ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 17

ஸ்லோகம் 17


ब्रह्मादीन् यः स्मरहर पशून्मोहपाशेन बद्ध्वा
सर्वानेकश्चिदचिदधिकः कारयित्वाऽऽत्मकृत्यम् ।
यश्चैतेषु स्वपदशरणान्विद्यया मोचयित्वा
सान्द्रानन्दं गमयति परं धाम तं त्वां प्रपद्ये ॥ १७॥

தமிழ் ஒலிபெயர்ப்பு

ப்ரஹ்மாதீந் ய: ஸ்மரஹர பஶூந்மோஹபாஶேந பத்த்வா
ஸர்வாநேகஶ்சிதசிததிக: காரயித்வாঽঽத்மக்ருத்யம் ।
யஶ்சைதேஷு ஸ்வபதஶரணாந்வித்யயா மோசயித்வா
ஸாந்த்ராநந்தம் கமயதி பரம் தாம தம் த்வாம் ப்ரபத்யே ॥ 17॥

தமிழாக்கம்


சீவனாய் ஜடமாய் அவைகளுக்கு வேறாய்
விதிமுதல் பசுவரை மோகவடம்கட்டி அவரவர்
விதியொப்ப பணியேற்றி, திருவடி பணிவோரை
விடுத்திட்டு மெய்யறிவு புகட்டி வீடுபேறு தரும்
முப்புரமெரி முதல்வோனே பணிந்தேன் உன் பாதம் !! 17

சொற்களின் பொருள்

ஸ்மரஹர - மன்மதனை எரித்தவனே, காமனை எரித்தவனே, ஆசையை அழித்தவனே 
யஹ - எந்த பரமேஸ்வரன்
ஏக: - ஒருவராகவும்
சிதசிததிக: - சித் அசித அதிக: - ஜீவன் ஜடம் இவற்றிற்கு வேறானவராகவும்
ப்ரஹ்மாதீந் - பிரம்மன் முதலான
ஸர்வாந் பஸுந் - அனைத்து உயிரினங்களையும்
மோஹபாஶேந - மோஹம் எனும் கயிற்றால்
பத்த்வா - கட்டி
ஆத்மக்ருத்யம் - அவரவருடைய கடமைகளை
காரயித்வா - செய்யுமாறு செய்து
ய: ச - எந்த பரமேஸ்வரன்
ஏதேஷு - இவர்களுள்
ஸ்வபதஶரணாந்வித்யயா - தன் திருவடிகளை சரணடைந்தவர்களை
வித்யயா - மெய்யறிவினால்
மோசயித்வா - விடுவித்து
ஸாந்த்ராநந்தம் - ஒப்புயர்வற்ற பேரின்பத்தை
பரம் - பரமனின்
தாம - ஸ்வரூபத்தை (மேலான இருப்பிடத்தை, மோக்‌ஷத்தை)
கமயதி - அடையும்படி செய்கிறாரோ (உணரத்துகிறாரோ)
தம் த்வாம் ப்ரபத்யே - அந்த உம்மை முழுமையாக சரண்டைகிறேன்.

விளக்கம்

சிதசிததிக: என்பது இறையின் இலக்கணம். உயிர்களையும், உயிரற்றவைகளையும் தன் உடலாகக் கொண்டு, அந்த உடலுக்கு வேறாக இருப்பவரே இறைவன். அவருக்கு சமமாகவோ, உயர்வாகவோ யாரும் இல்லை. 

அவரே குருவாக வந்து (வித்யையா மோசயித்வா) அறிவால் உணர்த்துகிறார். கோகழி ஆண்ட குருமணிதன் தாழ் வாழ்க என்கிறார் மாணிக்கவாசகர்.

பிரம்ம தேவன் உத்தமமான பசு. இந்த பசுவான படைக்கும் கடவுள் பரமனால் படைக்கப்பட்டார். 

 பசு என்றால் உயிரினம் என்று பொருள். விலங்கினமான பசு, புல் உண்டு, விவேகமின்றி, தன்னை வேலை வாங்கும் மனிதர்களுக்கு அடிமையாகி பாரமிழுத்தல் முதலிய காரியங்களில் புரிந்து, க்லேசமும் துக்கமுமடையும்.

அவைகளைப்போல, அஜ்ஞானக் கயிற்றால் கட்டி, ஜீவர்களை இந்த வாழ்க்கைச் சக்கரத்தில் கட்டுண்டு , வினைகள் புரிந்து வினைப்பலன்களை அடைய வைக்கின்றான் ஆண்டவன். இந்த ஜீவன்களை கட்டுவதும் அவிழ்த்து விடுவதும் பரமேஸ்வரனே. 

இந்த ஜீவன்களிடையே எவன் உன்னைச் சரண மடைகின்றானோ அவனுக்கு ஞானத்தை அளித்து அவனுடைய கட்டை அவிழ்த்து விட்டு நித்யானந்த பரிபூர்ணமான உன்னுடைய அப்ராக்ருதமான பதவிக்கு அவனை அழைத்துக் கொள்ளுகிறாய் நீ. அந்த முப்புரம் எரி முதல்வனாம் பரமேஸ்வரன் உன்னை நான் சரணடைகிறேன் என்று துதிக்கின்றார் அப்பைய தீக்‌ஷிதர்.

இறையருள் பெருக! வளமுடன் வாழ்க !

ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 16

ஸ்லோகம் 16

यः स्रष्टारं निखिलजगतां निर्ममे पूर्वमीशः
तस्मै वेदानदित सकलान् यश्च साकं पुराणैः ।
तं त्वामाद्यं गुरुमहमसावात्मबुद्धिप्रकाशं
संसारार्तः शरणमधुना पार्वतीशं प्रपद्ये ॥ १६॥

தமிழ் ஒலிபெயர்ப்பு

ய: ஸ்ரஷ்டாரம் நிகிலஜகதாம் நிர்மமே பூர்வமீஶ:
தஸ்மை வேதாநதித ஸகலாந் யஶ்ச ஸாகம் புராணை: ।
தம் த்வாமாத்யம் குருமஹமஸாவாத்மபுத்திப்ரகாஶம்
ஸம்ஸாரார்த: ஶரணமதுநா பார்வதீஶம் ப்ரபத்யே ॥ 16॥

தமிழாக்கம்

ஆதியில் அண்டம் படை அயனைப் படைத்து
ஆகம வேதங்களை அவனுக்குப் புகட்டி 
ஆத்ம புத்திதனை ஒளிர்விக்கும் ஈசனாம்
ஆதிகுரு உமையவனைப் பிறவிப்பிணி உழல்
அடியேன் அடைகின்றேன் சரணாகதி !! 16

சொற்களின் பொருள்

ய: ஈஶ – எந்த சிவபெருமான்

பூர்வம் – படைப்பின் துவக்கத்தில் 

நிகிலஜகதாம் – அனைத்து உலகங்களின்

ஸ்ரஷ்டாரம் – படைத்தவரைப், படைப்பாளியைப் 

நிர்மமே – படைத்தாரோ

யஹ – எவர்

தஸ்மை – அவருக்கு (அந்த பிரம்மனுக்கு) 

புராணை: ஸாகம் – புராணங்களுடன் 

ஸகலாந் – அனைத்து 

வேதாந் – வேதங்களையும்

அதி3தஹ – உபதேசித்தாரோ

தம் – அந்த 

அத்யம் – ஆதியான

குரும் –  குருவை

பார்வதீஶம் – பார்வதி நாயகனை

ஆத்மபுத்திப்ரகாஶம் – என் மனதையும், புத்தியையும் ஒளிர்விக்கின்ற த்வாம் – உம்மை
ஸம்ஸாரார்த: – பிறவிப்பிணியில உழலும்

அஸோ – இந்த 

அஹம் – நான் 

அதுநா -இப்பொழுது 

ஶரணம் ப்ரபத்யே – முழுமையாகச் சரணடைகிறேன்

விளக்கம்

யார் படைப்பின் தொடக்கத்தில் பிரம்ம தேவரைப் படைத்து (“யோ ப்ரஹ்மானாம் விததாதி  ரூபம்”) அவரிடம் வேதங்களைக் கொடுத்து (“யோ வை வேதாஷ்ஷ்ச ப்ரஹிநோதி தஸ்மை”), இந்த படைப்பை படைக்கும்படி செய்தாரோ, என்னுடைய மனதையும் புத்தியையும் ஒளிர்விக்கும் அந்த இறைவனை (“தம் தேவ ஆத்மபுத்திப்ரகாஸம்”) மோக்‌ஷத்தை விரும்பும் நான் சரணடைகிறேன் (“முமுக்‌ஷுர்வை  சரணமஹம் ப்ரபத்யே”)

என்கிறது ஷ்வேதாஷ்த்வரோப உபநிஷத் 6.28. அதே போல இங்கு தீக்‌ஷிதர் கூறுகிறார். 

சிருஷ்டி இருவகைப்படும். ஒன்று ப்ரகிருதி சிருஷ்டி. மற்றொன்று விக்ருதி சிருஷ்டி. ப்ரகிருதி சிருஷ்டியில் சிவனிடமிருந்து பிரமன் உண்டானது. ஷ்ருதியில் சொல்லப்பட்டிருக்கிறது. ஶ்ரீமத் பாகவதத்தின் தியான ஸ்லோகமும் இதனை கூறுகிறது. பகவத் கீதை அத்தியாயம் 15 இதைப் பற்றியே (15.1-15.4). 

அப்படிப்பட்ட ஆண்டவன் ஆத்ம, புத்திப்ரகாஶம்; அதாவது இறைவன் உணர்வாக இருக்கிறார்; நான், உணர்த்த உணர்பவனாக இருக்கிறேன் என்ற கருத்தை வெளிப்படுத்துகிறார் அப்பைய தீக்‌ஷிதர்.

ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 15

ஸ்லோகம்

अद्यैव त्वत्पदनलिनयोरर्पयाम्यन्तरात्मन्
आत्मानं मे सह परिकरैरद्रिकन्याधिनाथ ।
नाहं बोद्धुं शिव तव पदं न क्रिया योगचर्याः
कर्तुं शक्नोम्यनितरगतिः केवलं त्वां प्रपद्ये ॥ १५॥

தமிழ் ஒலிபெயர்ப்பு

அத்யைவ த்வத்பதநலிநயோரர்பயாம்யந்தராத்மந்
ஆத்மாநம் மே ஸஹ பரிகரைரத்ரிகந்யாதிநாத ।
நாஹம் போத்தும் ஶிவ தவ பதம் ந க்ரியா யோகசர்யா:
கர்தும் ஶக்நோம்யநிதரகதி: கேவலம் த்வாம் ப்ரபத்யே ॥ 15॥

தமிழாக்கம்

இக்கணமே உன்பதமலர் பணிந்திட்டேன் உளமுறையோனே,
மனமுடன் மெய்யும் உறவுடன் உடமையும் மலைமகள்நாதா !
உனதடி உணரவும் உடற் பணியுடன் பயிற்சிதனையும்
புரிய இயலாது வழியேதுமறியாது் உனையொருவனின்
துணை நாடியே சரணடைந்தேன் சிவபெருமானே !! 15

சொற்களின் பொருள்

ஶிவ – மங்கலஹரமானவரே! சிவ பெருமானே! 

அத்ரிகந்யாதிநாத – மலைமகளின் நாதனே! 

அந்தராத்மநஹ – உள்ளத்தினுள் உறைபவரே ! உயிருக்கு உயிரானவரே! 

த்வத் – உன்

பத நலிநயோஹோ – திருவடித் தாமரைகளில்

மே – என் 

ஆத்மாநம் ஸஹ – உடல், மன வளாகத்துடன் கூட

பரிகரைஹி – உறவுகள், உடைமைகள் அனைத்தையும்

அத்யை யேவ – இப்பொழுதே, இன்றே

அர்ப்பயாமி – அர்ப்பணிக்கிறேன் 

தவ பதம் – உன்னடியினை, உன் இறை நிலையை, மோக்‌ஷத்தை 

போத்தும் – அறிவதற்கும் (உணர்வதற்கும்)
ந ஶக்நோமி – இயலாதவனாக இருக்கிறேன்

 க்ரியா யோகசர்யா: – கிரியை, யோகம் வழியாக அதாவது வழிபடுதல், தியானம் முதலான சாதனைகளை

ந கர்தும் (ஶக்நோமி) – செய்ய இயலாதவனாக இருக்கிறேன்

அநிதரகதி:- வேறு வழியின்றி 

கேவலம் த்வாம் ப்ரபத்யே – உன் ஒருவனையே சரணடைந்து சார்ந்துள்ளேன்

விளக்கம்

சைவ சித்தாந்தத்தில், இறைவனை அடைவதற்கான உபாயமாக சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு மார்க்கங்களை வரையறுத்துள்ளனர் பெரியோர். 

1. இதில் சரியை என்பது உழவாரப்பணி முதலாக சிவன் எழுந்தருளியிருக்கும் ஆலயங்களில் செய்யும் தொண்டு. அதோடு சிவனடியார்களை அன்பாக உபசரிப்பதும் ஆகும்.பெரிய புராணத்தில் சிவனடியார்களுக்கு தொண்டு செய்வதன் மூலமே இறையருளைப் பெற்ற எண்ணற்ற நாயன்மார்களின் வரலாற்றை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

2. அடுத்து கிரியை எனப்படுவது, உள்ளத்தாலும் புறத்தாலும் பூஜிப்பது.

நெஞ்சகமே கோயில்
நினைவே சுகந்தம்
அன்பே மஞ்சன நீர்
பூசை கொள்ள வாராய் பராபரமே 

தாயுமானவர்

3. சிவம் ஒன்றையே ஒருமுகப்படுத்தி வழிபடும் நிலை யோகம். புலன்களின் வழியாக வேறு எந்த சிந்தனைகளும் நமக்குள் தோன்றாதவாறு, நாம், இறைவனாகிய பரம்பொருளை தியானிக்கிறோம் என்னும் வேறுபாடு மறைந்து, நாமும் தியானமும் இரண்டறக் கலக்கும் நிலையே யோகம்.

4. இறைவனைப் பற்றியும் உயிரைப் பற்றியும் தெரிவிக்கும் நூல்களைக் கற்று பெரியவர்களின் உபதேசங்களைப் பெற்று இறைவனின் அருளைப் பெறுவதற்கான ஞானத்தைப் பெறுவது.

சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் இந்த நான்கு வழிகளின் மூலமாக இறைவனின் அருள் கிடைக்கும்.

  1. சிவன் அடியார்களைப் போற்றி சிவன் ஆலயங்களில் செய்யும் தொண்டால், சாலோகம் (சிவன் உலகம்), 
  2. உள்ளும் புறமும் பூஜிப்பதால் சாமீபம் (சிவன் அருகில் இருத்தல்), 
  3. பரிபூரண யோகத்தால் சாரூபம் (சிவ ஸ்வரூபமும்) கிடைக்கும். 
  4. சிவ சிந்தனையை ஞானத்தில் தேக்கி இருப்பதால் முக்தி எனும் பலன் கிடைக்கும்.   

மரணம் எப்பொழுது வரும் என்பதை அறிந்திலேன் நான். இங்கு இருப்பதோ இரவலாக கிட்டியது. “நம் மனே அல்லீநே! இல்லி சும்மனே பந்திதீனே!” (எம் வீடு அங்குதான்; இங்கு சும்மா வந்துள்ளேன்) என்கிறார் புரந்தர தாசர். எனவே இமைப்பொழுதும் என் நெஞ்சம் நீங்காதான் தாழ் இப்பொழுதே பணிகிறேன்.

“பெருமானே, என் உடல், உயிர் அனைத்திலும் இப்போது நீதான் நிறைந்திருக்கிறாய். இனி நான் செய்கின்ற செயல்கள் யாவும் நீ செய்வதுதான். நான் சரியான காரியங்களைச் செய்தாலும், தவறான செயல்களைப் புரிந்தாலும் அத்தனைக்கும் நீ தான் பொறுப்பு ” என்றும்

“அன்றே எந்தன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னை ஆட்கொண்டபோதே கொண்டிலையோ?
இன்றுஓர் இடையூறு எனக்கு உண்டோ எண்தோள் முக்கண் எம்மானே?
நன்றே செய்வாய், பிழை செய்வாய், நானோ இதற்கு நாயகமே?”

என்றும் இறைவனிடம் கேட்கிறார் மாணிகக வாசகர். 

