குறிக்கும்.
2. आगम - ஆகம - வரவு
3. तृष्णां - த்ருஷ்நாம் - வேட்கை, தாகம், அடக்கமுடியா விருப்பம்,

कुरु सद्बुद्धिं = குரு ஸத்புத்திம் = कुरु + सद्बुद्धिं - வளர்த்திடு நல்லறிவை

मनसि - மனஸி - மனதினில்

वितृष्णाम् - வித்ருஷ்நாம் - வேட்கையின்றி, தாகமின்றி

அதாவது, செல்வத்தின் மேல் உள்ள வேட்கையை வென்று, நல்லறிவை மனதில் வளர்த்திடு என்ற பொருள் இச்சொற் தொடருக்கு.

இரண்டாம் சொற்றொடர்

यल्लभसे - ய்ல்லபஸே= यत् யத்+ लभसे லபஸே - எந்த, அடைவது,

निजकर्मोपात्तं = நிஜகர்மோபாத்தம் = निजकर्मणा उपात्तम् = நிஜகர்மணா + உபாத்தம் = உனக்கு விதிக்கப்பட் வினைகளைப்புரிந்ததால் விளையும்; தனக்கு விதிக்கப்பட்ட வினைகளை, அற வழியில் (தர்ம ரீதியாக) , தனது முற்பிறவி வினைப்பலானக

वित्तं तेन विनोदय चित्तम् - வித்தம் தேந விநோதய சித்தம்
वित्तं - வித்தம் - செல்வம்
तेन - தேந - அவ்வழியில்
विनोदय - விநோதய - மகிழ்
चित्तम् - சித்தம் - மனது

அதாவது, நேர்வழியில் ஈட்டியதாலோ மற்றும் தனது முற்பிறவி வினைப்பலானக அடைந்ததாலோ எந்த ஒரு செல்வத்தை அடைந்திருக்கிறாயோ, அவ்வழிகளில் வந்த அந்தச் செல்வத்தை வைத்து மனமகிழ்வு அடை என்ற பொருள் இச்சொற்றோடருக்கு.

விளக்கவுரை

அன்றாட வாழ்வில் செல்வத்தால் சுகம் கிடைக்கும் என்ற கருத்து நமது மனித இயல்பு. செல்வமில்லையேல் வாழ்வதெப்படி? ஆதலினால் பணத்தாசை ஒன்றும் தப்பில்லை என்ற எண்ணம் நமக்கு. 

பணமென்றால் பிணமும் வாயைத் திறக்கும் என்ற பழமொழியை அறிந்த நாம், அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியை அறிய விரும்புவதில்லை. இந்த தவறான கருத்தினால், பணத்தின் மீது அளவு கடந்த அவா நமக்கு அதிகம்.

மனிதப் பிறவி என்றால் வினைகளைப் புரிந்தே ஆக வேண்டும். கர்மம் பண்ணுவது நமது கடமை. அதுவும் அதில் கிடைக்கும் பலனை பரமனிடம் விட்டுவிட்டு கர்மம் புரியவேண்டும் என நமது மறைகள் எடுத்துரைக்கின்றன.

அப்படி மனதில் பேராசையை வளர்க்காமல் நம் கர்மத்தில் மனதை செலுத்தி அதன்மூலம் தானே கிடைக்கும் பலனை அனுபவிக்க மனதை பழக்கிக்கொள்ள வேண்டும். கர்மபலன், முப்பிறவியிலும், இப்பிறவியிலும் நாம் புரியும் கர்மத்தின் தன்மையை பொறுத்திருக்கிறது. அது நம் வசம் இல்லை.

ஆசை கூடாது என்றோ, பணத்தை தியாகம் செய்யவோ, அதை உபயோகிக்க கூடாது என்றோ இப்பண்ணில் ஆதி சங்கரர் கூறவில்லை. நம் கர்மத்திர்க்கு ஏற்ப கிடைக்கும் தனத்தில் த்ருப்தி கொண்டு சந்தோஷமாக அதை உபயோகித்து மனதை சாந்தமாகவும் சந்தோஷமாகவும் வைத்துக்கொள்; அதன் மூலமாகவே மன சாந்தி ஏற்படும் என பொருள் கொள்ள வேண்டும்.

