சங்கரனின் வைரக் கூடம் – 5 – உறவும் பிரிவும்

உறவும் பிரிவும்

வலைதள தமிழ் ஒலிப்பதிவு தொடரின் இணைப்பு

https://soundar53.substack.com/podcast

முகவுரை

உடல், பொருள், காமம், வாழ்வு,  இவை அனைத்தும் நிலையற்றவை என ஆதி சங்கரர் இதுவரை நமது மூட மனதிற்கு நான்கு செயல்முறைகளாக எடுத்துரைத்துள்ளார். 

நமது மனம் எவ்வளவு மூடமானது பாருங்கள். நான்கு முறைகளை உள்வாங்கியும், நம் மனது தளராமல் கூறுகிறது

“எனக்கு எதற்கு இந்த முயற்சியெல்லாம். எனக்கு உற்றார், உறவினர், சுற்றம், சூழம் எவ்வளவு பேர்கள் எனக்கு. ஏதாவது ஒன்று எனக்கு என்றால் ஓடி வந்து உதவுவார்கள் தெரியுமா? நதி எங்கே போகிறது? கடலைத் தேடி; நாளெங்கே போகிறது? இரவைத் தேடி; நிலவெங்கே போகிறது? மலரைத் தேடி; நினைவெங்கே போகிறது? உறவைத் தேடி” என்று கூறுகிறது நம் மனம். அல்லவா!

உண்மை தான். உற்றார்களும், உறவினர்களும் எவ்வளவு தடவை, எவ்வளவு நேரம் உதவுவர்? விடை கூற முடியுமா?

வாருங்கள். சங்கரனின் வைரக்கூடத்தில் ஐந்தாவது செயல்முறை காத்திருக்கிறது. அதைப் பெற்றபின், இந்தக் கேள்விக்கு பதில், கிடைக்கும்.

சமஸ்க்ருத ஸ்லோகம்

यावद्वित्तोपार्जन सक्तः

स्तावन्निज परिवारो रक्तः |

पश्चाज्जीवति जर्जर देहे

वार्तां कोऽपि पृच्छति गेहे ||

ஆதி சங்கரர்

தமிழ் ஒலிபெயர்ப்பு

யாவத்3 வித்தோ பார்ஜன சக்த:

தாவன் நிஜ பரிவாரோ ரக்த: |

பச்’சாஜ்ஜீவதி ஜர்ஜர தே3ஹே

வார்த்தாம் கோபின ப்ருச்சதி கே3ஹே ||

தமிழ் மொழிபெயர்ப்பு

பொருள்தனை ஈட்டும் ஆற்றல் வரைக்கும்

கொள்வர் சுற்றம் பற்றுடன் பிரியம்!

சக்தி இன்றி தளர்ந்திடும் தேகம்

கேட்பார் இல்லை யோக ஷேமம்!!

சமஸ்க்ருத சொற்களின் பொருள்

यावद्  யாவத்3 - எது வரையில்/எதுவரைக்கும்

वित्त-उपार्जन-सक्तः வித்தோ பார்ஜன சக்த: வித்த உபார்ஜன சக்த: - வித்த - பொருள், உபாரஜன - ஈட்டுதல்/சம்பாதித்தல், சக்த: - சக்தி/ஆற்றல்

तावत् - தாவத் - அதுவரையில்/அதுவரைக்கும்

निज परिवारः நிஜ பரிவார: - சுற்றத்தார்

रक्तः ரக்த: - பற்றுடன் பிரியம்

पश्चात् பச்’சாத் - பின்னர் (பொருள் ஈட்ட இயலா நிலை வரும் பொழுது)

जर्जर देहे जीवति ஜர்ஜர ஜீவதி தே3ஹே - ஜீவதி - பொருள் ஈட்ட முடியா நிலையில் வாழ்தல், ஜர்ஜர - முதுமைக் காலத்தில் (உடல் தளர்ந்த காலத்தில்), தேஹே - உடலில்

कोपि न கோபின - ஒருவரும் இல்லை

गेहे gEhE - கே3ஹே வீட்டினில்

वार्तां पृच्छति வார்த்தாம் ப்ருச்சதி - வார்தைகள் கூற (நலம் விசாரிக்க, அன்புடன் பேச)

விளக்கவுரை

பணம் சம்பாதித்துத் தரும் வரையில் மனைவி, மக்கள் அன்புடன் பழகுவர். உடல் தளர்ந்தபின் அவன் வீட்டில் தங்கிவிட்டால், யாரும் அவனுடன் பேசக்கூட மாட்டார்கள். சுற்றத்தினர்களும் சுயநலவாதிகளே என்று உணர்வாய். இதுதான் நேரடியான பொருள் இப்பண்ணிற்கு. இதன் விளக்கத்தை இப்பொது காணலாம்.

மனிதன் என்பவன் ஒரு சமூகப் பிராணி. குடும்பம், கணவன், மனைவி, சகோதரர்கள், சகோதரிகள், குழந்தைகள் போன்ற உறவுகளில், அவர்கள் எப்போதும் தன்னுடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் மனிதன் பாதுகாப்பைத் தேடுகிறான். நம்மைச் சுற்றி அமர்ந்திருப்பவர்கள் நம் பரிவாரங்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். வாழ்வில் நம் குடும்பத்தினர், நம் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்திருக்கின்றோம். அன்பும் பற்றுதலும் பரஸ்பரம் இருப்பதாக உணர்கிறோம். ஆனால், இந்த பாதுகாப்பு/பற்றுதல்/காதல் என்ற உணர்வு, வாழ்நாளில் நிரந்தரமா, நிலையானதா?

நாம் சுற்றியுள்ளவர்களுக்குப் பயன்படும் வரை, நம் தொடர்புடைய வட்டங்களில் நமக்கு செல்வாக்கு/மரியாதை. நம் வாழ்வில், எத்தனை மேலாளர்கள்/உயர் அதிகாரிகள்/ ஆனையர்கள், அவர்கள் ஓய்வு பெற்ற/வெளியேறிய மறுநாளே, அவர்களால் பணியில் சேர்க்கப்பட்ட காவல் தொழிலாளியால் அதே அலுவலகங்களில், நுழைவதற்கு தடை செய்யப்படுகின்றனர் என்பதை கண்கூடாகப் பார்க்கிறோம்.

பதவி, பொருள் ஈட்டும் நிலை, அல்லது நம் திறன்களைக் காலத்தின் செயல்முறை குறைக்கும் போது, மக்கள் நம்மில் எந்த மதிப்பையும்/பயனையும் காண மாட்டார்கள். ஆனால் அதுதான் உலக இயல்பு அல்லவா?

அது போல, நம் பரிவாரம், நம் குடும்பத்தினர், நம் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உறவுகள் தொடர்கதை என்று நாம் கருதினாலும், அது சிறு கதையாக முடியாமல் இருக்க நம் பதவி, பொருள் ஈட்டும் நிலை, அல்லது நம் திறன் உதவுகிறது என்பது உலக யதார்த்தம்.

முதுமைக்காலத்தில், திறன், உடல் நலக்குறைவு அடைந்து, பணம்/பொருள் சம்பாதிக்க வழி இல்லாத நேரத்தில், சொந்த வீட்டில் கூட நாம் ஒரு சுமை. அப்படி, மற்றவர்களைச் சாரந்து வாழும் போது அன்பின் தரம் மாறுகிறது.

அன்றாட வாழ்வில் இந்த யதார்த்தத்தை நிருபிக்க முதியோர் இல்லங்கள் / முதியோர் பராமரிப்பு நிறுவனங்கள், ஆசிரமங்களில் விடப்படும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஒன்றே போதுமானது.

ஒரு சிலர், வயது முதிர்ந்து நெடுநாள் நோய்பட்டு இருக்கும் நபரை வலியிலிருந்து விடுவிப்பதற்காக, இறைவனிடம் பிராரத்தனை; ஆனால் உண்மையில் அவர்கள் எந்த மதிப்பும் இல்லாத அந்த வயோதிகனிடமிருந்து விடுதலையை விரும்புகிறார்கள். அவர்கள் அதை நேரடியாக வெளிப்படுத்தவில்லை ஆனால் அதுதான் மனதில் மறைந்திருக்கும் நிகழ்ச்சி நிரல். இதுவும் யதார்த்தமே.

ஆக, யாரிடமிருந்தும் அன்புக்காக ஏங்காதே. இதனை ஆங்கிலத்தில் Emotional Dependence என்பார்கள்.

உணர்வுகளை உலுக்கிடும் உலக நடப்பை நேரடியாக ஸ்ரீ சங்கராச்சாரியார் சுட்டிக்காட்டுகிறார்.

தமிழ் இலக்கியத்தில் உறவு நிலையாமை

திருமந்திரம்

பந்தல் பிரிந்தது, பண்டாரம் கட்டு அற்ற
ஒன்பது வாலும் ஒக்க அடைத்தன,
துன்பு உறு காலத் துரிசுவர மேன்மேல்
அன்புடையார்கள் அழுது அகன்றார்களே.

உடல் என்னும் அழகிய பந்தல் பிரிந்துவிட்டது. உயிர்நிலை அப்போது நிலை குலைந்துவிட்டது. உடலின் ஒன்பது வாயில்களும் ஒன்றாக மூடிக் கொண்டன. துன்பம் தருகின்ற, காலம் என்பதன் முடிவு வந்து சேர்ந்தது. அன்பு கொண்ட உறவினர்கள் அழுவிட்டு அகன்று சென்றார்கள்.

பண்டம்பெய் கூரைபழகி விழுந்தக்கால்
உண்டஅப்பெண்டிரும் மக்களும் பின் செலார்
கொண்ட விரதமும் ஞானமுமல்லது
மண்டியவருடன் வழி நடவாதே.

கன்ம வினைப் பயன்களைத் துய்த்த பின் உடல் விழுந்துவிடும். உடன் இருந்து இன்பங்களை அனுபவித்த மனைவியோ மக்களோ உடன் வரமாட்டார்கள் அப்போது நம்முடன். வாழ்ந்திருந்த காலத்தில் நாம் செய்த நோன்புகளின் பலன்களும்,நாம் சேகரித்த ஞானமும் மட்டுமே நம்மைத் தொடர்ந்து வரும்.

