ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 2

ஸ்லோகம்

क्षित्यादिनामवयववतां निश्चितं जन्म तावत्
तन्नास्त्येव क्वचन कलितं कर्त्रधिष्ठानहीनम् ।
नाधिष्ठातुं प्रभवति जडो नाप्यनीशश्च भावः
तस्मादाद्यस्त्वमसि जगतां नाथ जाने विधाता ॥

க்ஷித்யாதிநாமவயவவதாம் நிஶ்சிதம் ஜந்ம தாவத்
தந்நாஸ்த்யேவ க்வசந கலிதம் கர்த்ரதிஷ்டாநஹீநம் ।
நாதிஷ்டாதும் ப்ரபவதி ஜடோ நாப்யநீஶஶ்ச பாவ:
தஸ்மாதாத்யஸ்த்வமஸி ஜகதாம் நாத ஜாநே விதாதா॥

தமிழாக்கம்

புவிமுதல் அங்கமுடை பூதங்களனைத்திற்கும்
உண்டு தோற்றம் என்பது உறுதிபட நிச்சயம் !
வடித்தவனெனும் நிலைகளம் இலாமல் அவை
வடிவங்களென அறியப்படுவதே இல்லை !
தாவரமும் தன்வயமற்ற சங்கமமும் ஒன்றினைத்
தோற்றுவிக்க இயலாது என்பதனால், நாதனே
உலகிற்கு முதல்வனாய் இருந்திடும் உனையே
உருவாக்கமதின் உட்பொருளென அறிவேனே !! 

சொற்களின் பொருள்

நாத - உலகின் தலைவரே!

க்ஷித்யாதிநாம - க்ஷிதி ஆதிநாம - பூமி முதலான (பூமி, பஞ்ச பூதங்கள்) 

அவயவவதாம் - உறுப்புகளுடன் கூடியவைகளுக்கு

ஜந்ம - தோற்றம் (தோன்றியிருக்க வேண்டும்)

தாவத் - என்பது 

நிஶ்சிதம் - உறுதி

கர்த்ரு அதிஷ்டாந ஹீநம் - உருவாக்கியவனின் இருப்பு இல்லாமல் 

க்வசந - எப்பொருளும்

தத - அவை

கலிதம் ஏவ - அறியப்பட்டதே

நாஸ்தி - இல்லை

ஜடோ - உயிரற்ற பொருளால் (ஜடத்தால்) 

அதிஷ்டாதும் - ஒன்றைப் படைப்பதற்கு

ந ப்ரபவதி - இயலாது

அநீஶஶ்ச பாவ: அபி - (வைரயறைகளுடன் கூடிய, தன்வயமற்ற) உயிர,களாலும் 

ந (ப்ரபவதி) - முடியாது

தஸ்மாத் - எனவே

த்வம் - நீங்கள்

ஜகதாம் - உலகிற்கு

ஆத்யஹ - முதல்வராக (காரணமாக)

அஸி - இருக்கிறீர்கள் 

விதாதா - தங்களைப் படைப்பின் காரணமாக

ஞாதே - அறிகிறேன்

விளக்கம்

இந்த பிரபஞ்சம் எண்ணற்ற நிறங்களையும், எண்ணற்ற வடிவங்களையும் உடையதாக இருக்கிறது. இந்த படைப்பு தோன்றியிருக்கிறது என்பது உண்மை. மேலும் படைப்பவன் (கர்த்தா) இல்லாமல், பொருள் இல்லாமல் எந்த ஒரு படைப்பும் இல்லை. எனவே கடவுள் இருக்கிறார். இதனை வேதம் கூறுகிறது. “உலகு ஆதி பகவன் முதற்றே” என்று திருவள்ளுவர் கூறுகிறார். இந்த உலகானது கடவுளை முதலாக உடையதுதான். உலக முதல்வன் ஒருவன் உளன்.  உலகத்திற்கு ஆதி இறைவன். 

பெரியோரின் சொற்களே இந்த இறைவனின் இருப்பிற்கு ஆதாரம் (ப்ரமாணம்). திருவள்ளுவரே கூறுகிறார்

உலகத்தார் உண்டுஎன்பது இல்என்பான் வையத்து
அலகையா வைக்கப் படும் 

என்று குறள் 850ல்.

இந்த ஸ்லோகம் “ஈஸ்வர அர்த்தித்வ நிரூபணம்” – கடவுளின் இருப்பைக் கூறும் ஸ்லோகம் இது. மேலும் 

உயிருள்ளவற்றிலிருந்து உயிரற்றவை தோன்றுகின்றன. உணர்வற்ற பொருளால் இந்த உலகைப் படைக்க முடியாது. சிற்றறிவு உள்ள உயிர்களால் இந்த உலகைப் படைக்க இயலாது.