இதுவே இப்பண்ணின் சாரம்.

தமிழ் இலக்கியத்தில் செல்வம் நிலையாமை

செல்வம் நிலையாமையைப் பற்றி எண்ணற்ற விளக்கங்களை, தமிழ் புலவர்கள் அளித்துள்ளனர். அதில் சிலவற்றை ஆய்வோம்.

திருமூலர்

மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே
கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லும் கலம்போல்
அவிழ்கின்ற ஆக்கைக்கு ஓர்வீடு பேறுஆகச்
சிமிழ் ஒன்று வைத்தமை தேர்ந்து அறியாரே.

முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற செல்வமும், தானே முயன்று ஈட்டிய செல்வமும் அனைத்துமே நீரில் மூழ்கும் படகு போலக் கவிழக் கூடியது. அழியும் இயல்பு கொண்ட மனித உடலுக்கு ஓர் அழியாத சேமிப்பு வீடு பேறு என்பதை அறிந்து கொண்டவர் அழியும் செல்வத்தைப் பெருக்க எண்ணார்.

நாலடியார்

துகள்நீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால்
தொட்டுப்பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க;
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்.

குற்றமற்ற அறவழியில் ஈட்டிய பெருஞ்செல்வம் உண்டான காலம் தொடங்கி, எருமைக் கடாக்களைப் பூட்டி உழவு செய்து பெற்ற அப்பொருளைப் பலருடன் சேர்ந்து உண்ணுக! ஏனெனில், செல்வம் யாரிடத்தும் நிலையாக நிற்காமல் வண்டிச் சக்கரம்போல் (மேல்கீழாகவும், கீழ் மேலாகவும்) மாறி வரும்.

திருக்குறள்

அற்கா வியல்பிற்றுச் செல்வ மது
பெற்றா லற்குப வாங்கே செயல். - 333 நிலையாமை

செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்ரஎன்று உணர்த்தப்படுகிறது.

வளையாபதி

வெள்ள மறவி விறல்வேந்தர் தீத்தாயங்
கள்வரென்(று) இவ்வாறிற் கைகரப்பத் தீர்ந்தகலும்
உள்ளில் உறுபொருளை யொட்டா(து) ஒழிந்தவர்
எள்ளும் பெருந்துயர்நோ யெவ்வம் இகப்பவோ. 35

ஒருவர் சேர்க்கும் செல்வமானது வெள்ளம், மறதி, வெற்றியுடைய வேந்தர், நெருப்பு, தாயத்தார், கள்வர் என்று கூறப்படுகின்ற இந்த ஆறு வழிகளாலும் உடையவனது கையினின்றும் மறைவாக ஒழிந்து போகும் இயல்புடையதாகும். ஆதலால் உள்ளீடற்ற நமக்கு உதவாத பொய்யான பொருளாகிய செல்வத்தைப் பற்றாமல் துறந்த சான்றோர் பிறர் இகழ்வதற்குக் காரணமான பெரிய துயரங்களைச் செய்யும் பிறவிப் பிணியாகிய துன்பத்தை நீங்கி வாழ்வர் எனப்படுகிறது.

(உதாரணங்கள் - சென்ற 2015 டிசம்பரில் சென்னையில் மழையினாலும், ஏரிகள் உடைப்பினாலும் ஏற்பட்ட இழப்பு, மறதியினால் நாம் செய்யும் தவிர்க்கக்கூடிய செலவுகள், வேந்தன் எனும் அரசு, மதுபானம் விற்று மக்கள் சம்பாதிப்பதை சேமிக்க விடாமல் குடிபோதைக்கு ஆளாக்கி விடுவது, அங்கங்கே வீடுகளில் ஏற்படும் தீ விபத்துகளால ஏற்படும் பெரும் நட்ம், தாயாதிக்காரர்களாகிய அண்ணன் தம்பிகள் வழக்கு, வீடு, வங்கிகளில் கொள்ளை என நாம் இவைகளைக் கண்கூடாகக் காண்கிறோம்).பொருள் முயன்று ஈட்டிய போதும் நம்மை விட்டு அகலுதற்குப் பலவேறு வழிகளையும் உடைத்தாம். ஆகவே அதனை ஈட்டல் பயனின்றாம். பொய்யாகிய அப்பொருளின்பாற் பற்று விட்டவர்களே பேரின்பம் எய்துபவர் என்பதாகும்.

