நாராயணீயம் தசகம் 5 – அண்டப் பரிணாமம் – ஆன்மீக கண்ணோட்டம் – பகுதி 2 – அடிப்படை கொள்கைகளும் தேவைகளும்.

முக்கிய அறிவிப்பு

இந்த பதிவு, நிச்சயமாக அண்டத்தின் படைப்பைப் பற்றி ஆன்மீகம் என்ன சொல்கிறது என்பது பற்றிய முழுமையான விளக்கம் அல்ல. அண்டத்தின் படைப்பை பற்றிய ஆன்மீக விளக்கங்களிலிருந்து நான் புரிந்து கொண்ட ஒரு மேலான கண்ணொட்டத்தின் வடிவே இது.

நாராயணீயம் தசகம் ஐந்தினை சரியாக புரிந்து கொள்வதே நமது குறிக்கோள். அதற்கு தேவையான புரிதலை நமக்கு அளிக்கவே இந்த பதிவுகள் என்பதை நாம் மனதில் நிலைநாட்ட வேண்டும். இதனை முந்தைய பதிவான நாரயணீயம் முகவுரையிலேயே அடியேன் குறிப்பிட்டிருந்தேன் என்பதையும் நினைவுகூறுக.

இந்த விஷயத்தில் ஆழ்ந்து அறிய விரும்பினால், தங்களது குருவினை அணுகி, இவற்றைக் கற்றுக் கொள்ளுமாறு வாசகர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இதுவரை அறிந்தது

நமது முன்னோர்களான ரிஷிகளும், முனிவர்களும் அவர்கள் இருந்த காலகட்டத்திற்கேற்ப, ஆழ்ந்த தியானங்களின் மூலம், "காரணமற்ற காரணத்தில்" கவனம் செலுத்தி உள்நோக்கி சிந்தித்து, அந்த "காரணமற்ற காரணத்தை"  "பிரம்மன், பரமன்", "ஆன்மா", “பரம்பொருள்” என்று அழைத்தனர். 

அந்த "பிரம்மன்" என்பது "நிறையும் ஆற்றலும்” அதாவது “இருப்பும் உணர்வும்” (matter & energy or existence & consciousness)கொண்ட ஒரே ஒரு தூய்மையான, எங்கும் நீக்கமற நிறைந்த, அழிவிலா நித்திய பேரின்பமான இறுதி உண்மையெனும் தத்துவம் என்றும் கூறினர்.

நம்மைக் கடந்தும், நமக்கு உள்ளும் இருந்து கொண்டு, “இல்லாதது ஒன்றில்லை எல்லாமே நான்” என்று சொல்லாமல் சொல்லி வைத்து, நமது கருத்தியல் அறிவாற்றலில் (In our conceptual cognition), நாம் பொறிபுலன் கொண்டு, கண்டு அனுபவிக்கும் அடிப்படை அம்சங்களாக தன்னை வெளிப்படுத்துகிறது என்று முந்தைய பதிவினில் கண்டோம்.
இந்தப் பதிவினில் அந்த தத்துவ வெளிப்பாட்டின் பரிணாமத்தை நாம் அறிந்து அனுபவிப்பதற்கான அடிப்படை கொள்கைகளையும், தேவைகளையும் புரிந்து கொள்ள முயல்வோம்.

அடிப்படை கொள்கைகள்

நமது ஸநாதன தர்மத்தில், அண்டப் பரிணாமத்தைப் பற்றிய உள்நோக்கிய ஆய்வு, அடிப்படையில் மூன்று அடுக்கு நிலைகளில் புரியப்பட்டது. அவைகள் முறையே:

1. அதி உயர் நிலையான “காரண நிலை” ஆய்வு
2. நுண்நிலை ஆய்வு
3. பருநிலை ஆய்வு

இந்த மூன்று நிலை ஆய்வு, முந்தைய பதிவில் கூறியது போல, ஆராய்பவரின் ஆன்மீக சிந்தனை வளர்ச்சியைப் பொறுத்தது.

இந்த மூன்று-அடுக்கு ஆராய்ச்சியானது சில அடிப்படை அனுமானங்களைக் கொண்டிருந்தது. காலப்போக்கில் எந்தவிதமான மறுப்பும் இல்லாத நிலையில் இந்த அனுமானங்கள் ஊர்ஜிதப்படுத்தப்பட்டு, அடிப்படைக் கோட்பாடுகளாகியது. அவைகள் முறையே:

1. நமது மறைகள், படைத்தல், காத்தல், அழித்தல் என்று மூன்று கட்ட செயல்முறைகளாக உள்ளது பரிணாமம் என்று கூறுகிறது. இந்தப் பரிணாமம், ஆதி அந்தமிலா நீக்கமற நிறைந்த பரம்பொருளுலிருந்தே உருவாகுகிறது. இந்த அண்டமும் அப்படியே. இது உயர்நிலை ஆய்வின் அடிப்படை கோட்பாடு.

2. உருவாக்குதல் எனும் படைத்தல் ஒரு நிகழ்வு அல்ல. இது பரிணாமத்தில் ஒரு செயல்முறை. (Creation is not an event; it is a process of evolution ). உருவாக்கம் என்பது, இல்லாத ஒன்றை இருப்பு உள்ளதாக்குவதில்லை (can’t create something out of nothing) . படைத்தல் என்பது விதையில் அடங்கிய மரம் போல செயலின்றி உறைந்தோ, மரத்தை மறைக்கும் மாமதயானை போல வேறு வடிவிலோ இருப்பாகி உள்ளவற்றை வெளிப்படுத்துவதை மட்டுமே குறிக்கும். ஆக அடிப்படையில் உருவாக்கம்/படைத்தல்/ஆக்கல் என்றெல்லாம் கூறும் போது நாம் கூறுவது வெளிப்பாடைத்தான். இதுபோலத்தான் அழித்தலும் ஒரு செயல்முறையே.

3. பொருளையோ, ஆற்றலையோ ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்று இன்றைய அறிவியல் சிந்தனை (law of conservation of matter and energy) பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்களின் சிந்தனைக்கு அடிப்படை கொள்கையாக இருந்தது. இவையிரண்டும் நுண்நிலை ஆய்வின் முடிவுகள்.

நடைமுறையில், பருநிலை ஆய்வில், எளியோருக்கும் புரியும்படி, ஒவ்வொரு செயல்முறைக்கும் ஒரு அதிபதியை புராணங்கள் வாயிலாக கோடிட்டுக் காட்டினர் நமது ரிஷிகளும், முனிவர்களும், ஞானியர்களும். படைத்தலுக்கு நான்முக கடவுளான பிரம்மா, காத்தலுக்கு நாராயணன் எனும் விஷ்ணு, அழித்தலுக்கு ருத்ரன் எனும் சிவன் என்று நமது புராணங்கள் உரைக்கின்றன.