ஆர்த்துஎழு சுற்றமும் பெண்டிரும் மக்களும்
ஊர்த்துறைக் காலே ஒழிவர், ஒழிந்தபின்
வேர்த்தலை போக்கி விறகு இட்டு எரிமூட்டி
நீர்த்தலை மூழ்குவர் நீதி இலோரே.

ஆரவாரம் செய்து எழும் சுற்றத்தவரும், மனைவியும், மக்களும், ஊருக்கு வெளியே உள்ள நீர்நிலை வரை வந்துவிட்டு நீங்குவர். வாழ்க்கைக்கு வேராகிய தலையினை மறைத்து எரி மூட்டுவார்கள். நீரில் தலை முழுகிவிட்டுச் செல்லும் இவர்கள் பந்தம் அற்றவர்கள்.

அப்பர் - பதிக எண்: 5.70 கொண்டீச்சரம் குறுந்தொகை

சுற்றமும் துணை நன் மடவாளொடு
பெற்ற மக்களும் பேணல் ஒழிந்தனர்
குற்றமில் புகழ்க் கொண்டீச்சுரவனார்
பற்று அலால் பற்று மற்று இல்லையே

பொதுவாக உலகியலில் காணப்படும் காட்சியை அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். தங்களுக்கு பயனுள்ள வரை ஒட்டி உறவாடும் சுற்றத்தார், நம்மால் ஆகவேண்டிய காரியம் ஏதும் இல்லை என்ற நிலை வந்த பின்னர், நம்மைப் போற்றுவதை நிறுத்திவிடுவார்கள். இத்தகைய செய்கைகளுக்கு, மனைவியும் பெற்ற மக்களும் விதிவிலக்கு அல்ல என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். இந்த நிலையை நாம் பல இல்லங்களில் காண்கின்றோம். பயன் கருதி பழகும் மாந்தர்கள், நாம் அவர்களுக்கு பயனாக இருக்கும் தன்மையின் அடிப்படையில் நம்முடன் பழகும் விதத்தில் மாறுபாடு கொள்கின்றார்கள். ஆனால் இறைவனுக்கு நம்மால் ஆக வேண்டிய காரியம் ஏதும் இல்லை. அதனால் என்றும், அவனைச் சார்ந்து வழிபடும் அடியார்களிடம் மாறாத அன்பு கொண்டு அவன் காப்பற்றுகின்றான், எனவே இறைவனை விடவும் சிறந்த பற்றுக்கோடு நமக்கு ஏதும் இல்லை என்று அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார்.

ஔவையாரின் மூதுரை பாடல்

ஒருவனது செல்வம் குறைந்து வறுமை அடையும் நேரத்தில், நீர் குறைந்து வறண்டும் நிலையை அடைந்த குளத்தை விட்டு நீர்ப்பறவைகள் விலகுவது போல், சுற்றத்தார் அகன்று விடுவார்கள் என்று இந்த பாடல் ஔவை பிராட்டி கூறுகின்றார்.

அற்ற குளத்து அறுநீர்ப் பறவை போல்
உற்றுழி தீர்வார் உறவு அல்லர் அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு

பட்டினத்தார் பாடல்கள்

மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் உந்தன் வாயில் மட்டே
இனமான சுற்றமும் மயான மட்டே வழிக்கே துணை
தினையாம் அளவு எள்ளளவாகிலும் முன்பு செய்த தலந்
தனையாள வென்றும் பரலோகஞ் சித்திக்கும் சத்தியமே. 7.

அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே, விழி அம்பு ஒழுக
மெத்திய மாதரும் வீதிமட்டே, விம்மி விம்மி இரு
கைத்தலம் மேல் வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டே
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே. 8.

மாடுண்டு கன்றுண்டு மக்கள் உண்டென்று மகிழ்வதெல்லாம்
கேடுண்டு எனும்படி கேட்டுவிட்டோம் இனிக் கேள் மனமே
ஓடுண்டு கந்தை உண்டு உள்ளே எழும் ஐந்தும் ஓதவுண்டு
தோடுண்ட கண்டன் அடியார் நமக்குத் துணையும் உண்டே. 9.

உற்றார் அழுது அலுத்தார் உறன்முறையார் சுட்டு அலுத்தார்
பெற்று அலுத்தால் தாயார் பிறந்து அலுத்தேன் பூரணமே

வீடிருக்க தாயிருக்க வேண்டும் மனையாள் இருக்க
பீடிருக்க ஊன் இருக்கப் பிள்ளைகளும் தாம் இருக்க
மாடிருக்கக் கன்றிருக்க வைத்த பொருளிருக்கக்
கூடிருக்க நீ போன கோலமென்ன கோலமே”

சதுரகிரி சித்தர் பாடல்

காயம்ஒரு புற்புதம்! வாழ்வுமலை சூழ்தரும்
காட்டில்ஆற் றின்பெ ருக்காம்!
கருணைதரு புதல்வர்கிளை மனைமனைவிஇவையெலாம்
கானல்காட் டும்ப்ர வாகம்!

இந்த உடம்பு ஒரு நீர்க்குமிழியைப் போன்றது,இந்த வாழ்க்கையானது மலையைச் சுற்றியுள்ள காட்டிலே ஓடுகின்ற ஆற்று வெள்ளம் ஆகும்,அன்புக்கு உரிய மக்கள், உறவினர், தேடிய வீடு, மனைவி ஆகிய இவைகளெல்லாம் கானல் நீர் காட்டுகின்ற வெள்ளம்!

திரை இசைப்பாடல்கள்

உறவு என்றொரு சொல்லிருந்தால்
பிரிவு என்றொரு பொருள் இருக்‍கும்
காதல் என்றொரு கதை இருந்தால்
கனவு என்றொரு முடிவு இருக்‍கும் …..வாலி

வீடு வரை உறவு
வீதி வரை மணைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ……. கண்ணதாசன்

முடிவுரை

உற்றார், உறவினர், சுற்றம், சூழம் இவர்களிடமிருந்து வரும் அன்பு நிலையற்றது. எதிர்பார்ப்புகளுடன் நிறைந்தவை அவை.

எனினும், நமக்கு நம் மேல் என்றுமே, எப்பொழுதுமே அளவிலா, அழியாத அன்பு. அந்த அன்பே இன்பமெனும் உணர்வாக வெளிப்படுகிறது. இது மறுக்க முடியாத உண்மை. அல்லவா?

அதைப்போல, ஒப்புயர்வற்ற பொருளின் (வஸ்து) மேல் நாம் வைக்கும் ஒப்புயர்வற்ற பேரன்பு (परमप्रेमं- பரம ப்ரேமம்), அதாவது, அழியா, மாறா இறைவனிடத்தில் செலுத்தும் அந்த அன்பும், அழியாதது. அந்த அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

எப்படி என்னுள் அழியாமல் எனக்கு இருக்கும் பதப்படுத்தப்படாத அன்பு, இயற்கையாக இன்பமாக(புன்னகையாக) வெளிப்படுகிறதோ, (“யத்ர யத்ர ஸுகம், தத்ர தத்ர ப்ரீதி) அப்படி இன்பத்தோடு உறையும் அன்பே இறைவன். அந்த அன்பு வெளிப்படுத்தப்படும்போது, இருமை வடிவம் (அன்பு, இன்பம்); வெளிப்படுத்தாவிடில் நம்முள்ளே தூய இருப்பாய், தூய உணர்வாய் இருந்திடும் அந்த பேரன்பே இறைவன்; அதுவே கோவிந்தம். அது யாண்டும் அழியாதது.

அதை புரிந்து கொண்டால், அதை வெளியில் தேடமாட்டோம். ஆகையால் கோவிந்தனைத் துதி. இது தான் இந்த பண்ணின் சாரம்.

பின் குறிப்பு

“செல்வம், புகழ் மற்றும் பெயர் ஆகியவற்றின் நிலையற்ற தன்மையின் காரணமாக, அதன் மேல் உள்ள பற்றினை பதப்படுத்த வேண்டும் என ஆதிசங்கரர் கூறுகிறார். செல்வத்தையும் புகழையும் நாம் தவிர்க்க வேண்டும் என்று சொல்லவில்லை. உண்மையில் அது நம்மிடம் இருக்கும்போது அதை அனுபவிக்க வேண்டும். ஆனால் நாம் அவற்றின் மீது வைக்கும் மதிப்பு/பற்றினை, நிரந்தரமான ஒன்றிலிருந்து பெற வேண்டும். அதுதான் இறை நோக்கமுடைய தூய மனம்.

ஏனெனில், பட்டினத்தார் கூறிய போல “ஆவியோடு காயம் அழிந்தாலும், மேதினியில் பாவி என்று நாமம் படையாதிரு”க்க, அந்த தூய மனத்தை இறை நோக்கி செலுத்திப்பெரும் ஆன்மீகச் சிந்தனைகளே நம்மிடம் எஞ்சியிருக்கும் சொத்து, காலனின் அழைப்பிதழ் வரும் பொழுத”.

ஆக, உடல், பொருள், காமம், வாழ்வு, உறவு இவை அனைத்தும் நிலையற்றவை என்று தெளிவாக, ஐந்து செயல்முறைகளால் ஆதி சங்கரர் நம் உள் உறைந்த வைராக்கியமெனும் வைரக்கல்லினைத் தோண்டி, பட்டை தீட்டி மெருகேற்ற முயல்கிறார்.

ஆறாவது செயல்முறையில் சங்கரர் என்ன செய்யப் போகிறார். பொறுத்திருந்து பார்ப்போம்.அதுவரை…..

இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!

சங்கரனின் வைரக் கூடம் – 4 – வாழக்கையெனும் ஓடம்

வலைதள தமிழ் ஒலிப்பதிவு தொடரின் இணைப்பு

https://soundar53.substack.com/podcast

முகவுரை

சங்கரரின் வைரக்கூடத்தில், வைராக்கியம் எனும் வைரத்தை பட்டை தீட்டி மெருகேற்றிட,  நிலையாமையை உணர்ந்து, உடல், ஈட்டிய தனம் (செல்வம்),  உடல் மீதுள்ள பற்றுதலின் அடிப்படையிலான காமம் என்ற மூவகைப் பற்றினை விட வேண்டும் என்ற மூன்று செயல்முறைகளை அறிந்து, மன உறுதியுடன், மறுபடியும் கூடத்திற்கு விஜயம் செய்யும் அனைவருக்கும் மிக்க நன்றி. வருக, வருக!