சித்தர் பாடல்கள்

“தேடிய செம்பொன்னும் செத்தபோது உன்னோடு
நாடி வருவதுண்டோ
போம்போது தேடும் பொருளில் அணுவேணும்
சாம்போது தான் வருமோ

என்ற பாடலில் நாளும்நாளும் தேடிய செல்வங்கள் யாவும் சாவும் போது துணைக்கு வாரது. ஒரு மனிதன் எவ்வளவுதான் பொருள் சேர்த்தாலும் கடைசியில் அவனுக்கு மண் மட்டுமே சொந்தமாகும்.

செல்வம் நிலையாமை குறித்து பாம்பாட்டிச்சித்தர் ,கூறுகையில்,

“மலைபோன்ற செம்பொற்குவை வைத்திருப்பவர்
மறலிதான் வருகையில் வாரிச் செல்வரோ ” (பாம்.சித்,பா. 44)

என்ற பாடலில் மலைபோன்ற செல்வங்களை வைத்திருந்தாலும் எமன் வந்து அழைத்தபின் பயனாகுமா ?என்று கேள்வி எழுப்புகிறார்

நாட்டுப்பாடல்

வாழ்வே நிலையற்றது எனக் கூறுகையில் அதில் ஒருவன் ஓடித்தேடி சம்பாதிக்கும் செல்வமும் இறுதி காலத்தில் துணைவராது, சகடம் எனச் சென்று கொண்டே இருக்கும் தன்மையானது என்பதை,

''பஞ்சு பருத்தி எடுத்து - அதைப்
பேரான மணையிலே ஊட்டி அரைத்து
நெஞ்சக் கருத்தாலே நூத்து - அதை
நேரோடும் பாவில் ஓடி நெய்தாலும்
நாலு முழத்தில் ஒரு துண்டு - அதில்
நாலைந்து பக்கமும் பீத்தலும் உண்டு
பாதியைப் பறையன் கிழித்தான் - அதில்
பகுபாதி அம்பட்டான் கொண்டோடிப் போனான்
அக்கினி தேவுக்குப் பாதி - இந்த
அழகான கட்டைக்குப் போத்தப்பத்தாது''

என்ற பாடல் எடுத்துரைக்கின்றது.

முடிவுரை

செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி எண்ணாத
புல்லறி வாளர் பெருஞ்செல்வம் - எல்லில்
கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி
மருங்கறக் கெட்டு விடும்.

நாம் செல்வம் உடையோம் என்ற கர்வம் கொண்டு மறுமையைப் பற்றி எண்ணாத சிற்றறிவுடையோரின் பெரும் செல்வம், இரவில் கருமையான மேகம் வாய் திறப்பதால் உண்டான மின்னலைப் போலத் தோன்றி, இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும்!

ஆதலினால், துதி கோவிந்தனை, துதி கோவிந்தனை, கோவிந்தனைத் துதி மூட மனமே என்று எடுத்துரைக்கிறது இந்த இரண்டாவது செயல்முறை.

செல்வத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று ஆதி சங்கரர் கூறுகிறார் என்று தவறான முடிவிற்று நாம் வரக்கூடாது. தங்கள் சொந்த நலனுக்காக கண்மூடித்தனமான ஈடுபாட்டிற்கு எதிரான அறிவுரையாக இந்த இரண்டாவது செயல்முறையை கவனமாக உட்கொள்ள வேண்டும்.

உள்ளுணர்வோம். அடுத்த செயல்முறை என்னவென்று புது வருட முதல் நாள் (01-01-2023) அன்று அறிவோம். அதுவரை

இறையருள் பெருக. வளமுடன் வாழ்க!