ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 18

ஸ்லோகம் 18


भक्ताग्र्याणां कथमपि परैर्योऽचिकित्स्याममर्त्यैः
संसाराख्यां शमयति रुजं स्वात्मबोधौषधेन ।
तं सर्वाधीश्वर भवमहादीर्घतीव्रामयेन
क्लिष्टोऽहं त्वां वरद शरणं यामि संसारवैद्यम् ॥ १८॥

தமிழ் ஒலிபெயர்ப்பு

பக்தாக்ர்யாணாம் கதமபி பரைர்யோঽசிகித்ஸ்யாமமர்த்யை:
ஸம்ஸாராக்யாம் ஶமயதி ருஜம் ஸ்வாத்மபோதௌஷதேந ।
தம் ஸர்வாதீஶ்வர பவமஹாதீர்கதீவ்ராமயேந
க்லிஷ்டோঽஹம் த்வாம் வரத ஶரணம் யாமி ஸம்ஸாரவைத்யம் ॥ 18॥

தமிழாக்கம்


அம்பரத்தார் முயன்றும் தீர்க்க இயலா 
அடியாரின் பிறவிப் பிணிதனை மெய் 
அறிவெனும் மருந்து புகட்டிக்  குணம் 
அளித்திடும் பேர் மருத்துவனை பிறவிப் 
பெருங்கடல் மூழ்கி உழலும் பேதை யான் 
அடிபணிந்தேன் அகிலாண்ட நாதனே !! 18

சொற்களின் பொருள்

யஹ - எவரொருவர்
பரைர் - மேலான
அமர்த்யைஹி - தேவர்களால்
கதமபி - எங்கேனும், எப்படியாயினும்
அசிகித்ஸ்யா - குணப்படுத்த இயலாத, தீரக்கமுடியாத
பக்தாக்ர்யாணாம் - முதன்மை பக்தர்களின்
ஸம்ஸாராக்யாம் - உடல் உயிரெடுத்ததால் விளையும் துன்பங்களான
ருஜம் - நோயினை
ஸ்வாத்மபோத ஔஷதேந - தன்னைப் பற்றிய தெளிந்த அறிவு எனும் மருந்தால்
ஶமயதி - தீர்க்கிறாரோ

தம் - அத்தகைய
பவ மஹா தீர்க தீவ்ர அமயேந - பிறவிச் சுழலாகியமிகப் பெரிய, இடைவிடாது ஆழமாகத் துன்புறுத்துகிற நோயால்
க்லிஷ்டோ - அவதிப்படும் (துன்பப்படும்’
அஹம் - நான்
வரத - வேண்டிய வரமளித்திடும்
ஸம்ஸாரவைத்யம் - பிறவிப்பிணிதீர் மருத்துவராம்
த்வாம் - உன்னை
ஶரணம் யாமி - சரணமடைகிறேன்
ஸர்வாதீஶ்வர - அனைத்திற்கும் தலைவனே

விளக்கம்

வாழ்க்கையின் இன்ப துன்ப அனுபவங்களுக்கு சம்சாரம்  எனப்பெயர். நிறைவின்மை எனும் நெருடலே சம்சாரம். பவ ரோகம் (பிறவிப்  பிணி) என்பர் இதனை. பிறவிப் பிணியை தேவர்களால் தீர்க்க இயலாது. இறைவன் ஒருவனால் மட்டுமே இது சாத்தியம். இந்த ஸம்ஸாரம் என்பது ஒரு ரோகம். இந்த வியாதிக்கு வைத்தியம் செய்ய வேறு ஒரு வைத்தியனாலும் முடியாது. மற்ற தேவர்கள் சில வரங்களைக் கொடுக்கலாம். ஆனால், இந்த ஸம்ஸார வியாதியைத் தீர்க்க அவர்களால் இயலாது.

பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் 

பெம்மானைப் பிரிவிலா அடியார்க்கு என்றும்

வாராத செல்வம் வருவிப்பானை 

மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித்

தீரா நோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்

திரிபுரங்கள் தீயெழத் திண்சிலைக் கொண்ட

போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப் 

போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.

என்கிறார் திருநாவுக்கரசர் திருப்புள்ளிருக்குவேளூர் திருமுறை திருப்பதிகத்தில்.

இறைவன் ஒருவனே பிறவிப்பிணி தீ்ர்ப்பவன், அதுவும் மெய்யறிவினால் மட்டுமே.
இறையருள் பெருக ! வளமுடன் வாழ்க !

ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 10

ஸ்லோகம்

नाहं रोद्धुं करणनिचयं दुर्नयं पारयामि
स्मारं स्मारं जनिपथरुजं नाथ सीदामि भीत्या ।
किं वा कुर्वे किमुचितमिह क्वाद्य गच्छामि हन्त
त्वत्पादाब्जप्रपतनमृते नैव पश्याम्युपायम् ॥ १०॥

நாஹம் ரோத்தும் கரணநிசயம் துர்நயம் பாரயாமி
ஸ்மாரம் ஸ்மாரம் ஜநிபதருஜம் நாத ஸீதாமி பீத்யா ।
கிம் வா குர்வே கிமுசிதமிஹ க்வாத்ய கச்சாமி ஹந்த
த்வத்பாதாப்ஜப்ரபதநம்ருதே நைவ பஶ்யாம்யுபாயம் ॥ 10॥

தமிழாக்கம்

கட்டடங்கா கரணக்கூட்டமதை அடக்க அறிந்திலேன் அண்ணலே!
கருபிறப்பின் பெருவலி எண்ணிஎண்ணி அஞ்சி  நடுங்குகிறேன் நான்! 
என் செய்வேன் பரிகாரம் என்னவென்று எங்கு செல்வேன் அந்தகோ !
உன் மலர்ப்பாதம் பணிவதன்றி வேறேதும் அறிந்திலேன் யான்!! 10

சொற்களின் பொருள்

நாத – தலைவனே 

துர்நயம் – கட்டுப்பாடுகளுக்கு அடங்காத (நயம் = வழிநடத்துதல்)

கரணநிசயம் – இந்திரியக் கூட்டங்களை (நிசயம் = சமூகம்)

அஹம் – நான்

ரோத்தும்- அடக்கியாள 

ந பாரயாமி – ஆற்றல் இல்லாதவனாக இருக்கிறேன்

ஜநிபதருஜம் – ஜனி பத ருஜம். – பிறப்பின் (ஐனி) வழியில் (பத) உள்ள களைப்பை, சிரமத்தை (ருஜம்)

ஸ்மாரம் ஸ்மாரம் – எண்ணி எண்ணி 

ஸீதாமி – நடுங்குகிறேன்

பீ4த்3யா – அச்சத்தினால்

ஹந்த – அய்யகோ 

கிம் வா குர்வே – நான் என் செய்வேன்

கிம் உசிதம் – என்ன (தகுந்த) பரிகாரம்

க்வ – எங்கு (துன்பத்தை நீக்கிட)

அத்ய – இப்பொழுது (இங்கே)

கச்சாமி – செல்வேன் 

த்வத் பாதாப்ஜ ப்ரபதந் ருதே – உன் திருவடித்தாமரைகளில் அடைக்கலமாகுவதைத் தவிர

நைவ – வேறேது

பஶ்யாம் யுபாயம் – அறிந்திலேன் வழி

விளக்கம்

“நாஹம் ரோத்தும் கரணநிசயம் துர்நயம் பாரயாமி” – விளக்கம்

கட்டடங்கா கரணக்கூட்டமதை அடக்க அறிந்திலேன்  என்ற சொற்றடரின் விளக்கத்திற்கு தாயுமானவரை அண்டுவோம்:

கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்;
கரடிவெம் புலிவாயையும்
கட்டலாம்; ஒரு சிங்க முதுகின்மேற் கொள்ளலாம்;
கட்செவி யெடுத்தாட்டலாம்;
வெந்தழலி னிரதம்வைத் தைந்துலே கத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்;
வேறொருவர் காணாம லுலகத் துலாவலாம்
விண்ணவரை யேவல்கொளலாம்;
சந்ததமு மிளமையோ டிருக்கலாம்; மற்றொரு
சரீரத்தி ன்ம்புகுதலாம்;
சலமே னடக்கலாம்; கனன்மே லிருக்கலாம்
தன்னிகரில் சித்திபெறலாம்;
சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்ற
திறமரிது; சத்தாகியென்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே!
தெசோ மயானனந்தமே

தாயுமானவர்

மிக்க கடினம் யாதெனில் “மனத்தை  அடக்கி  சும்மா  இருக்கின்ற திறம்  அரிது”.  ஆராய்ந்தால், உடலானது உயிரைத் துன்புறுத்துகிறது என்பதை உணரமுடிகிறது.