நம் சொந்த (குடும்பம், உடல்நலம் மற்றும் செல்வம்) பாதுகாப்பு, மன அமைதி என்று வரும்போது அன்றாட வாழ்வில் நாம் இதை முழுமையாகப் புரிந்து கொள்கிறோம்; இல்லையெனில், காப்பீடு மற்றும் ஓய்வூதிய நிதி நிறுவனங்கள் எதுவுமே இவ்வுலகில் தேவையில்லை/இருக்காது.

ஒருபுறம், வாழ்வு நிலையற்றது, அதற்காக காப்பீடு தேவை என்று உணர்ந்த நாம், மறுபுறம் நம்மை அறிய, வாழ்வில் மறைகள் கூறியபடி நடக்க வேண்டும் என்று வரும்போது, எந்த மனநிலையில் இருக்கிறோம்?

“மகனே! வாரம் ஒருமுறையாவது பகவத் கீதையைப் படிக்கலாம் வா” - தந்தையோ அல்லது தாத்தாவோ,

“இதெல்லாம் உங்களைப் போன்ற ஓய்வு பெற்றவர்களுக்காக அப்பா/தாத்தா. எங்களுக்கு தலைபோகும் வேலைகள் உள்ளன, தீர்க்க வேண்டிய சிக்கல்கள் மற்றும் சமாளிக்க ஏராளமான போட்டிகள் மற்றும் சவால்கள் உள்ளன. உங்கள் டீன் ஏஜ் பருவத்தில் இருந்ததைப் போல், வாழ்க்கை எளிதானது அல்ல” - மகன்/மகள்/பேரக்குழந்தைகள்

நம் இல்லங்களில் அடிக்கடி கேட்கப்படும் உரையாடல், அல்லவா! இன்றைய காலக்கட்டத்தில் வீட்டில் ஒரு பெரியவருக்கும் இளைஞனுக்கும் இடையே நடைபெறும் மிகவும் பொதுவான உரையாடல் இது. இங்கே அடிப்படைக் கருப்பொருள், நாங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம், பகவத் கீதை போன்றவற்றைப் படிக்கும் நேரம் ஓய்வுக்குப் பிறகுதான், ஆக வாழ்க்கை கணிக்கக்கூடியது என்று முடிவு செய்கிறோம்.

ஆதிசங்கரர் இந்த இருவேறுபாட்டைப் புரிந்து கொண்டு நிலைமையின் அவசரத்தை உணர்த்துகிறார். ஆன்மிகக் குணத்தை வளர்த்துக்கொள்ள இப்போது உங்களுக்கு ஆரோக்கியம், மன மற்றும் அறிவுசார் திறன்கள் உள்ளன. எதிர்காலத்தில் என்ன இருக்கிறது என்று யாருக்குத் தெரியும்? எனவே, இந்த பொன்னான நேரத்தை உள்நோக்கிப் பார்த்து, உங்களைப் பற்றி அறிந்துகொள்ள பயன்படுத்துங்கள் என்று சங்கரர் அறிவுறுத்துகிறார்.

வாருங்கள், சங்கரனின் இந்த செயல்முறையை அறியலாம்.

சமஸ்க்ருத ஸ்லோகம்

नलिनीदलगतजलमतितरलं

तद्वद्जीवितमतिशयचपलम् |

विद्धिव्याध्याभिमानग्रस्तं

लोकं शोकहतं समस्तम् ||

தமிழ் ஒலிபெயர்ப்பு

நளினி த3ளக3த ஜலமதி தரளம்

தத்3வத் ஜீவித மதி3ச’ய சபலம் |

வித்3தி4 வ்யாத்4யபி4மான க்3ரஸ்தம்

லோகம் சோ’கஹதம் ச ஸமஸ்தம் ||

தமிழ் மொழிபெயர்ப்பு

தாமரை இலைமேல் தண்ணீர் போல

வாழ்க்கையில் என்றும் மிகவும் சஞ்சலம்

நோயும் பற்றும் விழுங்கிடும் உலகம்

துன்பம் ஒன்றே நிறைந்திடும் அறிவாய்

சமஸ்க்ருத சொற்களின் பொருள்

नलिनीदलगतजलमतितरलं - नलिनी दल गत जलं अति तरलं - நளினி த3ளக3த ஜலம் அதி தரளம் - தாமரை, இலையில,  நீர், நிலையற்ற

तद्वद्जीवितमतिशयचपलम् - तद्वद् जीवितं अतिशय चपलम् - தத்3வத் ஜீவிதம் அதி3ச’ய சபலம் - அது போல, வாழ்க்கை, மிகவும், நிலையற்றது

विद्धिव्याध्याभिमानग्रस्तं - विद्धि व्याधि अभिमान ग्रस्तं - வித்3தி4 வியாதி அபி4மான க்3ரஸ்தம் - அறிவாய், நோய், பற்று, விழுங்கிடும் (ஆளாகும்),

लोकं शोकहतं च समस्तम् - लोकं शोक हतं च समस्तम् - லோகம் சோ’க ஹதம் ச ஸமஸ்தம் - உலகம், துன்பம், பீடித்திருத்தல், முழுவதும்

விளக்கவுரை

தாமரை இலைமீது உள்ள நீர்த்துளியைப் போன்றே மனித வாழ்வும் நிலையற்றது. எங்கு நோக்கினும் நோய்களும், கர்வமும் தான் காணப்படுகின்றன. யாருமே தான் இன்பமாக இருப்பதாக நினைப்பது இல்லை. உலக வாழ்க்கைக்காக வீணாக அலையாதே! இது தான் இந்தப் பண்ணின் சாரம். இதை இப்போது ஆராய்வோம்.

இந்த ஸ்லோகத்தை விளக்க நாம் வேறெங்கும் செல்ல வேண்டாம். நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைப் பார்தாலே போதும்.

கொடிய வைரஸின் வருகை, அதைத் தொடர்ந்து வந்த கொரோனா தொற்றுநோய் (இப்போது கூட அது முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதா என்று கடவுளே அறிவார்) - இந்த உலகத்தில் நம்முடைய இந்த நிச்சயமற்ற காலத்திலும் கூட, பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களுக்கு பஞ்சமில்லை என்பதை நம் அனைவருக்கும் உணர்த்திடும் ஒரு வாழ்க்கைப் பாடம். உடல் ரீதியில் நோய், உணர்ச்சித் தளத்தில் பதற்றம், அறிவார்ந்த நிலையில் ஆணவம் தலைவிரித்தாடுவதைக் கண்டோம்.

இவை அனைத்தும் நமது அன்றாட அனுபவங்களே. இந்த மூன்று வகை மனக் கிளர்ச்சிகளுடன் வாழ நாம் பழகிவிட்டோம். அவைகளைக் கடந்து செல்ல முயற்சிக்க வேண்டும் என்ற உணர்வு இல்லாமல் வாழ்கிறோம். ஆகையினால் அதை கடக்க முயல்வதும் இல்லை.

பஜ கோவிந்தம் ஸ்லோகம் 4 இல், ஆதி சங்கரர், இந்த நமது அறியாமை மனதை தட்டி எழுப்ப முயற்சிக்கிறார். நமது வாழ்க்கை அநித்தியம் என்றும், அது வியாதி, ஏக்கம், மமதை, துக்கம் முதலிய பிணிகளைக் கொண்டதும் ஆக அமைந்துள்ளது என்ற தத்துவத்தை சுட்டிக்காட்டுகிறார் ஸ்ரீ சங்கரர்.

தடாகத்தில் மிதக்கும் தாமரை இலயில் தங்கி நிற்க்கும் நீர்த்துளிகள் போல, எப்படி அந்த தாமரை இலை காற்றில் ஆடும்போது தத்தளிக்கிறதோ அதுபோல்தான் நம் வாழ்க்கையும். எந்த நேரமும் அந்த நீர்த்துளிகள் தடாகத்தில் விழ்நேரிடலாம். அதுபோல் தத்தளித்துக் கொண்டிருக்கிற நம் வாழ்வு , எந்த நிமிடமும் முடியலாம். சாஸ்வதமில்லாத, துக்ககரமான உலக வாழ்க்கையை நம்பி ஏமாறாதே என்கிறார். இதைவிட வேறு உகந்த உவமை கிடைக்குமா? எவ்வளவு நளினமாக இந்த மிக பெரிய தத்துவத்தை போதிக்க இந்த உவமையை கைய்யாண்டிருக்கிறார்!

வாழ்க்கை என்பது அதிசய-சபலம் என்று ஸ்ரீ சங்கராச்சாரியார் கூறுகிறார். இதற்கு என்ன பொருள்? வாழ்க்கையை வீணடிக்க நேரம் இல்லை என்று அர்த்தம். செய்ய வேண்டியதை எதிர்காலத்திற்கு தள்ளிப் போடாதீர்கள். பொதுவாக விரும்பத்தகாத அல்லது கடினமானதை நாம் தள்ளிப்போடுவது இயல்பு. ஸ்ரீ சங்கராச்சாரியார், இது குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என்று கூறுகிறார்.

வியாதி (உடலில் நோய்) மற்றும் அபிமானம், (மனதில் உள்ள நோய்களான பற்றுதல் மற்றும் தற்பெருமை) தவிர, நம் வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும் மற்றொரு விஷயம் உள்ளது என்று ஸ்ரீ சங்கராச்சாரியார் சுட்டிக்காட்டுகிறார். மக்கள் எப்போதும் சோகத்தின் மயக்கத்தில் இருக்கிறார்கள்; இந்த உலகம் எப்பொழுதும் துக்கம் நிறைந்தது. இந்த தொற்றுநோய்களின் போது இவை ஒவ்வொன்றும் உலகம் முழுவதும் முழு காட்சிக்கு வைக்கப்பட்டன அல்லவா.

