நாராயணீயம் – தசகம் 5 – முகவுரை

ஶ்ரீ குருவாயூரப்பன்
நாராயண பட்டத்திரி நாராயணீயத்தை ஶ்ரீ குருவாயூரப்பனின் மகிமையுடன் தொடங்குகிறார் தசகம் 1ல். அதனில் அவர் தூய இருப்பு, தூய உணர்வு மற்றும் தூய பேரின்பம் (சத், சித், ஆனந்தம்) ஆகியவற்றின் உருவான பிரம்மன் எனப்படும் இறுதி யதார்த்தமே அந்த குருவாயூரப்பன்  என்று ஒரு அடையாளத்தை நிறுவுகிறார்.

அடுத்த தசகம் 2ல், அந்த பரப்பரம்மமாகிய சத் சித் ஆனந்தத்தை உணர வேண்டும் என்ற ஒன்றினையே குறிக்கோளாக வைத்து வாழ நினைக்கும் அடியார்களுக்கு ஶ்ரீ குருவாயூரப்பனின் (இறைவனின்) வசீகரமான வடிவத்தையும், பக்தி மார்க்கத்தின் மேன்மையையும் வெளிப்படுத்துகிறார்.

இதனை தொடரந்து, தசகம் 3-ல் பட்டத்ரி அப்படி வாழ்ந்திடும் ஒரு பக்தரின் குணாதிசயங்களை எடுத்துரைக்கிறார்.

இங்கனம் படிப்படியாக பக்தர்களின் மனதை பக்குவப்படுத்தியபின், நாராயண பட்டத்திரி தசகம் 4ல், ஶ்ரீ குருவாயூரப்பன் மீது நமது மனதை நிலைநிறுத்துவதற்கான நுட்பங்களை அஷ்டாங்க யோகத்தின் மூலம் (எட்டுவிதமான ஒழுக்க முறைகள்) எடுத்துரைக்கிறார்.

அடுத்து வரும் தசகம் 5ல், ஸ்ரீ நாராயண பட்டத்திரி விசாரணையை அண்டம் (பிரபஞ்சம்) எனும் உயர்நிலைக்கு எடுத்துச்செல்கிறார். ஆன்மீகத்தில் முன்னேற்றம் காணும் போது அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது எனும் உணர்வினை நமக்கு ஊட்டிட, அண்டம் உருவானது எப்படி என்பதை விவரிக்கிறார்.

அண்டமும் அதன் பரிமாணமும்

அண்டம் என்றவுடன் தெளிவான மற்றும் மூடுபனி இல்லாத நாளில், சந்தி வேளையில் அடிவானத்தை தொடர்ந்து அண்ணார்ந்து பார்த்தால், நாம் பிரகாசமான நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களைக் காணலாம். அப்படி காணும் போது நமது சிந்தனை எங்கு செல்கிறது? 

அடேயப்பா! என்ன அருமை! என்ன படைப்பு! எப்படி இது சாத்தியம்? என்றெல்லாம் வியக்கிறோம் அல்லவா.

1. அண்டம் என்பது என்ன? ஏன் ஒன்றுமில்லை என்பதை விட இருப்பு என்ற ஒன்று இருக்கிறது?

2. அண்டமும் அண்டத்தில் காணும் இவைகளனைத்தும் எவ்வாறு தோன்றின?

3. இந்த செயல்பாட்டில் ஒரு ஒழுங்கு இருக்கிறதா? அல்லது ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் தனித்தனியாக இயங்குகின்றனவா?

இப்படியெல்லாம் வியந்து, நமது எண்ணப் பறவைதனை சிறகடித்துப் பறக்க விடுகின்றோமல்லவா!

அப்படி நாம் பிரபஞ்சத்தை உற்றுப் பார்க்கும்போதும், சிந்திக்கும்போதும், இந்த அற்புதமான பிரபஞ்சத்தை எல்லையற்ற நுண்ணறிவு ஒன்று ஆளுகிறது என்பதை புரிந்து கொள்ள நமது பகுத்தறிவுள்ள மனதிற்கு கடினமாக இருக்காது.

இதைத்தான் நமது ரிஷிகள் ஆழ்ந்து கவனித்து ஆய்வு செய்தனர். இதைத்தான் நாராயண பட்டத்திரி தசகம் 5ல் கோடிட்டுக் காட்டுகிறார்.

தேவையான மனப்பான்மை

தசகம் 5-ஐப் பற்றிக் கூறுவதற்கு முன், ஸ்லோகங்களைச் சரியான கண்ணோட்டத்தில் புரிந்துகொள்வதற்கு, நமது ரிஷிகளால் நமது மறைகளில் விளக்கப்பட்டுள்ள பிரபஞ்ச பரிணாமத்தைப் (cosmic evolution) பற்றிய ஒரு கண்ணோட்டம் இன்றியமையாதது.