இதே மனநிலையில் உள்ள அப்பைய தீக்‌ஷிதர்,

“ஹே பரமசிவ! எனக்கு உன் இருப்பிடமோ தெரியாது, கர்மானுஷ்டானத்தையோ யோகாப்யாஸத்தையோ செய்ய என்னால் இயலாது. வேறு ஒரு வழியும் அறியாத நான் உன்னைச் சரணமடைவது ஒன்றையே அனுஷ்டிக்கிறேன். அந்த்ய காலத்தில் மனதை ஈசுவரனிடம் அர்ப்பணம் செய்வது அஸாத்யமானபடியால் இப்பொழுது உன் நினைவு வந்திருக்கும் பொழுதே நான் உன்னிடம் என்னை ஸமர்ப்பணம் செய்து விடுகிறேன். என்னை மட்டுமில்லை. என் பரிவாரங்களையும் சேர்த்துக் கொண்டு ஆத்மார்பணம் செய்து விடுகிறேன்”.

என தன்னை அர்பணிக்கின்றார் ஆண்டவனிடம்.

இறையருள் பெருக! வளமுடன் வாழ்க !

ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 13

ஸ்லோகம்

ஸர்வம் க்ஷேப்தும் ப்ரபவதி ஜந: ஸம்ஸ்ருதிப்ராப்தமாக:
சேத: ஶ்வாஸப்ரஶமஸமயே த்வத்பாதாப்ஜே நிதாய ।
தஸ்மிந்காலே யதி மம மநோ நாத தோஷத்ரயார்தம்
ப்ரஜ்ஞாஹீநம் புரஹர பவேத் தத்கதம் மே கடேத ॥ 13॥

தமிழாக்கம்

சுவாசம் அடங்கும் வேளையிலே
உள்ளம் உன்பாதம் பணித்திட்டு 
பிறவி ஈனும் பாபமுழுதும் உதறி 
எறிய இயலும் புரமெரி நாதனே ! 
ஒருகால் அக்காலம் என் உள்ளம்
ஓரிரு நோய் வாய்ப்பட்டு நினைவு
தவறிட்டால் உனதடி பணிந்திட
எங்கனம் எனக்கு கை கூடும் !!  13

சொற்களின் பொருள்

நாத – உயிரின் தலைவனே! ஸ்வாமீ! 

புரஹர – முப்புரத்தை எரித்தோனே 

ஜந: – மனிதன் (உயிர்) 

ஶ்வாஸப்ரஶமஸமயே – மூச்சு நன்கு அடங்கும் சமயம் 

சேத: – மனதை (சித்தத்தை) 

த்வத்பாதாப்ஜே – உன் திருவடித் தாமரைகளில்

நிதாய – பணித்திட்டு (அர்ப்பணம் செய்து) 

ஸம்ஸ்ருதிப்ராப்தம் – பிறவிகளில் வந்து அடைந்திருக்கும் 

ஸர்வம் – அனைத்து

ஆக3ஹ – பாபங்களையும்

ஷேப்தும் – உதறி எறிந்துவிட

ப்ரபவதி – முடியும் (எனினும்,) 

தஸ்மிந் காலே – அந்த சமயத்தில்

யதி – ஒரு வேளை 

தோஷத்ரயார்தம் – வாதம், பித்தம்,கபம் என்ற மூன்று தோஷங்களால் (பீடிக்கப்பட்ட என் உடலால்) 

மம மநோ – என் மனது
ப்ரஜ்ஞாஹீநம் – நினைவு தவறியதாக

பவேத் – ஆகிவிட்டால்

தத் – அப்படி (திருவடித் மாமரைகளில் அரப்பணிக்க)

கதம் மே – எப்படி எனக்கு 

கடேத – கைகூடும்

விளக்கம்

எவ்வித பாபிக்கும் கடைசியாக ஒரு வழி இருக்கிறது. இறக்கும் காலத்தில் இறைவனுடைய திருவடிகளில் மனதைச் செலுத்தி, உயிரை உடலிலிருந்து பிரித்துக்கொண்டால், இந்தப் பிறவியில் செய்த அனைத்து பாபங்களிலிருந்தும் விடுபடலாம். அந்திய காலத்தில் பிரஜ்ஞையுடன் கூடி இருப்பது அரிது. வாத பித்த கபங்களின் விபரீதங்களால் மூர்ச்சை ஏற்பட்டும் விடலாம். ஆகையினால் ப்ராண வியோக சமயத்தில் மனத்தை ஈசுவரனிடம் செலுத்தி ஸர்வ பாபங்களையும் போக்கிக் கொள்ளலாம் என்றும் நிச்சயமாக நம்பியிருக்கவும் முடியாது. நோயின் பிடியில் சிக்கி, தன் நிலை இழந்த மனதால் இறைவனைத் தியானிக்க முடியாது. என் செய்வது என வருந்துகிறார் அப்பையர்.

திருவடித் தாமரை பணிவது பாபங்களை களைந்திடும் – விளக்கம் 

இறைவன் திருவடியைப் பற்றினால், பாவங்கள் களையும் என்று அப்பையர் கூறுவதற்கு ஆதாரம் (ப்ரமாணம்) என்ன என்பதை முதலில் காண்போம்.

இறைவனின் பாத அபிஷேகங்களின் போது வேதத்தில் உள்ள (தைத்ரிய ப்ராஹ்மணம் 3.12.3) சில மந்திரங்கள் உரைக்கப்படும். அதில் ஒன்று

சரணம் பவித்ரம், விததம் புராணம் !
யேன பூதஸ்தரதி துஷ்க்ருதாநி !
யேன பவித்ரேன ஷுத்தேன பூதாஹ !
அதி பாப்மானமராதிம் தரேம !
லோகஸ்ய பவித்ரம் சரணம் நோ லோகே ஸ்திரம் த³தாது !

தைத்ரிய ப்ராஹ்மணம் (3.12.3). 

இறைவன் திருவடி எங்கும் நிறைந்திருக்கிறது, பழமையானது, புனிதமானது. அதுவே அடைக்கலம். அதன் மூலம் எல்லா உயிர்களும் தமது பாபகர்மங்களைத் தாண்டிச் செல்கின்றன. அதே புனிதமானதும், தூய்மையானதும் ஆன அத்திருவடிகளால் தாம் தூய்மை அடைவோமாக !.மிகுந்த பாபங்களையும் நன்கு கடந்துடுவோமாக!……இறைவன் திருவடி நமக்கு நல்ல புத்தியைக் கொடுக்கட்டும் ! 

என்கிறது தைத்ரிய ப்ராஹ்மணம் (3.12.3). 

இறைவன் திருவடிகள் , அறிவினை (ஞானம்) குறிப்பது. 

  1. இடது திருவடி குறிப்பது
    • அபர ஞானம்
    • கர்ம காண்ட ஞானம்
    • உள்ளத்தைப் பக்குவப்படுத்துவது
    • சரியை, (உடலால்) கிரியை (உடலால், வாக்கால்)
  2. வலது திருவடி குறிப்பது
    • பர ஞானம்
    • ஞான காண்ட ஞானம்
    • உண்மையை உணர்த்துவது
    • யோகம்(உள்ளத்தால்), ஞானம்

பாத ஸேவநம் என்பது இறைவனது திருவடி போற்றுதலைக் குறிக்கும். அதாவது, கர்ம காண்டத்தைக் கடைப்பிடித்து (இறையின் இடது திருவடி பற்றி), “சித்த ஸுத்தி” எனும் மனத்தூய்மையை அடைந்து, ஞான காண்டத்தை அறிந்து பரம்பொருளும் (பரமாத்மாவும்) நீயும் (ஜீவாத்மாவும்) ஒன்றே என்ற மெய்யறிவினை (ஆத்ம ஞானம்) அடைவதைக் குறிப்பதே “பதாம்போஜம் பஜ” என்ற சொற்றொடர் குறிக்கிறது.

தோஷத்ரயார்தம் – அல்லது திரிதோடங்கள் – ஓரிரு நோய் – விளக்கம்

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் 

வளிமுதலா எண்ணிய மூன்று 

என்கிறது திருக்குறள் (941).

நம் உடலில் வாதம், பித்தம், கபம் (சிலேட்டுமம்) அல்லது `வளி (காற்று) , அழல் (நெருப்பு) , கபம் (நீர்)’ என்ற மூன்றும் இருக்க வேண்டிய அளவில் சீராக இருக்க வேண்டும். அப்படி அல்லாது ஏதாவது ஒன்று குறைந்தாலோ அல்லது மிகுதியானாலோ அது நோயாக நமது உடலில் தோன்றிவிடும் என்று மருத்துவ உலக நூலோர் கூறுவதாக ஐயன் திருவள்ளுவர் கூறுகிறார்.