எனவே, எதற்காக நாம் காத்திருக்கிறோம்? கோவிந்தன் துதிக்கு வாழ்க்கையில் ஏன் முன்னுரிமை இல்லை? கடவுளை வழிபடுவதை விட வாழ்க்கையில் மிகவும் பயனுள்ள நாட்டங்கள் உள்ளன என்று நீங்கள் நினைத்தால், அந்த நாட்டங்கள் பெருமையையும், பற்றுதலையும், நோயையும் கொண்டு வந்து, துக்கத்தையோ அல்லது சோகத்தையோ ஏற்படுத்துகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள். எனவே, வாழ்க்கையின் உண்மையான தன்மையை உணர்ந்து, உங்களுக்கு கிடைக்கும் நேரத்தை சரியாகப் பயன்படுத்துங்கள்.

இதுவே இப்பண்ணின் சாரம்

தமிழ் இலக்கியத்தில் வாழ்வின் நிலையாமை

திருக்குறள்

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்பெருமை உடைத்துஇவ் வுலகு.

“உறங்குவது போலுந் சாக்காடுறங்கிவிழிப்பது போலும் பிறப்பு” (குறள் - 339)
என்ற குறள் சுட்டுகின்றது. எனவே இவ்வுலக வாழ்க்கை நிலையில்லாதது.

தொல்காப்பியம்
” பாங்கருஞ் சிறப்பி பல்லாற்றானுநில்லா வுலகம் புல்லிய நெறித்தே ” (தொல். பொருள். நூற். 78)என்ற தொல்காப்பிய அடிகள் நிலையாமைக் குறித்து குறிப்பிடுகின்றது. இதற்கு நச்சினார்க்கினியர் “ உயிரும் உடம்பும் செல்வமும் இளமையும் முதலியவற்றாலும் நிலைபேறில்லாத உலகம்” என்று குறிப்பிடுகின்றார்.

பட்டினத்தார் பாடல்

"பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்,
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்,
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்,
உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்,
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்”

“நீரில் குமிழி – நீர் மேல் எழுத்து
கண்துயில் கனவில் கண்ட காட்சி”

சித்தர் பாடல்

''நந்த வனத்திலோர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதைக்
கூத்தாடி கூத்தாடிப் போட்டு உடைத்தாண்டி''

என்ற சித்தர் பாடிய பாட்டினை நாட்டுப்புற மக்கள் தங்கள் பாட்டாகவே கருதி வாழ்ந்து வந்தமையை நாம் காணமுடிகிறது.

வாழ்க்கை நிலையற்றது என உணர்ந்து, வாழ்கின்ற நாட்களில் பயனுடையதாய் ஆக்காத, வாழ்வியல் தத்துவத்தை உணராத, மாந்தர்கள் இவ்வுடலை வீண் செய்து அழித்து விடுவதையே ''கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி'' என்ற வரி உணர்த்துகிறது.

அம்பலவாணக் கவிராயர்

இந்த உடம்பு ஒரு நீர்க்குமிழி போன்றது. புதல்வர், கிளை, மனை, மனைவி இவையெல்லாம் கானல் நீர். உயிரோ வெட்ட வெளிதனில் வைத்த தீபம். எனவே வீண்பொழுது போக்காமல் ஆண்டவனை நேயமொடு வழிபட அவனிடமே அருள் வேண்டி நிற்க வேண்டும் என்கிறார்.

காயமொரு புற்புதம் வாழ்வு மலைசூழ் தரும்காட்டில் ஆற்றின் பெருக்காம்கருணைதரு புதல்வர் கிளை மனை மனைவிஇவையெலாம்கானல் காட்டு ப்ரவாகம்மேயபுய பல வலிமை யிளமை அழகு இவையெலாம்வெயில் மஞ்சள், உயிர் தானுமேவெட்ட வெளிதனில் வைத்த தீபமெனவே கருதிவீண்பொழுது போக்காமலேநேயமுடனே தெளிந்து அன்போடுஉன் பாதத்தில்நினைவு வைத்து இரு போதிலும்நீர் கொண்டு மலர் கொண்டு பரிவு கொண்டர்ச்சிக்கநிமலனே யருள் புரிவாய் (19)
(காயம் = உடம்பு; புற்புதம் = நீர்க்குமிழி; பெருக்கம் = வெள்ளம்; கிளை = சுற்றம்; மனை = வீடு; ப்ரவாகம் = வெள்ளம்

முடிவுரை

பகவத் கீதையில் [13-9], பகவான் கிருஷ்ணர், எல்லா நேரத்திலும் நமக்கு பல்வேறு வகையான வலிகள் {ஜென்மத்தில்/பிறப்பில், ம்ருத்யு/மரணத்தில், ஜரத்தில்/முதுமையில், மற்றும் வியாதி/நோய், (ஜென்ம-மிருத்யு-ஜர-வியாதி-துக்கதோஷனு-தர்சனம்)} இருப்பதைப் பற்றி தொடர்ந்து சிந்தி என்று அறிவுரை வழங்குகிறார்.

இறைவனின் இந்த அறிவுரையைத் தான், ஆதி சங்கரர் இந்த பண்வழியாக நம் மூட மனதிற்கு நான்காவது செயல்முறையாகக் கொடுத்து நம்மை சிந்திக்க வைக்கிறார்.

சிந்திப்போம். செயல்படுவோம். அடுத்த செயல்முறைக்குத் தயாராகுவோம். அதுவரை

இறையருள் பெருக. வாழ்க வளமுடன்.

சங்கரனின் வைரக் கூடம் – 2 – செல்வம் நிலையாமை

தமிழ் வலைதல ஒலிப்பதிவுத் தொடர் இணைப்பு (Tamil Podcast Link)

https://soundar53.substack.com/podcast

முகவுரை

உடலுக்கும், உயிருக்கும் உள்ளது வெறும் குத்தகை ஒப்பந்தமே என்றும், யாக்கை நிலையற்றது என்றும் அறிந்து உணர்ந்து, இரண்டாவது முறையாக சங்கரனின் வைரக் கூடத்திற்கு பட்டை தீட்டி மெருகேற்றிக் கொள்ள வருகை தந்த, உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

இன்று நாம் அனைவரும் எதிர்கொள்ளும் செயல்முறைக்கு (diamond cutting and polishing process), செல்வம் நிலையாமை என்று பெயர். “ஸரீர அநித்யம்” என்பதை முதல் செயல்முறையில் வழங்கிய ஆதி சங்கரர், “தன அநித்யத்தை” இரண்டாவது செயல்முறை வழியே நம் மூட மனத்திற்கு கொடுக்கிறார்.

இந்த செயல்முறையை உள்வாங்கினால், பணம்/செல்வம் என்பவை, நிரந்தரமான மகிழ்வைத் தேடும் நமக்கு ஒரு கருவிகளே அன்றி அவைகளை அடைவதே நமது குறி அல்ல என்பது ஆழமாகப் பதியும்.

சமஸ்க்ருத ஸ்லோகம்

मूढ जहीहि धनागमतृष्णां

कुरु सद्बुद्धिं मनसि वितृष्णाम् ।

यल्लभसे निजकर्मोपात्तं

वित्तं तेन विनोदय चित्तम् ||

தமிழ் ஒலி பெயர்ப்பு

மூட4! ஜஹீஹி த4நாக3ம த்ருஷ்ணாம்

கு1ரு ஸத்3புத்3தி4ம் விஷயவித்ருஷ்ணாம் |

யல்லப4ஸே நிஜகர்மோபாத்தம்

வித்தம் தேன வினோத3ய சித்தம் ||

தமிழ் மொழிபெயர்ப்பு

மூடனே வெல்வாய் செல்வத் தாகம்

மனதினில் தணித்திடும் நல்லறி ஞானம்

மறை வழி ஈட்டிய செல்வம் போதும்

நிறைவடை என்றும் சிந்தையில் செல்வம்

சமஸ்க்ருத சொற்றொடர்களின் பொருள்

முதல் சொற்றொடர்

मूढ - மூட - ஏ அறிவிலியே, ஏ மூட மனமே !

जहीहि - ஜஹீஹீ - விட்டுவிடு, வென்றுவிடு

धनागमतृष्णां = धन + आगम + तृष्णां
1. धन - தன - செல்வம். தனம் என்று சொல்வது, பணத்தால் கிடைக்க கூடிய எல்லா பொருட்கள், வசதிகளைக் குறிக்கும்.
2. आगम - ஆகம - வரவு
3. तृष्णां - த்ருஷ்நாம் - வேட்கை, தாகம், அடக்கமுடியா விருப்பம்,

कुरु सद्बुद्धिं = குரு ஸத்புத்திம் = कुरु + सद्बुद्धिं - வளர்த்திடு நல்லறிவை

मनसि - மனஸி - மனதினில்

वितृष्णाम् - வித்ருஷ்நாம் - வேட்கையின்றி, தாகமின்றி

அதாவது, செல்வத்தின் மேல் உள்ள வேட்கையை வென்று, நல்லறிவை மனதில் வளர்த்திடு என்ற பொருள் இச்சொற் தொடருக்கு.

இரண்டாம் சொற்றொடர்

यल्लभसे - ய்ல்லபஸே= यत् யத்+ लभसे லபஸே - எந்த, அடைவது,

निजकर्मोपात्तं = நிஜகர்மோபாத்தம் = निजकर्मणा उपात्तम् = நிஜகர்மணா + உபாத்தம் = உனக்கு விதிக்கப்பட் வினைகளைப்புரிந்ததால் விளையும்; தனக்கு விதிக்கப்பட்ட வினைகளை, அற வழியில் (தர்ம ரீதியாக) , தனது முற்பிறவி வினைப்பலானக

वित्तं तेन विनोदय चित्तम् - வித்தம் தேந விநோதய சித்தம்
वित्तं - வித்தம் - செல்வம்
तेन - தேந - அவ்வழியில்
विनोदय - விநோதய - மகிழ்
चित्तम् - சித்தம் - மனது

அதாவது, நேர்வழியில் ஈட்டியதாலோ மற்றும் தனது முற்பிறவி வினைப்பலானக அடைந்ததாலோ எந்த ஒரு செல்வத்தை அடைந்திருக்கிறாயோ, அவ்வழிகளில் வந்த அந்தச் செல்வத்தை வைத்து மனமகிழ்வு அடை என்ற பொருள் இச்சொற்றோடருக்கு.