என்கிறது இந்த ஸ்லோகம்.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதும் இல்லை. நம்முடைய வரையறைகள் நமக்குத் தெரிகின்றது. நமக்குமேல் ஒரு சக்தி இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். அந்த சக்தி “ஆனந்தமயமாய்,  அறிவாய்   இருக்கிறது” என்று கூறுகிறது வேதம். 

வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளே …..

என வானவில்லின் தோற்றத்திற்கு இறைவனை ஒப்பிடுகிறது நாலடியார். எப்போது வரும், எப்போது மறையும் என்பது நமக்குத் தெரியாது.

அத்தகைய “கடவுள் இல்லை என்று சொல்பவன் தன்னையே இல்லை என்று சொல்பவனாகிறான், கடவுள் இருக்கிறார் என்று ஏற்றுக்கொள்பவன் தன்னைக் கடவுளாகவே உணர்கிறான்” என்றும் கூறுகிறது வேதம். எனவே கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும், இறைவனை மறவா மனம் தேவை.

ஜகத் (படைப்பு) காரியம். காரணமில்லாமல் காரியம் இல்லை. ஜடப்பொருளோ, ஜீவர்களோ காரணமாக இருக்க முடியாது. எப்படியோ, காரணம் என்று ஒன்று இருக்க வேண்டும். இறை தத்துவம் இருக்கிறது என்பதற்கு இது ப்ரமாணம்.

ஆக, இறைவன் இருக்கிறான் என்பது குருட்டு நம்பிக்கை அல்ல. அறிவுப்பூர்வமான நம்பிக்கை. எப்படி உடலுக்குப் பின்னால் உயிர் தத்துவம், உணர்வுத் தத்துவம் இருக்கிறதோ, அப்படி இந்த மஹா பிரபஞ்சத்தின் ஆதாரமாக ஓர் உயிர் தத்ததுவம் இருந்தே ஆக வேண்டும் என்று அறிவுப்பூர்வமான அநுமானத்தால் இறையின் இருப்பை புரிந்து கொள்ள வேண்டும். இதனையே வள்ளுவர் முதல் குறளில் பயன்படுத்துகிறார்.

எழுத்தெல்லாம் அகர முதல - இது தெரிந்தது
உலகு ஆதிபகவன் முதற்றே - இது தெரியாதது

தெரிந்ததைக் கொண்டு தெரியாததைப் புரிந்துகொள்வது. இந்த ஸ்லோகம் இதனை விளக்குகிறது.

  1. அனைத்திற்கும் மூலகாரணம் எது?
  2. அந்த மூல காரணம் இருக்கிறதா, இல்லையா?
  3. இருந்தால், அதற்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன?
  4. அதனுடன் தொடர்பு தேவையா?
  5. அத்தகைய தொடர்பால் என்ன கிடைக்கும்?

என விசாரம் செய்யத் தூண்டும் ஸ்லோகம் இது.

ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 1

ஸ்லோகம்

कस्ते बोद्धुं प्रभवति परं देवदेव प्रभावं
यस्मादित्थं विविधरचना सृष्टिरेषा बभूव ।
भक्तिग्राह्यस्त्वमिह तदपि त्वामहं भक्तिमात्रात्
स्तोतुं वाञ्छाम्यतिमहदिदं साहसं मे सहस्व ॥ १॥

கஸ்தே போத்தும் ப்ரபவதி பரம் தேவதேவ ப்ரபாவம்
யஸ்மாதித்தம் விவிதரசனா ஸ்ருஷ்டிரேஷா பபூவ |  
பக்திக்ராஹ்யஸ்த்வமஸி ததபி த்வாமஹம் பக்திமாத்ராத் 
ஸ்தோதும் வாஞ்சாம்யதிமஹதிதம் ஸாஹஸம் மே ஸஹஸ்வ

தமிழாக்கம்

எவரிடம் விதம்விதம் சிருட்டியின் தோற்றம் 
அவர்தனின் பெருமை அறிய வல்லார் உளரோ!
அடைவர் உனை இருப்பினும் பேரன்பினாலே !
அவா எனக்கு அன்பினால் உனைப் போற்றவே !
அடியனின் இம்முரட்டுத் துணிவு பொறுத்திட்டு
அருள் புரிந்திடுவாயே விண்ணவரின் தேவனே !! 1 

சொற்களின் பொருள்

தேவதேவ - தேவர்களுக்கெல்லாம தேவனாக விளங்குபவனே!