  1. வாதத்தில் முக்கியமாக எண்பது நோய்களாகும். நரம்பு வலி, நரம்பு பிடிப்பு, காக்காய் வலிப்பு, பக்கவாதம், வாயு, இரத்த அழுத்தம், இருதய நோய் முதலியவை இதில் அடங்கும்.
  2. பித்தத்தில் முக்கியமாக நாற்பது நோய்களாகும். செரியாமை, வயிற்றுவலி, வயிற்றுப்புண், மஞ்சட்காமாலை, இரத்த சோகை, இரத்த வாந்தி, கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆகியன கெட்டுப் போதல் போன்ற நோய்கள் இதில் அடங்கும்.
  3. சிலேத்துமத்தில் தொண்ணூற்றாறு நோய்கள் முக்கியமானதாகும். அவற்றில் மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு, தடுமன், இருமல், க்ஷயம், ஆஸ்துமா போன்றவை அடங்கும்.

இப்படி இருநூறுக்கும் அதிகமான நோய்களில் ஏதேனும் ஒன்று, வயது முதிர்ந்து, உயிர் பிரியும் தருணம் நம்மைத் தாக்கலாம். அப்போது  இறைவன் திருவடித் தாமரையை எப்படி தியானிப்பது என்று உழல்கிறார் அப்பையர்.

ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 12

ஸ்லோகம்

क्षाम्यस्येव त्वमिह करुणासागरः कृत्स्नमागः
संसारोत्थं गिरिश सभयप्रार्थनादैन्यमात्रात् ।
यद्यप्येवं प्रतिकलमहं व्यक्तमागःसहस्रं
कुर्वन् मूर्खः कथमिव तथा निस्त्रपः प्रार्थयेयम् ॥ १२॥

ஷாம்யஸ்யேவ த்வமிஹ கருணாஸாகர: க்ருத்ஸ்நமாக:
ஸம்ஸாரோத்தம் கிரிஶ ஸபயப்ரார்தநாதைந்யமாத்ராத் ।
யத்யப்யேவம் ப்ரதிகலமஹம் வ்யக்தமாக:ஸஹஸ்ரம்
குர்வந் மூர்க: கதமிவ ததா நிஸ்த்ரப: ப்ரார்தயேயம் ॥ 12॥

தமிழாக்கம்

இவ்வுலகில் இப்பிறவியில் யான்புரி பாவமனைத்தும்
மலையனுனை அச்சம் கலந்த பணிவுடனே துதிகணம்
கருணைக் கடலென மன்னித்தருளுகிறாய் அன்றோ ! 
இருப்பினும் வெட்க மின்றி கணந்தோறும் கணக்கிலா
பாவங்களை வெளிப்படுத்தும் இம்மூடன் எங்கணம்
போற்றித் துதிப்பேன் மலைநாதனே உன்னிடம் !! 12

சொற்களின் பொருள்

கிரிஶ – மலை உறையோனே! 

கருணாஸாகர: – கருணைக் கடலாய் 

இஹ – இவ்வுலகில்

ஸம்ஸாரோத்தம் – இந்த உடல் வாழக்கையில் 

க்ருத்ஸ்ந மாக: – க்ருத்ஸநம் ஆக3ஹ – (நான் செய்த) முழுமையான பாவங்களையும் (ஆக3ஹ – இலக்கணம் – த்விதியா விபக்தி ஏக வசனம்; ஆக3ஸ் – ஸகாரந்தஹ நபும்ஸக லிங்கஹ, ஆக3ஸ் ஸப்தஹ, ஆக3ஹ, ஆக3ஸி, ஆகா3ம்ஸி)

ஸ பய ப்ரார்தநாத் அந்ய மாத்ராத் – அச்சத்தினால் உண்டான பணிவுடன், மிக ஏழ்மையான உணர்வுடன் , பிராரத்தனை செய்த மாத்திரத்தில்

க்ஷாம்யஸ்யேவ – மன்னித்தருள்கிறாய்

யத்யப்யேவம் – யத் யபி ஏவம் – இருந்தபோதிலும் 

நிஸ்த்ரப: – வெட்கமின்றி 

ப்ரதிகலம் – கணந்தோறும், 

வ்யக்தமாக:ஸஹஸ்ரம் குர்வந் – எண்ணற்ற பாபங்களை வெளிப்படுத்திக்கொண்டிருக்ப்பவனாய் 

ததா – (அப்படி) இருக்கும்போது

அயம் – இந்த 

மூர்க: – மூடனை 

கதமிவ – எப்படித்தான் 
ப்ரார்தயேயம் – பிராரத்தனை செய்வது (உன்னிடம்)

விளக்கம்

“புத்தி பூர்வமாக உன் விதிகளை மீறிவிட்டு பயமும் வெட்கமும் கூட இல்லாமல் ஒரு விலங்கைப்போல விஷய ஸுகங்களையே பல இடையூறுகளுக்கு மத்தியில் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். இவ்விதம் நான் அபராதியானது இந்த ஜன்மாவில் மட்டுமில்லை பலவிதமான அநேக கோடி ஜன்மாக்களிலும் இப்படியே அபராதியாக இருந்துள்ளேன்”

என்று முந்தைய ஸ்லோகத்தில் புலம்பி உரைத்த அப்பைய தீக்‌ஷிதர், இந்த ஸ்லோகத்தில்

“எண்ணித் துணிக கர்மம் என புத்தி சொல்லியும் கேட்காமல், மனம் போனபடி வினைகள் புரிந்து அதனால் வரும் வினப்பயன்களான பாவங்களை ஈட்டிய வண்ணமே இருக்கிறேன்” என்று நொந்து கொள்கிறார்.

இப்படி புத்தி அறிவுரைத்தாலும், மனம் போன போக்கில் போவதினை, “வாஸனை” என்கிறார் வித்யாரண்ய ஸ்வாமிகள் பஞ்சதஸியில்.

அப்பையரின் இப்புலம்பலில் மற்றொன்றும் தெளிவாகிறது. இறைவன் விரைவில் மகிழ்படைபவன் (ஆஷுதோஸி – ashutosh – ஆஷு – மகிழ்வு, தோஸ் – விரைவில்). அடியாருக்கு அருள்வதில் அவன் கருணைக் கடல். அக்கருணைக் கடலில், நம் வினைப்பயன்கள் “கடலில் கரைத்த காயம்” என்பதால், இறையின் கருணையை ஈட்டிட எப்பொழுதும் முயன்றிட வேண்டும்.

இதுதான் இந்த ஸ்லோகம், நமக்கு வழங்கும் அறிவுரை.

ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 11

ஸ்லோகம்

उल्लङ्घ्याज्ञामुडुपतिकलाचूड ते विश्ववन्द्य
त्यक्ताचारः पशुवदधुना मुक्तलज्जश्चरामि ।
एवं नानाविधभवततिप्राप्तदीर्घापराधः
क्लेशाम्भोधिं कथमहमृते त्वत्प्रसदात्तरेयम् ॥ ११॥

உல்லங்க்யாஜ்ஞாமுடுபதிகலாசூட தே விஶ்வவந்த்ய
த்யக்தாசார: பஶுவததுநா முக்தலஜ்ஜஶ்சராமி ।
ஏவம் நாநாவிதபவததிப்ராப்ததீர்காபராத:
க்லேஶாம்போதிம் கதமஹம்ருதே த்வத்ப்ரஸதாத்தரேயம் ॥ 11॥

தமிழாக்கம்

உலகுதொழும்  கலைவடிவப் பிறைசிகையனிப் பெரியோனே !
உனதாணைமீறி ஒழுங்கின்றி விலங்கென வெட்கமின்றி 
அலைகின்றேன் இக்கணம் பல பிறவி எடுத்துப் பேரபராதம் சேர் 
அடியேன் பெருந்துயர்கடல் கடப்பது எங்கணம் உனதருளின்றி !! 11

சொற்களின் பொருள்

விஶ்வவந்த்ய – உலகோரல் போற்றப்படுபவனே! 

