ஸ்மரஹர - மன்மதனை எரித்தவனே, காமனை எரித்தவனே, ஆசையை அழித்தவனே யஹ - எந்த பரமேஸ்வரன் ஏக: - ஒருவராகவும் சிதசிததிக: - சித் அசித அதிக: - ஜீவன் ஜடம் இவற்றிற்கு வேறானவராகவும் ப்ரஹ்மாதீந் - பிரம்மன் முதலான ஸர்வாந் பஸுந் - அனைத்து உயிரினங்களையும் மோஹபாஶேந - மோஹம் எனும் கயிற்றால் பத்த்வா - கட்டி ஆத்மக்ருத்யம் - அவரவருடைய கடமைகளை காரயித்வா - செய்யுமாறு செய்து ய: ச - எந்த பரமேஸ்வரன் ஏதேஷு - இவர்களுள் ஸ்வபதஶரணாந்வித்யயா - தன் திருவடிகளை சரணடைந்தவர்களை வித்யயா - மெய்யறிவினால் மோசயித்வா - விடுவித்து ஸாந்த்ராநந்தம் - ஒப்புயர்வற்ற பேரின்பத்தை பரம் - பரமனின் தாம - ஸ்வரூபத்தை (மேலான இருப்பிடத்தை, மோக்ஷத்தை) கமயதி - அடையும்படி செய்கிறாரோ (உணரத்துகிறாரோ) தம் த்வாம் ப்ரபத்யே - அந்த உம்மை முழுமையாக சரண்டைகிறேன்.
விளக்கம்
சிதசிததிக: என்பது இறையின் இலக்கணம். உயிர்களையும், உயிரற்றவைகளையும் தன் உடலாகக் கொண்டு, அந்த உடலுக்கு வேறாக இருப்பவரே இறைவன். அவருக்கு சமமாகவோ, உயர்வாகவோ யாரும் இல்லை.
அவரே குருவாக வந்து (வித்யையா மோசயித்வா) அறிவால் உணர்த்துகிறார். கோகழி ஆண்ட குருமணிதன் தாழ் வாழ்க என்கிறார் மாணிக்கவாசகர்.
பிரம்ம தேவன் உத்தமமான பசு. இந்த பசுவான படைக்கும் கடவுள் பரமனால் படைக்கப்பட்டார்.
பசு என்றால் உயிரினம் என்று பொருள். விலங்கினமான பசு, புல் உண்டு, விவேகமின்றி, தன்னை வேலை வாங்கும் மனிதர்களுக்கு அடிமையாகி பாரமிழுத்தல் முதலிய காரியங்களில் புரிந்து, க்லேசமும் துக்கமுமடையும்.
அவைகளைப்போல, அஜ்ஞானக் கயிற்றால் கட்டி, ஜீவர்களை இந்த வாழ்க்கைச் சக்கரத்தில் கட்டுண்டு , வினைகள் புரிந்து வினைப்பலன்களை அடைய வைக்கின்றான் ஆண்டவன். இந்த ஜீவன்களை கட்டுவதும் அவிழ்த்து விடுவதும் பரமேஸ்வரனே.
இந்த ஜீவன்களிடையே எவன் உன்னைச் சரண மடைகின்றானோ அவனுக்கு ஞானத்தை அளித்து அவனுடைய கட்டை அவிழ்த்து விட்டு நித்யானந்த பரிபூர்ணமான உன்னுடைய அப்ராக்ருதமான பதவிக்கு அவனை அழைத்துக் கொள்ளுகிறாய் நீ. அந்த முப்புரம் எரி முதல்வனாம் பரமேஸ்வரன் உன்னை நான் சரணடைகிறேன் என்று துதிக்கின்றார் அப்பைய தீக்ஷிதர்.
யார் படைப்பின் தொடக்கத்தில் பிரம்ம தேவரைப் படைத்து (“யோ ப்ரஹ்மானாம் விததாதி ரூபம்”) அவரிடம் வேதங்களைக் கொடுத்து (“யோ வை வேதாஷ்ஷ்ச ப்ரஹிநோதி தஸ்மை”), இந்த படைப்பை படைக்கும்படி செய்தாரோ, என்னுடைய மனதையும் புத்தியையும் ஒளிர்விக்கும் அந்த இறைவனை (“தம் தேவ ஆத்மபுத்திப்ரகாஸம்”) மோக்ஷத்தை விரும்பும் நான் சரணடைகிறேன் (“முமுக்ஷுர்வை சரணமஹம் ப்ரபத்யே”)
என்கிறது ஷ்வேதாஷ்த்வரோப உபநிஷத் 6.28. அதே போல இங்கு தீக்ஷிதர் கூறுகிறார்.
சிருஷ்டி இருவகைப்படும். ஒன்று ப்ரகிருதி சிருஷ்டி. மற்றொன்று விக்ருதி சிருஷ்டி. ப்ரகிருதி சிருஷ்டியில் சிவனிடமிருந்து பிரமன் உண்டானது. ஷ்ருதியில் சொல்லப்பட்டிருக்கிறது. ஶ்ரீமத் பாகவதத்தின் தியான ஸ்லோகமும் இதனை கூறுகிறது. பகவத் கீதை அத்தியாயம் 15 இதைப் பற்றியே (15.1-15.4).
அப்படிப்பட்ட ஆண்டவன் ஆத்ம, புத்திப்ரகாஶம்; அதாவது இறைவன் உணர்வாக இருக்கிறார்; நான், உணர்த்த உணர்பவனாக இருக்கிறேன் என்ற கருத்தை வெளிப்படுத்துகிறார் அப்பைய தீக்ஷிதர்.
க்ரியா யோகசர்யா: – கிரியை, யோகம் வழியாக அதாவது வழிபடுதல், தியானம் முதலான சாதனைகளை
ந கர்தும் (ஶக்நோமி) – செய்ய இயலாதவனாக இருக்கிறேன்
அநிதரகதி:- வேறு வழியின்றி
கேவலம் த்வாம் ப்ரபத்யே – உன் ஒருவனையே சரணடைந்து சார்ந்துள்ளேன்
விளக்கம்
சைவ சித்தாந்தத்தில், இறைவனை அடைவதற்கான உபாயமாக சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு மார்க்கங்களை வரையறுத்துள்ளனர் பெரியோர்.
1. இதில் சரியை என்பது உழவாரப்பணி முதலாக சிவன் எழுந்தருளியிருக்கும் ஆலயங்களில் செய்யும் தொண்டு. அதோடு சிவனடியார்களை அன்பாக உபசரிப்பதும் ஆகும்.பெரிய புராணத்தில் சிவனடியார்களுக்கு தொண்டு செய்வதன் மூலமே இறையருளைப் பெற்ற எண்ணற்ற நாயன்மார்களின் வரலாற்றை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
2. அடுத்து கிரியை எனப்படுவது, உள்ளத்தாலும் புறத்தாலும் பூஜிப்பது.
நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே மஞ்சன நீர் பூசை கொள்ள வாராய் பராபரமே
தாயுமானவர்
3. சிவம் ஒன்றையே ஒருமுகப்படுத்தி வழிபடும் நிலை யோகம். புலன்களின் வழியாக வேறு எந்த சிந்தனைகளும் நமக்குள் தோன்றாதவாறு, நாம், இறைவனாகிய பரம்பொருளை தியானிக்கிறோம் என்னும் வேறுபாடு மறைந்து, நாமும் தியானமும் இரண்டறக் கலக்கும் நிலையே யோகம்.
4. இறைவனைப் பற்றியும் உயிரைப் பற்றியும் தெரிவிக்கும் நூல்களைக் கற்று பெரியவர்களின் உபதேசங்களைப் பெற்று இறைவனின் அருளைப் பெறுவதற்கான ஞானத்தைப் பெறுவது.
சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் இந்த நான்கு வழிகளின் மூலமாக இறைவனின் அருள் கிடைக்கும்.
சிவன் அடியார்களைப் போற்றி சிவன் ஆலயங்களில் செய்யும் தொண்டால், சாலோகம் (சிவன் உலகம்),
உள்ளும் புறமும் பூஜிப்பதால் சாமீபம் (சிவன் அருகில் இருத்தல்),
பரிபூரண யோகத்தால் சாரூபம் (சிவ ஸ்வரூபமும்) கிடைக்கும்.
சிவ சிந்தனையை ஞானத்தில் தேக்கி இருப்பதால் முக்தி எனும் பலன் கிடைக்கும்.
மரணம் எப்பொழுது வரும் என்பதை அறிந்திலேன் நான். இங்கு இருப்பதோ இரவலாக கிட்டியது. “நம் மனே அல்லீநே! இல்லி சும்மனே பந்திதீனே!” (எம் வீடு அங்குதான்; இங்கு சும்மா வந்துள்ளேன்) என்கிறார் புரந்தர தாசர். எனவே இமைப்பொழுதும் என் நெஞ்சம் நீங்காதான் தாழ் இப்பொழுதே பணிகிறேன்.
“பெருமானே, என் உடல், உயிர் அனைத்திலும் இப்போது நீதான் நிறைந்திருக்கிறாய். இனி நான் செய்கின்ற செயல்கள் யாவும் நீ செய்வதுதான். நான் சரியான காரியங்களைச் செய்தாலும், தவறான செயல்களைப் புரிந்தாலும் அத்தனைக்கும் நீ தான் பொறுப்பு ” என்றும்
“அன்றே எந்தன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும் குன்றே அனையாய் என்னை ஆட்கொண்டபோதே கொண்டிலையோ? இன்றுஓர் இடையூறு எனக்கு உண்டோ எண்தோள் முக்கண் எம்மானே? நன்றே செய்வாய், பிழை செய்வாய், நானோ இதற்கு நாயகமே?”
என்றும் இறைவனிடம் கேட்கிறார் மாணிகக வாசகர்.
இதே மனநிலையில் உள்ள அப்பைய தீக்ஷிதர்,
“ஹே பரமசிவ! எனக்கு உன் இருப்பிடமோ தெரியாது, கர்மானுஷ்டானத்தையோ யோகாப்யாஸத்தையோ செய்ய என்னால் இயலாது. வேறு ஒரு வழியும் அறியாத நான் உன்னைச் சரணமடைவது ஒன்றையே அனுஷ்டிக்கிறேன். அந்த்ய காலத்தில் மனதை ஈசுவரனிடம் அர்ப்பணம் செய்வது அஸாத்யமானபடியால் இப்பொழுது உன் நினைவு வந்திருக்கும் பொழுதே நான் உன்னிடம் என்னை ஸமர்ப்பணம் செய்து விடுகிறேன். என்னை மட்டுமில்லை. என் பரிவாரங்களையும் சேர்த்துக் கொண்டு ஆத்மார்பணம் செய்து விடுகிறேன்”.
एवं देव in this manner O Lord! चतुर्दश-आत्मक-जगत्-रूपेण in the form of the fourteen worlds जात: पुन: – manifesting (Thyself) again तस्य-ऊर्ध्वं खलु at the head (peak) of that (the worlds) सत्य-लोक-निलये in the abode of Satyaloka जात: -असि धाता स्वयं manifested as Brahma (the Creator) Thyself यं शंसन्ति whom (Brahma) (the Srutis) describe हिरण्यगर्भम्- (as) Hiranyagarbh अखिल-त्रैलोक्य-जीवात्मकं of all the beings in the three worlds as the collective soul य: -अभूत् who became स्फीत-रज:-विकार-विकसन्- because of the upsurge of Rajoguna नाना-सिसृक्षा-रस:- became desirous of creating various beings.
Meaning in English:
The fourteen worlds are also known as trilokyam (3 worlds). The 7 worlds together below the earth are taken as one, called Patala. The Earth is taken as Bhuloka as second and the six worlds above the earth are taken as third as Upper world.
Thus O Lord! Thou who manifested in the form of the fourteen worlds, again by Thy own will, manifested as Brahma, in Satyaloka, which is the highest and loftiest of all the worlds.This Brahma is known as Hiranya Garbh (the golden egg) the cosmic intelligence of all the beings of the three worlds. With the upsurge of Rajoguna, Thou as this Hiranya Garbha became desirous of creating various beings.
சுவாசம் அடங்கும் வேளையிலே உள்ளம் உன்பாதம் பணித்திட்டு பிறவி ஈனும் பாபமுழுதும் உதறி எறிய இயலும் புரமெரி நாதனே ! ஒருகால் அக்காலம் என் உள்ளம் ஓரிரு நோய் வாய்ப்பட்டு நினைவு தவறிட்டால் உனதடி பணிந்திட எங்கனம் எனக்கு கை கூடும் !! 13
சொற்களின் பொருள்
நாத – உயிரின் தலைவனே! ஸ்வாமீ!
புரஹர – முப்புரத்தை எரித்தோனே
ஜந: – மனிதன் (உயிர்)
ஶ்வாஸப்ரஶமஸமயே – மூச்சு நன்கு அடங்கும் சமயம்
சேத: – மனதை (சித்தத்தை)
த்வத்பாதாப்ஜே – உன் திருவடித் தாமரைகளில்
நிதாய – பணித்திட்டு (அர்ப்பணம் செய்து)
ஸம்ஸ்ருதிப்ராப்தம் – பிறவிகளில் வந்து அடைந்திருக்கும்
ஸர்வம் – அனைத்து
ஆக3ஹ – பாபங்களையும்
ஷேப்தும் – உதறி எறிந்துவிட
ப்ரபவதி – முடியும் (எனினும்,)
தஸ்மிந் காலே – அந்த சமயத்தில்
யதி – ஒரு வேளை
தோஷத்ரயார்தம் – வாதம், பித்தம்,கபம் என்ற மூன்று தோஷங்களால் (பீடிக்கப்பட்ட என் உடலால்)
மம மநோ – என் மனது ப்ரஜ்ஞாஹீநம் – நினைவு தவறியதாக
பவேத் – ஆகிவிட்டால்
தத் – அப்படி (திருவடித் மாமரைகளில் அரப்பணிக்க)
கதம் மே – எப்படி எனக்கு
கடேத – கைகூடும்
விளக்கம்
எவ்வித பாபிக்கும் கடைசியாக ஒரு வழி இருக்கிறது. இறக்கும் காலத்தில் இறைவனுடைய திருவடிகளில் மனதைச் செலுத்தி, உயிரை உடலிலிருந்து பிரித்துக்கொண்டால், இந்தப் பிறவியில் செய்த அனைத்து பாபங்களிலிருந்தும் விடுபடலாம். அந்திய காலத்தில் பிரஜ்ஞையுடன் கூடி இருப்பது அரிது. வாத பித்த கபங்களின் விபரீதங்களால் மூர்ச்சை ஏற்பட்டும் விடலாம். ஆகையினால் ப்ராண வியோக சமயத்தில் மனத்தை ஈசுவரனிடம் செலுத்தி ஸர்வ பாபங்களையும் போக்கிக் கொள்ளலாம் என்றும் நிச்சயமாக நம்பியிருக்கவும் முடியாது. நோயின் பிடியில் சிக்கி, தன் நிலை இழந்த மனதால் இறைவனைத் தியானிக்க முடியாது. என் செய்வது என வருந்துகிறார் அப்பையர்.
திருவடித் தாமரை பணிவது பாபங்களை களைந்திடும் – விளக்கம்
இறைவன் திருவடியைப் பற்றினால், பாவங்கள் களையும் என்று அப்பையர் கூறுவதற்கு ஆதாரம் (ப்ரமாணம்) என்ன என்பதை முதலில் காண்போம்.
இறைவனின் பாத அபிஷேகங்களின் போது வேதத்தில் உள்ள (தைத்ரிய ப்ராஹ்மணம் 3.12.3) சில மந்திரங்கள் உரைக்கப்படும். அதில் ஒன்று
இறைவன் திருவடி எங்கும் நிறைந்திருக்கிறது, பழமையானது, புனிதமானது. அதுவே அடைக்கலம். அதன் மூலம் எல்லா உயிர்களும் தமது பாபகர்மங்களைத் தாண்டிச் செல்கின்றன. அதே புனிதமானதும், தூய்மையானதும் ஆன அத்திருவடிகளால் தாம் தூய்மை அடைவோமாக !.மிகுந்த பாபங்களையும் நன்கு கடந்துடுவோமாக!……இறைவன் திருவடி நமக்கு நல்ல புத்தியைக் கொடுக்கட்டும் !
என்கிறது தைத்ரிய ப்ராஹ்மணம் (3.12.3).
இறைவன் திருவடிகள் , அறிவினை (ஞானம்) குறிப்பது.
இடது திருவடி குறிப்பது
அபர ஞானம்
கர்ம காண்ட ஞானம்
உள்ளத்தைப் பக்குவப்படுத்துவது
சரியை, (உடலால்) கிரியை (உடலால், வாக்கால்)
வலது திருவடி குறிப்பது
பர ஞானம்
ஞான காண்ட ஞானம்
உண்மையை உணர்த்துவது
யோகம்(உள்ளத்தால்), ஞானம்
பாத ஸேவநம் என்பது இறைவனது திருவடி போற்றுதலைக் குறிக்கும். அதாவது, கர்ம காண்டத்தைக் கடைப்பிடித்து (இறையின் இடது திருவடி பற்றி), “சித்த ஸுத்தி” எனும் மனத்தூய்மையை அடைந்து, ஞான காண்டத்தை அறிந்து பரம்பொருளும் (பரமாத்மாவும்) நீயும் (ஜீவாத்மாவும்) ஒன்றே என்ற மெய்யறிவினை (ஆத்ம ஞானம்) அடைவதைக் குறிப்பதே “பதாம்போஜம் பஜ” என்ற சொற்றொடர் குறிக்கிறது.
தோஷத்ரயார்தம் – அல்லது திரிதோடங்கள் – ஓரிரு நோய் – விளக்கம்
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று
என்கிறது திருக்குறள் (941).
நம் உடலில் வாதம், பித்தம், கபம் (சிலேட்டுமம்) அல்லது `வளி (காற்று) , அழல் (நெருப்பு) , கபம் (நீர்)’ என்ற மூன்றும் இருக்க வேண்டிய அளவில் சீராக இருக்க வேண்டும். அப்படி அல்லாது ஏதாவது ஒன்று குறைந்தாலோ அல்லது மிகுதியானாலோ அது நோயாக நமது உடலில் தோன்றிவிடும் என்று மருத்துவ உலக நூலோர் கூறுவதாக ஐயன் திருவள்ளுவர் கூறுகிறார்.
வாதத்தில் முக்கியமாக எண்பது நோய்களாகும். நரம்பு வலி, நரம்பு பிடிப்பு, காக்காய் வலிப்பு, பக்கவாதம், வாயு, இரத்த அழுத்தம், இருதய நோய் முதலியவை இதில் அடங்கும்.
பித்தத்தில் முக்கியமாக நாற்பது நோய்களாகும். செரியாமை, வயிற்றுவலி, வயிற்றுப்புண், மஞ்சட்காமாலை, இரத்த சோகை, இரத்த வாந்தி, கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆகியன கெட்டுப் போதல் போன்ற நோய்கள் இதில் அடங்கும்.
சிலேத்துமத்தில் தொண்ணூற்றாறு நோய்கள் முக்கியமானதாகும். அவற்றில் மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு, தடுமன், இருமல், க்ஷயம், ஆஸ்துமா போன்றவை அடங்கும்.
இப்படி இருநூறுக்கும் அதிகமான நோய்களில் ஏதேனும் ஒன்று, வயது முதிர்ந்து, உயிர் பிரியும் தருணம் நம்மைத் தாக்கலாம். அப்போது இறைவன் திருவடித் தாமரையை எப்படி தியானிப்பது என்று உழல்கிறார் அப்பையர்.
நான் அனைவருக்கும் முதலில் பதிவிட்டதில், அறியாமையால், தவறுதலான ஸ்லோக எண்களால் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டேன். இந்த மந்திரம் 14வது ஸ்லோகம். அடுத்த பதிவில் 13வது ஸ்லோகத்தைப் பற்றி எழுதுகிறேன்.
தவறுக்கு அடியேனின் மன்னிப்பு வேண்டுதலை ஏற்கவும். பிழையை சுட்டிக்காட்டிய பெரியோருக்கு மிக்க நன்றி.
பிராணம் நன்கடங்கும் வேளை நாதனுன் திருவடித் தாமரை பணித்திட்டு மனிதனின் பிறவிகள் ஈட்டிய பாவம் அனைத்தும் உதறி எறிந்திட இயலும் – எனினும் அக்காலம் முத்தோஷமதனால் என் மனம் எந்நினைவின்றி இருந்திட்டால் எங்கனம் கைக்கூடும் உன் திருமலரடி முப்பரமெரியோனே !! 14
சொற்களின் பொருள்
நாத – உயிரின் தலைவனே! ஸ்வாமீ!
புரஹர – முப்புரத்தை எரித்தோனே
ஜந: – மனிதன் (உயிர்)
ஶ்வாஸப்ரஶமஸமயே – மூச்சு நன்கு அடங்கும் சமயம்
சேத: – மனதை (சித்தத்தை)
த்வத்பாதாப்ஜே – உன் திருவடித் தாமரைகளில்
நிதாய – பணித்திட்டு (அர்ப்பணம் செய்து)
ஸம்ஸ்ருதிப்ராப்தம் – பிறவிகளில் வந்து அடைந்திருக்கும்
ஸர்வம் – அனைத்து
ஆக3ஹ – பாபங்களையும்
ஷேப்தும் – உதறி எறிந்துவிட
ப்ரபவதி – முடியும் (எனினும்,)
தஸ்மிந் காலே – அந்த சமயத்தில்
யதி – ஒரு வேளை
தோஷத்ரயார்தம் – வாதம், பித்தம்,கபம் என்ற மூன்று தோஷங்களால் (பீடிக்கப்பட்ட என் உடலால்)
மம மநோ – என் மனது ப்ரஜ்ஞாஹீநம் – நினைவு தவறியதாக
பவேத் – ஆகிவிட்டால்
தத் – அப்படி (திருவடித் மாமரைகளில் அரப்பணிக்க)
கதம் மே – எப்படி எனக்கு
கடேத – கைகூடும்
விளக்கம்
திருவடித் தாமரை பணிவது பாபங்களை களைந்திடும் – விளக்கம்
இறக்கும் காலத்தில் இறைவனுடைய திருவடிகளில் மனதைச் செலுத்தி, உயிரை உடலிலிருந்து பிரித்துக்கொண்டால், இந்தப் பிறவியில் செய்த அனைத்து பாபங்களிலிருந்தும் விடுபடலாம்.
ஆனால் நோயின் பிடியில் சிக்கி, தன் நிலை இழந்த மனதால் இறைவனைத் தியானிக்க முடியாது. என் செய்வது என வருந்துகிறார் அப்பையர்.
