ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 9

ஸ்லோகம்

किं वा कुर्वे विषमविषयस्वैरिणा वैरिणाहं
बद्धः स्वामिन् वपुषि हृदयग्रन्थिना सार्धमस्मिन् ।
उक्ष्णा दर्पज्वरभरजुषा साकमेकत्र बद्धः
श्राम्यन्वत्सः स्मरहर युगे धावता किं करोतु ॥ ९॥

கிம் வா குர்வே விஷமவிஷயஸ்வைரிணா வைரிணாஹம்
பத்த: ஸ்வாமிந் வபுஷி ஹ்ருதயக்ரந்திநா ஸார்தமஸ்மிந் ।
உக்ஷ்ணா தர்பஜ்வரபரஜுஷா ஸாகமேகத்ர பத்த:
ஶ்ராம்யந்வத்ஸ: ஸ்மரஹர யுகே தாவதா கிம் கரோது ॥ 9॥

தமிழாக்கம் 

புலனின்பப் பொருள் பின்னே 
தரிகெட்டுத் தன்னிச்சையால்
திமிறி ஓடிடும் அகமுடிச்சுகள்
அடங்கியுள்ள காயம் தனில்
பிணையுண்ட என்செய்வேன்!
நுகத்தடி ஒன்றினிலே திமிறும்
முரட்டுக் காளையுடன் பூட்டிய
களைத்த தளர் இளங்கன்று 
என்செய்ய இயலும் காமகோபனே!! 9

சொற்களின் பொருள்

ஸ்வாமிந் – உயிரை ஆளும் இறைவனே – எனையாளும் இறையோனே

விஷம விஷய ஸ்வைரிணா – ஒழுங்கில்லாமல் + சுவை, ஒளி, ஒசை, ஊறு, சப்தம் எனும் புலப்பொருட்கள் + தன்னிச்சையாக. அதாவது 

(கரடு முரடான பிரதேசங்களில்) பல விதமான புலனின்பப் பொருட்களின் பின், கட்டுக்கடங்காமல், தண்ணிச்சையாக திமிறிக்கொண்டு ஓடும் 

வைரிணா – பகைவர்களான 

ஹ்ருதயக்ரந்திநா – இதய முடிச்சுகள் (அவித்யா காம கர்ம – அறியாமை, ஆசை, செயல்)- குறள் 360

ஸார்தம் – கூடியதான

அஸ்மிந் – இந்த 

வபுஷி – உடலான வண்டியில் 

பத்த: – பிணைக்கப்பட்ட 

அஹம் கிம் வா குர்வே – நான் என்னதான் செய்ய முடியும் 

ஸ்மரஹர – காமனை எரித்தோனே 

தர்பஜ்வரபரஜுஷா – திமிர் மிகுதியானால் கொதிப்புள்ள

தாவதா – பாய்ந்தோடும்

உக்ஷ்ணா ஸாகம் – காளையுடன் கூடிய

ஏபத்ர யுகே – ஒரே நுகத்தடியில் 

பத்த: – பூட்டப்பட்ட 

ஶ்ராம்யந் – சிரமத்தினால் சோர்வுற்ற

வத்ஸ: – இளங்கன்று 

கிம் கரோது – என்ன செய்யக்கூடும்

விளக்கம்

முன் சுலோகத்தில் கூறியதை இங்கு விரித்துரைக்கின்றார். ஸுலபமான துக்க நிவ்ருத்தி மார்க்கத்தை அறிந்திருந்தும் நான் துஷ்டத்தனமுள்ள விஷய வாஸனையினால் தோற்கடிக்கப் பட்டவனானேன். பார்ப்பதற்கு ஸுகம் போலவும் இறுதியில் துக்கத்தைத் தருவதுமான இந்திரியார்த்தங்களில் ஆவேசத்துடன் பாயும் அநேக காலவாஸனா ஜடிலமான என் மனம் என்னைத் தூக்கி வாரிக் கொண்டுபோய் அனர்த்தங்களுக்கு உள்ளாக்கி விடுகிறது.

நான் என்ன செய்வேன், ஒரு முரட்டுக் காளையுடன் ஒரே வண்டியில் பூட்டப் பெற்ற இளங்கன்று என்ன செய்யும்? காளை மேடுபள்ளம் பார்க்காமல் திமிரிக் கொண்டு அதிவேகமாய் ஓடவாரம்பிக்கும் போது இளங்கன்று எவ்வித பரிதாப நிலையை அடையும்?

வாஸனை முடிச்சுக்களேறிய திமிர் கொண்ட என் மனத்துடன் நானும் இச்சரீரமாகிற வண்டியில் கட்டப்பட்டிருக்கிறேன். பலமற்ற நான் (ஜீவன்) துஷ்டவாஸனைகளால் அடக்க வொண்ணாத என் மனம் இழுத்த இடமெல்லாம் பரிதபித்துக் கொண்டே ஒடுகிறேன். என்னால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.  

ஒரே நுகத்தடியில் பூட்டப்பட்ட முரட்டுக்காளையும், இளங்கன்றும் என்ற உருவகத்தைப் பயன்படுத்துகிறார் தீக்‌ஷிதர். கட்டுக்கடங்காது ஒடும் முரட்டுக்காளையுடன் இளம்கன்று படும்பாடு என்ற உருவகத்தைக் கூறி, முரட்டுக்காளை எனும் மனத்துடன், ஜீவன் எனும் இளங்கன்றின் நிலையை எடுத்துரைக்கிறார் அப்பையர். 

சீராரும் நின் தேஜோமயானந்த

தெரிசங் காட்டு பகலே

தேகாதியாகும் ப்ரபஞ்ச இருளாகியே

திண்டாடும் மும்மலப் பேய்

போராடுது என்னுடன், நான் ஏழை, அதனுடன்

போராட முடிவதில்லை ,

புலையாடல் ஒருநாள் இரண்டு நாளோ? இது

பொறுக்கவும் படுவதில்லை

ஆரோடு சொல்லி என் குறையாறுவேன்? எனக்கு

அன்னையே! அப்பனே! உன்

ஆறுதலையன்றி வேறில்லை , நீ நழுவவிடில்

அடியேன் அலைந்து போவேன்

ஓராலின் நிழலில் உறைந்து சனகாதியர்க்கு

உள்ளபடி அருள் தெய்வமே!

ஒன்றாகி ஆனந்த உருவாகி என் உயிர்க்கு

உயிரான பரமசிவமே!

என்ற, தரும்புர ஆதினம் பத்தாவது குருமகாசன்னிதானம் சிவஞான தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அருளிய தக்‌ஷிணாமூரத்தி திருவருட்பா, மும்மலப் பேய்களின் போராட்டம் தனையே பிரதிபலிக்கிறது. 

உணரச்சிப் பெருக்கு நிறைந்த உள்ளத்துடன் இணைந்திருக்கும் என்னை, உள்ளத்திலிருந்து விடுவிப்பாயாக என்பதே இப்பண்ணின் சாரம்.

ஶ்ரீமந் நாராயணீயம் – தசகம் 7 – முகவுரை

ஒருவரின் இயல்பு (“ஸ்வரூபம்”) என்பது, “சத்சித்அனந்தம், சச்சிதானந்தம், இருப்பு -அறிவு (உணர்வு)-பேரின்பம் என்றெல்லாம் அழைக்கப்படும் இருமையற்ற பரம்பொருளான பிரம்மம் என்பதே  என்று அறிந்துணர்வதே அனைத்து மனித முயற்சிகளின் இறுதி இலட்சியம் என்கின்றன நமது மறைகள். இந்த முயற்சிகளின் போது, நாம் பல பிறப்புகளையும் வடிவங்களையும் எடுக்கலாம். எனவே அரிதான இப்பிறவியில் மனிதராகப் பிறந்த, மிகவும் அதிர்ஷ்டசாலிகளான நாம், நமது உண்மை இயல்பான பரம்பொருளெனும் பிரம்மத்தை அறிய, இப்பிறவியிலேயே முயற்சிக்க வேண்டும்.

இம்முயற்சியில் நமக்கு உதவ, ஸ்ரீ. நாராயண பட்டத்திரி தனது காவிய படைப்பான ஸ்ரீமன் நாராயணீயத்தின் முதல் அத்தியாயத்தை (தசகம் 1) இருமையற்ற பிரம்மத்தின் பண்புகள், மகிமை மற்றும் மகத்துவத்தை விவரிப்பதன் மூலம் தொடங்கி, பிரம்மம் இங்கேயே குருவாயூரப்பனின் வடிவத்தில் உடனடியாகக் கிடைக்கிறது என்று கூறினார்.

பின்னர், பரவசத்தில் மூழ்கி, தசகம் 2 இல் பரம்பொருளான, குருவாயூரப்பனின் மகிமையான வடிவத்தை விவரித்தார்.

அடுத்த தசகம் 3, பக்தியில் கவனம் செலுத்துகிறது. பக்தி மார்கம், சுய உணர்தலுக்கான ஆரம்ப பாதையாகவும் இறுதியில் பிரம்மத்தை நோக்கியதாகவும் அவர் கருதுகிறார். இந்த தசகத்தில், தெய்வீக அருளைத் தேடும் ஒரு பக்தரின் உண்மையான இயல்பையும், “வைராக்யம் மற்றும் சிரத்தை”யின் அவசியத்தையும் வலியுறுத்தி அவர் விவரிக்கிறார்.

ஒரு பக்தன்/ ஆன்மீக சாதகன், தன்னுள் இருக்கும் இறையுணர்வினை/ஆன்ம ஆற்றலை அறிந்து அவ்வாற்றலைப் பயன்படுத்தி இறைநிலைக்கு உயர்ந்து இறைவனுடன் ஒன்றிணையும் நிலையே தியான யோகம் எனப்படுகின்றது. இதனைத் தமிழில் தவம் என்பர். இவ்யோக நெறிகள் பலவாகும். அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்றாக விளங்குவது அட்டாங்க யோகமாகும். இவ்வட்டாங்க யோகத்தையே

‘‘இயம நியமமே எண்ணிலா ஆசனம்

நயமுறு பிராணாயாமம் பிரத்தியா காரம்

சயமிகு தாரணை தியானம் சமாதி

அயமுறும் அட்டாங்க மாவது மாமே.

( திருமூலர் – திருமந்திரம்.10 பா.542) என்று திருமூலர் கூறுகிறார்.

தசகம் 4 இல், பட்டத்திரி, இந்த அஷ்டாங்க யோக நுட்பங்களை கோடிட்டுக் காட்டுகிறார். பக்தர்கள் ஆதி அந்தமிலா, நீக்கமற நிறை, இருமைகளிலா பரம்பொருளான குருவாயூரப்பனை அறிந்துணர தியானம் இன்றியமையாத சாதனம்.