யஸ்மாத் - எவரிடமிருந்து

இத்தம் - இத்தகைய 

விவிதரசனா - விதவிதமான (ஆச்சர்யமான)

ஏஷா - இந்த 

ஸ்ருஷ்டி - படைப்பானது

பபூவ - தோன்றியதோ (தோன்றி, நிலைபெற்று, ஒடுங்குகிறதோ)

தே- (அத்தகைய சிறப்பு வாய்ந்த) உம்முடைய

பரம் - மேலான

ப்ரபாவம் - சிறப்புகளை 

கஹ - எவர் 

போத்தும் - அறிவதற்கு, புரிந்து கொள்வதற்கு

ப்ரபவதி - வல்லார் ?

ததபி - இருந்த போதிலும்

த்வாமஹம் - த்வம் இஹம் - நீங்கள் இங்கு

பக்திக்ராஹ்யா - பேரன்பினால் அடையப்படுபவராக இருக்கிறீர்

அஹம் - நான்

த்வாம் - உங்களை 

பக்திமாத்ராத் - பக்தியினால் மட்டும்

ஸ்தோதும் - போற்றித் துதிப்பதற்கு

வாஞ்சாமி - விரும்புகிறேன்

மே- என்னுடைய

இதம் - இந்த 

அதிமஹத - அதிக முரட்டுத்தனமான 

ஸாஹஸம் - துணிச்சலை

ஸஹஸ்வ - பொருத்தருள்வீராக

விளக்கம்

“தேவர்களுக்கு தேவனே! எவரிடமிருந்து இத்தகைய விதவிதமான, வியப்பான இந்த படைப்பானது தோன்றியதோ, அத்தகைய சிறப்பு வாய்ந்த உம்முடைய மேலான, தன்நிகரற்ற சிறப்புகளை, பெருமைகளை, எவரே அறிவதற்கு வல்லவர்? இருந்தபோதிலும், நீங்கள் இங்கு பேரன்பினால் அடையப்படுபவர். நான் உங்களை பக்தியினால் மட்டும் போற்றித் துதிப்பதற்கு விருப்பமுடையவனாக இருக்கிறேன். என்னுடைய இந்த அதிக முரட்டுத்தனமான துணிச்சலைப் பொறுத்தருள்வீர்களாக” என்று இறைவனின் இலக்கணம், பெருமை, அவனை உணரும் வழி இவற்றுடன் துவக்குகிறார் முதல் ஸ்லோகத்தில். இதில் அப்பையரின் பணிவினை நாம் அறியலாம்.

இறைவனின் பெருமை 

இறையின் பெருமையை புகழ்ந்து முடிக்க முடியாது. அதனால்தான்

அம்பரமாம் புள்ளித்தோல் ஆலாலம் ஆரமுதம்
எம்பெருமான் உண்டசதுர் எனக்கறிய இயம்பேடீ
எம்பெருமான் ஏதுடுத்தங் கேதமுது செய்திடினுந்
தன்பெருமை தானறியாத் தன்மையன்காண் சாழலோ!!

தனது பெருமை நோக்காது எத்துணை எளியவனாயும் போந்து எந்தச் செயலையும் திருவருள் காரணமாகப் பிறர் பொருட்டுச் செய்பவன் எங்கள் இறைவன். ஆகவே, புள்ளித் தோலை ஆடையாக உடுத்தமை, ஆலாலத்தை ஆரமுதாக உண்டமை முதலிய எல்லாம் அவனுக்குப் பெருமை ஆவனவேயன்றிச் சிறுமையாகா என “தன்பெருமை தானறியாத் தன்மையன்காண் சாழலோ” என்றார் மாணிக்கவாசகர். 

பகவத் கீதையில் (10.19) “நாஸ்த்1யன்தோ1 விஸ்த1ரஸ்ய மே”- தெய்வீக மகிமைக்கு முடிவே இல்லை என்றும், 

நான்தோ1 ‌ஸ்தி1 மம தி3வ்யானாம் விபூ4தீ1னாம் ப1ரந்த1ப1 |
ஏஷ தூ1த்3தே3ஶத1ஹ ப்1ரோக்1தோ1 விபூ4தே1ர்விஸ்த1ரோ மயா II

பகவத் கீதை 10.40

“எதிரிகளை வென்றவனே! என் தெய்வீக மகிமைகளுக்கு முடிவே இல்லை. நான் உன்னிடம் சொன்னது என் நித்திய மகிமையின் அடையாளம் மட்டுமே” என்றும் (10.40) 

பகவான் கண்ணன் கூறியதை நினைவு கூற வேண்டும்.

படைப்பெனும் வியப்பு

“குதம் ஆஜாதா குதம் இயம் வ்ருஷ்டி” – இவ்வுலகமும் உடலும் எங்கிருந்து வந்தது என்கிறது நாஸதீய ஸூக்தம் (6). 