இறைவன் திருவடியைப் பற்றினால், பாவங்கள் களையும் என்று அப்பையர் கூறுவதற்கு ஆதாரம் (ப்ரமாணம்) என்ன என்பதை முதலில் காண்போம்.
இறைவனின் பாத அபிஷேகங்களின் போது வேதத்தில் உள்ள (தைத்ரிய ப்ராஹ்மணம் 3.12.3) சில மந்திரங்கள் உரைக்கப்படும். அதில் ஒன்று
இறைவன் திருவடி எங்கும் நிறைந்திருக்கிறது, பழமையானது, புனிதமானது. அதுவே அடைக்கலம். அதன் மூலம் எல்லா உயிர்களும் தமது பாபகர்மங்களைத் தாண்டிச் செல்கின்றன. அதே புனிதமானதும், தூய்மையானதும் ஆன அத்திருவடிகளால் தாம் தூய்மை அடைவோமாக !.மிகுந்த பாபங்களையும் நன்கு கடந்துடுவோமாக! இறைவன் திருவடி நமக்கு நல்ல புத்தியைக் கொடுக்கட்டும் !
என்கிறது தைத்ரிய ப்ராஹ்மணம் (3.12.3).
இறைவன் திருவடிகள் , அறிவினை (ஞானம்) குறிப்பது.
இடது திருவடி குறிப்பது
அபர ஞானம்
கர்ம காண்ட ஞானம்
உள்ளத்தைப் பக்குவப்படுத்துவது
சரியை, (உடலால்) கிரியை (உடலால், வாக்கால்)
வலது திருவடி குறிப்பது
பர ஞானம்
ஞான காண்ட ஞானம்
உண்மையை உணர்த்துவது
யோகம்(உள்ளத்தால்), ஞானம்
பாத ஸேவநம் என்பது இறைவனது திருவடி போற்றுதலைக் குறிக்கும். அதாவது, கர்ம காண்டத்தைக் கடைப்பிடித்து (இறையின் இடது திருவடி பற்றி), “சித்த ஸுத்தி” எனும் மனத்தூய்மையை அடைந்து, ஞான காண்டத்தை அறிந்து பரம்பொருளும் (பரமாத்மாவும்) நீயும் (ஜீவாத்மாவும்) ஒன்றே என்ற மெய்யறிவினை (ஆத்ம ஞானம்) அடைவதைக் குறிப்பதே “பதாம்போஜம் பஜ” என்ற சொற்றொடர் குறிக்கிறது.
தோஷத்ரயார்தம் – முத்தாதுக்கள் அல்லது திரிதோடங்கள் – விளக்கம்
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று
என்கிறது திருக்குறள் (941).
நம் உடலில் வாதம், பித்தம், கபம் (சிலேட்டுமம்) அல்லது `வளி (காற்று) , அழல் (நெருப்பு) , கபம் (நீர்)’ என்ற மூன்றும் இருக்க வேண்டிய அளவில் சீராக இருக்க வேண்டும். அப்படி அல்லாது ஏதாவது ஒன்று குறைந்தாலோ அல்லது மிகுதியானாலோ அது நோயாக நமது உடலில் தோன்றிவிடும் என்று மருத்துவ உலக நூலோர் கூறுவதாக ஐயன் திருவள்ளுவர் கூறுகிறார்.
வாதத்தில் முக்கியமாக எண்பது நோய்களாகும். நரம்பு வலி, நரம்பு பிடிப்பு, காக்காய் வலிப்பு, பக்கவாதம், வாயு, இரத்த அழுத்தம், இருதய நோய் முதலியவை இதில் அடங்கும்.
பித்தத்தில் முக்கியமாக நாற்பது நோய்களாகும். செரியாமை, வயிற்றுவலி, வயிற்றுப்புண், மஞ்சட்காமாலை, இரத்த சோகை, இரத்த வாந்தி, கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆகியன கெட்டுப் போதல் போன்ற நோய்கள் இதில் அடங்கும்.
சிலேத்துமத்தில் தொண்ணூற்றாறு நோய்கள் முக்கியமானதாகும். அவற்றில் மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு, தடுமன், இருமல், க்ஷயம், ஆஸ்துமா போன்றவை அடங்கும்.
இப்படி இருநூறுக்கும் அதிகமான நோய்களில் ஏதேனும் ஒன்று, வயது முதிர்ந்து, உயிர் பிரியும் தருணம் நம்மைத் தாக்கலாம். அப்போது இறைவன் திருவடித் தாமரையை எப்படி தியானிப்பது என்று உழல்கிறார் அப்பையர்.
ஏன் அவர் இப்படி உழல வேண்டும்?
ஶ்வாஸப்ரஶமஸமயே – மூச்சு நன்கு அடங்கும் சமயம் – ஸ்லோகத்தின் கருப்பொருள்
“ஆதலால், எப்பொழுதும் என்னை நினைவு செய்து, போர் செய்யும் கடமையையும் செய். மனமும் புத்தியும் என்னிடம் சரணடைந்தால், நீ நிச்சயமாக என்னை அடைவாய்; இதில், எந்த சந்தேகமும் இல்லை”.
என்று கண்ணன் பகவத்கீதையில் (8.6, 8.7) கூறுவதை கருப்பொருளாக வைத்துள்ளது இந்த ஸ்லோகம்.
அபிமானத்தை பலப்படுத்துவது நமக்கும், மற்றவர்கும் நல்லதல்ல. இறைவனுக்கும் நமக்கும்தான் உண்மையான தொடர்பு. உண்மை இன்பம் அவரிடம் மட்டுமே! இறுதி காலம் எப்பொழுது வரும் என்பது தெரியாததால், எப்பொழுதும் இறைவனையே நினை என்பமே ஸ்லோகத்மில் அடங்கிநுள்ள அறிவுரை நமக்கு.
ஒன்றுமே பயனில்லை என்று உணர்தபின் பலனுண்டேன்பார் ஒவ்வொரு மனிதனும் ஒருநாள் இந்நிலை எய்துவதுருதி இதை மறந்தார் அன்று செயலழிந்தல மறு பொழுது சிவன் பெயர் நாவில் வாறதே ஆதலினால் மனமே இன்றே சிவ நாமம் சொல்லிப்பழகு அன்புடன் நம்பிக்கெட்டவர் எவர் ஐயா – உமை உமை நாயகனை திருமயிலையின் இறைவனை
பாபநாசம் சிவன்
என்று பாபநாசம் சிவன் எழுதிய பாடலும் இக்கருப்பொருளை வலியுறுத்துவதே.
ஸ பய ப்ரார்தநாத் அந்ய மாத்ராத் – அச்சத்தினால் உண்டான பணிவுடன், மிக ஏழ்மையான உணர்வுடன் , பிராரத்தனை செய்த மாத்திரத்தில்
க்ஷாம்யஸ்யேவ – மன்னித்தருள்கிறாய்
யத்யப்யேவம் – யத் யபி ஏவம் – இருந்தபோதிலும்
நிஸ்த்ரப: – வெட்கமின்றி
ப்ரதிகலம் – கணந்தோறும்,
வ்யக்தமாக:ஸஹஸ்ரம் குர்வந் – எண்ணற்ற பாபங்களை வெளிப்படுத்திக்கொண்டிருக்ப்பவனாய்
ததா – (அப்படி) இருக்கும்போது
அயம் – இந்த
மூர்க: – மூடனை
கதமிவ – எப்படித்தான் ப்ரார்தயேயம் – பிராரத்தனை செய்வது (உன்னிடம்)
விளக்கம்
“புத்தி பூர்வமாக உன் விதிகளை மீறிவிட்டு பயமும் வெட்கமும் கூட இல்லாமல் ஒரு விலங்கைப்போல விஷய ஸுகங்களையே பல இடையூறுகளுக்கு மத்தியில் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். இவ்விதம் நான் அபராதியானது இந்த ஜன்மாவில் மட்டுமில்லை பலவிதமான அநேக கோடி ஜன்மாக்களிலும் இப்படியே அபராதியாக இருந்துள்ளேன்”
என்று முந்தைய ஸ்லோகத்தில் புலம்பி உரைத்த அப்பைய தீக்ஷிதர், இந்த ஸ்லோகத்தில்
“எண்ணித் துணிக கர்மம் என புத்தி சொல்லியும் கேட்காமல், மனம் போனபடி வினைகள் புரிந்து அதனால் வரும் வினப்பயன்களான பாவங்களை ஈட்டிய வண்ணமே இருக்கிறேன்” என்று நொந்து கொள்கிறார்.