இந்த பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்கும் அதி உயர் கணனிகள் (super computers), நவீன அறிவியல் சாதனங்கள் மற்றும் கருவிகள் எதுவும் நம் முன்னோர்களிடம் இருக்கவில்லை என்பதை நாம் மனதில் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். அவர்களிடம் இருந்த தரவுகள் (data) குறைவு. எனினும் ஆண்டவன், அண்டம், பிண்டம் எனும் மூன்று தத்துவங்களுக்கிடையேயான உறவுகளைப் புரிந்துகொள்வதில் திடமான மன உறுதியும் “எள்ளத் தனைப்பொழுதும் பயனின்றியிராது, நெஞ்சினிலே நீதியும் நேர் கொண்ட பார்வையுடன், நம்புவதே வழி என்ற மறைதன்னை நம்பி” இறைபக்தியுடன் தன் தூய மனமெனும் அதி உயர் கணினி ஒன்றை மட்டுமே பயன்படுத்தி அண்டத்தில் நடக்கும் நிகழ்வுகளை புராணக் கதைகளின் வடிவத்தில் விளக்கினர் நமது ரிஷிகளும் முனிவர்களும்.

பொறி புலன் சார்ந்த இன்றைய விஞ்ஞான காலக்கட்டத்தில் பொருள் சார்ந்த ஆராய்ச்சிகளின் வழியாக கண்டவைகள் மட்டுமே உண்மை எனும் தற்போதைய படைப்புக் கோட்பாட்டின் மீது மிகுந்த நம்பிக்கை நமக்கு இருப்பதால், இந்த புராணக் கதைகளை மூடநம்பிக்கை என்று நாம் புறக்கணிப்பதில் வியப்பு ஒன்றுமில்லை.அந்த ரீதியில் இந்த கதைகளை எடுத்துக் கொண்டால் அவைகளில் எந்த அர்த்தமும் இல்லை என்று தோன்றும்.

இருப்பினும் திறந்த மனமுடன், முன்முடிவுகள் எதுவுமில்லாமல் (open mind without preconceived notions) நாம் நமது பிண்டத்தை உள்நோக்கி ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் இதன் பின்னணியில் உள்ள தத்துவத்தை ஒருவர் புரிந்து கொள்ள முடியும்.

இன்றைய விஞ்ஞானிகள் கணித சமன்பாடுகள், உருவகங்கள், மாதிரிகள் (equations, simulations, models) போன்ற கருவிகளைப் பயன்படுத்தி அண்டத்தை ஆய்வு செய்ய புறநோக்கு வழிமுறைகளைப் பயன்படுத்தி பொறி, புலன், பொருள் சார்ந்த ஆய்வுகளை (materialistic research) நடத்துகின்றனர்.

நமது முன்னோர்கள், நமக்குள் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கும், புராணக் கதைகள் மூலம் வெளியில் நடப்பதை மாதிரிகளாகப் புரிந்துகொள்வதற்கும் அஷ்ட யோகம், தியானம் முதலிய உள்நோக்கிய வழிமுறைகளைப் பயன்படுத்தி ஆன்மீக ஆய்வுகளைப் புரிந்தனர். அவ்வளவுதான் வித்தியாசம்.

இப்படி வேறுபட்ட ஆராய்வுகளின் மூலம் அறிய எண்ணும் ஆண்டவனை (ஆண்டவனின் வெளிப்பாட்டை) நாம் அறிவது என்பது ஒரு முடிவிலி. அதனால் தான் இரண்டு வழிமுறைகளும் வெறும் அனுமானங்களே. நமக்கு தேவை நேரடி சுய உணர்வு. அப்படி இருக்கையில், ஒன்றை மட்டும் வெறும் கட்டுக்கதைகள் என்றும் உண்மை அல்ல என்றும், மற்றொன்றை சரி என்றும் உண்மை என்றும் கருதுவது நமது மடமையைக் குறிக்கும்.

இனி வருவது

அடுத்த சில வலைப்பதிவுகளில், அண்ட பரிணாமத்தின் விஞ்ஞான மற்றும் ஆன்மீக முன்னோக்குகளின் கண்ணோட்டத்தை அறிய முற்படுவோம். இது நாராயணீயம் தசகம் 5 ஐ நன்கு புரிந்துகொள்ள நமக்கு உதவும்.

இந்த வலைப்பதிவுகள் எனது மற்றொரு வலைதளப் பதிவிலும் (substack -சப்ஸ்டாக்) ஆங்கில செய்திமடல் வடிவில் (newsletter) வெளிவரும். அதன் இணைப்பு இதோ.

https://soundar53.substack.com


Discover more from Prabhu's Ponder

Subscribe to get the latest posts sent to your email.

Unknown's avatar

Author: prabhusponder

A novice venturing out to explore the meaning of life

One thought on “நாராயணீயம் – தசகம் 5 – முகவுரை”

  1. சுருக்கமான விரிவுரை.
    அடுத்த பதிவுக்கு படிப்போரை
    இழுத்துச் செல்லும்.

Leave a reply to V Sadagopan Cancel reply

Discover more from Prabhu's Ponder

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading