ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 22 – புரமெரித்த பரமன்

ஸ்லோகம்


कर्मज्ञानप्रचयमखिलं दुष्करं नाथ पश्यन्
पापासक्तं हृदयमपि चापारयन्सन्निरोद्धुम् ।
संसाराख्ये पुरहर महत्यन्धकूपे विषीदन्
हस्तालम्बप्रपतनमिदं प्राप्य ते निर्भयोस्मि ॥ २२॥

தமிழ் ஒலிபெயர்ப்பு

கர்மஜ்ஞாந ப்ரசயமகிலம் துஷ்கரம் நாத பஶ்யந்
பாபாஸக்தம் ஹ்ருதயமபிச ஆபாரயந்ஸந்நிரோத்தும் ।
ஸம்ஸாராக்யே புரஹர மஹத்யந்தகூபே விஷீதந்
ஹஸ்தாலம்ப ப்ரபதநமிதம் ப்ராப்யதே நிர்பயோஸ்மி ॥ 22॥

தமிழாக்கம்


மறைகூறும் விதிமுறைகள் கடினமெனக் கருதி
மனக்கட்டு இலாமல் பாவச் செயல்களில் ஈடுடனே
சம்சாரமெனும் பாழுங் கிணறதனில் வீழ்ந்திட்டு
அழுதழுது துன்பமுறும் அடியனுக்கு நீண்டது
ஆண்டோனே உன் அபயக்கரம் அடியேன் பற்றிட !
அச்சமினி ஏதுமில்லை புரமெரித்த பரமனே !! 22

சொற்களின் பொருள்

कर्मज्ञानप्रचयम - கர்மஜ்ஞாநப்ரசயம் - கர்ம, ஞான அனுஷ்டானம்
अखिलं - அகிலம் - அனைத்தும்
दुष्करं - துஷ்கரம் - கடினமானவை
नाथ - நாத - தலைவனே
पश्यन् - பஶ்யந் - என்று கருதி
पापासक्तं - பாபாஸக்தம் - பாபத்தில் ஈடுபாடுள்ள
हृदयमपि च - ஹ்ருதயமபிச - உள்ளத்தையைம்
आपारयनं - ஆபாரயந் - இயலாமையார
सन्निरोद्धुम् च - ஸந்நிரோத்தும் ச - நன்கு கட்டுப்படுத்தவும்
संसाराख्ये - ஸம்ஸாராக்யே - பிறவிப்பிணி எனப்படும்
पुरहर - புரஹர - முப்புரம் எரித்தோனே
महत्यन्धकूपे - மஹத்யந்தகூபே - பாழுங்கிணறில்
विषीदन् - விஷீதந் - அழுது அழுது அல்லலுறும்
हस्तालम्बप्रपतन - ஹஸ்தாலம்ப ப்ரபதந் - பற்றிக் கொள்ள கை நீட்டலானது
ईढं - இவனுக்கு
प्राप्य ते - ப்ராப்யதே - கிடைத்து
निर्भयोस्मि - நிர்பயோஸ்மி - அச்சமின்றி இருக்கிறேன்

விளக்கம்

நமக்கினி பயமேது (“அஹம் நிர்பயோஸ்மி”) என்கிறார் அப்பையர். 

ஏன் அப்படி கூறுகிறார் ? “ஹஸ்த ஆலம்ப ப்ரபதனம் ப்ராப்யதே” அதாவது பாழுங்கிணற்றில் விழுந்து, அழுது அழுது துன்பப்பட்டுக்கொண்டிருக்கும் அவருக்குப் பற்றிக்கொள்ள இறைவன் நீட்டிய கை கிடைத்தது  என்பதனால் என்கிறார்.

இதன் கருப்பொருள் என்ன ?  மெய்யறிவைப் பெற்றதனால், பயமேதுமில்லை என்பதனைக் குறிப்பது ஆகும். மெய்யறிவு பெற்றோர்க்கு அனைத்தும் ஆன்மா, அனைத்திலும் ஆன்மா என்று அறிந்தபின், யாரிடமிருந்தும், எவையிடமிருந்தும் அச்சமோ, கவலையோ இல்ல என உபநிஷத் மந்திரங்களும், பகவத் கீதையும் எடுத்துரைக்கின்றன. 

எந்தப் பாழுங்கிணறைக் கூறுகிறார் அப்பையர்?  ஸம்ஸாரம் எனும் அதாவது இந்திரிய ஸுகம், உலக உறவுகள் என்பதே பெரும் (“மஹத்”) பாழுங்கிணறு (“மஹதி அந்தகூபே”). அப்படி விழுந்து “விஷீதன்” என்று அவர் கூறுவது, அதாவது அழுது அழுது என்று கூறுவது அவரது துன்பத்தின் வெளிப்பாடு (“விஷீத”).  வெளிப்படாத துன்பத்தை “ஷோக: என்றும் துன்பத்தின் வெளிப்பாடு ‘விஷீத’ என்றும் கூறப்படுகிறது வடமொழியில்.

நாயிற் கடையாய்க் கிடந்த அடையேற்குத்

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே! 

என்ற மாணிக்கவாசகர் உரை, இவரது நிலைக்கு ஒப்பு.

சரி, சம்சாரம் எனும் பாழுங் கிணற்றில் ஏன் விழுந்தார் என கூறுகிறார் ?  வேதங்களில் கூறப்பட்டுள்ள கர்ம, ஞான வழிமுறைகளைக் கடைப்பிடிப்பது கடினம் என்பதனால், பாபத்திலேயே ஈடுபாடு உள்ள மனதை அடக்கமுடியாமல் வீழ்ந்திட்டேன் என்கிறார் அப்பையர்.

கருத்துரை

“கர்மாவைச் செய்து சுத்தியடைவதும் ஞானத்தைச் சம்பாதிப்பதும் சிரத்தையினாலும் விடாமுயற்சியினாலும் காலக்கிரமத்தில் ஸாதிக்க வேண்டுவன வாதலால் சோம்பேறியும் சபல புத்தியுள்ளவனுமாகிய என்னால் அஃதெல்லாம் நிறைவேற்ற முடியாத காரியம் என்பது திண்ணம். துர்வாஸனையினால் தடுக்கப்பட்ட காரியங்களில் ஊக்கமுடைய என் மனத்தையே என்னால் திருப்பமுடியவில்லையே. இந் நிலையில் ஸம்ஸாரமாகிற பாழுங்கிணற்ற்றில் பரிதபிக்கும் என்னைக் கரையேற்ற உன் கைப்பிடி கிடைத்திருப்பதால் இனி எனக்கு பயமில்லை”.

இறையருள் பெருக ! வளமுடன் வாழ்க !