இப்படி புத்தி அறிவுரைத்தாலும், மனம் போன போக்கில் போவதினை, “வாஸனை” என்கிறார் வித்யாரண்ய ஸ்வாமிகள் பஞ்சதஸியில்.
அப்பையரின் இப்புலம்பலில் மற்றொன்றும் தெளிவாகிறது. இறைவன் விரைவில் மகிழ்படைபவன் (ஆஷுதோஸி – ashutosh – ஆஷு – மகிழ்வு, தோஸ் – விரைவில்). அடியாருக்கு அருள்வதில் அவன் கருணைக் கடல். அக்கருணைக் கடலில், நம் வினைப்பயன்கள் “கடலில் கரைத்த காயம்” என்பதால், இறையின் கருணையை ஈட்டிட எப்பொழுதும் முயன்றிட வேண்டும்.
நாநாவித பவததி ப்ராப்த தீர்கா அபராத: – பலவித பிறவித்தொடர்கள் மூலம் சேகரித்த, நீண்ட பெரிய அபராதங்களை உடைய
அஹம் – நான் க்லேஶ அம்போதிம் – துன்பக் கடலை
கதம் அஹம் – எங்கனம் நான்
த்வத் ப்ரஸதாத் ருதே – உன் அருள் இன்றி
தரேயம் – கடந்திடுவேன்
விளக்கம்
“உன்னை சரணாகதி செய்யும் நான் பெரிய அபராதி என்று தெரிவித்துக்கொள்ளுகிறார். ஹேசந்த்ர கலாதரனே! உன் கட்டளைகளை மீறி நடந்தவன் நான். ஸ்ருதி ஸ்ம்ருதி புராணங்களின் மூலம் உன்னால் போதிக்கப்பட்ட கர்மாக்களையும் தர்மங்களையும் சரிவர அனுஷ்டிக்காதவன். புத்தி பூர்வமாக உன் விதிகளை மீறிவிட்டு பயமும் வெட்கமும் கூட இல்லாமல் ஒரு விலங்கைப்போல விஷய ஸுகங்களையே பல இடையூறுகளுக்கு மத்தியில் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். இவ்விதம் நான் அபராதியானது இந்த ஜன்மாவில் மட்டுமில்லை பலவிதமான அநேக கோடி ஜன்மாக்களிலும் இப்படியே அபராதியாக இருந்துள்ளேன். எல்லையற்ற துக்கக் கடலை உன் தயவின்றி வேறு எவ்விதம் நான் தாண்டப் போகிறேன்!”
தவறான பாதையில் சென்று, தவறு என்று உணரந்தவருக்கு குற்ற உணர்ச்சி எழலாம். அவைகளை நீக்கிக்கொள்ள இத்தகைய ஸ்லோகங்கள் உதவுகின்றன.
ஏன் உலகோரால் போற்றப்படுகிறான் இறைவன். ஏனெனில் அனைவரும் விரும்புவது இன்பம். பேரின்பமே இறைவன் என்கிறது நமது மறைகள். பேரின்பம் எது என்றறியாமல், பெருந்துன்பத்திற்கு (பிறவிப்பிணிக்கு) காரணமான சிற்றின்பங்கள் நாடிஓயாது உழைக்கின்றனர் உலகோர். இறைவனின் கட்டளை என்பது ஷ்ருதி, ஸ்ம்ருதிகளின் கட்டளை.
விலங்கைப் போல – விஷய சுகங்கள் பின் அலைவது என்பது “வந்த வரவை மறந்து, மாதர்பொன்பூமி மயக்கத்தில்” ஆழ்ந்து என்பதைக் குறிப்பது.
மனதில் நூறு கெட்ட எண்ணங்கள் எழுந்தால், அவைகளை இறைவன் துணையைடன் ஐந்து நல்ல எண்ணங்களால் அழிக்க முடியும் என்ற மகாபாரத தத்துவத்தினை உள்வைத்தது இந்த ஸ்லோகத்தில், ஏதிலார் குற்றம் போல் தன் குற்றம் காண்கிறார் அப்பைய தீட்சிதர் (குறள் 190).
துன்பக் கண்ணீரில் துளைந்தோர்க்கு உன் ஆனந்த
இன்பக் கண்ணீர் வருவது எந்நாள் பராபரமே
என்ற தாயுமானவர் பாடல், தீக்ஷிதரின் உள்ளத்தை பிரதிபலிக்கிறது.
மிக்க கடினம் யாதெனில் “மனத்தை அடக்கி சும்மா இருக்கின்ற திறம் அரிது”. ஆராய்ந்தால், உடலானது உயிரைத் துன்புறுத்துகிறது என்பதை உணரமுடிகிறது.
“ஜநிபதருஜம்” என்ற சொல்லின் விளக்கம்
என்னை மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி வருத்தப்படுத்த வேண்டாம் பொன்னம்பலவா நின் திருவடி சரணம் என்றிங்கு நான் நம்பி வந்தேன், எடுத்த ஜனனம் கணக்கெடுக்கத் தொலையாது இரங்கி மகிழ்ந்து தேவரீர் வேணுமென்று கொடுத்த மானிட ஜன்மம் வீணாகி போகுதென் குறை தீர்த்த பாடுமில்லையே!! அடுத்து வந்த என்னை தள்ளலாகாது அரஹரவென்று சொன்னாலும் போதாதோ!! தடுத்து வந்தருள சமயம்
“திருவடிசரணம் என்றிங்கு நான் நம்பி வந்தேன்” என்ற கோபால கிருஷ்ண பாரதி பாடல் , கருவிலிருந்து வலியுடன் களைப்பாய் வெளிவரும் பிறப்பினை நொந்துவதற்கான “ஜநிபதருஜம்” என்ற சொல்லின் விளக்கம். “இறப்பொடு பிறப்பை உள்ளே எண்ணினால் நெஞ்சது பகீரென்னும் துயில் உறாது” என்கிறார் தாயுமானவர்.
“இந்த்ரிய நிக்ரஹத்தில் அசக்தனாயும் ஸம்ஸார வேதனைகள் விலக்க விரும்புகிறவனாயுமிருக்கும் எனக்கு சரணாகதியைத் தவிர வேறு கதியில்லை என்பதைத் தெரிவிக்கிறார் தீக்ஷிதர்”.
மந்திரம் கூறும் கருத்து
ஸம்ஸாரவாழ்க்கையின் கஷ்டங்களை (பிறப்பு இறப்புச் சுழலில்) நினைத்து நினைத்து பயம் கொண்டு இதிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று கவலை உண்டானவர்களுக்கு, விஷயங்களில் இயற்கையாகவே நுழையும் இந்திரியங்களை அடக்க முடியாதது பற்றி துக்கம் ஏற்படுகிறது.