உடுபதிகலாசூட – நட்சத்திரங்களின் தலைவனாகிய பிறைச்சந்திரனை அணிந்தவனே

தே – உன்னுடைய 

அஜ்ஞாம் – கட்டளையை 

உல்லங்க்ய. – மீறி

த்யக்த ஆசார: – ஒழுக்கத்தை விட்டவனாய்

பஶுவத் – விலங்கினமாய்

அதுநா – இப்போது

முக்தலஜ்ஜ: – வெட்கமின்றி (லஜ்ஐஹ என்றால் வெட்கம்)

சராமி – அலைகிறேன்
ஏவம் – இப்படி 

நாநாவித பவததி ப்ராப்த தீர்கா அபராத: – பலவித பிறவித்தொடர்கள் மூலம் சேகரித்த, நீண்ட பெரிய அபராதங்களை உடைய

அஹம் – நான்
க்லேஶ அம்போதிம் – துன்பக் கடலை

கதம் அஹம் – எங்கனம் நான் 

த்வத் ப்ரஸதாத் ருதே – உன் அருள் இன்றி 

தரேயம் – கடந்திடுவேன்

விளக்கம்

“உன்னை சரணாகதி செய்யும் நான் பெரிய அபராதி என்று தெரிவித்துக்கொள்ளுகிறார். ஹேசந்த்ர கலாதரனே! உன் கட்டளைகளை மீறி நடந்தவன் நான். ஸ்ருதி ஸ்ம்ருதி புராணங்களின் மூலம் உன்னால் போதிக்கப்பட்ட கர்மாக்களையும் தர்மங்களையும் சரிவர அனுஷ்டிக்காதவன். புத்தி பூர்வமாக உன் விதிகளை மீறிவிட்டு பயமும் வெட்கமும் கூட இல்லாமல் ஒரு விலங்கைப்போல விஷய ஸுகங்களையே பல இடையூறுகளுக்கு மத்தியில் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். இவ்விதம் நான் அபராதியானது இந்த ஜன்மாவில் மட்டுமில்லை பலவிதமான அநேக கோடி ஜன்மாக்களிலும் இப்படியே அபராதியாக இருந்துள்ளேன். எல்லையற்ற துக்கக் கடலை உன் தயவின்றி வேறு எவ்விதம் நான் தாண்டப் போகிறேன்!”

தவறான பாதையில் சென்று, தவறு என்று உணரந்தவருக்கு குற்ற உணர்ச்சி எழலாம். அவைகளை நீக்கிக்கொள்ள இத்தகைய ஸ்லோகங்கள் உதவுகின்றன. 

ஏன் உலகோரால் போற்றப்படுகிறான் இறைவன். ஏனெனில் அனைவரும் விரும்புவது இன்பம். பேரின்பமே இறைவன் என்கிறது நமது மறைகள். பேரின்பம் எது என்றறியாமல், பெருந்துன்பத்திற்கு (பிறவிப்பிணிக்கு) காரணமான சிற்றின்பங்கள் நாடிஓயாது உழைக்கின்றனர் உலகோர். இறைவனின் கட்டளை என்பது ஷ்ருதி, ஸ்ம்ருதிகளின் கட்டளை.

விலங்கைப் போல – விஷய சுகங்கள் பின் அலைவது என்பது “வந்த வரவை மறந்து, மாதர்பொன்பூமி மயக்கத்தில்” ஆழ்ந்து என்பதைக் குறிப்பது.

மனதில் நூறு கெட்ட எண்ணங்கள் எழுந்தால், அவைகளை இறைவன் துணையைடன் ஐந்து நல்ல எண்ணங்களால் அழிக்க முடியும் என்ற மகாபாரத தத்துவத்தினை உள்வைத்தது இந்த ஸ்லோகத்தில், ஏதிலார் குற்றம் போல் தன் குற்றம் காண்கிறார் அப்பைய தீட்சிதர் (குறள் 190). 

துன்பக் கண்ணீரில் துளைந்தோர்க்கு உன் ஆனந்த 

இன்பக் கண்ணீர் வருவது எந்நாள் பராபரமே

என்ற தாயுமானவர் பாடல், தீக்‌ஷிதரின் உள்ளத்தை பிரதிபலிக்கிறது.

ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 10

ஸ்லோகம்

नाहं रोद्धुं करणनिचयं दुर्नयं पारयामि
स्मारं स्मारं जनिपथरुजं नाथ सीदामि भीत्या ।
किं वा कुर्वे किमुचितमिह क्वाद्य गच्छामि हन्त
त्वत्पादाब्जप्रपतनमृते नैव पश्याम्युपायम् ॥ १०॥

நாஹம் ரோத்தும் கரணநிசயம் துர்நயம் பாரயாமி
ஸ்மாரம் ஸ்மாரம் ஜநிபதருஜம் நாத ஸீதாமி பீத்யா ।
கிம் வா குர்வே கிமுசிதமிஹ க்வாத்ய கச்சாமி ஹந்த
த்வத்பாதாப்ஜப்ரபதநம்ருதே நைவ பஶ்யாம்யுபாயம் ॥ 10॥

தமிழாக்கம்

கட்டடங்கா கரணக்கூட்டமதை அடக்க அறிந்திலேன் அண்ணலே!
கருபிறப்பின் பெருவலி எண்ணிஎண்ணி அஞ்சி  நடுங்குகிறேன் நான்! 
என் செய்வேன் பரிகாரம் என்னவென்று எங்கு செல்வேன் அந்தகோ !
உன் மலர்ப்பாதம் பணிவதன்றி வேறேதும் அறிந்திலேன் யான்!! 10

சொற்களின் பொருள்

நாத – தலைவனே 

துர்நயம் – கட்டுப்பாடுகளுக்கு அடங்காத (நயம் = வழிநடத்துதல்)

கரணநிசயம் – இந்திரியக் கூட்டங்களை (நிசயம் = சமூகம்)

அஹம் – நான்

ரோத்தும்- அடக்கியாள 

ந பாரயாமி – ஆற்றல் இல்லாதவனாக இருக்கிறேன்

ஜநிபதருஜம் – ஜனி பத ருஜம். – பிறப்பின் (ஐனி) வழியில் (பத) உள்ள களைப்பை, சிரமத்தை (ருஜம்)

ஸ்மாரம் ஸ்மாரம் – எண்ணி எண்ணி 

ஸீதாமி – நடுங்குகிறேன்

பீ4த்3யா – அச்சத்தினால்

ஹந்த – அய்யகோ 

கிம் வா குர்வே – நான் என் செய்வேன்

கிம் உசிதம் – என்ன (தகுந்த) பரிகாரம்

க்வ – எங்கு (துன்பத்தை நீக்கிட)

அத்ய – இப்பொழுது (இங்கே)

கச்சாமி – செல்வேன் 

த்வத் பாதாப்ஜ ப்ரபதந் ருதே – உன் திருவடித்தாமரைகளில் அடைக்கலமாகுவதைத் தவிர

நைவ – வேறேது

பஶ்யாம் யுபாயம் – அறிந்திலேன் வழி

விளக்கம்

“நாஹம் ரோத்தும் கரணநிசயம் துர்நயம் பாரயாமி” – விளக்கம்

கட்டடங்கா கரணக்கூட்டமதை அடக்க அறிந்திலேன்  என்ற சொற்றடரின் விளக்கத்திற்கு தாயுமானவரை அண்டுவோம்:

கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்;
கரடிவெம் புலிவாயையும்
கட்டலாம்; ஒரு சிங்க முதுகின்மேற் கொள்ளலாம்;
கட்செவி யெடுத்தாட்டலாம்;
வெந்தழலி னிரதம்வைத் தைந்துலே கத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்;
வேறொருவர் காணாம லுலகத் துலாவலாம்
விண்ணவரை யேவல்கொளலாம்;
சந்ததமு மிளமையோ டிருக்கலாம்; மற்றொரு
சரீரத்தி ன்ம்புகுதலாம்;
சலமே னடக்கலாம்; கனன்மே லிருக்கலாம்
தன்னிகரில் சித்திபெறலாம்;
சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்ற
திறமரிது; சத்தாகியென்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே!
தெசோ மயானனந்தமே

தாயுமானவர்

மிக்க கடினம் யாதெனில் “மனத்தை  அடக்கி  சும்மா  இருக்கின்ற திறம்  அரிது”.  ஆராய்ந்தால், உடலானது உயிரைத் துன்புறுத்துகிறது என்பதை உணரமுடிகிறது.

“ஜநிபதருஜம்” என்ற சொல்லின் விளக்கம்

என்னை மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி
வருத்தப்படுத்த வேண்டாம் பொன்னம்பலவா
நின் திருவடி சரணம் என்றிங்கு நான் நம்பி வந்தேன்,
எடுத்த ஜனனம் கணக்கெடுக்கத் தொலையாது
இரங்கி மகிழ்ந்து தேவரீர்
வேணுமென்று கொடுத்த மானிட ஜன்மம்
வீணாகி போகுதென்
குறை தீர்த்த பாடுமில்லையே!!
அடுத்து வந்த என்னை தள்ளலாகாது
அரஹரவென்று சொன்னாலும் போதாதோ!!
தடுத்து வந்தருள சமயம்

“திருவடிசரணம் என்றிங்கு நான் நம்பி வந்தேன்”  என்ற கோபால கிருஷ்ண பாரதி பாடல் , கருவிலிருந்து வலியுடன் களைப்பாய் வெளிவரும் பிறப்பினை நொந்துவதற்கான “ஜநிபதருஜம்” என்ற சொல்லின் விளக்கம். “இறப்பொடு பிறப்பை உள்ளே எண்ணினால் நெஞ்சது பகீரென்னும் துயில் உறாது” என்கிறார் தாயுமானவர்.