அடிப்படை தேவைகள்

மேற்கூறிய அடிப்படை அனுமானங்கள்/கொள்கைகள்/கோட்பாடுகளுடன் கூடிய அவர்களின் ஆய்வுகளிலிருந்து, எந்தவொரு உருவாக்கத்திற்கும் (வெளிப்படுத்துதல்) அடிப்படையாக மூன்று தேவைகளை உறுதிப்படுத்துகின்றன. அவைகள்:

1. அறிவு காரணம் - இதனை வடமொழியில் நிமித்த காரணம் என்பர். இது, யாருடைய செயல்பாட்டினால் உருவாக்கம் ஏற்படுகிறதோ, யாருடைய செயலற்ற தன்மையால் உருவாக்கம் ஏதும் இல்லையோ, அதனைக்குறிப்பது. உருவாக்க நாயகன் என்று வேண்டுமானால் இக்காரணத்தை அழைக்கலாம்.

2. பொருள் காரணம் - இதனை வடமொழியில் சாதாரண காரணம் என்பர். இது உருவாக்கத்திற்கு வேண்டிய மூலப்பொருளை குறிப்பது. இந்த மூலப்பொருள் இல்லையென்றால், படைப்பு எனும் வெளிப்பாடு ஏதும் இல்லை.

3. பொது காரணம் - இதனை வடமொழியில் உபாதன காரணம் என்பர். இது உருவாக்கத்திற்கு வேண்டிய கருவிகள், உபரிப்பொருடகளைக் குறிக்கும்.

இந்த மூன்று தேவைகளை, சற்று விரிவாக காணலாம்.

அறிவு காரணம் (நிமித்த காரணம்)

படைப்பு என்பது பரம்பொருளான பிரம்மனின் வெளிப்படுத்த வேண்டும் என்ற விருப்பமே, அறிவு காரணம். எல்லாம் அவன் நடத்தும் நாடகம். அவனின்று ஓர் அணுவும் அசையாது. அறிவியல் விளக்கத்தில் இதனைப் பாரத்தோம் அல்லவா. பேரியக்கத்திற்கு முதலில் அனைத்தும் ஒருமை நிலையில் இருந்து; பின்னர் திடீரென ஏதோ நடந்தது, அண்ட விரிவாக்கம் ஏற்பட்டது என அறிவியல் விளக்குகிறது. அந்த “திடீர் நிகழ்வே” அந்த பரம்பொருளின் இச்சை - ப்ரம்மனின் ஸங்கல்பம். சுவாமி சிவானந்தரின் வார்த்தைகளில், "ஏகோஹம் பஹுஷ்யாமி - ஒருமையாகிய நான் பன்மையாக வேண்டும் என்ற உணர்வலையின் அதிர்வு. அந்த அதிர்வுதான் அறிவு காரணம். நிலத்தடியில் உள்ள விதை, முளைப்பதற்குமுன் அடையும் வீக்கத்திற்கு ஒப்பு இது”.

பொருட் காரணம் (சாதரண காரணம்)

பிரம்மனின் இச்சையெனும் மேற்கூறிய தூய உணர்வலையின் விவரிக்க இயலா மாயையான சக்தி - இதனை மூலப்ரக்ருதி, அவ்யக்தா, மாயா, குணஸம்யா என்றெல்லாம் வடமொழியில் கூறுவர். மிகப்பழமையான இந்த அறிவாற்றல் அல்லாத சக்தி, மூன்று குணங்களைக் கொண்டது - சாத்விக, ரஜ, தாமஸ குணங்கள் (உணர்வு, செயல் மற்றும் செயலற்ற தன்மைக்கு ஒத்தவை); நற்குணம், அரச குணம், அறியாமை/மடமை குணம் என்றும் கூறலாம்.

இந்த முக்குண மாயை சூட்சும நிலையில் விதையில் அடங்கிய மரத்திற்கு ஒப்பியது. இதனைத்தான் அவ்யக்தம் எனும் வடமொழிச் சொல் என்கிறது. ஆழ்உறக்க (ஸுஷுப்தி என்பர் சமஸ்க்ருதத்தில்) நிலையில் அசைவிலா/அதிர்விலா நிலைதனில் மேற்கூறிய மூன்று குணங்களும் சமநிலையில் இருக்கும். இந்நிலையை ப்ரளய நிலை என்றும் கூறுவர். (ப்ரளயம் என்பதை அடுத்து வரும் பதிவில் காணலாம்) அதனால் தான், மாயையை குண ஸம்யதா என்று ஸமஸ்க்ருதத்தில் கூறுவர்.

இந்த மாயை எப்போது உருவாக்கப்பட்டது என்று யாருக்கும் தெரியாது, எனவே அது அநிர்வச்சனியம் அல்லது விவரிக்க முடியாதது என்றும் கூறுவர். பரம்பொருளைப் போல மாயையும் ஆதி அந்தமில்லாதது. அறிவிலா ஜடமான இந்த மாயை உருவாக்கப்பட்டதல்ல. பரம்பொருளைச் சார்ந்து இருப்பது. அதற்கென்று அறிவாற்றல் ஏதும் இல்லை. பரம்பொருளை அறியும் மெய்யறிவு கிட்டினால், மாயை மறைந்து விடும் என்றெல்லாம் ஆய்ந்து கண்ட நமது ரிஷிகள, இந்த மாயைதான் பொருட் காரணம் என்று தமது ஆய்வில் கண்டனர்.

பொது காரணம் (உபாதன காரணம்)

பொது காரணம் என்பது இடம், காலம் இவற்றை உள்ளடக்கியது. இது அழியா இடம், காலத்தைக் (eternal space and eternal time) குறிக்கும். உலகில் நடக்கும் எந்தவொரு படைப்புக்கும் இது பொருந்தும். படைத்தல், காத்தல், அழித்தல் என்ற செயல்முறைகளின் சுழற்சியே பரிணாமம் என்று ஆய்ந்து அறிந்த நமது ரிஷிகள், சுழற்சி பரிணாமத்தைப் பற்றி நாம் பேசும்போது, அழியா இடம், காலம் என்ற கொள்கை அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்தார்கள். அவர்கள் பின்னர் "காலம்" என்பதை வரையறுத்து அதனை விவரித்தனர். அண்டப்பரிணாமத்தை பிரம்மாவின் ஆயுட்காலத்துடன் இணைத்தனர்.