அறிவதற்கரிதான இந்த பரம்பொருள் தத்துவத்தை தியானிப்பது என்பது, தேய்ந்து சிதையும் உடல்-மன வளாகத்திற்குள் பிணைக்கப்பட்டு, புறநோக்குடன் பொருளின்பம் தேடும் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு மிகவும் கடினம். எனவே, பட்டத்திரி தசகம் 5 துவங்கி, படிப்படியான அணுகுமுறையின் மூலம் பரம்பொருளான குருவாயூரப்பனை அறிய உதவுகிறார்.

பேரழிவுக் காலமதில் தன்னிடம் ஒடுங்கிய அனைத்தையும், பரம்பொருளான குருவாயூரப்பன் தன் இயக்க இச்சையால், உலகு படைத்திட்ட பரிணாம செயல்முறைகளை விவரிக்கின்றார் தசகம் 5 இல். அண்டங்களனைத்துமடங்கிய மொத்த நுண்நிலை வெளிப்பாடான “ஹிரண்யகர்பம்”, பருநிலை வெளிப்பாடான “விராட்” இரண்டுமே பரம்பொருளான குருவாயூரப்பனே என எடுத்துரைக்கிறார். ஆக, பரம்பொருளை தியானிக்க ஞானியர் புரியும் இரு உபாசனைகளை (ஹிரண்ய கர்ப உபாஸநா, விராட் உபாஸநா) கோடிட்டுக் காட்டுகிறது இந்த தசகம்.

அதைத் தொடர்ந்து “விராட்” என்று அழைக்கப்படும் அண்ட மொத்த பருநிலை வடிவத்தை விளக்குகிறார். வேதங்களில் போற்றப்படும்படி உள்ள, பதினான்கு உலகங்களைக் கொண்ட அண்ட உடல், எண்ணற்ற கைகள், கால்கள், முகங்கள் போன்ற ஒரு வடிவத்தை அவர் முன்வைக்கிறார். தசகம் 6 இல் விராட் ரூப வடிவத்தின் பல்வேறு பகுதிகளை விவரிக்கத் தொடங்குகிறார். அந்தச் செயல்பாட்டில் அவர் பல்வேறு பகுதிகளை பிரபஞ்சத்தின் பல்வேறு பகுதிகளுடன் அடையாளம் காண்கிறார். இது “விராட் உபாஸநா” புரிய உதவம், ஆன்மீக சாதகர்களுக்கு.

“பருநிலையில் முக்குணங்களுடனாகிய “விராட்” வடிவத்தில் கவனம் செலுத்தக்கூடிய இந்த தியான செயல்முறைக்குப் பிறகு, பட்டத்ரி பக்தர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்கிறார் தசகம் 7ல். இதில் குருவாயூரப்பனாக காட்சி தரும் பிரம்மத்தின் வெளிப்பாடு நுட்பமாகிறது. இதில் பரம்பொருளான குருவாயூரப்பனே, “ஹிரண்யகர்ப்பர், நான்முகக் கடவுள், படைப்பாளர் என்றெல்லாம் அழைக்கப்படும் பிரம்மாவின் வடிவமெடுத்து, அண்டங்களின் படைப்புத் தொழிலை நான்முகனாக நடத்துவதை கூறுகிறார் பட்டத்ரி.இது “ஹிரண்யகர்ப உபாஸநா” புரிய உதவம், ஆன்மீக சாதகர்களுக்கு.

பரம்பொருளான, ஶ்ரீ குருவாயூரப்பன் அருளினாலே, தசகம் 7 பற்றிய எனது கல்வியை, இந்த கருட பஞ்சமி நாளில் துவங்கியுள்ளேன். விரைவில், எளியோன் யான் அறிந்ததை, தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இறையருள் பெருக ! வளமுடன் வாழ்க !

ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 8

ஸ்லோகம்

अर्कद्रोणप्रभृतिकुसुमैरर्चनं ते विधेयं
प्राप्यं तेन स्मरहर फलं मोक्षसाम्राज्यलक्ष्मीः ।
एतज्जानन्नपि शिव शिव व्यर्थयन्कालमात्मन्
आत्मद्रोही करणविवशो भूयसाधः पतामि ॥ ८॥

அர்கத்ரோணப்ரப்ருதிகுஸுமைரர்சநம் தே விதேயம்
ப்ராப்யம் தேந ஸ்மரஹர பலம் மோக்ஷஸாம்ராஜ்யலக்ஷ்மீ: ।
ஏதஜ்ஜாநந்நபி ஶிவ ஶிவ வ்யர்தயந்காலமாத்மந்
ஆத்மத்ரோஹீ கரணவிவஶோ பூயஸாத: பதாமி ॥ 8॥

தமிழாக்கம் 

எருக்கம் தும்பை மலரால் பூசை
என்றே உரைத்தன மறை நான்கும்!
அப்பூசை தரும் முக்திப் பேரின்பமென 
அறிந்தும் காலம் வினையம் புரிந்து
ஐம்புலனின்ப மயக்கம் கொண்டு 
ஆத்ம துரோகியென அதிவிரைவாய்
அதலம் நோக்கி வீழ்கின்றேன் 
பரமாத்மனே சிவபெருமானே !! ,8

சொற்களின் பொருள்

ஸ்மரஹர – காமத்தை எரித்தவனே 

அர்க த்ரோண ப்ரப்ருதி குஸுமைஹி – (எளிதில் கிடைக்கும்) எருக்கம், தும்பை முதலான (ப்ரப்ருதி) பூக்களால்

தே அர்சநம் – உன்னைப் பூசிக்க வேண்டும் என 

விதேயம் – வேதங்களில் கூறப்பட்டுள்ளது

தேந – அந்த வழிபாட்டினால் 

ப்ராப்யம் – கிடைக்கும் 

மோக்ஷஸாம்ராஜ்யலக்ஷ்மீ: – பேரின்ப வடிவான மோக்‌ஷம்

பலம் – பலன் 

ஆத்மந் – பரமாத்மாவான

ஸிவ ஸிவ – சிவபெருமானே

ஏதத் – இந்த உண்மையெல்லாம்

ஞாநந் அபி – அறிந்த பின்னும் 

கால – காலத்தை 

வ்யர்தயந் – வீணடித்துக்கொண்டு

கரணவிவஶோ – இந்திரியவயம் மயங்கி 

ஆத்மத்ரோஹீ – தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்டு

பூயஸா – மிக விரைவாக (அடிக்கடி)

அத: – கீழே

பதாமி – விழுந்துகொண்டிருக்கிறேன்.

பொருள் விளக்கம்

உன்னை ஆராதிப்பது அடியேனுக்கு சிரமமான காரியமில்லை. எருக்கு தும்பை முதலிய மணமற்ற, யாரும் வேண்டாத, எங்கும் கிடைக்கக்கூடிய புஷ்பங்களால் உன்னை அர்ச்சனை செய்தால் போதும். இவ்வளவு ஸுலபமான ஆராதனைக்கு ஏற்படும் பலமோ வீடுபேறு. இதை அறிந்திருந்தும் முக்தியைத் தேடிக்கொள்ளாத நான் ஆத்ம துரோகி என்பதில் ஐயமென்ன? சிவ சிவ என்ன பரிதாபம், நான் வீணாகக் காலத்தை விஷய சபலனாகவே கழித்து வருகிறேன். அதன் பயனாக அதோகதியை அடைகிறேன். 

உலகத்தில் கடுமையான துன்பத்தை அனுபவிக்கும் ஒருவன் அதினின்றும் தன்னை விடுவித்துக் கொண்டு மஹத்தான சுகத்தையும் அடைய வெகு எளிய வழியை அறிந்திருந்தும் அதற்கு முயற்சி செய்யாமல் துக்கத்திலேயே உழன்று கொண்டிருப்பானாகில் அவன் எவ்வளவு மூடன், என 

ஜீவனாகிய நான் சிவனாகிய உன்னைச் சார்ந்திருப்பதை விட்டுவிட்டு அஸிவமாமாகிய உலகப் பொருட்களையும் உறவுகளையும் சாரந்திருக்கிறேன். என்னைப் பொருத்தருள்வீர் என்கிறர் தீக்‌ஷிதர் இந்த ஸ்லோகத்தில்.

இதுவும் ஆத்ம நிந்தனை முறையில் பக்தி. உடலுக்கு நன்மை செய்து, உயிருக்குக் கெடுதல் செய்யும் பாவியான ஆத்மத்ரோஹீ நான் என்கிறார்.

ஆத்மத்ரோஹீ – விளக்கம்

உயிருக்கு பிறப்பு, இறப்பு இல்லை. உயிர் வருவதும் போவதும் இல்லை. உயிருக்கு உடல் கிடைத்தது, மனிதன் பெற்ற பெரு வாயப்பு. 

உயிருக்காகத்தான் உடல். உயிர் மனமுடன் இணைந்திருக்கிறது. இந்த மனமே பரு உடலை, உயிருடன் இணைக்கிறது. அதனால் உயிர், உடலுக்கே உழைக்கிறது. உடல் உயிரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். உண்மையில் உயிருக்காக இருக்கும் கூடு உடல். உயிருக்காக உடலைக் கவனி. உடலுக்காக உடலைக் கவனித்தால், உயிர் திரும்பித் திரும்பி உடலையே நாடும். மனிதன் ஒருவனுக்கே மீண்டும் உடல் எடுக்கா வாய்ப்பு உள்ளது. அப்படி அரிதாகப் பெற்ற உடலை வீண்டிப்பது கூடாது.  

இதனை ஈஸாவாஸ்ய உபநிஷத் (3), 

असुर्या नाम ते लोका अन्धेन तमसावृताः ।
तांस्ते प्रेत्याभिगच्छन्ति ये के चात्महनो जनाः ॥ ३ ॥

அசுர குண மடமையுடன் இருள் கொண்டு குருடரென
அகமுறை இறை உணர்வறியா ஆன்மக் கொலையாளிகள்

ஈஸாவாஸ்ய உபநிஷத் (3)

அல்லலெனும் மாசாம் பிறவிப் பிணி பெருவரே மூடரவர் என்று தன்னுடைய உடலைத் தான் எனக் கருதுபவது தற்கொலை என்பதைத் தெளிவாக கூறுகிறது. 

எனவே, உயிருடன் இணைந்த மனம் (தன்னுணர்வு) அழிய வேண்டும். அது அழிந்தால்தான், உயிர் உடலுடன் அடையாளம் கண்டுகொள்ள இயலாது.  அதற்கு மெய்யறிவு தேவை. மெய்யறிவிற்கு இன்றியமையாதது, இறையருள். இறையருளை நாடுவதே ஆன்மீகத்தின் முதல்படி.