“இந்த்ரிய நிக்ரஹத்தில் அசக்தனாயும் ஸம்ஸார வேதனைகள் விலக்க விரும்புகிறவனாயுமிருக்கும் எனக்கு சரணாகதியைத் தவிர வேறு கதியில்லை என்பதைத் தெரிவிக்கிறார் தீக்‌ஷிதர்”.

மந்திரம் கூறும் கருத்து

ஸம்ஸாரவாழ்க்கையின் கஷ்டங்களை (பிறப்பு இறப்புச் சுழலில்) நினைத்து நினைத்து பயம் கொண்டு இதிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று கவலை உண்டானவர்களுக்கு, விஷயங்களில் இயற்கையாகவே நுழையும் இந்திரியங்களை அடக்க முடியாதது பற்றி துக்கம் ஏற்படுகிறது. 

மாசுகள் படிந்த மனதிற்கு அடிமையான சித்தத்திற்கும் முக்தியை விரும்பும் ஜீவனுக்கும் ஏற்படும் போராட்டட்தில் சளையுற்ற ஜீவனின் புலம்பல் இது. “என்ன செய்வேன்? எங்கு செல்வேன்? எனக்கு எது உபாயம்? ஸ்வாமி ஒன்றும் வகையறியாத நான் உன் இரு கமல மலர்ப் பொற்பாதங்களை சரணடைகிறேன்,  எனக்கு வழி காட்டி நீ ஒருவனே என்ற சீவன், சிவனை நோக்கிப் புலம்புவதே இந்த ஸ்லோகம்.

ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 9

ஸ்லோகம்

किं वा कुर्वे विषमविषयस्वैरिणा वैरिणाहं
बद्धः स्वामिन् वपुषि हृदयग्रन्थिना सार्धमस्मिन् ।
उक्ष्णा दर्पज्वरभरजुषा साकमेकत्र बद्धः
श्राम्यन्वत्सः स्मरहर युगे धावता किं करोतु ॥ ९॥

கிம் வா குர்வே விஷமவிஷயஸ்வைரிணா வைரிணாஹம்
பத்த: ஸ்வாமிந் வபுஷி ஹ்ருதயக்ரந்திநா ஸார்தமஸ்மிந் ।
உக்ஷ்ணா தர்பஜ்வரபரஜுஷா ஸாகமேகத்ர பத்த:
ஶ்ராம்யந்வத்ஸ: ஸ்மரஹர யுகே தாவதா கிம் கரோது ॥ 9॥

தமிழாக்கம் 

புலனின்பப் பொருள் பின்னே 
தரிகெட்டுத் தன்னிச்சையால்
திமிறி ஓடிடும் அகமுடிச்சுகள்
அடங்கியுள்ள காயம் தனில்
பிணையுண்ட என்செய்வேன்!
நுகத்தடி ஒன்றினிலே திமிறும்
முரட்டுக் காளையுடன் பூட்டிய
களைத்த தளர் இளங்கன்று 
என்செய்ய இயலும் காமகோபனே!! 9

சொற்களின் பொருள்

ஸ்வாமிந் – உயிரை ஆளும் இறைவனே – எனையாளும் இறையோனே

விஷம விஷய ஸ்வைரிணா – ஒழுங்கில்லாமல் + சுவை, ஒளி, ஒசை, ஊறு, சப்தம் எனும் புலப்பொருட்கள் + தன்னிச்சையாக. அதாவது 

(கரடு முரடான பிரதேசங்களில்) பல விதமான புலனின்பப் பொருட்களின் பின், கட்டுக்கடங்காமல், தண்ணிச்சையாக திமிறிக்கொண்டு ஓடும் 

வைரிணா – பகைவர்களான 

ஹ்ருதயக்ரந்திநா – இதய முடிச்சுகள் (அவித்யா காம கர்ம – அறியாமை, ஆசை, செயல்)- குறள் 360

ஸார்தம் – கூடியதான

அஸ்மிந் – இந்த 

வபுஷி – உடலான வண்டியில் 

பத்த: – பிணைக்கப்பட்ட 

அஹம் கிம் வா குர்வே – நான் என்னதான் செய்ய முடியும் 

ஸ்மரஹர – காமனை எரித்தோனே 

தர்பஜ்வரபரஜுஷா – திமிர் மிகுதியானால் கொதிப்புள்ள

தாவதா – பாய்ந்தோடும்

உக்ஷ்ணா ஸாகம் – காளையுடன் கூடிய

ஏபத்ர யுகே – ஒரே நுகத்தடியில் 

பத்த: – பூட்டப்பட்ட 

ஶ்ராம்யந் – சிரமத்தினால் சோர்வுற்ற

வத்ஸ: – இளங்கன்று 

கிம் கரோது – என்ன செய்யக்கூடும்

விளக்கம்

முன் சுலோகத்தில் கூறியதை இங்கு விரித்துரைக்கின்றார். ஸுலபமான துக்க நிவ்ருத்தி மார்க்கத்தை அறிந்திருந்தும் நான் துஷ்டத்தனமுள்ள விஷய வாஸனையினால் தோற்கடிக்கப் பட்டவனானேன். பார்ப்பதற்கு ஸுகம் போலவும் இறுதியில் துக்கத்தைத் தருவதுமான இந்திரியார்த்தங்களில் ஆவேசத்துடன் பாயும் அநேக காலவாஸனா ஜடிலமான என் மனம் என்னைத் தூக்கி வாரிக் கொண்டுபோய் அனர்த்தங்களுக்கு உள்ளாக்கி விடுகிறது.

நான் என்ன செய்வேன், ஒரு முரட்டுக் காளையுடன் ஒரே வண்டியில் பூட்டப் பெற்ற இளங்கன்று என்ன செய்யும்? காளை மேடுபள்ளம் பார்க்காமல் திமிரிக் கொண்டு அதிவேகமாய் ஓடவாரம்பிக்கும் போது இளங்கன்று எவ்வித பரிதாப நிலையை அடையும்?

வாஸனை முடிச்சுக்களேறிய திமிர் கொண்ட என் மனத்துடன் நானும் இச்சரீரமாகிற வண்டியில் கட்டப்பட்டிருக்கிறேன். பலமற்ற நான் (ஜீவன்) துஷ்டவாஸனைகளால் அடக்க வொண்ணாத என் மனம் இழுத்த இடமெல்லாம் பரிதபித்துக் கொண்டே ஒடுகிறேன். என்னால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.  

ஒரே நுகத்தடியில் பூட்டப்பட்ட முரட்டுக்காளையும், இளங்கன்றும் என்ற உருவகத்தைப் பயன்படுத்துகிறார் தீக்‌ஷிதர். கட்டுக்கடங்காது ஒடும் முரட்டுக்காளையுடன் இளம்கன்று படும்பாடு என்ற உருவகத்தைக் கூறி, முரட்டுக்காளை எனும் மனத்துடன், ஜீவன் எனும் இளங்கன்றின் நிலையை எடுத்துரைக்கிறார் அப்பையர். 

சீராரும் நின் தேஜோமயானந்த

தெரிசங் காட்டு பகலே

தேகாதியாகும் ப்ரபஞ்ச இருளாகியே

திண்டாடும் மும்மலப் பேய்

போராடுது என்னுடன், நான் ஏழை, அதனுடன்

போராட முடிவதில்லை ,

புலையாடல் ஒருநாள் இரண்டு நாளோ? இது

பொறுக்கவும் படுவதில்லை

ஆரோடு சொல்லி என் குறையாறுவேன்? எனக்கு

அன்னையே! அப்பனே! உன்

ஆறுதலையன்றி வேறில்லை , நீ நழுவவிடில்

அடியேன் அலைந்து போவேன்

ஓராலின் நிழலில் உறைந்து சனகாதியர்க்கு

உள்ளபடி அருள் தெய்வமே!

ஒன்றாகி ஆனந்த உருவாகி என் உயிர்க்கு

உயிரான பரமசிவமே!