மாசுகள் படிந்த மனதிற்கு அடிமையான சித்தத்திற்கும் முக்தியை விரும்பும் ஜீவனுக்கும் ஏற்படும் போராட்டட்தில் சளையுற்ற ஜீவனின் புலம்பல் இது. “என்ன செய்வேன்? எங்கு செல்வேன்? எனக்கு எது உபாயம்? ஸ்வாமி ஒன்றும் வகையறியாத நான் உன் இரு கமல மலர்ப் பொற்பாதங்களை சரணடைகிறேன், எனக்கு வழி காட்டி நீ ஒருவனே என்ற சீவன், சிவனை நோக்கிப் புலம்புவதே இந்த ஸ்லோகம்.
பிதாமஹர், வாலறிவன், ஹிரண்யகர்ப்பர், அப்ஜயோனி, பிரஜாபதி, விஸ்வஸ்ரு, விதாதா, விதி, கமலோத்பவ, விரிஞ்சி, அண்டஜ என்னெல்லாம் அழைக்கப்படும் நான்முகக் கடவுளான பிரம்மனைப் பற்றியது தசகம் 7. இந்த தசகத்தின் ஸ்லோகங்களை அறிய முற்படுமுன், பிரம்மனைப் பற்றிய ஒரு கண்ணோட்டம் தேவை நமக்கு. அடியேன் அறிய முற்பட்டதை தசகத்தின் முகவுரையாக அளிக்கிறேன்.
வேதாந்தப் பார்வை
பரமார்த்திகா நிலையில் நிர்குணனாக இருக்கும் பரப்பிரம்மன், மாயையால் பிரதிபலிக்கப்பட்டு, வரையரைகளாலான (அறிபவன்/அறிவது வேறுபாடு, காலம், இடம் போன்றவைகள்), வெளிப்பாடுடைய சகுண பிரம்மனாகிறான். மாயையின் தொடர்புடைய அந்த சகுணப் பிரம்மனின் வெளிப்படா நிலையில் ஈஸ்வரன் (காரணப் பிரம்மன்) என்றும், வெளிப்படும் நிலையில் (manifested state) ஹிரண்யகர்பா, பிரம்மா (நான்முக கடவுள்), காரியப் பிரம்மன் என்றும் அழைக்கப்படுகிறான்.
ஹிரண்யகர்பமே வெளிப்படும் முதல் படைப்பு என்று மறைகள் கூறுகின்றன. வித்தெனும் உள்ளார்ந்த நிலையில், வேர், தண்டு, கிளைகள், இலைகள், பூக்கள், காய்கள், கனிகளென மரம் வெளிப்படுவதைப்போல “காரிய ப்ரம்மன்” (வடிவுடை பரமன்) எனும் “ஹிரண்யகர்ப்பா”, மாயையின் விக்க்ஷேப சக்தியால் வெளிப்படுகிறான்.
ஹிரண்யம் என்றால் பொன்/தங்கம் என்று பொருள். அறிவும் பொன்னும் ஒளிமயமானது என்பதால், இங்கே அதற்கு அறிவு என்ற பொருள். பொன் போன்ற ஒளி படைத்த அறிவால், அறியாமையெனும் இருள் நீங்கியது என்பர். கர்ப்பம் என்றால் கருப்பப்பை என்று பொருள். இந்த இடத்தில் அதற்கு உள்ளே என்ற பொருள். ஹிரண்ய கர்ப்பம் என்றால், அதனுள் ஒளிமயமான அறிவு என்ற பொருள். முடிவற்ற அறிவு என்பார்கள். அழியா அறிவதனை உள்ளடக்கிய கருவறை.
அதாவது, அனத்தின் எல்லைகளையும், அனைத்துப் பொருட்களும், அனைத்து உயிரினங்களையும், அனைத்து அண்டங்களையும் அவைகளின் நுண்ணிய நிலையில் அடக்கிய கருப்பை என்று பொருள். இப்படி, முற்றிலும் வெளிப்பட்ட அனைத்து அண்டங்களின் நுண்ணிய நிலையை உள்ளடக்கிய கருப்பையே ஹிரண்யகர்ப்பம் எனக் கூறப்படுகிறது. காரிய பரமனின் முதல் வெளிப்பாடு என்பதனால், “ப்ரதமஜ” அல்லது “முதல்பிறவி” என்றும் பொன் கருவரை அழைக்கப்படுகிறது. இதற்கான சமஸ்க்ருத தொழில்நுட்பச் சொல் “ஸம்பூதி”.
அறிவியல் (பௌதீக) கண்ணோட்டம்
பள்ளித் தோழன் ஒருவனை, நீங்கள் ஒரு மிக நீண்ட காலம் (உதாரணத்திற்கு 50 ஆண்டுகளுக்கு பிறகு) பிறகு ஒரு கூட்டத்தில் பார்க்கும் போது என்ன சொல்வீர்கள்?
1. “அதோ ! என்னுடைய 5ம் வகுப்பு பள்ளித் தோழன். அதே அங்க அடையாளம். ஐம்பது ஆண்டுகளானாலும் நான் மறக்கவிலை. அவன் பெயர் தாமோதரன்” என்று கூறுவீர்களா?
அல்லது
2. “இடைவிடா தொடர்ச்சித் தாக்குதலால் எண்ணற்ற போட்டான்கள் என் விழித்திரையில் விழுந்து, பார்வை நரம்புகள் வழியாக மின்னனு அலையாய் சென்று தாலமஸ் பின்னுள்ள இருமேடு சென்று அங்கிருந்து என் பிரதானமான காட்சிப்புறனி வழியாக, ஸட்ரையேட் காட்சிப்புறனியில் வண்ணங்களை அடையாளம் கண்டு, பின் பொருட்களை நினைவுக்கு கொண்டுவரும் மூளையின் முன்பகுதி சென்று ஆராய்ந்து என் பள்ளித் தோழன் தாமோதரனை தான் கண்டேன்” என்பீர்களா?
இரண்டும் சரியான கூற்று தான்; முதல் கூற்று பொருள் என்று கூறமுடியாத மனம் ரீதியானது, இரண்டாவது பௌதீகப் பொருளான மூளை ரீதியானது.
பொதுவாக, மனம் என்பது நம் எண்ணங்கள், உணர்வுகள், நினைவுகள், நம்பிக்கைகளின் ஒருபொருட் சொல்லாக கருதப்படுவது. மனம் பொருட்களால் ஆனது அல்ல. எனினும் மிகவும் சக்தி வாய்ந்தது.
மண்டை ஓட்டுக்குள், மூன்று பவுண்டு எடையுள்ள பாலாடைக்கட்டி போன்ற அமைப்பே, மனம் என்று நாம் கூறுவதன் பொருள் வடிவமான மூளை என குறைந்த பட்சம் விஞ்ஞானிகளாவது கருதுகிறார்கள். நமக்கு சிந்தனையோ அல்லது உணர்வோ தோன்றினால், அதற்கு மூளையே காரணம் என்றும், மூளை ந்யூரான்கள் வழி மின்னணு அலைகளச் செலுத்தி நரம்பியல் ரசாயனங்களை உற்பத்தி செய்வதால் அந்த சிந்தனையோ உணர்வோ ஏற்படுகிறது என்றும் கூறுகிறார்கள். நரம்பியல் அறிவியல் அறிஞர்கள் பெரும்பாலானோர், மனம் என்பதற்கு தனி இருப்பு என்று ஒன்றுமில்லை என்று வலியுறுத்துகின்றனர். அது மூளையின் ஆற்றலே தவிர அது சுயேச்சையாக இயங்கும் தன்மை கொண்டதல்ல என்றும் கூறுகின்றனர்.