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே – 

என்று உடலை வளர்ப்பதனை திருமந்திரம் கூறுகிறதே என திருமந்திரத்தை தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. 

திருமந்திரம் கூறும் உடம்பை வளர்க்கும் உபாயம், உடல் பரம்பொருளின் உறைவிடம் என்ற ஐயம் திரிபு அற்ற மன உறுதியுடன், நன்னெறி வழியில் உடலைப் பாதுகாப்பது என்பதே.

ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 7

ஸ்லோகம்

उत्पद्यापि स्मरहर महत्युत्तमानां कुलेऽस्मिन्
आस्वाद्य त्वन्महिमजलधेरप्यहं शीकराणून् ।
त्वत्पादार्चाविमुखहृदयश्चापलादिन्द्रियाणां
व्यग्रस्तुच्छेष्वहह जननं व्यर्थयाम्येष पापः ॥ ७॥

உத்பத்யாபி ஸ்மரஹர மஹத்யுத்தமாநாம் குலேঽஸ்மிந்
ஆஸ்வாத்ய த்வந்மஹிமஜலதேரப்யஹம் ஶீகராணூந் ।
த்வத்பாதார்சாவிமுகஹ்ருதயஶ்சாபலாதிந்த்ரியாணாம்
வ்யக்ரஸ்துச்சேஷ்வஹஹ ஜநநம் வ்யர்தயாம்யேஷ பாப: ॥ 7॥

தமிழாக்கம்

உயர்பண்பு நிறை பேர்குலமதனில் உதித்தும் 
உன் புகழ்கடலெழு நீர்த்திவலை அருந்தினும்
புலனின்ப நாட்டமதனால் உன்திருவடி தொழாப்
பாவியென அற்பங்களில் தினவுகொண்டு, அந்தகோ
பிறவிதனை வீணடிக்கின்றேனே, காமற்காய்ந்தனே !! 7

சொற்களின் பொருள்

ஸ்மரஹர – மன்மதனை (காமனை) அழித்தவனே, காமகோபன், காமற்காய்ந்தான்

அஸ்மிந் – இத்தகைய

மஹதி – மிகவும் உயர்ந்த

உத்தமாநாம் – பண்பட்ட

குலே – குலத்திலே 

உத்பத்யாபி – உத்பத்ய அபி – பிறந்திருந்த போதிலும் 

அஹம் – நான் 

த்வத் – உன்னுடைய

மஹிமஜலதே – மகிமைகளாகிய பெருங்கடலினுடைய 

ஶீகராணூந் – ஶீகர் அணூந் – சிறு திவலைகளை 

ஆஸ்வாத்ய அபி – அருந்திய போதிலும

இந்திரயாநாம் – இந்திரியங்களின்

சாபலாத் – சபலத்தால் (புலனின்ப நாட்டத்தால்) 

த்வத்பாதார்சாவிமுகஹ்ருதய – த்வத் பாத அர்சா விமுக ஹ்ருதய – உன் திருவடிகளை வழிபடுவதிலிருந்து விலகிய உள்ளம் படைத்தவனாய்

ஏஷ – இந்த 

பாப: – பாவியானவன்

துச்சேஷ் – அல்பமான விஷயங்களில்

வ்யக்ர: – பரபரப்புடைநவனாய்

ஜனநம் -பிறவியை 

வ்யர்தயாமி – வீணடித்துக் கொண்டிருக்கிறேன்

அஹஹ – அந்தோ ! 

பொருள் விளக்கம்

சிவபெருமானை, ஸ்மரஹர என்று அழைக்கிறார் தீக்‌ஷிதர். ஸ்மர என்றால் நினைத்தல். எல்லாராலும் எப்பொழுதும் நினைக்கப்படுவது காமம் (இனக் கவரச்சி, பாலுணர்ச்சி).  எனவே ஸ்மர என்பது காமனைக் குறிப்பது. ஸ்மர அரி என்பது காமத்தை அழிப்பது எனவாகும். மன்மதனை அழித்தவன் என்பது சொற்பொருளாயினும் இதன் கருப்பொருள் இவ்வாறு:

இந்த சொல், விஷயத் த்யானத்தைப் பற்றிய எச்சரிக்கை. இந்திரிய விஷயங்கள் பற்றிய முதல் எண்ணங்களை ஏற்காது, அந்த எண்ணங்கள் நுழையும்போதேஅவற்றைப் பகைவர்கள் என்று அறிகிறான் அறிவாளி. பொருளின்ப எண்ணங்கள், பொருட்களுடனான உறவை ஏற்படுத்தும். அந்த உறவு ஆசையில் அவாவில் தள்ளும். அவா எனும் காமத்தடையினால் கோபம் வரும். கோபம் வந்தால் புத்தி தடுமாறும். குழப்பம் ஏற்படும். குழப்பத்தினால் சாஸத்திரத்தில் கற்றது மறக்கும். கற்றது மறந்தால், புத்தியிருந்தும் பயனில்லை. பயனிலா புத்தியால் பிறவியால் பயனேதுமில்லை.

“ஸங்கஹ – காமஹ – க்ரோதஹ – ஸம்மோஹஹ – ஸம்ருதி விப்ரமஹ – புத்தி நாஸஹ – ப்ரநஸ்யதி” 

பற்று – ஆசை – கோபம் – மயக்கம் (பகுத்தறிவின்மை) – நினைவு தவறுதல் – புத்தியின் அழிவு – அழிவு (வாழ்வின் குறிக்கோளை அடையத் தகுதியற்றவனாகுவது) என்று ஒன்று மற்றொன்றை விளைவித்து, அழிவிற்கு இட்டுச் செல்வன. எனவே

விஷயத்யானம் ஸர்வ (புருஷார்த) அனர்த்த ஹேது: – புலனின்பப் பொருட்களை கண்ணுதல் மனிதப் பிறவியை வீணடித்துவிடும்.

தர்மானுஷ்டானம் விஷய க்ரஹனம் ப்ரஸாத ஹேது: – முறையான அறவழியில் செல்கின்ற புலனின்ப நுகர்ச்சி, உள்ளத்தைத் தெளிவுபடுத்திப் புலனின்பங்களிலிருந்து நம்மை விடுவிப்பதைக் குறிப்பது. இதற்கு “பொறிவாயில் ஐந்தவித்தான்” என்ற குறள் சொல் மிகப் பொருத்தமானது.

ஆக, ஸ்மர ஹரி என்று இறைவனை அழைப்பது, என்னுடைய காமத்தையும் அழித்திடுவாய் என்ற பிராரத்தனை.

“இந்திரியாநாம் சாபலாத் த்வத்பாதார்சாவிமுகஹ்ருதய” என்ற சொற்றொடர்,

“மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய” என்றும், “இந்திரிய வயமயங்கி இறப்பதற்கே காரணமாய்” என்றும் மாணிக்கவாசகர்

கூறுவதிற்கு ஒப்பு.

இந்திரிய கட்டுப்பாடில்லை என்றால் “பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்கு” என்று மாணிக்கவாசகர்  கூறும் புலையனாவோம் நாம் என்பதை ஆத்ம நிந்தனை மூலம் நமக்கு எடுத்துரைத்து, பொய்மையைப் பெருக்காதே என்று அறிவுரைக்கும் ஸ்லோகம் இது.

ஸ்லோகத்தின் உட்கருத்து

இந்த ஸ்லோகம் “ஆத்ம நிந்தை” – தன்னுடைய குற்றங்களைக் கூறுதல் என்ற வடிவில் அமைந்துள்ளது. இத்தகைய ஸ்லோகங்கள் மூலம் நாம அறிவது, அரிதாகப் பெற்ற இப்பிறவியின் மூலம் நமக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடக் கூடாது. இடைவிடாது இறைவன் நாமத்தில் நிலைத்திட வேண்டும் என்று முந்தைய இரு ஸ்லோகங்களில் கூறப்பட்ட கருத்து இந்த ஸ்லோகத்திலும் வலியுறுத்தப்படுகிறது. 

பெறுதற் கரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற் கரிய பிராணடி பேணார்
பெறுதற் கரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற் கரியதோர் பேறிழந் தாரே!!  

திருமந்திரம் (2090)

“ஸம்ப்ராப்தே, ஸந்நிஹிதே காலே, நஹி நஹி ரக்‌ஷதி டுக்ருங்கரணே”  என்கிறார் ஆதி சங்கரர், பஜ கோவிந்தத்தில்.

ஏன் இறைவன் நாமத்தை சொல்ல வேண்டும் என்ற கேள்வி எழலாம். இறைவனே இதற்கு பகவத்கீதையில் 8வது அத்தியாயத்தில் பதில் அளிக்கிறார்:

अन्तकाले च मामेव स्मरन्मुक्त्वा कलेवरम् ।
यः प्रयाति स मद्भावं याति नास्त्यत्र संशयः ॥८- ५॥
அந்தகாலே ச மாமேவ ஸ்மரந்முக்த்வா கலேவரம் | 
ய: ப்ரயாதி ஸ மத்³பா⁴வம் யாதி நாஸ்த்யத்ர
ஸம்ஸ²ய: ||

பகவத் கீதை 8.5

இறுதிக் காலத்தில் உடம்பைத் துறந்து எனது நினைவுடன் இறப்போன் எனதியல்பை எய்துவான். இதில் ஐயமில்லை என்கிறான் கண்ணன்.

இறைவாக்கு பொய்யாகுமோ?

ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 6

ஸ்லோகம்

ध्यायन्तस्त्वां कतिचन भवं दुस्तरं निस्तरन्ति
त्वत्पादाब्जं विधिवदितरे नित्यमाराधयन्तः ।
अन्ये वर्णाश्रमविधिरताः पालयन्तस्त्वदाज्ञां
सर्वं हित्वा भवजलनिधौ एष  मज्जामि घोरे ॥ ६॥

த்யாயந்தஸ்த்வாம் கதிசந பவம் துஸ்தரம் நிஸ்தரந்தி
த்வத்பாதாப்ஜம் விதிவதிதரே நித்யமாராதயந்த: ।
அந்யே வர்ணாஶ்ரமவிதிரதா: பாலயந்தஸ்த்வதாஜ்ஞாம்
ஸர்வம் ஹித்வா பவஜலநிதௌ ஏஷ மஜ்ஜாமி கோரே ॥ 6॥

தமிழாக்கம்

உனைத் தியானித்து நிச்சயம் கடந்திடுவர் கடத்தற்கரியதை சிலர் ! 

மறைவழி முறையாய் அனுதினம் உனை வழிபடுவர் வேறு சிலர் ! 

வாழ்வியல் வகுவழி வாழ்ந்து  களித்து உனதாணை காப்பர் சிலர் ! 

