
ஸ்லோகம் 18
भक्ताग्र्याणां कथमपि परैर्योऽचिकित्स्याममर्त्यैः
संसाराख्यां शमयति रुजं स्वात्मबोधौषधेन ।
तं सर्वाधीश्वर भवमहादीर्घतीव्रामयेन
क्लिष्टोऽहं त्वां वरद शरणं यामि संसारवैद्यम् ॥ १८॥
தமிழ் ஒலிபெயர்ப்பு
பக்தாக்ர்யாணாம் கதமபி பரைர்யோঽசிகித்ஸ்யாமமர்த்யை:
ஸம்ஸாராக்யாம் ஶமயதி ருஜம் ஸ்வாத்மபோதௌஷதேந ।
தம் ஸர்வாதீஶ்வர பவமஹாதீர்கதீவ்ராமயேந
க்லிஷ்டோঽஹம் த்வாம் வரத ஶரணம் யாமி ஸம்ஸாரவைத்யம் ॥ 18॥
தமிழாக்கம்
அம்பரத்தார் முயன்றும் தீர்க்க இயலா
அடியாரின் பிறவிப் பிணிதனை மெய்
அறிவெனும் மருந்து புகட்டிக் குணம்
அளித்திடும் பேர் மருத்துவனை பிறவிப்
பெருங்கடல் மூழ்கி உழலும் பேதை யான்
அடிபணிந்தேன் அகிலாண்ட நாதனே !! 18
சொற்களின் பொருள்
யஹ - எவரொருவர்
பரைர் - மேலான
அமர்த்யைஹி - தேவர்களால்
கதமபி - எங்கேனும், எப்படியாயினும்
அசிகித்ஸ்யா - குணப்படுத்த இயலாத, தீரக்கமுடியாத
பக்தாக்ர்யாணாம் - முதன்மை பக்தர்களின்
ஸம்ஸாராக்யாம் - உடல் உயிரெடுத்ததால் விளையும் துன்பங்களான
ருஜம் - நோயினை
ஸ்வாத்மபோத ஔஷதேந - தன்னைப் பற்றிய தெளிந்த அறிவு எனும் மருந்தால்
ஶமயதி - தீர்க்கிறாரோ
தம் - அத்தகைய
பவ மஹா தீர்க தீவ்ர அமயேந - பிறவிச் சுழலாகியமிகப் பெரிய, இடைவிடாது ஆழமாகத் துன்புறுத்துகிற நோயால்
க்லிஷ்டோ - அவதிப்படும் (துன்பப்படும்’
அஹம் - நான்
வரத - வேண்டிய வரமளித்திடும்
ஸம்ஸாரவைத்யம் - பிறவிப்பிணிதீர் மருத்துவராம்
த்வாம் - உன்னை
ஶரணம் யாமி - சரணமடைகிறேன்
ஸர்வாதீஶ்வர - அனைத்திற்கும் தலைவனே
விளக்கம்
வாழ்க்கையின் இன்ப துன்ப அனுபவங்களுக்கு சம்சாரம் எனப்பெயர். நிறைவின்மை எனும் நெருடலே சம்சாரம். பவ ரோகம் (பிறவிப் பிணி) என்பர் இதனை. பிறவிப் பிணியை தேவர்களால் தீர்க்க இயலாது. இறைவன் ஒருவனால் மட்டுமே இது சாத்தியம். இந்த ஸம்ஸாரம் என்பது ஒரு ரோகம். இந்த வியாதிக்கு வைத்தியம் செய்ய வேறு ஒரு வைத்தியனாலும் முடியாது. மற்ற தேவர்கள் சில வரங்களைக் கொடுக்கலாம். ஆனால், இந்த ஸம்ஸார வியாதியைத் தீர்க்க அவர்களால் இயலாது.
பேராயிரம் பரவி வானோர் ஏத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க்கு என்றும்
வாராத செல்வம் வருவிப்பானை
மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித்
தீரா நோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழத் திண்சிலைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.
என்கிறார் திருநாவுக்கரசர் திருப்புள்ளிருக்குவேளூர் திருமுறை திருப்பதிகத்தில்.
இறைவன் ஒருவனே பிறவிப்பிணி தீ்ர்ப்பவன், அதுவும் மெய்யறிவினால் மட்டுமே.
இறையருள் பெருக ! வளமுடன் வாழ்க !
Discover more from Prabhu's Ponder
Subscribe to get the latest posts sent to your email.