
முகவுரை
ஆத்மார்ப்பண ஸ்துதி (24) மிக ஆழமான ஜீவ–ஈஸ்வர சம்பந்தம், பந்த–மோட்ச காரணம், மற்றும் சரணாகதி அவசியம் ஆகியவற்றை ஒரே நேரத்தில் வெளிப்படுத்துகிறது.
ஸ்துதி
एकोऽसि त्वं शिव जनिमतामीश्वरो बन्धमुक्त्योः
क्लेशाङ्गारावलिषु लुठतः का गतिस्त्वां विना मे ।
तस्मादस्मिन्निह पशुपते घोरजन्मप्रवाहे
खिन्नं दैन्याकरमतिभयं मां भजस्व प्रपन्नम् ॥ २४॥
தமிழ் ஒலிபெயர்ப்பு
ஏகோঽஸி த்வம் ஶிவ ஜநிமதாமீஶ்வரோ பந்தமுக்த்யோ:
க்லேஶாங்காராவலிஷு லுடத: கா கதிஸ்த்வாம் விநா மே ।
தஸ்மாதஸ்மிந்நிஹ பஶுபதே கோரஜந்மப்ரவாஹே
கிந்நம் தைந்யாகரமதிபயம் மாம் பஜஸ்வ ப்ரபந்நம் ॥ 24॥
தமிழாக்கம்
இப்பிறவி கிட்டியோருக்கு இருமை வகை அறிந்த ஈசனே நீவிர் ஒருவரே அன்றோ பசுபதி !
துன்பப் புடத்தில் துவண்டிடும் எனக்கு
புகலேதும் உண்டோ உனையன்றி சிவனே !
கொடுமைநிறை பிறப்பெருக்கில் சிக்காதிருக்க
பேரச்சமுடன் சரண்புகும் தீனன் எனைக்
காத்தருள்வாயே ! !
சொற்களின் பொருள்
பசுபதே - உயிரினங்களின் தலைவனே
ஸிவ - மங்கலமானவரே
ஜனிமதாம் - பிறப்பெடுத்தோர்க்கு
பந்த முக்த்யோ: - பந்தத்திற்கும் முக்திக்கும், பந்தத்தலிருந்து முக்திக்கு (இரு பொருள் )
ஈச்வரோ - தலைவராக
த்வம் - நீவிர்
ஏகோஸி - ஏக அஸி - ஒருவரே இருக்கிறீர்
க்லேச அங்கார அவலிஷு - துன்பங்களாகிய நெருப்பு வரிசைகளில்
லுடத: - புரண்டு கொண்டிருக்கின்ற
மே - எனக்கு
த்வாம் - உன்னை
விநா - தவிர
கா - வேறுயார்
கதி - அகதி
தஸ்மாத் - எனவே
இஹ - இவ்வுலகில்
தஸ்மிந்- இந்த
கோர ஜன்மப்ரவாஹே - கோரமான பிறவிப்பெருக்கில்
கின்னம் - துன்பமயமான
தைன்யாகரம் - எளிமைநிலை அடைந்த
அதிபயம் - மிகுந்த அச்சமுடைய
ப்ரபன்னம் - (உன்னை) சரணடைந்துள்ள
மாம் - என்னை
பஜஸ்வ - காத்தருள்
விளக்கம்
பசுக்கள் என்று சொல்லப்படும் ஜீவராசிகளை மாயாபந்தத்தால் கட்டிவைப்பவனும் அதனின்று அவிழ்த்து விடுபவனும் பசுபதி யாகிற நீயே. பந்தத்திற்கும் மோட்சத்திற்கும் ஒரே காரணம் ஈஸ்வரன் என்கிறார் அப்பையர். அனைத்து கார்யங்களுக்கும் ஒரே காரணம் பரம்பொருள் என்பதே இதன் உட்கருத்து.