இவையேதுமின்றி கோரப் பிறவிப்பெருங்கடல் மூழ்கியுளேனே!! 6

சொற்களின் பொருள்

கதிசந – சிலர் 

த்வாம் – உன்னை

த்யாயந்த: – தியானிப்பவர்களாய் 

துஸ்தரம் – கடத்தற்கரிய (பிறவிப்பெருங்கடலை)

நிஸ்தரந்தி – நிச்சயமாக கடந்துவிடுகின்றனர்

இதரே – வேறு சிலர் 

த்வத்பாதாப்ஜம் – உன் திருவடித் தாமரைகளை 

விதிவத் – மறைகளில் கூறப்பட்டுள்ளபடி

நித்யம் – நாள்தோறும் 

ஆராதயந்த: – முறையாக வழிபடுகிறார்கள்

அந்யே – வேறு சிலர 

வர்ணாஶ்ரம விதி ரதா: – வாழ்வியல் வகுத்த நெறி வழி நடந்து மகிழ்ந்து, வர்ணாஸ்ரம விதிகளைக் கடைப்பிடித்து மகிழ்பவர்களாய்

த்வதாஜ்ஞாம் – த்வத் ஆஜ்ஞாம் – உனது ஆணையை 

பாலயந்த: – காப்பாற்றுகிறார்கள்

ஸர்வம் – இவை அனைத்தையும்

ஹித்வா – விட்டுவிட்டு, தவிர்த்து

ஏஷஹ – இந்த 

கோர – கொடூரமான

பவஜலநிதௌ – பிறவிப் பெருங்கடலில்

மஜ்ஜாமி – மூழ்கிக் கிடக்கிறேன், அந்தோ! 

பொருள் விளக்கம்

இந்த ஸ்லோகம் “உன்னை நான் அணுகவும தண்ணருள் வகுக்க இலையோ” என்று இறையிடம் தாயுமானவர் தன்னைத் தாழ்ந்த நிலையில் வைத்துப் பாடுதல் போல அமைந்துள்ளது. அடக்கம் அமரருள் உய்க்கும் என்பதற்கிணங்க, அப்பைய தீக்‌ஷிதரின் தன்னடக்கத்தின் வெளிப்பாடு இந்த ஸ்லோகம்.

இறையை அடைய உலகோர் கடைப்பிடிக்கும் மூன்று வழிகளைக் கூறுகிறார் தீக்‌ஷிதர். 

  1. தியான மார்கம் (நிதித்யாஸன மார்கம்)
  2. வேதங்கள் கூறும் வைதீக கர்ம அனுஷ்டானம் 
  3. வாழ்வியல் நெறிகள்வழியான லௌகீக கர்மானுஷ்டானம்

1. தியான மார்கம்

“த்யாயந்தஸ்த்வாம் கதிசந பவம் துஸ்தரம் நிஸ்தரந்தி” என்ற முதல் சொற்றொடருக்கான விளக்கத்தை நாம் பகவத் கீதையில் காணலாம். 

“தை3வீ கு3ணமயீ ஏஷா மம மாயா து3ரத்1யயா (பகவத் கீதை 7.14), தெய்வீகமானதும்  (ப்ரம்மனை அதிஷ்டானாமாகக் கொண்டதும்), குணங்களின் வடிவமுமான இந்த என்னுடைய மாயையானது கடப்பதற்கு கடினமானது” என்றும், “எண்ணற்ற மனிதர்களுள் யாரோ ஒருவர்தான் மோக்‌ஷ மார்கத்தில் முயற்சிக்கிறார். முயற்சி செய்து மோக்‌ஷ மார்க்கத்தில்  இருப்பவர்களுள்ளும் யாரோ ஒருவர்தான் என்னை அறிகிறார்”

“மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு க1ஶ்சித்3யத1தி1 ஸித்3த4யே |
யத1தா1மபி ஸித்3தா4னாம் க1ஶ்சின்மாம் வேத்2தி2 த1த்1த்1வத1: ||7.3||

என்றும் அறிவுரைக்கிறான் கண்ணன் பகவத் கீதை (7.3).

அத்தகைய சிலர் மெய்யறிவு பெற்று, சுண்ணாம்புக் காளவாசலில் அடைத்து எரிக்கப்பட்டபோதும் 

“மாசில் வீணையும் மாலை மதியமும் 

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் 

மூசுவண்டறைப் பொய்கையைப் போன்றதே 

ஈசன் எந்தை இணையடி நிழலே” 

என்ற திருநாவுக்கரசரின் மன உறுதி, ஒருமைப்பாடு, மன அமைதிகண்டு கடந்து செல்கின்றனர் 

மலர்மிசை ஏகினான் மாண்டி சேரந்தார்

நிலமிசை நீடு வாழ்வார் (குறள் 3)

என்ற திருக்குறள், இத்தகையோரைக் குறிப்பது.

2. வேதங்கள் கூறும் வைதீக கர்ம அனுஷ்டானம் 

வழிபாட்டிற்கான சாஸ்த்திர விதி, நமது மறைகளில் தெளிவாக உள்ளது.

“ஆசமநம், ப்ராணாயாமம், விக்னேஸ்வர வந்தனம், குரு வந்தனம், ஸங்கல்பம், தீப பூஜா, கண்ட பூஜா, கலஸ பூஜா, ஸங்க பூஜா, ஆத்ம பூஜா, பீட பூஜா, த்யாநம், ஆவாஹநம், ஆஸநம், பாத்யம், அர்க்யம், ஆசமநம், ஸ்நாநம், வஸ்த்ரம் (ஆபரணம், பூணூல்), புஷ்பமாலா, அர்ச்சநா, தூபம், தீபம், நைவேத்யம், மங்களாரத்தி,  மந்த்ர புஷ்பம், ஸ்வர்ண புஷ்பம், பாரிஜாத புஷ்பம், வேத கோஷம், சத்ரசாமராதி (தர்ப்பண) உபசாரங்கள், ப்ரதக்‌ஷிணம், நமஸ்காரம், ப்ராரத்தநா”, ஸமர்ப்பணம்

என்ற பகுதிகளடங்கியவை இவை.

அனுதினமும் இவ்வழிமுறைகளை கடைப்பிடிப்பத “த்வத்பாதாப்ஜம் விதிவதிதரே நித்யமாராதயந்த:” என்று கூறிகிறார் அப்பையர். 

3. வாழ்வியல் நெறிகள் வழியான லௌகீக கர்மானுஷ்டானம்

சமூகத் தொழில்களைப் பற்றியது வர்ண தர்மங்கள்; தனி மனித கடமைகளைப் பற்றியது ஆஸ்ரம தர்மங்கள்.

வர்ணம் என்பது தொழிற் குழு.  அவரவர் தொழிற்குழு விதிப்படி பணி புரிந்து இறையின் நியமத்தை கடைப்பிடிக்கின்றனர்.

ப்ரம்மச்சாரி, க்ருஹஸ்தன், வானப்பரஸ்த்தன், சந்யாஸி ஆகியோர் அவரவருக்குறிய தர்மங்களை கடைப்பிடிக்கிறார்கள். 

தனிமனித வாழ்க்கைக்குறிய பொறுப்புகளையும், சமூகப் பொறுப்புகளையும் இறைப்பணி என்ற மனப்பாண்மையுடன் (கர்ம யோகம்) நிறைவேற்றுவதன் மூலம், இறைவனை வழிபடுகிறார்கள் 

பகவத் கீதை 18.41 முதல் 45 வரை இதனையே கூறுகிறது. இதன் விளக்கத்தை முந்தைய ஸ்லோகம் 5ல் கண்டோம்.

அப்பையரின் நிலை உரைத்தல்

ஆறறிவு பெற்ற மானிடர் அனைவருமே “துன்பம் தவிர்த்து நிலையான தூய இன்பமடையவே அவர்தம் பணிகளின் குறிக்கோளாக வைத்து அவரவர் பணிகளைப் புரிகின்றனர்” என்பதில் ஐயமேதுமில்லை.

நம் மறைகள், அறத்தின் வழி நின்று, பொருள் தேடி, முறையாக இன்பம் துய்த்து வீடுபேறடைதல் என்ற வழி முறையைக் கூறுகின்றன. இதனை “புருஷார்த்தம்” என்பர்.

அந்த வீட்டினை  அடைய முயலும் நம் அனைவரின் வாழ்க்கையிலும், அன்றாடம் இடைவிடாது முக்கியமான மூன்று பெரும் தத்துவங்கள் தொடர்பு கொள்கின்றன. அவை, மனிதன், உலகம் (படைப்பு), இறைவன்.

இவைகளை வாழ்வில் உபயோகித்து (அனுபவித்து) , வினைகள் புரிந்து, “பொருள்” தேடி, “இன்பம்” துய்த்து, களைத்து, முடிவில்  “நாம் வந்த கதை என்ன? நாம் கொண்டது என்ன, கொடுப்பது என்ன? மன்னைத் தோண்டி தண்ணீர் தேடும் நாம், நம்மைத் தோண்டி ஞானம் கண்டோமா? இல்லை, நம் மனமெங்கும் தெருக் கூத்து, பகல் வேஷமா?” என்றெல்லாம் பிதற்றி, தன்னை அறிவதே தனது பிறவியின் நோக்கம், அதனை அறிய முயலாமல் வாழ்நாளை வீனாக்கினோமே என துன்பமுற்று, வருந்தி மடிகிறோம்.

பின்னர், ஆதி சங்கரர் கூறியது போல, 

புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனி ஜட2ரே ச’யனம் |
இஹ ஸம்ஸாரே ப3ஹு து3ஸ்தாரே
க்ருபயாsபாரே பாஹி முராரே ||

மீண்டும் பிறப்பு மீண்டும் இறப்பு
மீண்டும் அன்னையின் வயிற்றில் கிடப்பு
கடக்க இயலா கரையிலா கடலே
கடத்திடு எம்மை கருணைக் கடலே

இதனைத்தான் இந்த ஸ்லோகத்தில், ஸர்வம் (இவை அனைத்தையும்) ஹித்வா (விட்டுவிட்டு, தவிர்த்து),ஏஷஹ (இந்த)  கோர (கொடூரமான) பவஜலநிதௌ (பிறவிப் பெருங்கடலில்), மஜ்ஜாமி (மூழ்கிக் கிடக்கிறேன், உலகியல் வாழ்வில் உழல்கிறேன்) – “ஸர்வம் ஹித்வா பவஜலநிதௌ ஏஷ மஜ்ஜாமி கோரே” என்கிறர் தீக்‌ஷிதர். 