(கீழே உள்ள படங்களைப் பார்க்கவும்)

காலமும் நேரமும்

முடிவுரை

அண்டப் பரிணாமத்தின் ரகசியம் அதனுள் வாழும் உயிரினங்களுக்குள்ளேயே உள்ளது. பதஞ்சலியின் கூற்றுப்படி, "பரிணாமம் வேண்டும்" என்ற இச்சையே பரிணாம வளர்ச்சிக்குக் காரணம் (யோக சூத்திரங்கள், IV. 2. 3). பருநிலையில், நடைமுறையில், இதனை தடைகளனைத்திலுமிருந்து விடுதலை பெற்று, முழு ஆற்றலையும் உணர வேண்டும் என்ற நமது இச்சைக்கு ஒப்பிடலாம். எனவே, பரிணாமம் என்பது ஒரு குருட்டுத்தனமான தற்செயலால் ஏற்படவில்லை -  உள்ளார்ந்த தூய்மையான, சுதந்திரமான மற்றும் முழுமையான சுயத்தின் உண்மையான தன்மையை உணர, உயிரினத்தின் உள்ளார்ந்த தூண்டுதலே பரிணாம வளர்ச்சியின் மூலம் என்று கொள்ளலாம்.

கோழிக்குள் முட்டை வைத்து, முட்டைக்குள் கோழி வைத்து, பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆளும் பரம்பொருளே அந்த உள்ளணுர்வுத் தூண்டுதல். அந்தப் பரம்பொருளின் தூய இருப்பே அண்டத்தை ஒளிர வைக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கை நமது சிந்தனை மற்றும் வாழ்வின் முக்கிய அம்சமாக இருந்து வருகிறது. உருவமற்ற பிரம்மன் மாயையினால் பல்வேறு வடிவங்களை எடுக்கிறது.

நமது வேதாந்தத்தில் இயற்கைக்கு ஒரு ஆன்மீக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அது ஒரு பொருள்சார்ந்த விளக்கம் அல்ல. இயற்கையானது தன்னைத்தானே பரிணாமம் செய்துகொள்வது; அந்த பரிணாமத்தின் சாராம்சமாகவும் ஆதாரமாக இருப்பதும் ஆதி அந்தமிலா, நீக்கமற நிறை பரம்பொருளே என நமது மறைகள் கூறுகின்றன. இயற்கை அன்னை அந்தப் பரம்பொருளின் வெளிப்பாடு. கடலின் அலைகள், நெருப்பின் வெப்பம், மலரின் மணம், மண்ணின் வாசனை என வாழ்வில் நமக்கு அந்த வெளிப்பாடுகள் பல வகைகளில் இருக்கும்.

தன் இச்சைப்படி தன்னுள் இருக்கும் திரவத்தைக்கொண்டு அழகிய வலைதனைப்பிண்ணி, தன்னிச்சைப்படி அதனை தன்னுள்ளே இழுத்துக் கொள்ளும் சிலந்திப்பூச்சி போல, உயிரும் உணர்வும் கொண்ட மானிடரின் உடலில் உயிரற்ற ஜடப்பொருட்களான நகங்களும் முடிகளும் வளர்வது போல, அண்டத்தில் எண்ணற்ற வெளிப்பாடுகள் அந்த பரம்பொருளின் அருளினால்.

இந்த அடிப்படை கோட்பாட்டினை நாம் நன்கு உணர்ந்தால்தான், அண்டப்பரிணாமத்தை நாம் அறிந்துணர முடியும்.

அடுத்து வரும் பதிவுகளில், அண்டப்பரிணாம செயல்முறைகளை காணலாம்.

இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!

நாராயணீயம் தசகம் 5 – அண்டப் பரிணாமம் – ஆன்மீக கண்ணோட்டம் – பகுதி 1 – மந்திரவாதியும் மந்திரக் காட்சியும்.

ஶ்ரீ குருவாயூரப்பன்
முக்கிய அறிவிப்பு

இந்த பதிவு, நிச்சயமாக அண்டத்தின் படைப்பைப் பற்றி ஆன்மீகம் என்ன சொல்கிறது என்பது பற்றிய முழுமையான விளக்கம் அல்ல. அண்டத்தின் படைப்பை பற்றிய ஆன்மீக விளக்கங்களிலிருந்து நான் புரிந்து கொண்ட ஒரு மேலான கண்ணொட்டத்தின் வடிவே இது.

நாராயணீயம் தசகம் ஐந்தினை சரியாக புரிந்து கொள்வதே நமது குறிக்கோள். அதற்கு தேவையான புரிதலை நமக்கு அளிக்கவே இந்த பதிவுகள் என்பதை நாம் மனதில் நிலைநாட்ட வேண்டும். இதனை முந்தைய பதிவான நாரயணீயம் முகவுரையிலேயே அடியேன் குறிப்பிட்டிருந்தேன் என்பதையும் நினைவுகூறுக.

இந்த விஷயத்தில் ஆழ்ந்து அறிய விரும்பினால், தங்களது குருவினை அணுகி, இவற்றைக் கற்றுக் கொள்ளுமாறு வாசகர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அண்டத்தின் படைப்பை பற்றிய ஆன்மீக விளக்கங்களின் சாரத்தை ஒரே பதிவில் எழுதுவது, வேதாந்தத்தில் ஆரம்ப நிலை மாணவனாக உள்ள எனக்கு இயலாத காரணம். ஆகையினால் இதனை பல சிறு பகுதிகளாகப் பிரித்து பதிவுகளை வெளியிடுகிறேன் உங்கள் அனுமதியுடன். இதோ முதல் பகுதி.

மந்திரவாதி

அறிவியல் கண்ணோட்டத்தின் ஒரு பகுதியாக, முந்தைய வலைப்பதிவில், உருவாக்கப்பட வேண்டிய அவசியமின்றி படைப்பை உருவாக்கும் "மந்திரவாதி" யார் என்பதை புரிந்துகொள்ள முயன்றோம். அந்த முயற்சியில் முக்கிய கேள்விக்கு விடை ஒன்றும் இல்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பேரியக்கமெனும் “பிக் பேங்கிற்கு” (Big Bang) முன்பான "காரணமற்ற காரணத்தை" அறிவியல் இன்றும் அறியவும் இல்லை, அதற்கேற்ற விளக்கமும் தரவில்லை.