ஆக, அறிதிறன் நரம்பியல் (cognitive neuroscience), மனித மனதின் உயிரியல் அடித்தளங்களை (biological foundations) கண்டறிய முற்படுகிறது. எப்படி மனச்செயல்பாடுகள் (mental operations) மூளையின் தகவல் செயல்முறை அமைப்பிலிருந்து (information processing architecture) உருவெடுக்கின்றது என்பதை அறிவது ஒரு நோக்கு. எப்படி? மனித மனம், மூளை இரண்டையும் தனிநிலையில் ஆய்வதா அல்லது வேறு பார்வையில் ஆய்வதா?
நம்முடைய அன்றாட உலகில் நாம் நமக்குச் சொந்தமான அனுபவங்களிலிருந்து, நம்மைச் சுற்றியுள்ள உலகம் கண்டு, சமூக உலகில் பங்கேற்று, , நெறிமுறைகளிலிருந்து வழி தேடி, அழகான அனுபவங்களில் மகிழ்ந்து, அருமை நண்பர்களுடன் பரிவுடன் கலந்து, இந்த அனைத்து அனுபவங்களையும் உள்வாங்கி அதன் அர்த்தங்களைப் புரிந்து கொள்கிறோம். இப்படிப்பட்ட சூழலில் மனித மூளையை தனித்த ஒருவரின் நிலையிலிருந்து பௌதீக ரீதியில் பார்ப்பது எப்படி சரியான அணுகுமுறையாகும்?
அரோன் பார்பே, இல்லினாய்ஸ் பல்கலைக்கழக மன இயல் பேராசிரியருடன் இன்னும் இருவரும் சேர்ந்து நடத்திய ஆராய்ச்சியில்
“அறிதிறன் நரம்பியலில் (cognitive neuroscience) பொதுவாக ஒருவரின் அறிவின் பிரதிநிதித்துவம் அவரது மூளையில் என்றும், அது ஒருவொருவருக்கிடையே நேருக்கு நேர் பரிமாற்றப்படுகிறது என கருதப்படுகிறது. காந்த அதிர்வு அலை வரைவு (MRI), கதிரியக்கத் துழாவல் (CT Scan) போன்ற ஆய்வுகள் தனிப்பட் ஒருவரின் மூளயைத் துழாவி அதன் செயல்பாட்டை யூகிக்க முடியும். எங்களின் ஆய்வு அத்தகயை கருத்து சில முக்கியமான நிகழ்வுகளில் சரியில்லை என்பதை நிருபனம் செய்கிறது. இதை ஊர்ஜிதப்படுத்த, சமீபத்தில் ஒரே சமயத்தில் பலர் ஒரே விஷயத்தை சிந்தனை பரிமாற்றம் செய்யும் பொழுது அவர்களின் மூளைகளை அதே சமயத்தில் காந்த அதிர்வு அலகளைப் படம்பிடித்த போது, அவர்களின் மூளைகளின் அதே பகுதிகளில் மின்னணு அலைகளின் ஆக்கம் தெரிந்தது. ஆக, இந்த அறிதிறன் நரம்பியலின் மிகப் பெரிய சவால் என்னவென்றால், ஒருவரின் மூளையில் உறையாமல் அடுத்தவரிடமோ, சமுகத்திடமோ வெளிக்குத்தகையிலிருக்கும் (outsourced) அறிவை எங்கனம் நாம் அறியமுடிவது என்பதே. ஒருவரின் அறிவாற்றல் என்பது பௌதீக உலகிற்கும், அடுத்தவர்களின் மூளைக்கும் பரவியுள்ளது” என்று கூறுகிறார்கள்.
மேல்கூறிய கருத்துக்கள், ஆய்வுகள் நம்மை மற்றொரு முக்கியமான தத்துவத்திற்கு அழைத்துச் செல்கின்றன. அதுவே கூட்டுணர்வு (collective consciousness) என்பதாகும். கார்ல் ஜங் எனும் புகழ் பெற்ற மனநிலையியல் நிபணர், ஒருவருக்கொருவருடனும், அவர்களின் முன்னோர்களுடனும் தங்களது பகிர்ந்த அனுபவங்கள் மூலம் மனிதர்கள் இணைக்கப்பட்டுள்ளனர் என நம்புகிறார். நம் உள்ளுணர்வு என்பது, நம் சொந்த அனுபவங்கள், நினைவுகள் மட்டுமில்லாமல், மனித குலத்தின் அனுபவங்களும் நினைவுகளும் நிறைந்த களஞ்சியம். அனைத்து மனிதர்களின் உள்ளுணர்வுகளும் இப்படியே. இக்கூட்டுணர்வு மூலமே நாம் உலக வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கொடுக்கிறோம் என கார்ல் ஜங் கருதுகிறார்.
மனம் என்பது பொருளான மூளையின் செயல் அல்லது வினைப் பரிமாணம். கூட்டு மனம் (collective mind) என்பது, பகுதிகள்-முழுமை, தனிநபர்-சமூகம், நிலையான தன்மை-மாற்றம், பகுத்தறிவு-படைப்பாற்றல் இவைகளுக்கிடையே உள்ள எல்லைகள்/வேற்றுமைகளைக் கருதாமல், உறவுகளை ஏற்படுத்துகிறது. அப்படிப்பட்ட கூட்டுமனம் ஒவ்வொருவரின் மனநிலையையும், கூட்டான மனநிலைக்குதவியும் அந்நிலைகளை புரிந்து கொள்கிறது.
கூட்டு மனம் / கூட்டு உணர்வைப் படித்தறிய உலகம் முழுவதும் விரிவான விஞ்ஞான ஆய்வு நடக்கிறது.
உயர்நிலை தத்துவ கண்ணோட்டம்
இதுவரை பௌதீக அளவில், உலகத்தில் மனம், மூளை, உணர்வு என்பவைகளப்பற்றிய கருத்துக்களைப் பார்த்தோம் இப்பொழுது, இவைகளை உயர்நிலை தத்துவ ரீதியில் (உலகத்திலிருந்து அண்டங்கள் அடங்கிய ப்ரபஞ்ச நிலை) ஆராய்வோம்.
இரவில் விண்ணை நோக்குங்கள். எத்தனை நட்சத்திர மண்டலங்கள, கோளங்கள்? இந்த பிரபஞ்சத்தை நன்றாகப் பாரத்தபின் இவ்வினாக்கள் நம் மனதில் எழும்.
இந்த நட்சத்திரம் சரி, இது தவறு; இந்த மண்டலம் சரியாக அமைந்துள்ளது, இது இல்லை என்று ஒப்பிடுகிறோமா?
விண்மீன் திரைகளில் ஒன்றின் வெளிப்புற விளிம்புகளில் உள்ள ஒரு சிறிய (!) நட்சத்திரத்தை சுற்றி சுழலும் ஒரு முக்கியமற்ற (!) மண், நீர் கலந்த ஒரு பந்து மீது நாம் வாழ்கிறோம் என்று சிந்திக்கின்றோமா?
உருவாக்கம், பராமரிப்பு மற்றும் அழிவு ஆகியவற்றின் தெளிவாக அமைக்கப்பட்ட செயல்முறைகளை நாம் காண்கிறோமா?
இவைகளையெல்லாம் ஊடுருவி, சுற்றிப் பிணைக்கும் பேருணர்வு எனும் நூலை நாம் காண்கிறோமா?