ஸ்லோகத்தின் கருப்பொருள்

  1. மறைவழி இறை வழிபாட்டு வழி
  2. செய்யும் தொழிலே தெய்வம் என்ற கர்ம யோக வழி 
  3. தியானம் எனும்  ஞானயோகம் வழி

என்று வாழ்வதனில் பேரின்ப இலக்கை அடைய, இறையினையே இடைவிடாது நாடிட, உலகோர் எடுக்கவேண்டும் என்ற அறிவுரையை உள்வைத்துக் கூறுகிறார் அப்பையர்.

திருஞானசம்பந்தரின் தேவாரப் பதிகம் 3.4 (திருவாவடுதுறை) கூறும் கருத்தும் இதுவே.

இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உன்கழல் தொழுதெழுவேன்
வாழினும் சாவினும் வருந்தினும்போய்
வீழினும் உனகழல் விடுவேன்அல்லேன்

திருஞானசம்பந்தர் தேவாரம்

இறையருள் பெருக ! வளமுடன் வாழ்க !

ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 5

ஸ்லோகம் 5 

त्वं वेदान्तैः प्रथितमहिमा गीयसे विश्वनेतः
त्वं विप्राद्यैर्वरद निखिलैरिज्यसे कर्मभिः स्वैः ।
त्वं दृष्टानुश्रविकविषयानन्दमात्रावितृष्णै-
रन्तर्ग्रन्थिप्रविलयकृते चिन्त्यसे योगिवृन्दैः ॥ ५॥
த்வம் வேதாந்தை: ப்ரதிதமஹிமா கீயஸே விஶ்வநேத:
த்வம் விப்ராத்யைர்வரத நிகிலைரிஜ்யஸே கர்மபி: ஸ்வை: ।
த்வம் த்ருஷ்டாநுஶ்ரவிகவிஷயாநந்தமாத்ராவித்ருஷ்ணை-
ரந்தர்க்ரந்திப்ரவிலயக்ருதே சிந்த்யஸே யோகிவ்ருந்தை: ॥ 5॥

தமிழாக்கம்

வேதாந்தம் பலவாறு புகழ்பாடும்   
வேண்டும் வரமளி உலகநாதன் நீ!
வேதியருட்பட உலகோர் அவரவர்
வினைவழி வேண்டப்படுவோன் நீ!
அகமுடிச்சு அறவே அழிந்திட 
இகபர இன்பதாகம் அழித்திட்ட
யோகியர் புரி தியானமே நீ !! 5

சொற்களின் பொருள்

விஶ்வநேத: – உலகை வழிநடத்திச் செல்பவரே

வரத: – வரமளிப்பவரே 

த்வம் – நீ (தாங்கள்) 

வேதாந்தை: – உபநிஷத்துகளால் 

ப்ரதிதமஹிமா (விவித மஹிமா) – பல்வேறு விதமான மகிமைகளை உடையவராக 

கீயஸே – போற்றிப் புகழ்ந்து பாடப்படுகிறீர் 

விப்ராத்யைர் – அந்தணர் முதலான 

நிகிலைர் – அனைவராலும் 

ஸ்வை: – அவரவர் 

கர்மபி:- கர்மங்களால் 

இஜ்யஸே – வழிபடப்படுகிறீர்

அந்தர்க்ரந்தி – அக முடிச்சுகள், 

ப்ரவிலயக்ருதே – நன்கு அவிழும் பொருட்டு 

த்ருஷ்ட அநுஶ்ரவிக விஷயாநந்தமாத்ரா – இவ்வுலக அவ்வுலக புலனின்பப் பொருட்களில் 

வித்ருஷ்ணைர் – வேட்கையொழிந்த 

யோகிவ்ருந்தை: – யோகியர் கூட்டங்களால்

சிந்த்யஸே – நன்கு தியானிக்கப்படுகிறீர் 

பொருள் விளக்கம்

துன்பம் கலவா இன்பமதனை எப்பொழுதும் வேண்டிடும் நம் அனைவரின் இலக்கு இமைப்பொழுதும் நெஞ்சில் நீங்காத பேரின்பமான இறைவன் ஒன்றே. ஆழ்மனதில் எப்பொழுதும் இறைநினைப்பு இருக்க வேண்டும் என்பதே இந்த ஸ்லோகத்தின் கருப்பொருள்.

இப்பொருளை விளக்கிட, அப்பைய தீக்‌ஷிதர் 

  1. இறையின் மஹிமைகள் உபநிஷத்துக்களால் பலவாறு போதிக்கப்படுகின்றன என வேதங்களை ப்ரமாணமாக முதலில் கூறி 
  2. செய்யும் தொழிலே தெய்வம் என்ற கர்ம யோகத்தின் கருத்தை உள்வைத்து உலகோர் வணங்குவர் உத்தமனை என்று அறிவுரைத்து,
  3. இருமை வகையறிந்து ஈண்டு அறம் பூண்டவர் தியானிப்பதும் அவனையே என்று எடுத்துக்கூறி ஞானயோகம் வழி அவனை அடைவது 

என்று வாழ்வதனில் பேரின்ப இலக்கை அடைய, இறையினையே இடைவிடாது நாடிட வேண்டும் என்று கூறுகிறார் அப்பையர்.

இந்த ஸ்லோகத்தில்,இறைவனை இரண்டு விளி வேற்றுமைச் சொற்கள் (ஸம்போதன ப்ரதமா விபக்தி ஏக வசனம்) கொண்டு அழைக்கிறார்:

1. “விஶ்வநேத:” 

இந்த சொல், உலகை வழிநடத்திச் செல்பவரே என்று பொருள்படும். இந்த வழிநடத்தலை விளக்கிட

ஆக்கி அளித்துத் துடைக்கும் தொழில்

அத்தனை வைத்தும் எள்ளத்தனை யேனும்

தாக்கற நிற்கும் சமர்த்தன் உள்ள – சாக்‌ஷியைச்

சிந்திக்கத் தக்கது தோழி

என்ற தாயுமானவர் பாடல் போதுமானது.

2. ‘வரத” 

வரம் என்பது தேரந்தெடுத்தலைக் குறிப்பது. இங்கே அடியார்களின் தேர்வைக் குறிப்பது. அதாவது, இறைவன், நான் தேரந்தெடுத்ததை அருள்பவர் எனப்பொருள்படும். இதனை பல ஞானியர் எடுத்துரைத்துள்ளனர்:

  1. “எண்ணிய நான் எண்ணியவாறு எனக்கருளும் தெய்வம்” என்கிறார் வள்ளலார் இராமலிங்க அடிகளார்.  
  2. “வேண்டத்தக்கதை அறிவோய் நீ” என்றார் மாணிக்கவாசகர். 
  3. “வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்” என்றார் நாவுக்கரசர். 
  4. “பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப் போகமும் திருவும் புணர்ப்பானை” என்றார் சுந்தரர். 
  5. செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கிறோம் – அவன் எங்களது அறிவினைத் தூண்டி நடத்துக “ என்றான் பாரதி.
  6. சரியானதைத் தேரந்தெடுப்பதற்குரிய நல்ல புத்தியைக் கொடு என்று பிரார்த்திப்பது காயத்ரீ மந்திரம்.

இந்த ஸ்லோகத்தில் “வேதாந்தை: விவித (ப்ரதித) மஹிமா கீயஸே” என்ற சொற்றொடரை  “ வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழந்து அகன்ற நுண்ணியனே” என்றார் மாணிக்கவாசகர்.

அது போல, “விப்ராத்யைர்வரத நிகிலைரிஜ்யஸே கர்மபி: ஸ்வை” என்ற சொற்றொடருக்கு, பகவத் கீதையில் (18.45) : 

ஸ்வே ஸ்வே க1ர்மண்யபி4ரத1: ஸம்ஸித்3தி4ம் லப4தே1 நர: |
ஸ்வக1ர்மனிரத1: ஸித்3தி4ம் யதா2 வின்த3தி1 த1ச்1ச்2ருணு ||

பகவத் கீதை 18.45

மனிதர்கள் தங்கள் உள்ளார்ந்த குணங்களால் பிறந்த தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதன் மூலம், முழுமையை அடைய முடியும். ஒருவருக்கு விதிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதன் மூலம் ஒருவர் எவ்வாறு பரிபூரணமாக முடியும் என்பதை இப்போது என்னிடம் கேள்

என்ற கண்ணனின் அறிவுரை விளக்கமாகிறது. ஒவ்வொருவரும் தங்களது கடமைகளின் மூலம் கடவுளை வழிபடுகிறார்கள். கடமைகளை கடவுள் வழிபாடாகக் கருதி செய்ய வேண்டும். கடவுளுடன் தொடர்புபடுத்தப்பட்ட செயல்களுக்கே கர்மயோகம் என்று பெயர். அது நம்முடைய மனதை பக்குவப்படுத்தும். “யாதாயினும் தொழில் செய்வோம், யாதும் அவன் தொழிலாம்” என்றான் பாரதி.

“அந்தர்க்ரந்தி” எனும் அக முடிச்சுகள் என்ன?  முடிச்சு என்பது அறியாமையினால் ஏற்படும் த்ருட பந்தம் – strong attachment  என விளக்குகிறார் ஆதி சங்கரர்.  அதாவது, என்னைப் பற்றிய, ப்ரபஞ்சத்தைப் பற்றிய, நான் உடல், செல்வம் என்னுடையது, நான் இன்பமாக இருக்கிறேன், நான் துன்பமாக இருக்கிறேன் போன்ற விளைவாகிய எண்ணங்கள்அனைத்தினால் (நல்லது கெட்டது உட்பட, வித்யா, அவித்யா மாயையின் குணங்கள்) முடிச்சுகள் ஏற்படுகிறது. இதனின் விளக்கத்தை

  1. முண்டக உபநிஷத் 2.2.9
  2. கடோபநிஷத் 2.3.15
  3. அஷ்டாவக்ர கீதை – 18.87-88

காணலாம்.

ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 4

ஸ்லோகம்

आनन्दाद्यः कमपि च घनीभावमास्थायरूपं
शक्त्या सार्धं परममुमया शाश्वतं भोगमृच्छन् । भोगमिच्छन्
अध्वातीते शुचिदिवसकृत्कोटिदीप्ते कपर्दिन्
आद्ये स्थाने विहरसि सदा सेव्यमानो गणेशैः ॥ ४॥

ஆநந்தாத்ய: கமபி ச கநீபாவமாஸ்தாயரூபம்
ஶக்த்யா ஸார்தம் பரமமுமயா ஶாஶ்வதம் போகம்ருச்சந் । (போகமிச்சந்)
அத்வாதீதே ஶுசிதிவஸக்ருத்கோடிதீப்தே கபர்திந்
ஆத்யே ஸ்தாநே விஹரஸி ஸதா ஸேவ்யமாநோ கணேஶை: ॥ 4॥

தமிழாக்கம்

பேரின்பப் பெருங் கடல்நீரின்  உறைபனியென
பெயரிலா வடிவமுடன்  உமையொரு பாகனாய்
அழியாப் பேரின்பம் விழைந்து,  இருமூன்று
பாதைகளுக் கப்பால் கோடை கால கோடிசூரிய
ஒளியுடனே என்றும்  முதல்வனாய் உலவுகிறாய், 
முக்கணங்கள் போற்றிடும் செஞ்சடையனே !! 4

சொற்களின் பொருள்

கபர்திந் - ஜடாதாரிந் - சடைமுடி தரித்தோனே (நமஹ் கபர்திநே ச - என்று ஶ்ரீருத்ரம் கூறுகிறது)

ஆநந்தாப்த்ய: - பேரின்பக் கடலின் (இன்பப் பெருக்கின்) அப்தி - நீர், கடல்

கநீபாவம் - உறைவடிவமாக (இறுக்கமாக) கநீ - உறைந்த, இறுகிப்போன

கமபி ச  - (கிமபி ச) ஏதோ ஒரு, வர்ணிக்க முடியாத 

ரூபம் - வடிவத்தை

ஆஸ்தாய - எடுத்துக்கொண்டு

ஶக்த்யா - சக்திதேவியாகிய (மாயையுடன்) 

உமயா  - உமையோடு

ஸார்தம் - கூடியவராய் 

பரமம் - மேலான

ஶாஶ்வதம் - அழிவிலா, நிலையான 

போகம்ருச்சந் । (போகமிச்சந்) - போகம் இச்சந் - இன்பத்தை விரும்பியவராய்

அத்வாதீதே - ஆறு பாதைகளிக்கப்பால், ஆதாரங்களுக்கப்பால்

ஶுசி கோடி திவஸ க்ருத் - கோடைகால கோடி சூரியனுக்கு நிகரான

தீப்தே - ஒளியுடன் 

கணேஶை: - கணங்களால் 

ஸேவ்யமாநோ - வழிபடப்படுவராய் 

ஸதா - எப்பொழுதும்

ஆந்நே ஸ்தாநே - முதலிடத்தில்

விஹரஸி - உலவுகிறீர்

பொருள் விளக்கம்

ஆதிதேவன் வேதங்கள் வாயிலாக அறியப்படுகிறார் – வேதங்கள் சிவபெருமானையே முழுமுதற் கடவுளாக அநுமானத்தின் மூலமாக நமக்கு விளங்க வைக்கிறது என்ற உட்கருத்தை முந்தைய ஸ்லோகத்தில் கூறிய அப்பைய்ய தீக்‌ஷிதர், இந்த ஸ்லோகத்தில் அவ்வித ஆதி தேவனாகிய பரமேசுவரனுக்கு, 

  1. எவ்வித ஸ்வரூபம், 
  2. எந்த ஸ்தானம், 
  3. எவ்வித பரிவாரங்கள் 

என்பதை விரித்துரைக்கின்றார். இறைவனின் உயர்ந்த நிலையை வர்ணிக்கும் ஸ்லோகம் இது. உயர்ந்த நிலையை தியானிப்பவன் எப்பொழுதும் உயர்ந்த நிலையிலேயே இருப்பான். 

இறைவனின் ஸ்வரூபம்

இறைவன் துன்பமே இல்லாத பேரின்ப வடிவமாக இருக்கிறார். இதனை “இன்பமே எந்நாளும் துன்பமில்லை” என்றார் திருநாவுக்கரசர். 

இறைவன் இருப்பது ஆனந்தமலை, ஆனந்தக்கடல். “ஆநந்தாப்த்ய”: “கநீபாவம், அதாவது பேரின்பக் கடலின் (இன்பப் பெருக்கின்), உறைவடிவமாக (இறுக்கமாக) என்பது. ஜலம் உறைந்து பனிக் கட்டியாவது போல் ஆனந்த வெள்ளம் கெட்டியாகி ஒரு ஸ்வரூபமானது என்று சொல்லக்கூடியது பரமேசுவரனின் ஸ்வரூபம். இது நிர்விகல்ப சமாதி நிலையைக் குறிப்பது.

அவருடைய சக்தியே உமையாகி அவரோடு சேர்ந்தது. இதனைக் குறிப்பதே “ஶக்த்யா ஸார்தம் பரமமுமயா”  என்ற சொற்றொடர்.  சக்திதேவியாகிய (மாயையுடன்) உமையோடு கூடியவராய் என்பது சவிகல்ப சமாதியைக் குறிக்கும். 

“ ஶாஶ்வதம் போகம்ருச்சந்” என்ற சொற்றொடருக்கு, இரு விளக்கங்கள் கூறப்படுகின்றன:

  1. இந்த உமையொருபாகனான இறைவனே, உடல் எடுத்து, இந்த பிரபஞ்சத்தில் உள்ள இன்பத்தை அனுபவிக்க விரும்புகிறார் என ஒரு விளக்கம். (பால கிருஷ்ணன் ஆலிலையிலிருந்து கொண்டு, தனது வலது கால் கட்டைவிரலையே சுவைப்பது போல ) 
  1. பரம்மானந்த ஸ்வரூபமான பரம்பொருள் மாயா சக்தியுடன் இணைந்து, உலகில் அனைத்து உயிர்களுக்கும் ஆனந்தத்தைக் கொடுக்க விரும்புகிறார் என்று மற்றொரு விளக்கம்.

அது பழச்சுவையென அமுதமென அறிதற்கு

அரிதென எளிதென அமரரும் அறியார்

என்று இதனை அழகாக வர்ணிக்கின்றார் மாணிக்கவாசகர். 

அத்3வாதீதே – இறைவனின் இடம் (ஸ்தானம்) – விளக்கம்

அத்3வாதீதே என்பது ஆறு பாதைகளைக் கடந்து, ஆறு ஆதாரங்களுக்கு அப்பால், ஆறு தத்துவங்களுக்கு அப்பால்  என்ற பொருளாகும்.  அத்வா என்றால் மார்கம். அத்வாதீதம் என்பது மார்கத்தின் முடிவு (மார்கத்தைக் கடந்தது)

ஆகம சாஸ்த்திரங்களில் இது விரிவாக கூறப்பட்டுள்ளது. இவைகளை உடல், மனம், வாக்கிற்கு அப்பாற்பட்டவராக, ஆன்மீக சாதனையின் எல்லையாக, அதாவது 

  1. மூலாதாரம் முதலான ஆறு ஆதாரங்களைக் கடந்து என்றும்
  • மூலாதாரம் –  தொப்புளுக்குக் கீழ்
  • ஸ்வாதிஷ்டானம் – தொப்புளுக்குக் கீழ்
  • மணிபூரகம் – தொப்புள்
  • அநாஹதம் – ஹ்ருதயம்
  • விஷுத்தி – கழுத்து
  • ஆஞ்ஞா – புருவமத்தி

 2.  இயற்கையின் வெளிப்பாடுகளாகளைக் கடந்ததாகவும்

  • வர்ணம் – எழுத்து
  • பதம் – சொல்
  • மந்த்ரம் – மந்திரம்
  • புவநம் – பிரபஞ்சம்
  • தத்துவம் – ஐம்பூதத் தத்துவங்கள்
  • கலா – ஸூக்‌ஷும ஐம்பூதங்கள்.

அறியலாம்.

ஆக, அரூபமான பரமேசுவரனும் லோகானுக்ரஹத்தின் பொருட்டு லீலா விக்ரஹமெடுத்துக் கொள்ளுகிறார் என்பது சாஸ்திரங்களின் கொள்கை. அவர் இருப்பதோ கோடி ஸூர்யப்ரகாசமான ஒரு ஸ்தானம். அது ஸ்ருஷ்டிக்கு முன்னால் பரமேச்வரனின் இச்சையால் ஆனது. அந்த ஸ்தானம் அத்வாக்கள் என்ற தத்துவங்களுக்கு அப்பாலுள்ளது. வர்ண, பத, மந்த்ர, புவன, தத்வ, கலா என்பன ஆறு அத்வாக்கள், மூலாதார, ஸ்வாதிஷ்டான, மணிபூர, அனாஹத, சிவபதமடைய வேண்டியவர் செல்ல வேண்டும் என்ற உட்கருத்துடையது இந்த ஸ்லோகம்.

அந்த ஸ்தானத்தில் தன் அம்சம் பொருந்தின சிறந்த கணங்களால் ஸேவிக்கப்படுகிறார்.(கணங்கள் – தேவ, ரிஷி, பூத கணங்கள்). 

ஸ்லோகத்தின் கருத்துரை

ஆனந்தமே வடிவான சிவபெருமானை, மாயையுடன் (சக்தியுடன்) கூடி, ஆனந்தத்தை விரும்புவர் போல் செயல் புரியும் பரமேஸ்வரனை, அனைத்து தாவர ஜங்கமும் (பூத கணங்களாய்ப்) போற்றுகின்றன.. 

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே

என்ற திருவாசகமே இந்த ஸ்லோகத்தின் சாரத்தைப் பிரதிபலிக்கிறது.

ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 3

ஸ்லோகம்

इन्द्रं मित्रं वरुणमनिलं पुनरजं विष्णुमीशं
प्राहुस्ते ते परमशिव ते मायया मोहितास्त्वाम् ।
एतैः साकं सकलमपि यच्छक्तिलेशे समाप्तं
स त्वं देवः श्रुतिषु विदितः शम्भुरित्यादिदेवः ॥ ३॥

இந்த்ரம் மித்ரம் வருணமநிலம் பத்மஜம் (புநரஜம்) விஷ்ணுமீஶம்
ப்ராஹுஸ்தே தே பரமஶிவ தே மாயயா மோஹிதாஸ்த்வாம் ।
ஏதை: ஸாகம் ஸகலமபி யச்சக்திலேஶே ஸமாப்தம்
ஸ த்வம் தேவ: ஶ்ருதிஷு விதித: ஶம்புரித்யாதிதேவ: ॥ 3॥

தமிழாக்கம்

அவரவர் உன் மாயையால் மருவுகொண்டு உனை
அமரன் மித்ரன் வருணன் வாயு பிரம்மன் விஷ்ணு 
ஈசனென அழைத்திடுவர் உறுதியுடன் நிச்சயித்து !
இவரனைவரும் எவராற்றலின் துளியில் அடங்கிடுமோ
அப்பரம் ஆதிசம்புவே நீயென அருமறைகள் விளி !! 3

சொற்களின் பொருள்

பரம சிவ - சிவ பெருமானே (மேலான பேரின்ப வடிவே)