என்ற, தரும்புர ஆதினம் பத்தாவது குருமகாசன்னிதானம் சிவஞான தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அருளிய தக்‌ஷிணாமூரத்தி திருவருட்பா, மும்மலப் பேய்களின் போராட்டம் தனையே பிரதிபலிக்கிறது. 

உணரச்சிப் பெருக்கு நிறைந்த உள்ளத்துடன் இணைந்திருக்கும் என்னை, உள்ளத்திலிருந்து விடுவிப்பாயாக என்பதே இப்பண்ணின் சாரம்.

ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 8

ஸ்லோகம்

अर्कद्रोणप्रभृतिकुसुमैरर्चनं ते विधेयं
प्राप्यं तेन स्मरहर फलं मोक्षसाम्राज्यलक्ष्मीः ।
एतज्जानन्नपि शिव शिव व्यर्थयन्कालमात्मन्
आत्मद्रोही करणविवशो भूयसाधः पतामि ॥ ८॥

அர்கத்ரோணப்ரப்ருதிகுஸுமைரர்சநம் தே விதேயம்
ப்ராப்யம் தேந ஸ்மரஹர பலம் மோக்ஷஸாம்ராஜ்யலக்ஷ்மீ: ।
ஏதஜ்ஜாநந்நபி ஶிவ ஶிவ வ்யர்தயந்காலமாத்மந்
ஆத்மத்ரோஹீ கரணவிவஶோ பூயஸாத: பதாமி ॥ 8॥

தமிழாக்கம் 

எருக்கம் தும்பை மலரால் பூசை
என்றே உரைத்தன மறை நான்கும்!
அப்பூசை தரும் முக்திப் பேரின்பமென 
அறிந்தும் காலம் வினையம் புரிந்து
ஐம்புலனின்ப மயக்கம் கொண்டு 
ஆத்ம துரோகியென அதிவிரைவாய்
அதலம் நோக்கி வீழ்கின்றேன் 
பரமாத்மனே சிவபெருமானே !! ,8

சொற்களின் பொருள்

ஸ்மரஹர – காமத்தை எரித்தவனே 

அர்க த்ரோண ப்ரப்ருதி குஸுமைஹி – (எளிதில் கிடைக்கும்) எருக்கம், தும்பை முதலான (ப்ரப்ருதி) பூக்களால்

தே அர்சநம் – உன்னைப் பூசிக்க வேண்டும் என 

விதேயம் – வேதங்களில் கூறப்பட்டுள்ளது

தேந – அந்த வழிபாட்டினால் 

ப்ராப்யம் – கிடைக்கும் 

மோக்ஷஸாம்ராஜ்யலக்ஷ்மீ: – பேரின்ப வடிவான மோக்‌ஷம்

பலம் – பலன் 

ஆத்மந் – பரமாத்மாவான

ஸிவ ஸிவ – சிவபெருமானே

ஏதத் – இந்த உண்மையெல்லாம்

ஞாநந் அபி – அறிந்த பின்னும் 

கால – காலத்தை 

வ்யர்தயந் – வீணடித்துக்கொண்டு

கரணவிவஶோ – இந்திரியவயம் மயங்கி 

ஆத்மத்ரோஹீ – தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்டு

பூயஸா – மிக விரைவாக (அடிக்கடி)

அத: – கீழே

பதாமி – விழுந்துகொண்டிருக்கிறேன்.

பொருள் விளக்கம்

உன்னை ஆராதிப்பது அடியேனுக்கு சிரமமான காரியமில்லை. எருக்கு தும்பை முதலிய மணமற்ற, யாரும் வேண்டாத, எங்கும் கிடைக்கக்கூடிய புஷ்பங்களால் உன்னை அர்ச்சனை செய்தால் போதும். இவ்வளவு ஸுலபமான ஆராதனைக்கு ஏற்படும் பலமோ வீடுபேறு. இதை அறிந்திருந்தும் முக்தியைத் தேடிக்கொள்ளாத நான் ஆத்ம துரோகி என்பதில் ஐயமென்ன? சிவ சிவ என்ன பரிதாபம், நான் வீணாகக் காலத்தை விஷய சபலனாகவே கழித்து வருகிறேன். அதன் பயனாக அதோகதியை அடைகிறேன். 

உலகத்தில் கடுமையான துன்பத்தை அனுபவிக்கும் ஒருவன் அதினின்றும் தன்னை விடுவித்துக் கொண்டு மஹத்தான சுகத்தையும் அடைய வெகு எளிய வழியை அறிந்திருந்தும் அதற்கு முயற்சி செய்யாமல் துக்கத்திலேயே உழன்று கொண்டிருப்பானாகில் அவன் எவ்வளவு மூடன், என 

ஜீவனாகிய நான் சிவனாகிய உன்னைச் சார்ந்திருப்பதை விட்டுவிட்டு அஸிவமாமாகிய உலகப் பொருட்களையும் உறவுகளையும் சாரந்திருக்கிறேன். என்னைப் பொருத்தருள்வீர் என்கிறர் தீக்‌ஷிதர் இந்த ஸ்லோகத்தில்.

இதுவும் ஆத்ம நிந்தனை முறையில் பக்தி. உடலுக்கு நன்மை செய்து, உயிருக்குக் கெடுதல் செய்யும் பாவியான ஆத்மத்ரோஹீ நான் என்கிறார்.

ஆத்மத்ரோஹீ – விளக்கம்

உயிருக்கு பிறப்பு, இறப்பு இல்லை. உயிர் வருவதும் போவதும் இல்லை. உயிருக்கு உடல் கிடைத்தது, மனிதன் பெற்ற பெரு வாயப்பு. 

உயிருக்காகத்தான் உடல். உயிர் மனமுடன் இணைந்திருக்கிறது. இந்த மனமே பரு உடலை, உயிருடன் இணைக்கிறது. அதனால் உயிர், உடலுக்கே உழைக்கிறது. உடல் உயிரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். உண்மையில் உயிருக்காக இருக்கும் கூடு உடல். உயிருக்காக உடலைக் கவனி. உடலுக்காக உடலைக் கவனித்தால், உயிர் திரும்பித் திரும்பி உடலையே நாடும். மனிதன் ஒருவனுக்கே மீண்டும் உடல் எடுக்கா வாய்ப்பு உள்ளது. அப்படி அரிதாகப் பெற்ற உடலை வீண்டிப்பது கூடாது.  

இதனை ஈஸாவாஸ்ய உபநிஷத் (3), 

असुर्या नाम ते लोका अन्धेन तमसावृताः ।
तांस्ते प्रेत्याभिगच्छन्ति ये के चात्महनो जनाः ॥ ३ ॥

அசுர குண மடமையுடன் இருள் கொண்டு குருடரென
அகமுறை இறை உணர்வறியா ஆன்மக் கொலையாளிகள்

ஈஸாவாஸ்ய உபநிஷத் (3)

அல்லலெனும் மாசாம் பிறவிப் பிணி பெருவரே மூடரவர் என்று தன்னுடைய உடலைத் தான் எனக் கருதுபவது தற்கொலை என்பதைத் தெளிவாக கூறுகிறது. 

எனவே, உயிருடன் இணைந்த மனம் (தன்னுணர்வு) அழிய வேண்டும். அது அழிந்தால்தான், உயிர் உடலுடன் அடையாளம் கண்டுகொள்ள இயலாது.  அதற்கு மெய்யறிவு தேவை. மெய்யறிவிற்கு இன்றியமையாதது, இறையருள். இறையருளை நாடுவதே ஆன்மீகத்தின் முதல்படி.

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே – 

என்று உடலை வளர்ப்பதனை திருமந்திரம் கூறுகிறதே என திருமந்திரத்தை தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. 

திருமந்திரம் கூறும் உடம்பை வளர்க்கும் உபாயம், உடல் பரம்பொருளின் உறைவிடம் என்ற ஐயம் திரிபு அற்ற மன உறுதியுடன், நன்னெறி வழியில் உடலைப் பாதுகாப்பது என்பதே.

ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 7

ஸ்லோகம்

उत्पद्यापि स्मरहर महत्युत्तमानां कुलेऽस्मिन्
आस्वाद्य त्वन्महिमजलधेरप्यहं शीकराणून् ।
त्वत्पादार्चाविमुखहृदयश्चापलादिन्द्रियाणां
व्यग्रस्तुच्छेष्वहह जननं व्यर्थयाम्येष पापः ॥ ७॥

உத்பத்யாபி ஸ்மரஹர மஹத்யுத்தமாநாம் குலேঽஸ்மிந்
ஆஸ்வாத்ய த்வந்மஹிமஜலதேரப்யஹம் ஶீகராணூந் ।
த்வத்பாதார்சாவிமுகஹ்ருதயஶ்சாபலாதிந்த்ரியாணாம்
வ்யக்ரஸ்துச்சேஷ்வஹஹ ஜநநம் வ்யர்தயாம்யேஷ பாப: ॥ 7॥

தமிழாக்கம்

உயர்பண்பு நிறை பேர்குலமதனில் உதித்தும் 
உன் புகழ்கடலெழு நீர்த்திவலை அருந்தினும்
புலனின்ப நாட்டமதனால் உன்திருவடி தொழாப்
பாவியென அற்பங்களில் தினவுகொண்டு, அந்தகோ
பிறவிதனை வீணடிக்கின்றேனே, காமற்காய்ந்தனே !! 7

சொற்களின் பொருள்

ஸ்மரஹர – மன்மதனை (காமனை) அழித்தவனே, காமகோபன், காமற்காய்ந்தான்

அஸ்மிந் – இத்தகைய

மஹதி – மிகவும் உயர்ந்த

உத்தமாநாம் – பண்பட்ட

குலே – குலத்திலே 

உத்பத்யாபி – உத்பத்ய அபி – பிறந்திருந்த போதிலும் 

அஹம் – நான் 

த்வத் – உன்னுடைய

மஹிமஜலதே – மகிமைகளாகிய பெருங்கடலினுடைய 

ஶீகராணூந் – ஶீகர் அணூந் – சிறு திவலைகளை 

ஆஸ்வாத்ய அபி – அருந்திய போதிலும

இந்திரயாநாம் – இந்திரியங்களின்

சாபலாத் – சபலத்தால் (புலனின்ப நாட்டத்தால்) 

த்வத்பாதார்சாவிமுகஹ்ருதய – த்வத் பாத அர்சா விமுக ஹ்ருதய – உன் திருவடிகளை வழிபடுவதிலிருந்து விலகிய உள்ளம் படைத்தவனாய்

ஏஷ – இந்த 

பாப: – பாவியானவன்

துச்சேஷ் – அல்பமான விஷயங்களில்

வ்யக்ர: – பரபரப்புடைநவனாய்

ஜனநம் -பிறவியை 

வ்யர்தயாமி – வீணடித்துக் கொண்டிருக்கிறேன்

அஹஹ – அந்தோ ! 

பொருள் விளக்கம்

சிவபெருமானை, ஸ்மரஹர என்று அழைக்கிறார் தீக்‌ஷிதர். ஸ்மர என்றால் நினைத்தல். எல்லாராலும் எப்பொழுதும் நினைக்கப்படுவது காமம் (இனக் கவரச்சி, பாலுணர்ச்சி).  எனவே ஸ்மர என்பது காமனைக் குறிப்பது. ஸ்மர அரி என்பது காமத்தை அழிப்பது எனவாகும். மன்மதனை அழித்தவன் என்பது சொற்பொருளாயினும் இதன் கருப்பொருள் இவ்வாறு:

இந்த சொல், விஷயத் த்யானத்தைப் பற்றிய எச்சரிக்கை. இந்திரிய விஷயங்கள் பற்றிய முதல் எண்ணங்களை ஏற்காது, அந்த எண்ணங்கள் நுழையும்போதேஅவற்றைப் பகைவர்கள் என்று அறிகிறான் அறிவாளி. பொருளின்ப எண்ணங்கள், பொருட்களுடனான உறவை ஏற்படுத்தும். அந்த உறவு ஆசையில் அவாவில் தள்ளும். அவா எனும் காமத்தடையினால் கோபம் வரும். கோபம் வந்தால் புத்தி தடுமாறும். குழப்பம் ஏற்படும். குழப்பத்தினால் சாஸத்திரத்தில் கற்றது மறக்கும். கற்றது மறந்தால், புத்தியிருந்தும் பயனில்லை. பயனிலா புத்தியால் பிறவியால் பயனேதுமில்லை.

“ஸங்கஹ – காமஹ – க்ரோதஹ – ஸம்மோஹஹ – ஸம்ருதி விப்ரமஹ – புத்தி நாஸஹ – ப்ரநஸ்யதி” 

பற்று – ஆசை – கோபம் – மயக்கம் (பகுத்தறிவின்மை) – நினைவு தவறுதல் – புத்தியின் அழிவு – அழிவு (வாழ்வின் குறிக்கோளை அடையத் தகுதியற்றவனாகுவது) என்று ஒன்று மற்றொன்றை விளைவித்து, அழிவிற்கு இட்டுச் செல்வன. எனவே

விஷயத்யானம் ஸர்வ (புருஷார்த) அனர்த்த ஹேது: – புலனின்பப் பொருட்களை கண்ணுதல் மனிதப் பிறவியை வீணடித்துவிடும்.

தர்மானுஷ்டானம் விஷய க்ரஹனம் ப்ரஸாத ஹேது: – முறையான அறவழியில் செல்கின்ற புலனின்ப நுகர்ச்சி, உள்ளத்தைத் தெளிவுபடுத்திப் புலனின்பங்களிலிருந்து நம்மை விடுவிப்பதைக் குறிப்பது. இதற்கு “பொறிவாயில் ஐந்தவித்தான்” என்ற குறள் சொல் மிகப் பொருத்தமானது.

ஆக, ஸ்மர ஹரி என்று இறைவனை அழைப்பது, என்னுடைய காமத்தையும் அழித்திடுவாய் என்ற பிராரத்தனை.

“இந்திரியாநாம் சாபலாத் த்வத்பாதார்சாவிமுகஹ்ருதய” என்ற சொற்றொடர்,

“மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய” என்றும், “இந்திரிய வயமயங்கி இறப்பதற்கே காரணமாய்” என்றும் மாணிக்கவாசகர்

கூறுவதிற்கு ஒப்பு.

இந்திரிய கட்டுப்பாடில்லை என்றால் “பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்கு” என்று மாணிக்கவாசகர்  கூறும் புலையனாவோம் நாம் என்பதை ஆத்ம நிந்தனை மூலம் நமக்கு எடுத்துரைத்து, பொய்மையைப் பெருக்காதே என்று அறிவுரைக்கும் ஸ்லோகம் இது.

ஸ்லோகத்தின் உட்கருத்து

இந்த ஸ்லோகம் “ஆத்ம நிந்தை” – தன்னுடைய குற்றங்களைக் கூறுதல் என்ற வடிவில் அமைந்துள்ளது. இத்தகைய ஸ்லோகங்கள் மூலம் நாம அறிவது, அரிதாகப் பெற்ற இப்பிறவியின் மூலம் நமக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடக் கூடாது. இடைவிடாது இறைவன் நாமத்தில் நிலைத்திட வேண்டும் என்று முந்தைய இரு ஸ்லோகங்களில் கூறப்பட்ட கருத்து இந்த ஸ்லோகத்திலும் வலியுறுத்தப்படுகிறது. 

பெறுதற் கரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற் கரிய பிராணடி பேணார்
பெறுதற் கரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற் கரியதோர் பேறிழந் தாரே!!  

திருமந்திரம் (2090)

“ஸம்ப்ராப்தே, ஸந்நிஹிதே காலே, நஹி நஹி ரக்‌ஷதி டுக்ருங்கரணே”  என்கிறார் ஆதி சங்கரர், பஜ கோவிந்தத்தில்.

ஏன் இறைவன் நாமத்தை சொல்ல வேண்டும் என்ற கேள்வி எழலாம். இறைவனே இதற்கு பகவத்கீதையில் 8வது அத்தியாயத்தில் பதில் அளிக்கிறார்:

अन्तकाले च मामेव स्मरन्मुक्त्वा कलेवरम् ।
यः प्रयाति स मद्भावं याति नास्त्यत्र संशयः ॥८- ५॥
அந்தகாலே ச மாமேவ ஸ்மரந்முக்த்வா கலேவரம் | 
ய: ப்ரயாதி ஸ மத்³பா⁴வம் யாதி நாஸ்த்யத்ர
ஸம்ஸ²ய: ||

பகவத் கீதை 8.5

இறுதிக் காலத்தில் உடம்பைத் துறந்து எனது நினைவுடன் இறப்போன் எனதியல்பை எய்துவான். இதில் ஐயமில்லை என்கிறான் கண்ணன்.

இறைவாக்கு பொய்யாகுமோ?