ஆகையினாலே, பொறி புலன்களால் அறியும் காரணமில்லாமல் எந்தக் காரியமில்லை (விளைவு) என்ற கோட்பாடு ஒன்றில் மட்டுமேலேயான திடமான நம்பிக்கை, பொருள் சார்ந்த பொறி புலன் துணைகொண்ட புற நோக்கு என்று இரண்டு முக்கிய வரையறுகளுக்குள் உட்பட்ட அமைப்புகளுக்கு வெளியே நாம் பார்க்க வேண்டும் என்பதையும் நாம் புரிந்துகொண்டோம்; ஏனெனில் அந்த காரண - விளைவு அமைப்புகளுக்குள், "காரணமற்ற காரணம்" என்பது நினைத்துப் பார்க்க முடியாதது. மேலும், நிறை -ஆற்றல் (matter & energy), அதன் விளைவுகள் இவைகளைக் கடந்து இருப்பு-உணர்வு (existence & consciousness) என்ற இரண்டையும் கொண்ட "ஏதாவது" ஒன்றை நாம் அறிய வேண்டும் என்றும்முந்தைய பதிவில் கண்டோம். ஆக, அறிவியலுக்கு அப்பால் நாம் பார்க்க வேண்டும் என்பதே இதன் பொருள்.

நமது முன்னோர்களான ரிஷிகளும், முனிவர்களும் அவர்கள் இருந்த காலகட்டத்திற்கேற்ப, பொறி புலன்களைக் கட்டுப்படுத்தி, ஆழ்ந்த தியானங்களின் மூலம், விரிவாக இயற்கையின் இயல்பினை அறிந்து, நாம் புரியும் வினைகளையும் வினைப்பலன்களையும் தரவுகளாக கொண்டு, அந்த "காரணமற்ற காரணத்தில்" கவனம் செலுத்தி உள்நோக்கி சிந்தித்து, அதற்கேற்றபடி வாழ்ந்து, வழிமுறைகளையும், அனுபவங்களையும் தமது சீடர்களுக்கு எடுத்துரைத்தனர்.

அந்த "காரணமற்ற காரணத்தை" அவர்கள் "பிரம்மன், பரமன்", "ஆன்மா", “பரம்பொருள்” என்று அழைத்தனர். அந்த "பிரம்மன்" என்பது "நிறையும் ஆற்றலும்” அதாவது “இருப்பும் உணர்வும்” (matter & energy or existence & consciousness)கொண்ட ஒரே ஒரு தூய்மையான, எங்கும் நீக்கமற நிறைந்த, அழிவிலா நித்திய பேரின்பமான இறுதி உண்மையெனும் தத்துவம் என்று கூறினர்.

அந்த தத்துவத்தை பொருள் சாரந்த பொறி புலன்களால் விவரிக்க இயலாது. எனவே, நமது மறைகள் அந்த தத்துவத்தை, இது இல்லை, இது இல்லை, இவைகள் அல்ல என்றெல்லாம் விவரிக்கின்றன.

“கண்ணுக்குத் தெரியாதது, சிந்திக்க முடியாதது, பரம்பரை இல்லாதது, எந்த வகைப்பாடும் இல்லாதது (வர்ணம்), கண்கள் மற்றும் காதுகள் இல்லாதது, கைகள் மற்றும் கால்கள் இல்லாதது, மற்றும் நித்தியமானது, எங்கும் நிறைந்தது, மிகவும் நுட்பமானது மற்றும் அழியாதது” என்கிறது முண்டக உபநிஷதம்

முதலும் முடிவும் இல்லா நீக்கமற நிறைந்த அந்த நித்ய உண்மையே அனைத்து உயிரினங்களுக்கும் ஆதாரமாக இருக்கிறது. எனவே, அந்த இறுதி உண்மை எனும் பிரம்மன்/பரம் பொருளை - “தத் ஏகம்” - வகைப்படுத்த முடியாது.

அது குணங்கள் இல்லாதது, எதிர்மறையானவை கூட. நம்மைக் கடந்தும் நமக்கு உள்ளும் உறைவது. எந்தவொரு விளக்கத்தையும் அதற்குப் பயன்படுத்துவது, வரம்பற்றதைக் கட்டுப்படுத்துவதாகும். “விலையில்லா சொல்லாத சொல்” அது.

அந்தப் பரம்பொருளே மந்திரவாதி.

மந்திரக் காட்சி

பரம்பொருளான பிரம்மம் என்பது தூய பேரின்ப நிலையில், எல்லாவற்றிலும் தன்னை அறியும் தூய இருப்பாய், தூய உணர்வாய் உறைந்திருப்பது. ஆயினும்கூட, படைப்பிற்கு முந்தையதாகக் கருதப்படும் அத்தகைய நிலையை விவரிக்க முயன்ற பிறகு, வேதங்கள் இவை அனைத்தும் ஒரு யூகமே என்று தாழ்மையுடன் ஒப்புக்கொள்கிறது; ஏனென்றால் மனித அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை உறுதியாகக் கூற முடியாது. 

அப்படிப்பட்ட முடிவிலா முழுமையை, மனித அறிவு கொண்டு தீர்மானிக்க முடியாது என்றாலும், அந்த உன்னத பரம்பொருள் மனிதர்களின் உள்ளுணர்விலே தன்னைத்தானே தீர்மானிக்கின்றது; அதாவது தன்னைத் தானே வெளிப்படுத்துகிறது. இதுதான் புரியா புதிராக இருக்கும் மந்திரக் காட்சி.

எப்படி தன்னைத்தானே வெளிப்படுத்துகிறது பரம்பொருள் என்ற கேள்வி எழுகின்றது அல்லவா.

நமது கருத்தியல் அறிவாற்றலில் (In our conceptual cognition), நாம் பொறிபுலன் கொண்டு, கண்டு அனுபவிக்கும் அடிப்படை அம்சங்களாக முன்வைத்து தன்னை வெளிப்படித்திக்கொள்கிறது அந்த பரப்ரம்மம்.

அதாவது கவிஞர் கண்ணதாசனின் வார்த்தைகளில் “நம்மைக் கடந்தும், நமக்கு உள்ளும் இருந்து கொண்டு, கோழிக்குள் முட்டையை வைத்து, முட்டைக்குள் கோழியை வைத்து, சிறு விதையில் பெரு தருவினை வைத்து, இல்லாதது ஒன்றில்லை எல்லாமே நான் என்று சொல்லாமல் சொல்லி வைத்து” நமக்கு அந்த தத்துவத்தைப் புரிய வைக்கிறது.

ஆன்மீகத்தில் நாம் கண்டு அனுபவிக்கும் நிலையைப் பொறுத்து நமக்கு நிர்குணப் பரப்ரம்மனெனும் பரம்பொருளாகவோ, சகுணப்ரம்மனெனும் ஈசனாகவோ, உற்ற தேகத்து உயிரான சீவனாகவோ, உயிரை மேவிய உடலாகவோ வெளிப்படுகிறது.