தே தே - (படைப்பின் மூல காரணத்தை ஆராய்கிற) அவரவர்கள்

தே- உம்முடைய

மாயையா - மாயையினால்

மோஹிதாஹ - மயக்கமடைந்தவர்களாய் 

த்வாம்- (உலக முதல்வராகிய) உம்மை

இந்த்ரன் - இந்திரன் என்றும்

மித்ரன் - மித்ரன் என்றும்

வருணன் - வருணன் என்றும்

அனிலம் - வாயு என்றும்

பத்மஜம் - ப்ரம்மா - நான்முகன் என்றும்

விஷ்ணு - திருமால் என்றும்

ஈஸம் - ஈசன் (ருத்ரன்) என்றும்

ப்ராஹு - ப்ரகர்ஷ்யேந ஆவுஹு - நிச்சயமாக கூறுகிறார்கள்

ஏதை: ஸாகம் - இவர்கள் எல்லோரும் சேர்ந்து

ஸகலமபி - அனைத்தும்

யத் - எவருடைய

சக்திலேஶே - இறையின் பேர் ஆற்றலின் சிறுதுளியிலே

ஸமாப்தம் - (இவர்கள் அனைவரின் ஆற்றல்களும்) அடங்கிவிடுமோ

ஸஹ - அந்த 

தேவஹ - பரம்பொருளான 

த்வம் - தாங்கள்

ஆதி தேவஹ - முதற்கடவுளான

ஷம்புஹு - சம்பு 

இதி - என்று 

ஶ்ருதிஷு - வேதங்களில்

விதித: - அறியப்படுகிறீர்

விளக்கம்

பகவான் ஷ்ருஷ்டி கர்த்தா. அவருடைய ஸ்வரூபத்தை எவராலும் அறிய முடியாது. ஆனால் அவர் பக்திக்கு வசப்பட்டவர் என்று முதல் ஸ்லோகத்திலும்,

படைப்பு இருப்பதால், படைத்தவன் ஒருவன் இருக்க வேண்டும். ஜடப்பொருளாலும், வரையறைகளுக்கு உட்பட்ட ஜீவன்களாலும் படைக்க முடியாது என்பதனால், அனைத்து ஆற்றலும், அறிவையும் கொண்ட இறைவன் ஒருவனால் தான் இதனைப் படைக்க முடியும். எனவே கடவுள் இருக்கிறார் என்ற அறிவுப்பூர்வமான அநுமானத்தை

அப்பையர், இரண்டாவது ஸ்லோகத்திலும் கூறினார். 

இந்த மூன்றாவது ஸ்லோகம் இந்த அனுமானத்தை  

“ஆதிதேவன், வேதங்கள் வாயிலாக அறியப்படுகிறார் – வேதங்கள் சிவபெருமானையே முழுமுதற் கடவுளாக அநுமானத்தின் மூலமாக நமக்கு விளங்க வைக்கிறது” 

என்ற ஷ்ருதிப் ப்ரமாணத்தை கூறுகிறது.

“வேதங்கள் ஐயா என ஓங்கி அகழ்ந்து அகன்ற நுண்ணியனே” என்கிறார் மாணிக்க வாசகர். இதுவே இந்த ஸ்லோகத்தின் சாரம்.

இந்த நுண்ணியனை,

உயர்வறுயர்நலம் உடையவன் எவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் எவனவன்
அயர்வரும் அமரர்கள் அதிபதி எவனவன்
துயரரு சுடரடி தொழுதெழு என் மன்னே!  

என்று நம்மாழ்வாரும்

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 

என அருணகிரிநாதரும்

விறகில் தீயினன் பாலிற்படு நெய்போல்
மறைய நின்றுளன் மாமணி சோதியான்
உறவுகோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய முன்நிற்குமே 

என திருநாவுக்கரசரும்

பூதலயம் ஆகின்ற மாயை முதல் என்பர் சிலர் 
பொறி புலன் அடங்கும் இடமே பொருள் என்பர் சிலர் 
கரண முடிவு என்பர் சிலர் குணம் போன இடம் என்பர் சிலபேர்
நாத வடிவு என்பர் சிலர் விந்துமயம் என்பர் சிலர் 
நட்டநடுவே இருந்த நாம் என்பர் சிலர் உருவமாம் என்பர் சிலர் 
கருதி நாடில் அருவு. என்பர் சிலபேர்
பேதம்_அற உயிர் கெட்ட நிலையம் என்றிடுவர் சிலர் 
பேசில் அருள் என்பர் சிலபேர்
பின்னும் முன்னும் கெட்ட_சூனியம் அது என்பர் சிலர் 
பிறவுமே மொழிவர் இவையால் பாதரசமாய் மனது சஞ்சலப்படும் அலால் பரம சுக நிஷ்டை பெறுமோ
பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே 

என்று தாயுமானவரும் கூறுகின்றனர்.

இப்படி, அறியதற்கு அரிதான, பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமயமான இறைவனுக்கு ஒரு வடிவத்தை கூறுவதுபோல அமைந்துள்ளது இந்த ஸ்லோகம்.  இறைவனை அறிபவர், “அவரவர் தம்தம் தறிவறி வகை வகை” என்கிறார் நம்மாழ்வார்.

ஆயிரம் தெய்வம் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள் - பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்டாமெனல்
கேளீரோ !  

என பாரதி பண் பாடினான். அப்படிப்பட்ட சாஸ்த்திரம் இறைவனை எப்படி யாருக்கு அறிய வைக்கவேண்டும் என்று வகுத்தறிந்துள்ளது. எனவே

  1. மந்த அதிகாரிக்கு – ஈஸ்வரன் வைகுண்ட வாசி, கைலாஸ நாதன் (நிமித்த காரணம்) 
  2. மத்யம அதிகாரிக்கு – ப்ரபஞ்சமே ஈஸ்வரன்(உபாதாந காரணம்)
  3. உத்தம அதிகாரிக்கு – உன்னிடத்தில் உணர்வாக இருப்பவரே இறைவன் (விவர்த்த காரணம்)

சிவ – சொல் விளக்கம்

சிவ என்றால் மங்கலம், இன்பம் எனப்படும். அதாவது பொறிகளைப் பயன்படுத்தாமல் அறிவால் அறியக்கூடிய இன்பம் எனப்பொருள். இது பேரின்பம். 

“அது பழச்சுவையென அமுதென அறிதற்கு அரிதென எளிதென அமருரும் அறியார் “ என்றும், “உலப்பலா ஆனந்தமாய் தேனினைச் சொரிந்து” என்றும் வர்ணிக்கின்றார் மாணிக்கவாசகர்.

மித்ரம் வருணம் – விளக்கம்

வேத மந்திரங்களில் பெரும்பாலும் மித்ரனையும் வருணனையும் சேர்த்தே சொல்லுவர். வேதத்தில் வருணன் என்பது இருளையும், கரு நீலக் கடலையும், குளிர்ச்சியையும் குறிக்கும். வேத மந்திரங்கள் இதைத் தெளிவாகக் கூறும். மித்ரன் என்பது பல பொருள்களில் வழங்கப்பட்டாலும் சூரியன் என்பதே அதிகம் புழங்கும் அர்த்தம். சூர்ய நமஸ்கார மந்திரங்களில் முதல் மந்திரம் மித்ராய நம: என்பதாகும்.

அரன் நாரணன் நாமம்; ஆன்விடை புள் ஊர்தி;
உரைநூல் மறை; உறையும் கோயில்- வரை,நீர்
கருமம் அழிப்பு, அளிப்பு; கையது வேல் நேமி
உருவம் எரி கார்மேனி ஒன்று

பொய்யாழ்வார்

என்று பொய்யாழ்வர் இந்த மித்ர வருண தத்துவத்தை விளக்கிகிறார். அதாவது,

நாமம்/பெயர்– சிவன், நாராயணன், வாகனம் – ரிஷபம், கருடன், நூல்கள் – ஆகமம், வேதம், வசிப்பிடம் – மலை, கடல் (கயிலை, பாற்கடல்), தொழில்/கருமம் – அழித்தல், காத்தல், ஆயுதம் – திரிசூலம், சக்ராயுதம், உருவம் – அக்கினிப் பிழம்பு, மேகத்தின் கருப்பு, ஆனால் உடல் ஒன்றுதான் (சங்கர நாராயணன், அர்த்த நாரீ)

இதைத் தான் வேதம், மித்ர-வருண என்று சேர்த்துச் சொல்கிறது.

இந்த பெரிய இயற்கை நிகழ்வை, விஞ்ஞான உண்மையைச் சொல்வதால் வேதத்தை என்றுமுள்ள சத்தியம் என்கிறோம்.

காரண ப்ரம்மன் அனைத்திற்கும் மூலகாரணமான இறைவன், பரம்பொருள். கார்ய ப்ரம்மன் தேவதைகள். கார்ய ப்ரம்மர்களுக்கு பொறுப்புகள் உள்ளன. காரண ப்ரம்மத்தின் ஆற்றலின் ஒரு சிறு துளியே இத்தேவதைகளனைத்தின் ஆற்றல். இதனை

ஏகா ச த³ஶ ஶதம் ச ஸஹஸ்ரம் சாயுதம் ச
நியுதம் ச ப்ரயுதம் சார்பு³த³ம் ச ந்யர்பு³த³ம் ச ।
ஸமுத்³ரஶ்ச மத்⁴யம் சான்தஶ்ச பரார்த⁴ஶ்ச
தன்மே மன: ஶிவஸங்கல்பமஸ்து ॥ 13॥

என ஸிவ ஸங்கல்ப உபநிஷத் கூறுகிறது 

அந்த அந்த புராணத்தில் அந்தந்த தேவதைகள் காரணப் பரம்மனாக வழிபடப்படுகிறார்.  உண்மையில் காரண ப்ரம்மத்திற்கு நாம ரூபங்கள் இல்லை. மித்ரம், வருணம் என்று இரு தேவதைகளை கோடிட்டுக் காட்டி இறைவன் எனும் சிவனுடைய ரூபத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், ரூபமில்லா இறைவனை நமக்கு உணர்த்துகிறார் அப்பையர் இந்த மந்திரத்தில்.

ஸ்லோகத்தின் கருப்பொருள்

மனம் வடிவத்தைப் பற்றிக் கொண்டாலும், உண்மையில் இறைவனுக்கு வடிவமில்லை என்ற அறிவுடன் இருக்க வேண்டும்.

சைவமுதல் அளவிலாம் சமயமும் வகுத்து
சமயங்கடந்த மோன சமரச நிலையும் வகுத்த நீ 
மாலறவும் சைவமுதல் மதங்களாகி
மதாதீதமான அருள்மரபு வாழீ 

என்று தாயுமானவர் கூறுவதும் இதுவே.