விளக்கவுரை

அன்றாட வாழ்வில் செல்வத்தால் சுகம் கிடைக்கும் என்ற கருத்து நமது மனித இயல்பு. செல்வமில்லையேல் வாழ்வதெப்படி? ஆதலினால் பணத்தாசை ஒன்றும் தப்பில்லை என்ற எண்ணம் நமக்கு. 

பணமென்றால் பிணமும் வாயைத் திறக்கும் என்ற பழமொழியை அறிந்த நாம், அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியை அறிய விரும்புவதில்லை. இந்த தவறான கருத்தினால், பணத்தின் மீது அளவு கடந்த அவா நமக்கு அதிகம்.

மனிதப் பிறவி என்றால் வினைகளைப் புரிந்தே ஆக வேண்டும். கர்மம் பண்ணுவது நமது கடமை. அதுவும் அதில் கிடைக்கும் பலனை பரமனிடம் விட்டுவிட்டு கர்மம் புரியவேண்டும் என நமது மறைகள் எடுத்துரைக்கின்றன.

அப்படி மனதில் பேராசையை வளர்க்காமல் நம் கர்மத்தில் மனதை செலுத்தி அதன்மூலம் தானே கிடைக்கும் பலனை அனுபவிக்க மனதை பழக்கிக்கொள்ள வேண்டும். கர்மபலன், முப்பிறவியிலும், இப்பிறவியிலும் நாம் புரியும் கர்மத்தின் தன்மையை பொறுத்திருக்கிறது. அது நம் வசம் இல்லை.

ஆசை கூடாது என்றோ, பணத்தை தியாகம் செய்யவோ, அதை உபயோகிக்க கூடாது என்றோ இப்பண்ணில் ஆதி சங்கரர் கூறவில்லை. நம் கர்மத்திர்க்கு ஏற்ப கிடைக்கும் தனத்தில் த்ருப்தி கொண்டு சந்தோஷமாக அதை உபயோகித்து மனதை சாந்தமாகவும் சந்தோஷமாகவும் வைத்துக்கொள்; அதன் மூலமாகவே மன சாந்தி ஏற்படும் என பொருள் கொள்ள வேண்டும்.

இதுவே இப்பண்ணின் சாரம்.

தமிழ் இலக்கியத்தில் செல்வம் நிலையாமை

செல்வம் நிலையாமையைப் பற்றி எண்ணற்ற விளக்கங்களை, தமிழ் புலவர்கள் அளித்துள்ளனர். அதில் சிலவற்றை ஆய்வோம்.

திருமூலர்

மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே
கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லும் கலம்போல்
அவிழ்கின்ற ஆக்கைக்கு ஓர்வீடு பேறுஆகச்
சிமிழ் ஒன்று வைத்தமை தேர்ந்து அறியாரே.

முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற செல்வமும், தானே முயன்று ஈட்டிய செல்வமும் அனைத்துமே நீரில் மூழ்கும் படகு போலக் கவிழக் கூடியது. அழியும் இயல்பு கொண்ட மனித உடலுக்கு ஓர் அழியாத சேமிப்பு வீடு பேறு என்பதை அறிந்து கொண்டவர் அழியும் செல்வத்தைப் பெருக்க எண்ணார்.

நாலடியார்

துகள்நீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால்
தொட்டுப்பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க;
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்.

குற்றமற்ற அறவழியில் ஈட்டிய பெருஞ்செல்வம் உண்டான காலம் தொடங்கி, எருமைக் கடாக்களைப் பூட்டி உழவு செய்து பெற்ற அப்பொருளைப் பலருடன் சேர்ந்து உண்ணுக! ஏனெனில், செல்வம் யாரிடத்தும் நிலையாக நிற்காமல் வண்டிச் சக்கரம்போல் (மேல்கீழாகவும், கீழ் மேலாகவும்) மாறி வரும்.

திருக்குறள்

அற்கா வியல்பிற்றுச் செல்வ மது
பெற்றா லற்குப வாங்கே செயல். - 333 நிலையாமை

செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்ரஎன்று உணர்த்தப்படுகிறது.

வளையாபதி

வெள்ள மறவி விறல்வேந்தர் தீத்தாயங்
கள்வரென்(று) இவ்வாறிற் கைகரப்பத் தீர்ந்தகலும்
உள்ளில் உறுபொருளை யொட்டா(து) ஒழிந்தவர்
எள்ளும் பெருந்துயர்நோ யெவ்வம் இகப்பவோ. 35

ஒருவர் சேர்க்கும் செல்வமானது வெள்ளம், மறதி, வெற்றியுடைய வேந்தர், நெருப்பு, தாயத்தார், கள்வர் என்று கூறப்படுகின்ற இந்த ஆறு வழிகளாலும் உடையவனது கையினின்றும் மறைவாக ஒழிந்து போகும் இயல்புடையதாகும். ஆதலால் உள்ளீடற்ற நமக்கு உதவாத பொய்யான பொருளாகிய செல்வத்தைப் பற்றாமல் துறந்த சான்றோர் பிறர் இகழ்வதற்குக் காரணமான பெரிய துயரங்களைச் செய்யும் பிறவிப் பிணியாகிய துன்பத்தை நீங்கி வாழ்வர் எனப்படுகிறது.

(உதாரணங்கள் - சென்ற 2015 டிசம்பரில் சென்னையில் மழையினாலும், ஏரிகள் உடைப்பினாலும் ஏற்பட்ட இழப்பு, மறதியினால் நாம் செய்யும் தவிர்க்கக்கூடிய செலவுகள், வேந்தன் எனும் அரசு, மதுபானம் விற்று மக்கள் சம்பாதிப்பதை சேமிக்க விடாமல் குடிபோதைக்கு ஆளாக்கி விடுவது, அங்கங்கே வீடுகளில் ஏற்படும் தீ விபத்துகளால ஏற்படும் பெரும் நட்ம், தாயாதிக்காரர்களாகிய அண்ணன் தம்பிகள் வழக்கு, வீடு, வங்கிகளில் கொள்ளை என நாம் இவைகளைக் கண்கூடாகக் காண்கிறோம்).பொருள் முயன்று ஈட்டிய போதும் நம்மை விட்டு அகலுதற்குப் பலவேறு வழிகளையும் உடைத்தாம். ஆகவே அதனை ஈட்டல் பயனின்றாம். பொய்யாகிய அப்பொருளின்பாற் பற்று விட்டவர்களே பேரின்பம் எய்துபவர் என்பதாகும்.

சித்தர் பாடல்கள்

“தேடிய செம்பொன்னும் செத்தபோது உன்னோடு
நாடி வருவதுண்டோ
போம்போது தேடும் பொருளில் அணுவேணும்
சாம்போது தான் வருமோ

என்ற பாடலில் நாளும்நாளும் தேடிய செல்வங்கள் யாவும் சாவும் போது துணைக்கு வாரது. ஒரு மனிதன் எவ்வளவுதான் பொருள் சேர்த்தாலும் கடைசியில் அவனுக்கு மண் மட்டுமே சொந்தமாகும்.

செல்வம் நிலையாமை குறித்து பாம்பாட்டிச்சித்தர் ,கூறுகையில்,

“மலைபோன்ற செம்பொற்குவை வைத்திருப்பவர்
மறலிதான் வருகையில் வாரிச் செல்வரோ ” (பாம்.சித்,பா. 44)

என்ற பாடலில் மலைபோன்ற செல்வங்களை வைத்திருந்தாலும் எமன் வந்து அழைத்தபின் பயனாகுமா ?என்று கேள்வி எழுப்புகிறார்

நாட்டுப்பாடல்

வாழ்வே நிலையற்றது எனக் கூறுகையில் அதில் ஒருவன் ஓடித்தேடி சம்பாதிக்கும் செல்வமும் இறுதி காலத்தில் துணைவராது, சகடம் எனச் சென்று கொண்டே இருக்கும் தன்மையானது என்பதை,

''பஞ்சு பருத்தி எடுத்து - அதைப்
பேரான மணையிலே ஊட்டி அரைத்து
நெஞ்சக் கருத்தாலே நூத்து - அதை
நேரோடும் பாவில் ஓடி நெய்தாலும்
நாலு முழத்தில் ஒரு துண்டு - அதில்
நாலைந்து பக்கமும் பீத்தலும் உண்டு
பாதியைப் பறையன் கிழித்தான் - அதில்
பகுபாதி அம்பட்டான் கொண்டோடிப் போனான்
அக்கினி தேவுக்குப் பாதி - இந்த
அழகான கட்டைக்குப் போத்தப்பத்தாது''

என்ற பாடல் எடுத்துரைக்கின்றது.

முடிவுரை

செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி எண்ணாத
புல்லறி வாளர் பெருஞ்செல்வம் - எல்லில்
கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி
மருங்கறக் கெட்டு விடும்.

நாம் செல்வம் உடையோம் என்ற கர்வம் கொண்டு மறுமையைப் பற்றி எண்ணாத சிற்றறிவுடையோரின் பெரும் செல்வம், இரவில் கருமையான மேகம் வாய் திறப்பதால் உண்டான மின்னலைப் போலத் தோன்றி, இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும்!

ஆதலினால், துதி கோவிந்தனை, துதி கோவிந்தனை, கோவிந்தனைத் துதி மூட மனமே என்று எடுத்துரைக்கிறது இந்த இரண்டாவது செயல்முறை.

செல்வத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று ஆதி சங்கரர் கூறுகிறார் என்று தவறான முடிவிற்று நாம் வரக்கூடாது. தங்கள் சொந்த நலனுக்காக கண்மூடித்தனமான ஈடுபாட்டிற்கு எதிரான அறிவுரையாக இந்த இரண்டாவது செயல்முறையை கவனமாக உட்கொள்ள வேண்டும்.

உள்ளுணர்வோம். அடுத்த செயல்முறை என்னவென்று புது வருட முதல் நாள் (01-01-2023) அன்று அறிவோம். அதுவரை

இறையருள் பெருக. வளமுடன் வாழ்க!