“ஐன்மாத்ஸத் யதஹ” – பிரம்மம் என்பது யாரிடமிருந்து (உலகின்) தோற்றமும், எஞ்சிய பகுதியும் என்கிறது பிரம்ம சூத்திரம் 1.1.2. இதனை “தடஸ்ய லக்‌ஷணம்” என்பர், அதாவது படைப்பின் காரணத்தை அநுமாநம் செய்கிறோம். 

விதம் விதமான பல்வேறு படைப்பின் தோற்றம் என்பதற்கு “மனஸா அபி அசிந்தய ரசநா ரூபஸ்ய” என ஆதி சங்கராச்சார்யர், 

எண்ணற்ற விதவிதமான படைப்புகளின் ஆச்சர்யத்தை வர்ணிக்கின்றார். 

இதனையே

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின்
நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன !!

என மாணிக்கவாசகர் கூறுகிறார். எனவே, படைப்பையும், படைப்பின் சிறப்பையும், படைப்பின் காரணமான பரம்பொருளையும் அனுதினமும் மறவாது சிந்தித்தல் வேண்டும். 

அன்பெனும் பக்தி

அத்தகைய இறைவன் “அன்பெனும் பிடியுள் அகப்படும் மலை” என வள்ளலாரும், “பக்தி வலையில் படுவோன் காண்க” என மாணிக்கவாசகரும் கூறுகின்றனர்.

“ காதலாகி கணிந்து கண்ணீர் மல்கி, ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது” என்று திருஞான சம்பந்தர் கூறுகிறார். 

“ப4க்1த்யா த்1வனன்யயா ஶக்1ய அஹமேவம்விதோ4 ‌ர்ஜுன | – அர்ஜுனா! அலாதியான கலப்படமற்ற பக்தியினால் மட்டுமே என்னை உன் முன்னால் நின்று இருக்கும் வடிவத்தில் அறிய முடியும்” என கண்ணன் கீதையில் (11.54) அறிவுறுத்துகிறான் இதனையே. 

சிவானந்த லஹரியில் ஆதி சங்கரரின் இந்த பக்தியின் வெளிப்பாட்டினை பல ஸ்லோகங்களில் காணலாம்.  ஆக, நிலையிலா இன்பத்தை தரக்கூடிய உலக இன்பப் பொருட்களின் மீதுள்ள பற்றை நீக்கி, நிலையான இன்பமே வடிவான இறையிடத்தில் அன்பை வைக்க வேண்டும். 

தேனுக்குள் இன்பம் கருப்போ ணிவப்போ
வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்
தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தார்போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே

திருமந்திரம்

அத்தேனுக்குள் இன்பமென, ஊணுக்குள் ஒளிந்திருக்கும் இறைவனை ஊணுருகும் பக்தியாலே உணரமுடியும் என்பதை வலியுறுத்துகிறார் அப்பைய தீட்சிதர்.

அப்பையரின் பணிவு

இந்த ஸ்லோகத்தில்,  “ஸாஹஸம் மே ஸஹஸ்வ – என்னுடைய இந்த அதிக முரட்டுத்தனமான துணிச்சலைப் பொறுத்தருள்வீர்களாக” என்ற சொற்றொடரின் மூலம் அப்பைய தீக்‌ஷிதரின் அடக்கத்தை நாம் அறியலாம்.

கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து 

திருக்குறள் 130

என்று திருவள்ளுவர் கூறுவது போல, கற்க வேண்டியதைக் கற்று (கற்று) , கோபம் வராமல் தன்னைப் பாதுகாத்து (கதம் காத்து), அடக்கமாக இருக்கும் (அடங்கல்) அப்பையரிடம் அறக்கடவுள் (தர்ம தேவதை) குடிகொண்டிருப்பதை, (அறம் செவ்வி ஆற்றின் நுழைந்து) அவரின் பணிவின் மூலம் நாம் அறிய வேண்டும்.

ஆக,

  1. இறைவன் படைப்பிற்கு காரணம்
  2. இறைவனை முழுமையாக அறிய எவராலும் இயலாது
  3. அன்பினால் மட்டுமே அவரை உணரந்து கொள்ள முடியும்
  4. அன்பை வளர்க்க வேண்டுமெனில், ஆண்டவனைப் போற்றிப் புகழ்ந்து மனமுறுகிப் பாட வேண்டும்.
  5. பணிவுடன் பாட வேண்டும். அடக்கத்துடன் ஆண்டவனைப் போற்றிப் புகழந்து பாடினால், மனமாசுகள களையப்படும். மனம் தெளிவடையும். தெளிந்த மனம், இறைவனை க்ரஹிக்கும் ஆற்றல் பெறும்

இதுதான் இந்த ஸ்லோகம் நமக்கு அளிக்கும் அறிவுரை.