உண்மையில் வணங்குகின்ற எனக்கும் வடிவமில்லை, வணங்கப்படும் இறைக்கும் வடிவமில்லை. அறியாமையால் என்னை உருவமாக கருதி, காணும் அனைத்தும் நாம, ரூபம் உள்ளவை என அறியாமையினால் எண்ணாத எண்ணமெல்லாம் ஏங்கி ஏங்கித் தவிக்கிறேன். தனித்தன்மைகள் உண்மை என எண்ணுவது மாயை. உணர்ச்சிகள் உண்மை அல்ல, எனினும் உணர்ச்சிகளுக்கு ஒரு வடிகால் தேவை. 

இத்தகைய எண்ணத்தில் நிலைத்திருக்க, மனதை சமநிலைப்படுத்தி, ஒருமுகப்படுத்த வேண்டும். அதற்கு உதவும், அப்பையரின் இந்த ஸ்லோகத்தின் விசாரம். 

உன்னை அறிவாய் – மே தின கவிதை

ஒவ்வொரு முறையும் நான் நியுயார்க் நகரில், மன்ஹாட்டனிற்கு வரும்பொழுதெல்லாம், முதலில் என் மனதில் நிலைப்பது ஒரே ஒரு காட்சிதான்.

விண்ணைத் தொடுமளவு உயர்ந்துள்ள அடுக்குமாடிக் கட்டிடங்களில், தலையைக் கிறுகிறுக்க வைக்கும் உயரத்திலே, மணிக்கு ஐந்திலிருந்து பத்து மைல் வேகத்தில் அடிக்கும் காற்றையும், நீர் உறையும் குளிர் காலத்திலும், உடல் வேகும் கோடை காலத்திலும், நான்கு இரும்புக் கயிற்றில் தொங்கும் தொட்டிலில், காலை முதல் மாலை வரை வாழ்ந்து, உழைக்கும் தொழிலாளிகளைக் கண்டு ஒருவித அச்சத்துடனும் மாளா வியப்புடனும் நான் காணும் காட்சியே அது.

இம்முறை, அத்வைத வேதாந்த மாணவனாகிய எனது உணர்ச்சிகளை வெளிக்கொட்டுவது என்ற முடிவின் விளைவே இக்கவிதை



நான்கு கரும்பொன் கயிற்றினிலே 
நானூறடி தாண்டிய உயரத்திலே
நாடிகள் நலித்திடும் வாதமனிலே
ஆடிடும் காலிலாத் தொட்டிலிலே
பாழும் வயிறுப்பாட்டினால் வாழ்ந்தே
நாளும் உழைத்திடும் நண்பர்களே!
பாவியெனக் கூறவா இவ்வுலகினையே
ஆவிபறக் கஞ்சிதரும் அன்னையெனவா
பாரெங்கு கேட்டிடினும் பதிலில்லையே !
காலிலாக் கட்டில் சேரும் காயத்திற்காகவே
காலிலாத் தொட்டிலில் ஆகாயத்திலே ஆடியே
வாயையும் வயிற்றையும் கட்ட வேண்டியுளதே!
மாயை எனும் வாழ்வுதனில்
இது தேவை என்றிடினும்
தேவை நமக்கு ஒன்றே
அது ஆத்மஞானமெனும் மெய்யறிவே !!

பொன். எழிலரசன்

கர்ம யோகிகள் அனைவருக்கும், உழைப்போர் தின வாழ்த்துகள்!

இறையருள் பெருக! வளமுடன் வாழ்க !

ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 2

ஸ்லோகம்

क्षित्यादिनामवयववतां निश्चितं जन्म तावत्
तन्नास्त्येव क्वचन कलितं कर्त्रधिष्ठानहीनम् ।
नाधिष्ठातुं प्रभवति जडो नाप्यनीशश्च भावः
तस्मादाद्यस्त्वमसि जगतां नाथ जाने विधाता ॥

க்ஷித்யாதிநாமவயவவதாம் நிஶ்சிதம் ஜந்ம தாவத்
தந்நாஸ்த்யேவ க்வசந கலிதம் கர்த்ரதிஷ்டாநஹீநம் ।
நாதிஷ்டாதும் ப்ரபவதி ஜடோ நாப்யநீஶஶ்ச பாவ:
தஸ்மாதாத்யஸ்த்வமஸி ஜகதாம் நாத ஜாநே விதாதா॥

தமிழாக்கம்

புவிமுதல் அங்கமுடை பூதங்களனைத்திற்கும்
உண்டு தோற்றம் என்பது உறுதிபட நிச்சயம் !
வடித்தவனெனும் நிலைகளம் இலாமல் அவை
வடிவங்களென அறியப்படுவதே இல்லை !
தாவரமும் தன்வயமற்ற சங்கமமும் ஒன்றினைத்
தோற்றுவிக்க இயலாது என்பதனால், நாதனே
உலகிற்கு முதல்வனாய் இருந்திடும் உனையே
உருவாக்கமதின் உட்பொருளென அறிவேனே !! 

சொற்களின் பொருள்

நாத - உலகின் தலைவரே!

க்ஷித்யாதிநாம - க்ஷிதி ஆதிநாம - பூமி முதலான (பூமி, பஞ்ச பூதங்கள்) 

அவயவவதாம் - உறுப்புகளுடன் கூடியவைகளுக்கு

ஜந்ம - தோற்றம் (தோன்றியிருக்க வேண்டும்)

தாவத் - என்பது 

நிஶ்சிதம் - உறுதி

கர்த்ரு அதிஷ்டாந ஹீநம் - உருவாக்கியவனின் இருப்பு இல்லாமல் 

க்வசந - எப்பொருளும்

தத - அவை

கலிதம் ஏவ - அறியப்பட்டதே

நாஸ்தி - இல்லை

ஜடோ - உயிரற்ற பொருளால் (ஜடத்தால்) 

அதிஷ்டாதும் - ஒன்றைப் படைப்பதற்கு

ந ப்ரபவதி - இயலாது

அநீஶஶ்ச பாவ: அபி - (வைரயறைகளுடன் கூடிய, தன்வயமற்ற) உயிர,களாலும் 

ந (ப்ரபவதி) - முடியாது

தஸ்மாத் - எனவே

த்வம் - நீங்கள்

ஜகதாம் - உலகிற்கு

ஆத்யஹ - முதல்வராக (காரணமாக)

அஸி - இருக்கிறீர்கள் 

விதாதா - தங்களைப் படைப்பின் காரணமாக

ஞாதே - அறிகிறேன்

விளக்கம்

இந்த பிரபஞ்சம் எண்ணற்ற நிறங்களையும், எண்ணற்ற வடிவங்களையும் உடையதாக இருக்கிறது. இந்த படைப்பு தோன்றியிருக்கிறது என்பது உண்மை. மேலும் படைப்பவன் (கர்த்தா) இல்லாமல், பொருள் இல்லாமல் எந்த ஒரு படைப்பும் இல்லை. எனவே கடவுள் இருக்கிறார். இதனை வேதம் கூறுகிறது. “உலகு ஆதி பகவன் முதற்றே” என்று திருவள்ளுவர் கூறுகிறார். இந்த உலகானது கடவுளை முதலாக உடையதுதான். உலக முதல்வன் ஒருவன் உளன்.  உலகத்திற்கு ஆதி இறைவன். 

பெரியோரின் சொற்களே இந்த இறைவனின் இருப்பிற்கு ஆதாரம் (ப்ரமாணம்). திருவள்ளுவரே கூறுகிறார்

உலகத்தார் உண்டுஎன்பது இல்என்பான் வையத்து
அலகையா வைக்கப் படும் 

என்று குறள் 850ல்.

இந்த ஸ்லோகம் “ஈஸ்வர அர்த்தித்வ நிரூபணம்” – கடவுளின் இருப்பைக் கூறும் ஸ்லோகம் இது. மேலும் 

உயிருள்ளவற்றிலிருந்து உயிரற்றவை தோன்றுகின்றன. உணர்வற்ற பொருளால் இந்த உலகைப் படைக்க முடியாது. சிற்றறிவு உள்ள உயிர்களால் இந்த உலகைப் படைக்க இயலாது.

என்கிறது இந்த ஸ்லோகம்.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதும் இல்லை. நம்முடைய வரையறைகள் நமக்குத் தெரிகின்றது. நமக்குமேல் ஒரு சக்தி இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். அந்த சக்தி “ஆனந்தமயமாய்,  அறிவாய்   இருக்கிறது” என்று கூறுகிறது வேதம். 

வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளே …..

என வானவில்லின் தோற்றத்திற்கு இறைவனை ஒப்பிடுகிறது நாலடியார். எப்போது வரும், எப்போது மறையும் என்பது நமக்குத் தெரியாது.

அத்தகைய “கடவுள் இல்லை என்று சொல்பவன் தன்னையே இல்லை என்று சொல்பவனாகிறான், கடவுள் இருக்கிறார் என்று ஏற்றுக்கொள்பவன் தன்னைக் கடவுளாகவே உணர்கிறான்” என்றும் கூறுகிறது வேதம். எனவே கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும், இறைவனை மறவா மனம் தேவை.

ஜகத் (படைப்பு) காரியம். காரணமில்லாமல் காரியம் இல்லை. ஜடப்பொருளோ, ஜீவர்களோ காரணமாக இருக்க முடியாது. எப்படியோ, காரணம் என்று ஒன்று இருக்க வேண்டும். இறை தத்துவம் இருக்கிறது என்பதற்கு இது ப்ரமாணம்.

ஆக, இறைவன் இருக்கிறான் என்பது குருட்டு நம்பிக்கை அல்ல. அறிவுப்பூர்வமான நம்பிக்கை. எப்படி உடலுக்குப் பின்னால் உயிர் தத்துவம், உணர்வுத் தத்துவம் இருக்கிறதோ, அப்படி இந்த மஹா பிரபஞ்சத்தின் ஆதாரமாக ஓர் உயிர் தத்ததுவம் இருந்தே ஆக வேண்டும் என்று அறிவுப்பூர்வமான அநுமானத்தால் இறையின் இருப்பை புரிந்து கொள்ள வேண்டும். இதனையே வள்ளுவர் முதல் குறளில் பயன்படுத்துகிறார்.

எழுத்தெல்லாம் அகர முதல - இது தெரிந்தது
உலகு ஆதிபகவன் முதற்றே - இது தெரியாதது

தெரிந்ததைக் கொண்டு தெரியாததைப் புரிந்துகொள்வது. இந்த ஸ்லோகம் இதனை விளக்குகிறது.

  1. அனைத்திற்கும் மூலகாரணம் எது?
  2. அந்த மூல காரணம் இருக்கிறதா, இல்லையா?
  3. இருந்தால், அதற்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன?
  4. அதனுடன் தொடர்பு தேவையா?
  5. அத்தகைய தொடர்பால் என்ன கிடைக்கும்?

என விசாரம் செய்யத் தூண்டும் ஸ்லோகம் இது.