சங்கரனின் சம்மட்டி அடி 1 – யாக்கை நிலையாமை

வலை ஒலிப் பதிவு (Podcast) இணைப்பு

https://soundar53.substack.com/p/1#details

ஒளிப்பதிவு இணைப்பு

https://youtu.be/–oQVC7mJnc

முகவுரை

சங்கரனின் பட்டறைக்கு வருகை தந்து, முதல் சம்மட்டி அடி வாங்கிட ஒப்பிய உங்களனைவருக்கும் மிக்க நன்றி. 

இறை வணக்கம் போல் துவங்குகிறார் ஆதி சங்கரர் அவரது முதல் சம்மட்டி அடியை.

“கோவிந்தனைத் துதி; உனது மரண காலத்தில் உன்னை ஏட்டறிவு காத்திடாது”. இது தான் இந்த பண்ணின் (அடியின்) சாரம்.

விழும் முதல் அடியை பார்க்கும் பொழுது, மெதுவான அடி போலத்தான் தெரியும். பொதுவாக, விழுந்த பின்தான் தெரியும் அடியின் வலி. அதைப் போல, இந்த அடியின் வலிமையை உணர, பண்ணின் உட்கருத்தை ஆராய வேண்டும்.

வாருங்கள், விழும் அடியை ஆராயலாம். சங்கரனின் இந்த அடிக்குப் பெயர் யாக்கை நிலையாமை.

சமஸ்க்ருத ஸ்லோகம்

भज गोविन्दं भज गोविन्दं,

गोविन्दं भज मूढ़मते।


संप्राप्ते सन्निहिते काले,


न हि न हि रक्षति डुकृञ् करणे॥१॥

தமிழில் ஒலி பெயர்ப்பு

ப4ஜ கோ3விந்த3ம் ப4ஜ கோ3விந்த3ம்

கோ3விந்த3ம் ப4ஜ மூட4மதே |

ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே

நஹி நஹி ரக்ஷதி ‘டு3க்ருஞ் கரணே’ ||

தமிழில் மொழிபெயர்ப்பு

துதி கோவிந்தனை துதி கோவிந்தனை

கோவிந்தனைத் துதி மூட மனமே

விதித்திட்ட வேளையில் காயம் அழியும்

காத்திடுமோ உனை வாழ்வியல் பாடம்.

விளக்கவுரை

பஜ

“பஜ“ என்ற சொல்லிற்கு நினை, பூசி, துதி என்ற பொருட்கள் உண்டு. பஜனம் என்பதற்கு சேவை என்ற பொருள்.

இந்தப் பண்ணில் ஆதி சங்கரர் இந்தச் சொல்லையும், கோவிந்தம் என்ற அடுத்த சொல்லையும் மூன்று முறை பயன்படுத்துகிறார்.

ஏன் மூன்று முறை? அதற்கு முக்கியத்துவம் உள்ளதா?

உள்ளது. ஏன் என்பதற்கான சுருக்கமான விளக்கம் இங்கே.

மூன்று வகையான தடைகளை நீக்குவது அல்லது மூன்று வகையான துன்பங்களை (துக்கங்களை) நீக்குவது என்பது வாழ்க்கையின் முக்கிய நோக்கங்களில் ஒன்று என்று நமது மறை நூல்கள் நமக்குச் சொல்கின்றன.

மூன்று வகை துன்பங்கள் வெளிப்படையாக வரையறுக்கப்படவில்லை என்றாலும், ஒவ்வொரு வர்ணனையாளரும் பின்வரும் மூன்று வகையான துன்பங்களைக் குறிக்கின்றனர்:

1. ஆதிதைவிகா (தெய்வீக தோற்றம்) - கடவுளின், இயற்கையின் செயல் காரணமாக வரும் துன்பங்கள். இயற்கையின் சீற்றத்தால் விளையும் துக்கங்கள்.
2. ஆதிபௌதிகா (உடல், ஜட உயிரினங்களில் உருவானது) - வெளிப்புற தாக்கங்கள் காரணமாக வரும் துன்பங்கள்
3. அத்யாத்மிகா (நாமே உருவாக்கியது) - உடல் நோய்கள், மனப்பிரச்சனைகள் (ஆசை, கோபம், பயம், வெறுப்பு, பொறாமை, மோகம், சோகம், அவமானம், காழ்ப்பு…..) முலம் வரும் துன்பங்கள்

இம்மூவகை துக்கங்கள் (தாபத்ரையம்) நீங்கிட இறை வழிபாட்டில் மூன்று முறை முறையிடுதல் மரபு.
கோவிந்தம்

இந்த சொல் கோ, விந்தம் என்ற இரு சொற்களடங்கியது. முதலில் கோ என்ற சொல்லின் பொருளைக் காண்போம்.

1. “கோ” என்றால் - பசு, உயிரினம் (சைவ சித்தாந்தத்தில் பசு என்பது உயிரினங்கள்/மனிதர்களைக் குறிக்கும்), கால்நடை என்று பொருள்.

2. விந்தம் என்றால் - பேணுதல் (காத்தல்), அறிதல்

பசுக்களை/உயிரினங்களை அறிந்து பேணிக் காப்பவன் கோவிந்தன்.

காக்கும் கடவளாம் திருமாலுக்குப் பயன்படுத்தப்படும் அடைமொழிகளில் ஒன்று கோவிந்தா. விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் 187, 539 வது நாமங்களாக இந்த சொல் உபயோகிக்கப் படுகிறது. இவ்வார்த்தை இரண்டு விளக்கங்களை வழங்குகிறது.

1. முதலாவது வேதங்களின் மூலம் அறியப்பட்டவர். பிரம்மசூத்திரம், வேதங்கள் மூலம் மட்டுமே பிரம்மம் உணரப்படுகிறது என்று கூறுகிறது (गोपिः वेत्ति इति गोविन्दः gopi: vEthi iti gOvinda:).

2. இந்த வார்த்தையின் இரண்டாவது விளக்கம், உயிர்களை அறிந்தவர் (गाः विन्दति इति गोविन्दः கா: விந்ததி இதி கோவிந்த:). இல்லாததொன்றுமில்லை, எல்லாமே அவன் என்று நீக்கமற நிறைந்திருப்பதால், இடம், காலப் பரிமாணங்களைக் கடந்து, உயிரினங்களையும் அவற்றின் செயல்களையும் அறிந்திருப்பவர் கோவிந்தன்.

ஆக, ப்ரம்மம், பரம்பொருள் என்ற தூய இருப்பு, தூய உணர்வு, தூய இன்பம் தான், கோவிந்தன் என்ற சொல்லுக்குப் பொருள்.
மூட மதே

மனிதர்களாகிய நாம் மற்ற உயிரினங்களை விட மிக உயர்ந்த மனமும் புத்தியும் உடையவர்களாக இருக்கிறோம். வேண்டியது, வேண்டாதது, நல்லது, கெட்டது, என்று பகுத்தறியும் தன்மை நம்மிடம் மட்டுமே உண்டு. வெறும் உள்ளுணர்வால் (உயிரியல் மற்றும் உடலியல் தூண்டுதல்களால்) மட்டும் நாம் வாழ்வதில்லை; உயர்ந்த குறிக்கோள்களால் நிர்வகிக்கப்படுகிறது நம் வாழ்வு.

ஆயினும்கூட, அன்றாட வாழ்வில் இந்த மனம் நம்மை எங்கெலாம், எப்படியெல்லாம் “ஒன்றை விட்டு ஒன்று பற்றிப் பாசக் கடலக்குள் வீழ்த்திட” அழைத்துச் செல்கிறது. மனதைப் பற்றிய இந்தப் பாமரனின் விளக்கத்தை, கீழ்காணும் வலைப் பதிவில் காண்க. https://soundar53.substack.com/p/-6-


முந்தைய பதிவில் கூறியபடி, அன்றாட வாழ்வில் நடப்பு வேறு. அறிவில்லாத ஒன்றை அறிவு என்றும், தெளிவிலாத ஒன்றை தெளிவு என்றும், நிலையற்றவற்றை நிலையானவை என்றும், முழுமையற்றவற்றை முழுமையானவை என்றும் எண்ணும் நம் மனதை, ஆதி சங்கரர் “மூட மனமே” “அறிவிலியே” என்று அழைப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை.
ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே

நேரடி மொழி பெயர்ப்பு என்பது “குறித்த நேரம் வந்திடினில்” என்று பொருளாகும். யாருக்கு, யார் குறித்த, எந்த நேரம்? நமக்கு, காலன் குறித்த, மரண நேரம் என்பது நேரடி விடை. நாட்கள் கடக்க கடக்க, காலன் வரும் நேரமும் நெருங்குகிறது. அது சரி, மரணம் யாருக்கு?

“மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா! மரணத்தின் தன்மை சொல்வேன். மானிடர் ஆத்மா மரணம் எய்யாது. மறுபடிப் பிறந்திருக்கும். மேனியைக் கொல்வாய். நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி சென்றுதான் தீரும் ஓர் நாள்” என்று போர்க்களத்தில் அறிவுரை கூறினானே பாரத்தசாரதியான இறைவன் கண்ணன்.

ஆக உடலினுள் உயிர் ஒண்டுக் குடித்தனம். வாடகைதான் வாழ்வு.
நஹி நஹி ரக்ஷதி

“காப்பாற்றாது, காப்பாற்றாது” என்பது நேரடி மொழிபெயர்ப்பு. யாரை, எப்போது, எது காப்பாற்றாது?

விளக்கம் இதோ:

யாரைக் காப்பாற்றாது - “என்றும் அழியும் இக்காயம், மலம் ஊறித் ததும்பும் இவ்வுடலை மெய்யென்று கொண்டு பிழைத்திடும்” மூட மனமுடை அறிவிலிகளாகிய நம்மை

எப்போது காப்பாற்றாது - விதித்திட்ட வேளையில் - அதாவது “காலனின் பாசக் கயிறு நம்மைச் சுற்றி விழும்” நேரம். எமனின் ஓலை நமை அடையும் நேரம். உடலை விட்டு உயிர் பிரியும் நேரம்.