முடிவுரை

இப்படி காட்சிகள் பல கொடுக்கும் அத்தத்துவம்தான் இவ்வுலகை ஆளும் மந்திரவாதி. அதனைத்தான் நாம் கடவுள் என்கிறோம்.  அதனைத்தான் நாராயண பட்டத்ரி ஶ்ரீ குருவாயூரப்பன் வடிவிலே காண்கிறார்.

எனவே நாராயணீயத்தில் ஶ்ரீ குருவாயுரப்பன் என்று நாராயண பட்டத்ரி உரைக்கும் பொழுது, அது ஆதி அந்தமிலா பேரின்ப நிலையில் நீக்கமற நிறைந்திருக்கும் தூய உணர்வினைக் குறிக்கும் என்பதை மனதில் நாம் நிலைத்திட வேண்டும்.

இந்த தத்துவத்தைத்தான் ஆதிசங்கரர், ஶ்ரீதட்சிணாமூர்த்தி வடிவில் கண்டு கீழ்காணும் ஸ்லோகத்தில் எடுத்துரைத்தார்
தட்சிணாமூரத்தி ஸ்தோத்திரம் – 2
இனி அந்த மந்திரவாதி புரியும் மாயாஜாலக் காட்சிகளை நாம் அடுத்த பதிவுகளில் காணலாம்
இறையருள் பெருக. வளமுடன் வாழ்க!

நாராயணீயம் தசகம் 5 – அண்டப் பரிணாமம் – அறிவியல் கண்ணோட்டம் – பேரியக்க கோட்பாடு (Big Bang Theory)

முக்கிய அறிவிப்பு

கீழே உள்ள இந்த பதிவு, நிச்சயமாக அண்டத்தின் படைப்பைப் பற்றி விஞ்ஞானம் என்ன சொல்கிறது என்பது பற்றிய முழுமையான விளக்கம் அல்ல. அண்டத்தின் படைப்பை பற்றிய விஞ்ஞான விளக்கங்களிலிருந்து நான் புரிந்து கொண்ட ஒரு மேலான கண்ணொட்டத்தின் வடிவே இது.

நாராயணீயம் தசகம் ஐந்தினை சரியாக புரிந்து கொள்வதே நமது குறிக்கோள். அதற்கு தேவையான புரிதலை நமக்கு அளிக்கவே இந்த பதிவுகள் என்பதை நாம் மனதில் நிலைநாட்ட வேண்டும். இதனை முந்தைய பதிவான நாரயணீயம் முகவுரையிலேயே அடியேன் குறிப்பிட்டிருந்தேன் என்பதையும் நினைவுகூறுக.

இந்த விஷயத்தில் ஆழ்ந்து அறிய விரும்பினால், சம்பந்தப்பட்ட தொழில்முறை வழிகாட்டி/ஆசிரியரை அணுகி, இவற்றைக் கற்றுக் கொள்ளுமாறு வாசகர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

முகவுரை

“கடவுளே! இது என்ன அதிசயம்! இது எப்படி சாத்தியம்? இதன் பின்னால் உள்ள ரகசியம் என்ன?”

ஒரு மந்திரவாதியின் காட்சிகளைக் கண்டு உலகம் முழுவதும், வயது வித்தியாசமின்றி நாம் கூறும் வார்த்தைகள், அல்லவா! ஏன் இப்படி வியக்கிறோம்? எதற்கு இந்த ஆர்வம்?

ஏனெனில், நாம் காணும் அந்த காட்சிகள், எந்த காரணமும் வெளிப்படையாக இல்லாத நிகழ்வுகளை இணைத்து நமக்கு ஒரு புது நிகழ்வாக தோற்றமளித்தாலும், அந்த தோற்றத்தின்பின் ஒரு மறைக்கப்பட்ட காரணம் இருப்பதாக நாம் நம்புவதனால் தான். அதாவது, காரணமில்லாமல் எந்த காரியமுமில்லை என்றும் காரண-காரிய(விளைவு) உறவு என்ற ஒன்றினை நாம் உறுதியாக நம்புவதாலும் தான்.

அதுபோல, இப்புவியில், பிறந்தது முதல் இறுதி வரை மனிதன் அறிய ஆவலாக இருக்கும் மிகப் பெரிய மந்திரக் காட்சி எது தெரியுமா? அந்த மிக முக்கியமான மாயாஜால உண்மைதான் "அண்டமும் அதன் படைப்பும்".

“இந்த பூமிக்கு எப்படி வந்தோம்?
இந்த பிரபஞ்சம் எப்படி உருவாக்கப்பட்டது?
இந்த பிரபஞ்சத்தை உருவாக்கிய மந்திரவாதி யார்?
அது எப்போது உருவாக்கப்பட்டது?
இது எங்கு உருவாக்கப்பட்டது, ஏன் உருவாக்கப்பட்டது? உருவாக்கம் மாயாஜால குழப்பத்தின் விளைவா அல்லது இதற்குப்பின் ஏதாவது ஓரு அறிவியல் செயல்முறை உள்ளதா? படைப்பிற்கு முன் என்ன இருந்தது?”

என்றெல்லாம் ஆர்வமிக்க கேள்விகளுக்கு விடைகள் காண முயல்கிறோம் நாம். ஆழ்ந்து நோக்கின், தன்னைப் பற்றி அறிந்து கொள்ள முயலும் உள்நோக்கிய பயணத்தின் வடிவங்களே இக்கேள்விகள் அனைத்தும்.

இக்கேள்விகளுக்கு இன்றைய விஞ்ஞான உலகத்தில், அறிவியல் ரீதியான விளக்கத்தை இப்போது அறிய முயலுவோம்.

பேரியக்க கோட்பாடு – ஒரு சுருக்கம் (Big Bang Theory in a nutshell)

அறிவியலை அடிப்படையாகக் கொண்ட பல கோட்பாடுகள் (theories) அண்டத்தின் படைப்பை பற்றி உள்ளன. தேவையான அனுமானங்கள் (assumptions), உருவகங்கள் (simulations), மாதிரிகள் (models), சமன்பாடுகள் (equations), ஊர்ஜிதங்கள் (validations) ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொன்றும் தங்களின் கோட்பாடுகளை வலுப்படுத்தி வெளிப்படுத்துகின்றன. அத்தகைய கோட்பாடுகளில் மிகவும் பிரபலமான, முதன்மையான அறிவியல் விளக்கமே பெரு இயக்க கோட்பாடு (big bang theory) ஆகும். பலர் அதனை பெரு வெடிப்பு கோட்பாடு என்றும் கூறுகின்றனர்.

