
ஸ்லோகம்
त्वामेवैकं हतजनिपथे पान्थमस्मिन्प्रपञ्चे
मत्वा जन्मप्रचयजलधेः बिभ्यतः पारशून्यात् ।
यत्ते धन्याः सुरवर मुखं दक्षिणं संश्रयन्ति
क्लिष्टं घोरे चिरमिह भवे तेन मां पाहि नित्यम् ॥ २३॥
தமிழ் ஒலிபெயர்ப்பு
த்வாமேவைகம் ஹதஜநிபதே பாந்தமஸ்மிந்ப்ரபஞ்சே
மத்வா ஜந்மப்ரசயஜலதே: பிப்யத: பாரஶூந்யாத் ।
யத்தே தந்யா: ஸுரவர முகம் தக்ஷிணம் ஸம்ஶ்ரயந்தி
க்லிஷ்டம் கோரே சிரமிஹ பவே தேந மாம் பாஹி நித்யம் ॥ 23॥
தமிழாக்கம்
இவ்வுலகில் பிறவிப்பிணிநிறை பாதையதனில்
வழித்துணையென வருவோன் நீ ஒருவனே என
கரையிலா பிறவிப்பெருங்கடலதனில் நடுங்கிடும்
நல்வினையோர் தெளிசார்ந்திடுவர் உன் தென்முகம்!
அம்முகம் கொண்டு இவ்வகிலமதில் கொடுமைநிறை
பிறவிச்சுழல் சிக்கித் தவிக்கும் சிறியோன் எனை
விடுவித்து அனுதினமும் காத்திடு அமரர் தலையோனே !! 23
சொற்களின் பொருள்
ஸுரவர - தேவர்களில் சிறந்தோனே
அஸ்மிந் - இந்த
ப்ரபஞ்சே - உலக (மாய) வாழ்க்கையில்
ஹதஜநிபதே - இறப்பு-பிறப்பு பாதையில்
த்வாம் - தாங்கள்
ஏகம் ஏவ - ஒருவரையே
பாந்தம் - வழித்துணையாக
மத்வா - கருதி
பாரஶூந்யாத் - கரையற்ற
ஜந்ம ப்ரசய ஜலதே - பிறவித் தொடராகிய கடலில்
பிப்யத: - நடுங்கிக்கொண்டிருக்கும்
தன்யா:- பாக்கியசாலிகள்
தே - தங்களுடைய
யத் - எந்த
தக்ஷிணம் - தெற்கு நோக்கிய
முகம் - முகத்தை
ஸம்ஶ்ரயந்தி - முழுமையாகச் சார்ந்திருக்கிறார்களோ
தேந - அந்த, அதாவது தக்ஷிண முகேந, அகோர முகேந, தென் முகத்தினால்
இஹ - இவ்வுலக வாழ்க்கையில்
சிரம் - நீண்ட (வெகு நாட்களாக)
கோரே - கோரமான
பவள - பிறவிச்சுழலில், சம்சாரத்தில்
க்லிஷ்டம் - துன்புற்றிருக்கின்ற
மாம் - என்னை
நித்யம் - எப்பொழுதும்
பாஹி - (அமைதியைக் கொடுத்து) காப்பாயாக
விளக்கம்
ஜன்மத்திற்குப் பின் ஜன்மமாக எடுத்துக்கொண்டு ஸம்ஸாரமென்ற முடிவற்ற பாதையில் அவதிப் பட்டுக்கொண்டு போய்க்கொண்டிருக்கும் ஜீவனுடன் அந்தராத்மாவான ஈசன் ஒருவனே துணையாகக் கூடவே போய்க்கொண்டிருக்கிறார். இவ்விதம் ஜீவனுக்கு துணைவரும் பரமாத்மாவே மார்க்கபந்து ஆகிறார்.
பிறவிக் கடலினின்றும் கரையேற நிச்சயித்த பெரியோர்கள் அவர் தம் துணையாருக்கும் பகவானின் பஞ்ச முகங்களில் தென்னோக்கியதான அகோர முகத்தை சரணமடைந்து முக்தி யடைகிறார்க்ள். இறைவனின் தென்திசை முகத்திற்கு அகோரம் (அ கோரம் – கோரமில்லாத, ஸாந்தம்) என்று பெயர். இதனை நான் சார்ந்திருக்கிறேன் என்கிறார் அப்பையர்.
அப்பையர், பரத்வாஜ கோத்திரத்தை சார்ந்தவர். பரத்வாஜர் அகோரத்தை வழிபட்டு உய்வு பெற்றவர். தானும் அதே வழியில் இறையினை வழிபட முயல்கிறேன் என்கிறார். கோபத்தைக் கட்டுப்படுத்துவது அமைதி, ஸாந்தம். எனவே பாஹி, அதாவது (அகோரம் – அமைதியைக் கொடுத்து) என்னையும் காப்பாயாக என்கிறார்.
இறையருள் பெருக ! வளமுடன் வாழ்க !
Discover more from Prabhu's Ponder
Subscribe to get the latest posts sent to your email.