எது காப்பாற்றாது - இதற்கு விளக்கம் அடுத்த சொல்லில்
டுக்ருங் கரனே

டுக்ருங் என்பது சமஸ்கிருத இலக்கணத்தில் (வ்யாகரந) கர்ணே (கரனே) என்ற செயலைக் கொண்ட ஒரு வேர் சொல். இலக்கண விதிகளை மனனம் செய்வது என்று பொருள்.

வேதங்கள் மற்றும் வேதாந்தம் படிக்க சமஸ்கிருத இலக்கண அறிவு மிகவும் விரும்பத்தக்கது. பெரிய இலக்கண அறிஞர் பாணினி போன்ற பல அறிஞர்கள் வடித்த சூத்திரங்களை பாட, மனப்பாடம் செய்ய, அறிஞர்கள் இலக்கணத்தில் புலமை பெறுவதற்கான வழிகளில் ஒன்று, "டுக்ருங் கரனே".

இந்தப் பண்ணில் நாம் இதனை வெறும் ஏட்டுக்கல்வி என்று மட்டுமே எடுத்துக் கொள்ளாமல், இன்னும் சற்று விரிவான நோக்கத்தில் அறிந்து கொள்ள வேண்டும்.

அறிவு (வித்யா) இரு வகை: 1. இறையறிவு (மெய்ப்பொருள் அறிவு). இதனை பர வித்யா என்பர். 2. இறையறிவில்லா மற்ற அனைத்து அறிவு. இதனை அபர வித்யா என்பர். அதாவது அன்றாட வாழ்வில், நமக்கு வரையறுக்கப்பட்ட (விதிக்கப்பட்ட) உலகியல், இறையியல் வினைகள் (லௌகீக, வைதீக கர்மங்கள்). அபர வித்யா இன்றி, பர வித்யாவை அடைய முடியாது. பர வித்யா இல்லாமல் அபர வித்யா முமழுமை அடையாது.

ஆக இங்கு குறிப்பிடுவது, அபர வித்யா நம்மைக் காப்பாற்றாது என்ற பரந்த அர்த்தத்தில்.

தமிழ் இலக்கியத்தில் யாக்கை நிலையாமை

இச்சொற்களின் சாரத்தை பல தமிழ் ஞானிளும் சைவ சித்தாந்த அறிஞர்களும், கவிஞர்களும் எண்ணற்ற கவி வடிவிலே எழுதியுள்ளனர். யாக்கை நிலையாமை/நிலையாமை என்ற அத்தியாயங்கள் திருமந்திரத்திலும், திருக்குறளிலும் உள்ளன.

திருமந்திரம்

“மாறு திருத்தி வரம்பு இட்ட பட்டிகை
பீறும் அதனைப் பெரிது உணர்ந்தவார் இல்லை
கூறும் கருமயிர் வெண்மயிர் ஆவதும்
ஈறும் பிறப்பும் ஓர் ஆண்டு எனும் நீரே”.

(நன்கு நெய்து தயாரிக்கப் பட்ட பட்டாடையும் கிழிந்து போய்விடும். இந்த உண்மையைப்பற்றி உலகத்தவர் சிறிதும் சிந்திப்பதில்லை. அழகிய கருங் கூந்தல் வெண் கூந்தலாக மாறிவிடுவதும் கண்கூடு. பிறப்புக்கும், இறப்புக்கும் இடையே ஒரு சிறு பொழுதே உள்ளது. இந்த உண்மைகளைச் சிந்தித்து நன்கு உணர்வீர் உலகத்தோரே).

மேலும்

“ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே”

என்று திருமூலர் உரைக்கிறார்.

திருக்குறள்

இதனையே திருவள்ளுவர்:

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு (குறள் 340)

குடம்பை தனித்து ஒழியப் புள் பறந்தற்றே
உடம்பொரு உயிரிடை நட்பு (குறள் 338)

என்றும் கூறுகிறார்.

சிவ வாக்கியார்

“ மண்கலம் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார்
வெண்கலம் கவிழ்ந்தபோது வேணமென்று பேணவார்
நண்கலம் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார் ” (சிவ.பா.80)

என்ற சிவவாக்கியர் பாடல் அழியும் உடல் பற்றி குறிப்பிடுகிறது.

நாட்டுப் பாடல்

''குச்சு வீடுங் கட்டலாம்
குறுங் கதவு சாத்தலாம்
வாழ வேண்டும் என்று சொன்னால்
வாய் மதங்கள் பேசலாம்
காலனுட ஓலை வந்தால்
கனத்தவீடும் தாங்குமோ
குச்சு வீடும் தாங்குமோ
குறுங்கதவும் தாங்குமோ''

என்ற பாடல் மூலம் அறியப்படும் தத்துவங்கள் பலப்பல. உடம்பு ஒரு குச்சு வீடு. அதில் ஆசைகள் கதவுகளாகும். எனவே வாழ நினைப்பவன் ஆசையை அடக்குதல் வேண்டும். உடம்பு ஒரு குச்சுவீடு, அக்குச்சு வீடு எவ்வளவு கனத்திருந்தாலும் அதாவது (புண்ணியம் செய்திருந்தாலும்) காலதேவன் வந்துவிட்டால் கணப் பொழுதும் நில்லாது மறைந்து விடும் என்ற நிலையாமைத் தத்துவத்தை இப்பாடல் நயம்பட கூறுகிறது.

திரை இசைப் பாடல்

பாத்தா பசுமரம்
படுத்துவிட்டா நெடுமரம்
செத்தா வெறகுக்காகுமா -
ஞானத்தங்கமே...
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா?
கட்டழகு மேனியைப் பார்
பொட்டும் பூவுமா - நீட்டி
கட்டையிலே படுத்துவிட்டா
காசுக்காகுமா?'

முடிவுரை

மேற்கூறிய விளக்கங்கள் எதுவும், வேதங்களின் பூர்வபாகத்தில் (ஆரம்ப பகுதி) பொதிந்துள்ள பல்வேறு சடங்குகள் மற்றும் பிரார்த்தனைகளை இழிவுபடுத்துவதாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டியதில்லை. 

பெரும்பாலானவர்களுக்கு, அவை மனதையும் உடலையும் சுத்தப்படுத்துவதிலும், பெரிய பயணத்திற்கு ஒருவரைத் தயார் செய்வதிலும் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன.

ஸ்ரீ ஆதி சங்கரரைப் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர், விரிவான தயாரிப்புகள் இல்லாமல் நேரடியாக அந்தப் பயணத்தை மேற்கொள்ளத் தயாராக பிறந்தவர்கள், அந்த வகையில் மிகவும் வித்தியாசமானவர்கள்.

உண்மையில், இறுதிக்கான வழிமுறைகளைத் தவறாகப் புரிந்துகொள்வதையும், சடங்குகளில் மட்டுமே திருப்தியடைவதையும், அவற்றின் உண்மையான நோக்கத்தையும் பொருளையும் புரிந்து கொள்ளாமல் அவற்றைச் செய்வதையும் தவிர்த்து பரம்பொருளை உணருவதை முயலவேண்டும் என்று கூறுகிறது இப்பண்.

ஏன் இறைவன் நாமத்தை சொல்ல வேண்டும் என்ற கேள்வி எழலாம். இறைவனே இதற்கு பகவத்கீதையில் 8வது அத்தியாயத்தில் பதில் அளிக்கிறார்:

अन्तकाले च मामेव स्मरन्मुक्त्वा कलेवरम् ।
यः प्रयाति स मद्भावं याति नास्त्यत्र संशयः ॥८- ५॥

அந்தகாலே ச மாமேவ ஸ்மரந்முக்த்வா கலேவரம் |
ய: ப்ரயாதி ஸ மத்³பா⁴வம் யாதி நாஸ்த்யத்ர ஸம்ஸ²ய: || 8- 5||

ய: அந்தகாலே ச மாம் ஏவ ஸ்மரந் = எவன் இறுதிக் காலத்தில் எனது நினைவுடன்
கலேவரம் முக்த்வா ப்ரயாதி = உடம்பைத் துறந்து கிளம்புகிறானோ (இறப்போன்)
ஸ: மத்³பா⁴வம் யாதி = எனதியல்பை எய்துவான்
நாஸ்தி அத்ர ஸம்ஸ²ய: = இதில் ஐயமில்லை.

இறுதிக் காலத்தில் உடம்பைத் துறந்து எனது நினைவுடன் இறப்போன் எனதியல்பை எய்துவான். இதில் ஐயமில்லை.

வாழ்நாட்களில் மனதுக்குக் கடவுளிடம் நிலைத்திருக்கும் பழக்கத்தை உண்டுபண்ணினால்தான் அம்மனம் மரண காலத்தில் கடவுளிடம் நிலைபெறும். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் அல்லவா. ஆகையால் நாம் அனைவரும் நம் வாழ்நாட்களில் மனதால் கடவுளைத் தியானம் செய்துகொண்டே தங்கள் கர்மங்களைச் செய்யது, கரமத்தின் பலனை அவனிடமே விட்டு விட வேண்டும்.


இது தான் இந்த முதல் சம்மட்டி அடி. என்ன ஒரு ஆழமான அடி! இந்த அடியை உள்வாங்கினால், உற்ற தேகத்தின் உயிரையும், உயிரை மேவிய உடலையும் ஊடுருவி, உலுக்கி எடுத்து, நம் உணர்வினை தட்டி எழுப்பும் என்பது உறுதி.
அடுத்த பதிவில் சங்கரனின் இரண்டாவது சம்மட்டி அடி.     அதைப் பெறும் வரை…….

இறையருள் பெருக. வளமுடன் வாழ்க

சங்கரனின் சம்மட்டி அடிகள் – முகவுரை

தமிழ் ஒலித் தொடர் பதிவு இணைப்பு (Link to the Tamil Podcast)

இன்றய காலக் கட்டத்தில் தமிழ் மொழி அறிந்தவர்களை, இரு வகையாகப் பிரிக்கலாம். 1. தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். 2. தமிழ் எழுத, படிக்க தெரியாது; ஆனால் பேச முடியும்; அடுத்தவர் பேசினால் புரிந்து கொள்ள முடியும்.இந்த இரண்டாம் பிரிவைச் சேர்ந்தவருக்காக, இந்தப் பதிவின் ஒலித் தொடர் பதிவை (podcast) கீழ்காணும் இணைப்பில் கேட்கலாம்.

https://soundar53.substack.com/podcast

ஏன் பிறந்தாய் மகனே ? ஏன் பிறந்தாயோ? ……….. நான் பிறந்த காரணத்தை நானே அறியும் முன்னே நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே!