இந்த கோட்பாடை எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் “ நமக்குத் தெரிந்த இந்த பிரபஞ்சம், அளவிலா வெப்பம் அடங்கிய, அளவிலா அடர்த்தியான ஒற்றைப் புள்ளியுடன் தொடங்கியது. அது பின்னர் முதலில் கற்பனை செய்ய முடியாத வேகத்திலும் பின்னர் அளவிடக்கூடிய விகிதத்திலும் அடுத்த 13700 கோடி (13.7 billion) ஆண்டுகளாக தொடர்ந்து, இன்றும் கூட விரிவடைந்து கொண்டு வருகிறது” என்று கூறலாம்.

அதாவது, சுமார் 13700 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இந்த அண்டமெனும் முழு பிரபஞ்சத்தில் அடங்கிய அனைத்தும், எல்லையற்ற அடர்த்தியும் வெப்பமுமாக வரையறுக்க முடியா ஒரு சிறு புள்ளியெனும் ஒருமையில் ஒடுக்கப்பட்டிருந்தது. அது திடீரென்று, ஒரு வெடிப்பென விரியத் தொடங்கி, ஒளியின் வேகத்தை விட வேகமாக நமது பிரபஞ்சத்தை வெளிப்புறமாக காற்றடைத்த பலூன் போன்று விரியச் செய்தது. இந்த அண்ட வீக்கம், காலத்தின் அளவில் ஒரு நொடியின் சில பகுதிகள் மட்டுமே நீடித்தது.

இந்த அண்ட விரிவாக்கம் திடீரெனவும் இன்றும் மர்மமாக உள்ள முடிவுக்கு வந்தபோது, இந்த பேரியக்கத்தின் உன்னதமான விளக்கங்கள் விஞ்ஞானிகளுக்கு புரியத்தொடங்கின.

அண்ட விரிவாக்க முடிவில், நிறையெனும் பொருள் (matter) மற்றும் ஆற்றல் (energy) எனும் கதிர்வீச்சு வெள்ளம் ஏற்பட்டு, இன்று நமக்குத் தெரிந்த துகள்கள், அணுக்கள், நட்சத்திரங்கள், விண்மீன் திரள்கள் மாறும் பல பொருட்களுடன் நமது பிரபஞ்சத்தை நிரப்பத் தொடங்கியது. இவை அனைத்தும் பிரபஞ்சம் தொடங்கிய முதல் வினாடியிலேயே நடந்தது. அவைகளனைத்தும் அப்போது 1000 கோடி டிகிரி ஃபாரன்ஹீட் (550 கோடி செல்சியஸ்) வெப்ப நிலையில் இருந்தன. இந்நிலையில் அண்டம் முழுவதிலும், இன்று இருக்கும் எல்லாவற்றிற்கும் கட்டுமானத் தொகுதிகளாக மாறும் மூலப்பொருட்களான மின் அணுக்களான நியூட்ரான்கள், எலக்ட்ரான்கள் மற்றும் புரோட்டான்கள் போன்ற அடிப்படைத் துகள்கள் நிறைந்து இருந்தன.

இந்த ஆரம்பகால "குழம்பு" உண்மையில் பார்க்க முடியாததாக இருந்திருக்கும், ஏனெனில் அது நமக்கு புலப்படும் ஒளி எதனையும் வைத்திருக்க முடியாது. மேகங்களில் உள்ள நீர் துளிகளிலிருந்து சூரிய ஒளி சிதறச் செய்வது போல, அண்டத்தில் அடங்கிய அந்த மின்ணனுக்கள் ஒளித்துகள்களை சிதறடித்திருக்கும் என நாசா நிறுவனம் கூறுகிறது.

காலப்போக்கில் இந்த அண்டக்குழம்பில் அடங்கிய மின்ணனுக்கள் கருவடைந்து அணுக்களாகி, நேர் எதிர் மறை மின்சக்திகள் பெற்று, பேரியக்க விரிவாக்கம் தொடங்கிய 380,000 ஆண்டுகளுக்குப் பிறகு ஒளிக் கதிர்களை பரப்பத் தொடங்கியது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர் இக்கோட்பாட்டினில்.

சில நேரங்களில் பேரியக்கத்தின் பின்னொளி என்று அழைக்கப்படும் இந்த ஒளி, CMB - Cosmic Microwave Background எனப்படும் அண்ட நுண்ணலைப் பின்னணி ஒளி என்று விஞ்ஞானிகளால் அறியப்படுகிறது.

தற்போதுள்ள தொழில்நுட்பம் கொண்டு, வானியலாளர்களை (astronomers) அண்டமெனும் பிரபஞ்சத்தின் பிறப்பைப் பார்க்க இயலவில்லை. பேரியக்கத்தைப் பற்றி நாம் புரிந்துகொள்வதில் பெரும்பாலானவை கணித சூத்திரங்கள், சமன்பாடுகள், மற்றும் மாதிரிகளிலிருந்து வந்தவை. இருப்பினும், வானியலாளர்கள், மேற்குறிய CMB எனும், அண்ட நுண்ணலைப் பிண்ணனி மூலம் விரிவாக்கத்தின் "எதிரொலியை" பார்க்க முடியும்.

அப்படி கண்ட. எதிரொலிகளை வைத்து, நாம் இன்று காணும் அண்டத்தின் ஆயிரக்கணக்கான பதிப்புகளை மிகப்பெரிய மின்கணனிகளில் உருவகப்படுத்துவதன் மூலம் அன்று நிகழ்ந்த பேரியக்கத்தினை காண இன்றைய விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர்.

இந்த பேரியக்கம் ஒரு பெரிய "வெடிப்பு" என்று குறுகிய நோக்கில் சிலர் விவரிக்கின்றனர். ஒரு வெடிப்பில், துண்டுகள் ஒரு மையப் புள்ளியிலிருந்து முன்பே இருக்கும் இடத்திற்கு வெளியேற்றப்படுகின்றன. நாம் மையப் புள்ளியில் இருந்தால், அனைத்து துண்டுகளும் தோராயமாக அதே வேகத்தில் நம்மிடமிருந்து விலகிச் செல்வதைக் காண்போம்.

ஆனால் பேரியக்கம் அப்படி இல்லை. இது விண்வெளியின் விரிவாக்கமாக இருந்தது - ஐன்ஸ்டீனின் பொதுச் சார்பியல் சமன்பாடுகளிலிருந்து (Einstein’ equation) வெளிவரும் ஒரு கருத்தும் இதே.