“ஜநிபதருஜம்” என்ற சொல்லின் விளக்கம்

என்னை மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி
வருத்தப்படுத்த வேண்டாம் பொன்னம்பலவா
நின் திருவடி சரணம் என்றிங்கு நான் நம்பி வந்தேன்,
எடுத்த ஜனனம் கணக்கெடுக்கத் தொலையாது
இரங்கி மகிழ்ந்து தேவரீர்
வேணுமென்று கொடுத்த மானிட ஜன்மம்
வீணாகி போகுதென்
குறை தீர்த்த பாடுமில்லையே!!
அடுத்து வந்த என்னை தள்ளலாகாது
அரஹரவென்று சொன்னாலும் போதாதோ!!
தடுத்து வந்தருள சமயம்

“திருவடிசரணம் என்றிங்கு நான் நம்பி வந்தேன்”  என்ற கோபால கிருஷ்ண பாரதி பாடல் , கருவிலிருந்து வலியுடன் களைப்பாய் வெளிவரும் பிறப்பினை நொந்துவதற்கான “ஜநிபதருஜம்” என்ற சொல்லின் விளக்கம். “இறப்பொடு பிறப்பை உள்ளே எண்ணினால் நெஞ்சது பகீரென்னும் துயில் உறாது” என்கிறார் தாயுமானவர்.

“இந்த்ரிய நிக்ரஹத்தில் அசக்தனாயும் ஸம்ஸார வேதனைகள் விலக்க விரும்புகிறவனாயுமிருக்கும் எனக்கு சரணாகதியைத் தவிர வேறு கதியில்லை என்பதைத் தெரிவிக்கிறார் தீக்‌ஷிதர்”.

மந்திரம் கூறும் கருத்து

ஸம்ஸாரவாழ்க்கையின் கஷ்டங்களை (பிறப்பு இறப்புச் சுழலில்) நினைத்து நினைத்து பயம் கொண்டு இதிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று கவலை உண்டானவர்களுக்கு, விஷயங்களில் இயற்கையாகவே நுழையும் இந்திரியங்களை அடக்க முடியாதது பற்றி துக்கம் ஏற்படுகிறது. 

மாசுகள் படிந்த மனதிற்கு அடிமையான சித்தத்திற்கும் முக்தியை விரும்பும் ஜீவனுக்கும் ஏற்படும் போராட்டட்தில் சளையுற்ற ஜீவனின் புலம்பல் இது. “என்ன செய்வேன்? எங்கு செல்வேன்? எனக்கு எது உபாயம்? ஸ்வாமி ஒன்றும் வகையறியாத நான் உன் இரு கமல மலர்ப் பொற்பாதங்களை சரணடைகிறேன்,  எனக்கு வழி காட்டி நீ ஒருவனே என்ற சீவன், சிவனை நோக்கிப் புலம்புவதே இந்த ஸ்லோகம்.

அப்பைய தீக்‌ஷிதரின் “ஆத்மார்ப்பண ஸ்துதி” – முகவுரை

“ஸ்துதி” என்றால் புகழுரை. ஆத்மார்ப்பணம் (ஆத்ம அர்ப்பணம்) என்பது தன்னையே (தன்னிடமிள்ள அனைத்தையும்) இறைவனுக்கு அர்ப்பணித்தலைக் குறிப்பதாகும்.

“அன்றே என் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும்

குன்றே அனையாய் என்னை ஆட்கொண்டபோதே

கொண்டிலையோ”

என மாணிக்க வாசகர் கூறுவது போல, 

“துதீய வஸ்து கோவிந்தம் துப்யமேவ ஸமப்ரததே”, அதாவது, உன்னுடைய பொருளை உனக்கே அர்பணிக்கிறேன் என கங்கை நீரை கங்கையிலே அர்ப்பணிப்பது போல,

ஆத்மார்ப்பண ஸ்துதி, நமது அஹங்காரத்தை பழுக்க வைத்து, பக்தியில் லயமாக்குகிறது. பின் அதனை அறிவால் அழித்து ஜீவன் முக்தனாகுவதற்கு வழி வகுக்கிறது.

தன்னுடையது என்ற எண்ணத்தை விடுவதே தானம் (“ஸ்வத்வ நிவ்ருத்திஹி தானம்”) என்கிறார் ஆதி சங்கராச்சார்யர்.