கவிஞர் கண்ணதாசன், திரைப்படம்-பாகப்பிரிவினை
63 வருடங்களுக்கு முன் வந்த பிரபலமான தமிழ் திரைப்படத்தில் வரும் ஒரு பாடலின் தொடக்க வரிகள். வருடங்கள் பல கடந்தாலும் இக்கேள்விகள் நம் ஒவ்வொருவர் மனதையும் வருட்டி எடுக்கும் (இடர்கள் நம்மை சூழும் போதாவது) என்றால் அது மிகையாகாது. இந்த திரை இசைப் பாடலில் அடங்கிய தத்துவத்தை இப்போது ஆய்ந்திடலாம்.

மனிதப் பிறவியின் நோக்கம்

மனிதப் பிறவியின் நோக்கம் என்ன? இவ்வினாவிற்கு இப்புவியிலே இன்றும் எண்ணற்ற ஆன்மீகவாதிகள், துறவிகள், முனிவர்கள், தனிநபர்கள், நன்னெறி தத்துவம் பற்றிய எழுத்தாளர்கள், மற்றும் பலர் விடையளிக்க முயன்று கொண்டு வருகின்றனர். இவர்கள் வேறுபட்ட பாதைகளில், மாறுபட்ட கருத்துக்களுடன் ஆராய்ந்த போதிலும் அனைவரும் ஒப்பும் ஒரு உண்மை:

“ஆறறிவு பெற்ற மானிடர் அனைவருமே துன்பம் தவிர்த்து நிலையான இன்பமடையவே அவர்தம் பணிகளின் குறிக்கோளாக வைத்து அவரவர் பணிகளைப் புரிகின்றனர்”

என்பது. இதில் ஐயமேதுமில்லை.

வட மொழியில் வாழ்வின் பொருள் என்பதை புருஷார்த்தம் என்பர். புருஷார்த்தம் என்பது தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் எனபவைகளுக் குறிக்கும். இதனையே அறம், பொருள், இன்பம், வீடு என தமிழில் கூறுவர்.

அறத்தின் வழி நின்று பொருள் தேடி முறையாக இன்பம் துய்த்து வீடுபேறடைதல் என்பதுவே இவ்வழி முறையாகும். அதாவது, முதலில் தர்மத்தை அறம் என்று சொல்லி, அதைத் செய்வதற்காகவே எப்படிப் பொருள் ஈட்ட வேண்டுமோ அந்த நியாயமான முறையைச் சொல்லி, அதனால் இன்னின்ன இன்பங்களைப் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று பக்குவம் வருகிற வரையில் கிரமப்படுத்திக் கொடுத்து, அப்புறம் இந்தச் சின்ன சின்ன இன்பங்களை எல்லாம் விடுத்து, இறுதியில் நிரந்தர இன்பமான வீடு என்கிற மோக்ஷத்தைக் காட்டுவதே வாழ்வியல் முறை எனும் நான்கு புருஷார்த்தங்கள்.

பாரதியாரின் எளிமையான வாக்கில் இந்நான்கும் இதோ:

தன்னைக் கட்டுதல் அறம்
பிறர் துயர் தீர்த்தல் பொருள்
பிறர் நலம் நாடுதல் இன்பம்
உலகு காக்கும் ஒருவனைப் போற்றுதல் வீடு.

மனிதப் பிறவியின் நடப்பு

அந்த ஆனந்தத்தை அடைய முயலும் நம் அனைவரின் வாழ்க்கையிலும் அன்றாடம் இடைவிடாது, முக்கியமான மூன்று பெரும் தத்துவங்கள் தொடர்பு கொள்கின்றன. அவை, மனிதன், உலகம் (படைப்பு), இறைவன். 

இவைகளை வாழ்வில் உபயோகித்து (அனுபவித்து) , வினைகள் புரிந்து, “பொருள்” தேடி, “இன்பம்” துய்த்து, களைத்து, முடிவில்

“நாம் வந்த கதை என்ன? நாம் கொண்டது என்ன, கொடுப்பது என்ன? மன்னைத் தோண்டி தண்ணீர் தேடும் நாம், நம்மைத் தோண்டி ஞானம் கண்டோமா? இல்லை, நம் மனமெங்கும் தெருக் கூத்து, பகல் வேஷமா?”

என்றெல்லாம் பிதற்றி, தன்னை அறிவதே தனது பிறவியின் நோக்கம், அதனை அறிய முயலாமல் வாழ்நாளை வீனாக்கினோமே என துன்பமுற்று, வருந்தி மடிகிறோமே. இது தானே நடப்பு.

தாயுமானவர் இந்த நடப்பைத்தான் இப்படி கூறுகிறார்:

“ஆசைக்கோரளவல்லை அகிலமெல்லாம் கட்டி
ஆளினும் கடல்மீதிலே ஆனை செலவே நினைவர்,

அளகேசன் நிகராக அம்பொன் மிக வைத்த பேரும்
நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்

நெடுநாளிருந்த பேரும் நிலையாகவேயினுங்
காயகல்பந்தேடி புண்ணாவர் எல்லாம்

யோசிக்கும் வேளையிற் பசிதீர உண்பதும்
உறங்குவதுமாகடியும் உள்ளதே போதும்

நான் நான் எனக்குளறியே ஒன்றைவிட்டு ஒன்றைப்பற்றி
பாசக்கடற்குள்ளே வீழ…”

இன்பம் பயக்கா இருள் – ஏன்?

சரி, நமது வாழ்க்கை அனுபவம், நம்மை, நமது வாழ்வின் பொருளை நோக்கிச் செலுத்தவில்லையே! ஏன்? 

இந்தக் கேள்விக்கு, இதோ! மூன்று பதில்கள் - கேள்விகள் வடிவில்:

1. அனுபவிக்கின்றவனை அனுபவிக்காமல், அனுபவிக்கப்படுவைகளை அனுபவிக்க முயலும் அறிவிலிகளாக அலைகிறோம் நாம்; அல்லவா! (ஆஹா! நம்ம மொபைல் ஃபோனில் இருந்து நம் சொந்த மொபைல் எண்ணயே அழைக்கிறேனே! எப்படி பதில் கிடைக்கும்? அது போல இருக்கே இந்தக் கேள்வி).

2. அறிவைத் தரும் கருவிகளின் துணை கொண்டு, அறியப்படும் பொருள்களை அறியும் நம்மை, எந்த அறிவைத் தரும் கருவிகளைக் கொண்டு அறிவது என்று என்றேனும் ஆராய்ந்தோமா?

3. “நானெனும் பொய்யை நடத்துவோன் நான்
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்
ஆன பொருள்கள் அனைத்திலும் ஒன்றாய்
அறிவாய் விளங்குதற் சோதி நான்”

என்று பாட்டுக்கொரு புலவன் பாரதி கூறிய “நான்” ஆக இல்லாமல், “இன்பமாகிய நாம், தம்மை இன்பெமென அறியாமல், துன்பத்தின் பின்னால், துன்பத்தில் இன்பம் இருக்கின்றதென்று ஏன் ஓடிக்கொண்டிருந்தோம்”.

கேள்விக்கு என்ன பதில்?

சரி. குழம்பி இருக்கும் நம்முடைய கேள்விகளுக்கு பதில் கூறாமல், கேள்விகளையே திருப்பி வைத்தால், நாம் என்ன செய்வது? எங்கு செல்வது? - நம் அனைவரின் சிந்தனை, அல்லவா! 

சுலபம். வாருங்கள், நம் அனைவரையும் ஒரு கொல்லன் பட்டறைக்கு கூட்டிச் செல்லலாம். அங்கே நமக்கு விடைகள் கிடைக்கும். ஆனால், ஒரு நிபந்தனை! அங்கே ஆசாரி நமக்கு 31 சம்மட்டி அடிகள் கொடுப்பார். அவைகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

ஒன்று மட்டும் நிச்சயம்/உத்தரவாதம். அந்த முப்பதொன்று அடிகளை, கொல்லன் பட்டறையில் இரும்பு வாங்கும் அடிகளாக நாம் ஏற்றிட்டால், கனிந்து மாறிடும் இரும்பு போல,

இருள் நீங்கி இன்பம் பயக்கும்
மருள் நீங்கி மாசறு காட்சி

நமக்கு கிட்டி, நாம் மாறுவோம். அதில் சந்தேகமே இல்லை. சம்மதமா?

பயம் தவிர்த்து, அந்த உத்தரவாதத்துடன் வாருங்கள் ஆதி சங்கரனின் பட்டறைக்கு.
வருக! வருக! மாதம் ஒருமுறையாவது, சங்கரனின் பட்டறைக்குச் செல்வோம், சம்மட்டி அடிகள் வாங்குவோம். பின், நமது நிலையை உணர்வோம்.
சங்கரனின் சம்மட்டி அடி 1 - நவம்பர் 11ம் தேதியில் - கற்ற கல்வியும் சுற்றி விழும் காலன் கயிறும் - யாக்கை நிலையாமை - அடுத்த பதிவில். அதுவரை
இறையருள் பெருக. வளமுடன் வாழ்க

முக்கிய குறிப்பு: இப்பதிவும், வரும் தொடர் பதிவுகள் அனைத்தும், பூஜ்யஸ்ரீ சுவாமி ஓம்காரானந்தாவின் விரிவுரைகளால் ஈர்க்கப்பட்டு, சுவாமிஜியின் சொந்த விரிவுரைகளில் இருந்து அடியேன் அறிந்து கொண்டது. இப்பதிவுகளில் காணும் கல்லாப் பிழை, கருதாப் பிழை, எல்லாப் பிழைகளுக்கும் அடியேனின்அறியாமையே காரணம். அவைகளை சுட்டிக்காட்டின், அடியேனின் அறியாமையைக் களைய உதவும். நன்றி.