பிரபஞ்சம் விரிவடைவது மட்டுமல்ல, வேகமாகவும் விரிவடைகிறது. இதன் பொருள், காலப்போக்கில், பூமியில் இருந்தோ அல்லது விண்மீன் மண்டலத்தில் உள்ள வேறு எந்த இடத்திலும் இருந்து கொண்டோ, மற்ற விண்மீன் திரள்களை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.

நாம் பார்க்கும் பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும் என்றாலும், இந்த பேரியக்கம் எனும் விரிவாக்கம் நடந்தது ஒன்றே ஒரு முறைதான் என்று திட்டவட்டமாக்கூற இயலாதென்பதை என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கிறார்கள். சில விஞ்ஞானிகள் நாம் வாழும் அண்டத்தில் விரிவாக்கம், சுருக்கம் (அதாவது வீக்கம், வாட்டம்) இரண்டும் மாறி மாறி வரந்திருக்கும்/வரும் எனவும் நம்புகின்றனர்.

“மொத்தத்தில் அறிவியல் இப்போது செய்ய முயற்சிப்பது நமது சமீபத்திய புகைப்படத்திலிருந்து குழந்தைப் பருவத்தில் நாம் எப்படி இருந்திருப்போம் என்று யூகிப்பது போன்றது.”

முடிவுரை

படைப்பு எனும் ஒரு மந்திரச்சிந்தனையை, பகுத்தறிவால், காரண-காரிய (விளைவு) உறவிற்குள் கொண்டுவர,  விஞ்ஞானம் நீண்டகாலமாக கடினமான முயற்சிகள் எடுத்து வருகிறது. இருப்பினும் இன்றும் நாம் அனைவரும் காரணமோ விளக்கமோ இல்லாத/கண்டு இயலாத ஒரு மாயாஜால யதார்த்தத்தில் உட்பொதிக்கப்பட்டுள்ளோம். 

பேரியக்க கோட்பாடு ஒன்றே தற்பொழுது இந்த நிகழ்வின் மிக துல்லியமான அறிவியல் விளக்கமாக நம்பப்படுகிறது. பேரியக்கத்திற்குப் பிறகு பிரபஞ்சம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது பற்றிய நம்பத்தகுந்த விளக்கத்துடன் அறிவியல் வெளிக்கொணர்ந்தாலும், நாம் தேடுவது பேரியக்கத்திற்கு முன் என்ன நடந்தது என்பதைத்தான்.

அதாவது, உருவாக்கப்பட வேண்டிய அவசியமின்றி, படைப்பை உருவாக்கும் "மந்திரவாதி" யார் என்பதை நாம் புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம். அதாவது பேரியக்கத்திற்கு முன் உள்ள "காரணமற்ற காரணத்தை" நாம் தேடுகிறோம்.

அதை தேட வேண்டுமானால், நாம்

1. காரணம் - காரியம் (விளைவு) என்ற குறுகிய கண்ணோட்டத்தை கடந்து அந்த இரு அமைப்புகளுக்கு வெளியே நாம் பார்க்க வேண்டும், ஏனெனில் அந்த காரணம் மற்றும் விளைவு அமைப்புகளுக்குள், "காரணமற்ற காரணம்" என்பது நினைத்துப் பார்க்க முடியாதது.

2. நிறை -ஆற்றல் ( matter & energy), அதன் விளைவுகள் இவைகளைக் கடந்து இருப்பு-உணர்வு (existence & consciousness) என்ற இரண்டையும் கொண்ட "ஏதாவது" ஒன்றை நாம் அறிய வேண்டும்.

இதனைத்தான் நமது நாட்டிலே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நமது ரிஷிகளும், முனிவர்களும் பரம்பொருள், மாயை எனக் கண்டனர் அவர்களது ஆன்மீக ஆய்வால்.

அந்த ஆய்வுகளின் கண்ணோட்டங்களை வரும் வலைதளப் பதிவுகளில் காண்போம்.

இறையருள் பெருக! வளமுடன் வாழ்க!

நாராயணீயம் – தசகம் 5 – முகவுரை

ஶ்ரீ குருவாயூரப்பன்
நாராயண பட்டத்திரி நாராயணீயத்தை ஶ்ரீ குருவாயூரப்பனின் மகிமையுடன் தொடங்குகிறார் தசகம் 1ல். அதனில் அவர் தூய இருப்பு, தூய உணர்வு மற்றும் தூய பேரின்பம் (சத், சித், ஆனந்தம்) ஆகியவற்றின் உருவான பிரம்மன் எனப்படும் இறுதி யதார்த்தமே அந்த குருவாயூரப்பன்  என்று ஒரு அடையாளத்தை நிறுவுகிறார்.

அடுத்த தசகம் 2ல், அந்த பரப்பரம்மமாகிய சத் சித் ஆனந்தத்தை உணர வேண்டும் என்ற ஒன்றினையே குறிக்கோளாக வைத்து வாழ நினைக்கும் அடியார்களுக்கு ஶ்ரீ குருவாயூரப்பனின் (இறைவனின்) வசீகரமான வடிவத்தையும், பக்தி மார்க்கத்தின் மேன்மையையும் வெளிப்படுத்துகிறார்.

இதனை தொடரந்து, தசகம் 3-ல் பட்டத்ரி அப்படி வாழ்ந்திடும் ஒரு பக்தரின் குணாதிசயங்களை எடுத்துரைக்கிறார்.

இங்கனம் படிப்படியாக பக்தர்களின் மனதை பக்குவப்படுத்தியபின், நாராயண பட்டத்திரி தசகம் 4ல், ஶ்ரீ குருவாயூரப்பன் மீது நமது மனதை நிலைநிறுத்துவதற்கான நுட்பங்களை அஷ்டாங்க யோகத்தின் மூலம் (எட்டுவிதமான ஒழுக்க முறைகள்) எடுத்துரைக்கிறார்.

அடுத்து வரும் தசகம் 5ல், ஸ்ரீ நாராயண பட்டத்திரி விசாரணையை அண்டம் (பிரபஞ்சம்) எனும் உயர்நிலைக்கு எடுத்துச்செல்கிறார். ஆன்மீகத்தில் முன்னேற்றம் காணும் போது அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது எனும் உணர்வினை நமக்கு ஊட்டிட, அண்டம் உருவானது எப்படி என்பதை விவரிக்கிறார்.

அண்டமும் அதன் பரிமாணமும்

அண்டம் என்றவுடன் தெளிவான மற்றும் மூடுபனி இல்லாத நாளில், சந்தி வேளையில் அடிவானத்தை தொடர்ந்து அண்ணார்ந்து பார்த்தால், நாம் பிரகாசமான நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களைக் காணலாம். அப்படி காணும் போது நமது சிந்தனை எங்கு செல்கிறது? 