இவ்வினாக்களுக்கு சரியான விடைகள் உண்டோ இல்லையோ தெரியாது; அது ஒவ்வொருவருன் மனநிலையைச் சார்ந்தது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாகப் புரிகிறது. இவற்றின் பின், எல்லாவற்றிலும் நாம் ஒரு ஒழுங்கு, ஒரு தர்மம் (இந்த பிரபஞ்சத்தை கையாள்வதில் நமது செயல்களைத்தவிர) பார்க்கிறோம், இல்லையா? இப்படிப்பட்ட ஒழுங்கு, தர்மத்தை எப்படி இப்பிரபஞ்சம் கடைப்பிடிக்கிறது? இந்த உத்தரவு எங்கிருந்து வருகிறது? எங்கோ கூட்டு மனம் / கூட்டு நுண்ணறிவு / கூட்டுணர்வு ஒன்று இருந்து இதை நிலைநாட்டிக் கொண்டிருக்க வேண்டும். அது மட்டும் உறுதி அல்லவா? என் வார்த்தையை குறிக்கவும். நான் “கூட்டு மூளை” என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை.
என் வரையறுக்கப்பட்ட அறிவைப் பொருத்தவரை அந்த கூட்டு மனம் / கூட்டு நுண்ணறிவு / கூட்டுணர்வு (சமஷ்டி மனம்) என்பதனையே பொன் கருவறை என அழைக்கிறோம். வேதங்களின்படி இதுவே முதல் படைப்பு.
பொன் கருவறை என்பது அனைத்தின் ஒன்று கூடிய மனம் (புத்தியும் சேர்ந்த) என்பதனால், அந்த அனைத்து நுண்நிலைகளின் ஒருமித்த நிலை, உடல் மன வளாகத்திலிருக்கும் பொறிபுலன்களுக்கு அப்பாற்பட்டது. எனவே அப்பொறிபுலன்களுக்கு அக்கருவறை புலப்படாது. அந்நிலையில் மாயையின் வெளிப்படுத்தும் (உந்தும்) சக்தியினால், மன உடல் வளாகமுறை ஜீவன், தானே காரணம், தானே நுகர்வோன் என எண்ணி நுண்நிலை இருப்புகளை பருநிலை உலகாகவும், பொருள்களாகவும் வெளிப்படுத்துகிறது. வெளிப்படுத்தியதோடல்லாமல், அப்படி வெளிப்பட்ட உலகமும், பொருட்களும் நிலையானது என்ற தவறான புரிதலும் கொள்கிறது.
ஸம்பூதி உபாஸநா
ஹிரண்ய கர்பத்தை தியானம் செய்வதே ஸம்பூதி உபாஸநா எனப்படும்.
ஸ்வாமி பரமாரத்தானந்தாவின் போதனைகளை இங்கு மேற்கோளாக காட்டுகிறேன்:
“ஹிரண்யகர்ப்பம் என்பது பொறி புலன்களுக்கு அப்பாற்பட்டது, அவைகளால் அதனை உணரமுடியாது என்றால் அந்த ஹிரண்யகர்பத்தை எப்படி தியானிப்பது? அதற்கு ஒரு யுக்தி உள்ளது. ஒரு சின்னத்தை (ஆலம்பனம்) பயன்படுத்துவது. கூட்டு மனதின் (சமஷ்டி மனம்) சின்னமாக நம் மனதை (வ்யஷ்டி மனம்) பயன்படுத்துவது. அதாவது, கவனைத்தை நம் மனம்மேல் திருப்பி தியானிப்பதுவே ஹிரண்யகர்ப்ப தியானம்”. இதுவே ஒரு எளிய விளக்கம்.
சரி, நம் மனம் எங்குள்ளது? நமது சாஸ்த்திரங்கள், மனது மூளையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்று சொல்கின்றன. மூளை பொறி புலன்களால் அறியக்கூடிய ஒரு பருஉடல் உறுப்பு. மனம் காண இயலா ஒரு நுட்பமான கருவியாகும். மரணத்தின் போது, மூளை உடலுடன் எரிந்து சாம்பலாகும். மனம் பிழைத்து, உடல் எரிந்தபின்னர் இன்னொரு உடலைத்தேடி அலையும். அறிவியல் இந்த கருத்தை ஏற்கவில்லை.
மறைகள், நமது ஐம்புலன்களுக்கும் (இந்திரியம்) ஏற்ப உடலில் ஐம்பொறிகள் (கோலகம்) உள்ளதை உரைக்கின்றன. உதாரணமாக நமது பார்வைக்கு கண்களே கருவி. குருடர் என்று நாமழைக்கும் மனிதருக்கு பொறிகள் (கோலகம் – கண்கள்) உண்டு புலன் (இந்திரியம் – பார்வை) இல்லை. அதைப்போல நமது மனதின் பொறி (கோலகம்) இதயம் (ஹ்ருதயம்) என்று கூறுகிறர் ஆதி சங்கரர். விழிப்பு நிலையில், மனம் உடலை மேவி பணி புரியும். ஆழ் உறக்க நிலையில் உடலிலிருந்து விலகி அதன் இல்லமான (கோலகம்) இதயத்திற்கு திரும்பும். ஹிரண்யகர்பம் என்பது எல்லாம் வல்ல, எல்லாம் அறிந்த கூட்டு மனம்”.
ஸம்பூதி உபாஸநாவின் பலன்கள்
அடிப்படையில் இந்த வழிபாட்டில் பிரதானமாகப் பயன்படுத்தப்படும் நுட்பம், தியானம். இப்படி ஹிரண்யகர்ப்ப (ஸம்பூதியை) தியானிப்பவர்கள், பிரபஞ்சத்தை வழிபடுகிறார்கள். அதாவது அனைத்துப் படைப்புகளும் ஒன்று, இயற்றகையெனும் ப்ரக்ருதியும் ஒன்று என்ற அடிப்படை உணர்வுடன் வழிபடுவது. அந்த உணர்வில் அவர்களும், இயற்கையும் பிரபஞ்சமும் வேறு என்று அவற்றை வழிபடுகின்றனர். அதாவது, இறையும் நானும் வேறு என்ற உட்கருத்துடன் வழிபடுவது.
இவ்வழிபாட்டின் மூலம் இஞ்ஞானிகள் ஓப்பீட்டளவில் அழிவிலா நிலை அடைந்தாலும், இயற்கையுடன் கலந்திணைந்து மரணத்தைக் கடந்து மறுபிறவி தவிர்ப்பரே (க்ரம முக்தி) அன்றி வீடுபேறு அடைவது என்பது இவ்வகை வழிபாட்டில் இயலாதது. ஏனெனில் அந்த தியானத்தின் உட்கருத்தில் இருமை உளது (நான் வேறு, இறை வேறு).
அந்த வழிபாடு புரியும் ஞானிகள், பிரம்ம லோகம் என்னும் இறை உலகத்தை ஷுக்ல கதி என்ற பாதை வழி அடைவர் என்று மறைகள் கூறுகின்றன. அந்தப்பாதை இதயத்திலிருந்து தொடங்குவதாய் மறைகள் கூறுகின்றன. மரணத்தின் போது (உடலை விட்டு உயிர் பிரியும் போது) நுண்ணுடலும், காரண உடலும் இதயத்திற்கு திரும்புகின்றன. அங்கிருந்து தோன்றும, 101 நாடிகளில் ஒன்றான சுஷும்ன நாடி வழியாக மேல்நோக்கி சென்று கபால உச்சி வழியாக, சூரியன் வழியாக பிரம்ம லோகம் அவைகள் அடைந்திடும் என்று மறைகள் உரைக்கின்றன. இதைப்பற்றிய விபரங்கள் இந்த முன்னோக்கில் அடங்க வில்லை என்பதை அறிக.
பிரம்ம லோகம் அடையும் இஞ்ஞானியர் அட்டமா சித்திகளை அடையக்கூடும். எனினும், அவைகளால் அடையும் மகிழ்வும் நிலையற்றதே என மறைகள் கூறுகின்றன.
தசகம் 7 – முதல் ஸ்லோகத்தை அடுத்த பதிவில் காண்போம்.