ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 20 – சரணாகதி

ஸ்லோகம் 20


दासोऽस्मीति त्वयि शिव मया नित्यसिद्धं निवेद्यं
जानास्येतत् त्वमपि यदहं निर्गतिः संभ्रमामि ।
नास्त्येवान्यन्मम किमपि ते नाथ विज्ञापनीयं
कारुण्यान्मे शरणवरणं दीनवृत्तेर्गृहाण ॥ २०॥

தமிழ் ஒலிபெயர்ப்பு

தாஸோஸ்மீதி த்வயி ஶிவ மயா நித்யஸித்தம் நிவேத்யம்
ஜாநாஸ்யேதத் த்வமபி யதஹம் நிர்கதி: ஸம்ப்ரமாமி ।
நாஸ்த்யேவாந்யந்மம கிமபி தே நாத விஜ்ஞாபநீயம்
காருண்யாந்மே ஶரணவரணம் தீநவ்ருத்தேர்க்ருஹாண ॥ 20॥

தமிழாக்கம்


உனதடிமை என்றும் யானென
உறுதியுரை வேண்டுமோ சிவனே!
திக்கின்றித் திரிகிறேன் தெரிந்திட்டீர்
தெரிவிக்க வேறொன்றும் இலையே !
தீனனென் திருவடித் தொழுதலை 
ஏற்றிடுவீர் கருணையுடன் எம்பிரானே !! 20

சொற்களின் பொருள்

ஶிவ - மங்களமானவரே
த்வயி - தங்களிடத்தில்
தாஸ: - அடிமையாக
அஸ்மின் - இருக்கிறேன்
இதி - என்று
நித்யஸித்தம் - எப்போதும் உறுதியாக
மயா - என்னால்
நிவேத்யம் - தெரிவிக்கப்பட வேண்டுமா
அஹம் - நான்
நிர்கதி - கதியின்றி
ஸம்ப்ரமாமி - அலைகிறேன் (உழல்கிறேன்)
யேதத் - இதனை
த்வமபி - தாங்களும்
ஜாநாஸ- அறிவீர்
நாத - தலைவனே
தே - தங்களிடத்தில்
மம - எனக்கு
விஜ்ஞாபநீயம் - தெரிவிக்க, வேண்டிட
அந்யத் - வேறு
கிமபி - ஏதொன்றும்
நாஸ்த்யேவ - இல்லையே
தீநவ்ருத்தே - எளியோன்
மே - என்
ஶரணவரணம் - திருவடி தேர்தலை (சரணாகதி பிராரத்தனையை)
காருண்யாந்- கருணையுடன்
க்ருஹாண - ஏற்பீரே

விளக்கம்

சிவ பெருமானே ! தங்களின், அடிமை யான் என எப்போதும் உறுதியாக என்னால் தெரிவிக்கப்பட வேண்டுமா என்ன ! நான் கதியின்றி அலைகிறேன் (உழல்கிறேன்) என்பதனை தாங்களும் அறிவீர்.தலைவனே ! தங்களிடத்தில் எனக்கு தெரிவிக்க, வேண்டிட வேறு  ஏதொன்றும் இல்லையே ! எளியோன் என்  திருவடி தேர்தலை (சரணாகதி பிராரத்தனையை) கருணையுடன் ஏற்பீரே ! 

ஸ்வாமி! நான் உன் தாஸன், உன்னைத் தவிர வேறு கதி எனக்கு இல்லை, என்பதைத் தானே நான் உன்னிடம் சொல்லிக்கொள்ள முடியும். ஆனால் நான் உன் தாஸன் என்பது சாச்வதமாய் ஏற்பட்ட நிலை. ஆதலின் நான் சொல்லிக்கொள்ளாமலே நீ அறிந்த விஷயம். நான் திக்கற்றவனாய் பரிதபிக்கும் நிலையில் காப்பவரின்றிச் சுழன்று கொண்டு வருகிறேன் என்பதும் முற்று முணர்ந்த உனக்குத் தெரியாததில்லை. இவ்விதம் பார்க்குங்கால் நான் உன்னிடம் தெரிவித்திக் கொள்ள வேண்டியது என்ன இருக்கிறது? ஆகையினால் கருணையை முன்னிட்டு மிக்க பரிதாப நிலையிலிருக்கும் என்னுடைய சரணாகதியை ஏற்றுக் கொள்வாயாக.

இறையருள் பெருக ! வளமுடன் வாழ்க !