அதனால்தான் யாகங்களில் “இதம் ந மம” – இது என்னுடையதல்ல என ஒவ்வொறு தெய்வத்திற்கும் அளிக்கிறோம். (“ஸோமாய ஸ்வாஹா, ஸோமாய இதம் ந மம” – சோமனுக்கு கொடுத்துவிட்டேன், சோமனுக்குத்தான், எனக்கு இல்லை)

ஆக,

உயிர்களாகிய நாம் சிற்றறிவு உடையவர்கள், இறைவன் அனைத்தும் அறிந்தவன் என்ற சீவன்-சிவன் என்ற வேறுபாடின் (“ஜீவேஸ்வர பேதம்”) அடிப்படையில்தான் இந்த பக்தி நூல் (“பக்தி க்ரந்தம்”) உள்ளது. ஆழ் உறக்கத்தைத் தவிர மற்ற அனைத்து நிலைகளிலும்,  உடல், உணர்ச்சி, விவேக சக்தி இவைகள் நம்மில் வேறு வேறாகவே இருக்கின்றன. த்வைத பக்தி செய்தால்தான் அத்வைத ஞானத்திற்கான மனப்பக்குவத்தை நாம் அடையலாம்.

தே1ஷாம் ஸத1த1யுக்1தா1னாம் ப4ஜதா1ம் ப்1ரீதி1பூ1ர்வக1ம் |
த3தா3மி பு3த்3தி4யோக3ம் த1ம் யேன மாமுப1யாந்தி1 தே1 ||

பகவத் கீதை 10.10

த்வைத பக்தியை நன்கு கடைப்பிடிப்பவர்களுக்குத்தான் அத்வைத ஞானத்தை அளிக்கிறேன் என்று கண்ணன் கீதையில் (10.10) கூறுகிறான்.

துன்பம் கலவாத இன்பம் இறைவன் மட்டுமே. நாம் அனுபவிக்கின்ற புலனின்பங்கள் யாவும் துன்பம் கலந்தவையே. இறையின்பத்தை புலன்களால் உணர முடியாது. எனவே இறைவனை வடிவமுடையவனாக பாவனை செய்து, அவ்வடிவங்களைப் போற்றி, தொழுது, இறையின்பத்தை புலனின்பம் போன்று அனுபவிக்கின்றோம்.

ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமிலார்க்கு ஆயிரம் நாமங்கள் பாடித் தெள்ளேனம் கொட்டாமோ 

என்றார் மாணிக்கவாசகர்.

ஆகவே நாம் புரியும் பக்திக்குப் பின்னால்

  1. இறைவனைப் பற்றிய அறிவு
  2. உயிரைப் பற்றிய அறிவு
  3. உலகம்,உறவுகள் முதலியவை துன்பம் கலந்த இன்பத்தைத்தான் தருகிறது என்ற அறிவு
  4. இந்த இன்ப துன்ப அனுபவிப்பு, பிறவிகள் தோறும் தொடர்வது என்ற அறிவு

இவைகள் இடைவிடாமல் இருந்தால்தான் பக்தி நமக்கு ஆனந்தத்தைக் கொடுக்கும். இல்லையெனில் அதுவும் வெறும் இன்பம் கலந்த துன்ப முயற்சியே. “புல்லாய்ப் பூண்டாய் புழுவாய்…..இத்தாவர சங்கமத்துள் எல்லாம் பிறப்பும் பிறந்து இளைத்தேன்” 

என மாணிக்கவாசகர் கூறுவதை அறிய வேண்டும்.

இறைவனைப் பற்றிய அறிவினைப் பெற்றவுடன் இறைவனிடத்தில் அன்பு தோன்றும். இறைவனிடத்தில் அந்த அன்பு அனைத்தையும் செலுத்த உதவ வேண்டும்  என்று அவனையே பிராரத்தனை செய்ய வேண்டும்.

அத்தகைய பிராரத்தனைகளே, அப்பைய தீக்‌ஷிதரின் அறுபது ஸ்லோகங்கள் அடங்கிய “ஆத்மார்ப்பண ஸ்துதி”.

வரும் ஏப்ரல் துவங்கி, ஒவ்வொரு திங்களிலும், இரண்டு அல்லது மூன்று ஸ்லோகங்களுக்கான விளக்கங்களைக் காண்போம். 

பின் குறிப்பு

விளக்கங்களனைத்தும், பூஜ்யஶ்ரீ ஓம்காரானந்த ஸ்வாமிகளின் அருளுரைகளிலிருந்து, அடியேன் அறிய முற்பட்டது.  பிழைகள் அனைத்தும் என் தவறுகளால் மட்டுமே (அறிவதில், புரிவதில், புரிந்ததைக் கூறுவதில்). தவறுகளைத் திருத்திக் கொள்ள, அடியேனுக்கு அறிவுரை வழங்கவும். மிக்க நன்றி.