அடேயப்பா! என்ன அருமை! என்ன படைப்பு! எப்படி இது சாத்தியம்? என்றெல்லாம் வியக்கிறோம் அல்லவா.

1. அண்டம் என்பது என்ன? ஏன் ஒன்றுமில்லை என்பதை விட இருப்பு என்ற ஒன்று இருக்கிறது?

2. அண்டமும் அண்டத்தில் காணும் இவைகளனைத்தும் எவ்வாறு தோன்றின?

3. இந்த செயல்பாட்டில் ஒரு ஒழுங்கு இருக்கிறதா? அல்லது ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் தனித்தனியாக இயங்குகின்றனவா?

இப்படியெல்லாம் வியந்து, நமது எண்ணப் பறவைதனை சிறகடித்துப் பறக்க விடுகின்றோமல்லவா!

அப்படி நாம் பிரபஞ்சத்தை உற்றுப் பார்க்கும்போதும், சிந்திக்கும்போதும், இந்த அற்புதமான பிரபஞ்சத்தை எல்லையற்ற நுண்ணறிவு ஒன்று ஆளுகிறது என்பதை புரிந்து கொள்ள நமது பகுத்தறிவுள்ள மனதிற்கு கடினமாக இருக்காது.

இதைத்தான் நமது ரிஷிகள் ஆழ்ந்து கவனித்து ஆய்வு செய்தனர். இதைத்தான் நாராயண பட்டத்திரி தசகம் 5ல் கோடிட்டுக் காட்டுகிறார்.

தேவையான மனப்பான்மை

தசகம் 5-ஐப் பற்றிக் கூறுவதற்கு முன், ஸ்லோகங்களைச் சரியான கண்ணோட்டத்தில் புரிந்துகொள்வதற்கு, நமது ரிஷிகளால் நமது மறைகளில் விளக்கப்பட்டுள்ள பிரபஞ்ச பரிணாமத்தைப் (cosmic evolution) பற்றிய ஒரு கண்ணோட்டம் இன்றியமையாதது.

இந்த பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்கும் அதி உயர் கணனிகள் (super computers), நவீன அறிவியல் சாதனங்கள் மற்றும் கருவிகள் எதுவும் நம் முன்னோர்களிடம் இருக்கவில்லை என்பதை நாம் மனதில் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். அவர்களிடம் இருந்த தரவுகள் (data) குறைவு. எனினும் ஆண்டவன், அண்டம், பிண்டம் எனும் மூன்று தத்துவங்களுக்கிடையேயான உறவுகளைப் புரிந்துகொள்வதில் திடமான மன உறுதியும் “எள்ளத் தனைப்பொழுதும் பயனின்றியிராது, நெஞ்சினிலே நீதியும் நேர் கொண்ட பார்வையுடன், நம்புவதே வழி என்ற மறைதன்னை நம்பி” இறைபக்தியுடன் தன் தூய மனமெனும் அதி உயர் கணினி ஒன்றை மட்டுமே பயன்படுத்தி அண்டத்தில் நடக்கும் நிகழ்வுகளை புராணக் கதைகளின் வடிவத்தில் விளக்கினர் நமது ரிஷிகளும் முனிவர்களும்.

பொறி புலன் சார்ந்த இன்றைய விஞ்ஞான காலக்கட்டத்தில் பொருள் சார்ந்த ஆராய்ச்சிகளின் வழியாக கண்டவைகள் மட்டுமே உண்மை எனும் தற்போதைய படைப்புக் கோட்பாட்டின் மீது மிகுந்த நம்பிக்கை நமக்கு இருப்பதால், இந்த புராணக் கதைகளை மூடநம்பிக்கை என்று நாம் புறக்கணிப்பதில் வியப்பு ஒன்றுமில்லை.அந்த ரீதியில் இந்த கதைகளை எடுத்துக் கொண்டால் அவைகளில் எந்த அர்த்தமும் இல்லை என்று தோன்றும்.

இருப்பினும் திறந்த மனமுடன், முன்முடிவுகள் எதுவுமில்லாமல் (open mind without preconceived notions) நாம் நமது பிண்டத்தை உள்நோக்கி ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் இதன் பின்னணியில் உள்ள தத்துவத்தை ஒருவர் புரிந்து கொள்ள முடியும்.

இன்றைய விஞ்ஞானிகள் கணித சமன்பாடுகள், உருவகங்கள், மாதிரிகள் (equations, simulations, models) போன்ற கருவிகளைப் பயன்படுத்தி அண்டத்தை ஆய்வு செய்ய புறநோக்கு வழிமுறைகளைப் பயன்படுத்தி பொறி, புலன், பொருள் சார்ந்த ஆய்வுகளை (materialistic research) நடத்துகின்றனர்.

நமது முன்னோர்கள், நமக்குள் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கும், புராணக் கதைகள் மூலம் வெளியில் நடப்பதை மாதிரிகளாகப் புரிந்துகொள்வதற்கும் அஷ்ட யோகம், தியானம் முதலிய உள்நோக்கிய வழிமுறைகளைப் பயன்படுத்தி ஆன்மீக ஆய்வுகளைப் புரிந்தனர். அவ்வளவுதான் வித்தியாசம்.

இப்படி வேறுபட்ட ஆராய்வுகளின் மூலம் அறிய எண்ணும் ஆண்டவனை (ஆண்டவனின் வெளிப்பாட்டை) நாம் அறிவது என்பது ஒரு முடிவிலி. அதனால் தான் இரண்டு வழிமுறைகளும் வெறும் அனுமானங்களே. நமக்கு தேவை நேரடி சுய உணர்வு. அப்படி இருக்கையில், ஒன்றை மட்டும் வெறும் கட்டுக்கதைகள் என்றும் உண்மை அல்ல என்றும், மற்றொன்றை சரி என்றும் உண்மை என்றும் கருதுவது நமது மடமையைக் குறிக்கும்.

இனி வருவது

அடுத்த சில வலைப்பதிவுகளில், அண்ட பரிணாமத்தின் விஞ்ஞான மற்றும் ஆன்மீக முன்னோக்குகளின் கண்ணோட்டத்தை அறிய முற்படுவோம். இது நாராயணீயம் தசகம் 5 ஐ நன்கு புரிந்துகொள்ள நமக்கு உதவும்.

இந்த வலைப்பதிவுகள் எனது மற்றொரு வலைதளப் பதிவிலும் (substack -சப்ஸ்டாக்) ஆங்கில செய்திமடல் வடிவில் (newsletter) வெளிவரும். அதன் இணைப்பு இதோ.

https://soundar53.substack.com