“உழலும் காயமுறை சீவன், கனவிலும் நனவிலும் காரிய காரண தன்மை கொண்டு, உடையான் உடமை எனவும், ஆசான் சீடன் எனவும், அருமை தந்தை மகன் எனவும், பேதம் பல ஈண்டு பாடிடுமே பல உறவு கொண்டு. மோடம் போட்ட அப்பேதம் நீக்கி, காயமுறை பற்றிலா அச்சீவனே மாசிலா முழுநிறை இறையென உரை ஆதிஅந்தமிலா மோனநிலை ஆசானாம் அந்த அருள்மிகு தக்ஷிணாமூர்த்தி பொற்பாதம் பணிந்திடுவோம்”
என்கிறார் ஆதி சங்கராச்சார்யர் தனது தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரத்தில் (8).
ஆதலால் உன்னைத் தவிர வேறு யாரை நான் அடைக்கலம் புகவிரும்புவேன். இந்த வாழ்க்கைத் துன்பங்களில், நெருப்புத் தணலில் விழுந்து விட்டவன் போல வேதனையால் துடிக்கும் என்னை, மிகப் பரிதாபமான நிலைக்கு இருப்பிடமான என்னை, மனத்தில் மிகுந்த பீதி யடைந்த என்னை, அடுத்தடுத்து பிரவாஹம் போல எனக்கு ஏற்படும் இந்தப் பிறவித் தொடரிலிருந்து விடுவிக்கும் பொருட்டு கருணை கூர்ந்து உடனே ஓடிவந்து ரக்ஷிக்க வேண்டும்.
இக்கூக்குரல் ஜீவனின் ஒரு கவிதை அல்ல; இது ஒரு அனுபவ சத்தியம். இதற்கு பிரமாணம் பகவத் கீதை (8.15) “து2:கா2லயமஶாஶ்வத1ம்” நிலையிலா இவ்வுலகம் துக்கத்தின் இருப்பிடம்.
எனவே , “உன்னைத் தவிர எனக்கு என்ன கதி?” என்று அப்பையர் வேண்டுவது அனன்ய சரணாகதி.
இங்கே “கோர ஜன்மப்ரவாஹே” கோரமான பிறவுப்பெருக்கில் என தீக்ஷிதர் கூறுவது, பிறவிப்பிணியாம் பிறப்பு-இறப்புச் சுழலாகும்.
புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனி ஜட2ரே ச’யனம் |
இஹ ஸம்ஸாரே ப3ஹு து3ஸ்தாரே
க்ருபயாsபாரே பாஹி முராரே ||மீண்டும் பிறப்பு மீண்டும் இறப்பு
மீண்டும் அன்னையின் வயிற்றில் கிடப்பு
கடக்க இயலா கரையிலா கடலே
கடத்திடு எம்மை கருணைக் கடலே
என்று பஜ கோவிந்தம் எனும் தனது படைப்பில் ஆதி சங்கரர் விளக்குகிறார் இச்சுழலை. அத்தகைய சுழலில் சிக்கி, சோர்ந்து, துயருற்று, மிகுந்த பயம் கொண்ட என்னை காப்பாற்று / அருள்புரி என சரண்டைகிறார் அப்பைய தீக்ஷிதர்.
முடிவுரை
“நான் துன்பத்தில் இருக்கிறேன்” என்ற “க்ளேஷ அனுபவம்”, “இந்த சுழற்சியில் இருந்து வெளியே வர முடியுமா” என்ற பயம், இவை கலந்த, “நான் உன்னிடம் வந்துவிட்டேன்” எனும் சரணாகதி இந்த ஸ்துதி.
இந்த ஸ்லோகம் ஒரு முழுமையான ஆன்மிக வரைபடம்:
(1) ஈஸ்வரன் – பந்த–மோட்ச ஆதாரம்
(2) ஜீவன் – துன்பத்தில் சிக்கியவன்
(3) சம்சாரம் – நெருப்பு + நதி (இரண்டு உவமை)
(4) தீர்வு – சரணாகதி
இறையருள் பெருக ! வளமுடன் வாழ்க !