ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 13

ஸ்லோகம்

ஸர்வம் க்ஷேப்தும் ப்ரபவதி ஜந: ஸம்ஸ்ருதிப்ராப்தமாக:
சேத: ஶ்வாஸப்ரஶமஸமயே த்வத்பாதாப்ஜே நிதாய ।
தஸ்மிந்காலே யதி மம மநோ நாத தோஷத்ரயார்தம்
ப்ரஜ்ஞாஹீநம் புரஹர பவேத் தத்கதம் மே கடேத ॥ 13॥

தமிழாக்கம்

சுவாசம் அடங்கும் வேளையிலே
உள்ளம் உன்பாதம் பணித்திட்டு 
பிறவி ஈனும் பாபமுழுதும் உதறி 
எறிய இயலும் புரமெரி நாதனே ! 
ஒருகால் அக்காலம் என் உள்ளம்
ஓரிரு நோய் வாய்ப்பட்டு நினைவு
தவறிட்டால் உனதடி பணிந்திட
எங்கனம் எனக்கு கை கூடும் !!  13

சொற்களின் பொருள்

நாத – உயிரின் தலைவனே! ஸ்வாமீ! 

புரஹர – முப்புரத்தை எரித்தோனே 

ஜந: – மனிதன் (உயிர்) 

ஶ்வாஸப்ரஶமஸமயே – மூச்சு நன்கு அடங்கும் சமயம் 

சேத: – மனதை (சித்தத்தை) 

த்வத்பாதாப்ஜே – உன் திருவடித் தாமரைகளில்

நிதாய – பணித்திட்டு (அர்ப்பணம் செய்து) 

ஸம்ஸ்ருதிப்ராப்தம் – பிறவிகளில் வந்து அடைந்திருக்கும் 

ஸர்வம் – அனைத்து

ஆக3ஹ – பாபங்களையும்

ஷேப்தும் – உதறி எறிந்துவிட

ப்ரபவதி – முடியும் (எனினும்,) 

தஸ்மிந் காலே – அந்த சமயத்தில்

யதி – ஒரு வேளை 

தோஷத்ரயார்தம் – வாதம், பித்தம்,கபம் என்ற மூன்று தோஷங்களால் (பீடிக்கப்பட்ட என் உடலால்) 

மம மநோ – என் மனது
ப்ரஜ்ஞாஹீநம் – நினைவு தவறியதாக

பவேத் – ஆகிவிட்டால்

தத் – அப்படி (திருவடித் மாமரைகளில் அரப்பணிக்க)

கதம் மே – எப்படி எனக்கு 

கடேத – கைகூடும்

விளக்கம்

எவ்வித பாபிக்கும் கடைசியாக ஒரு வழி இருக்கிறது. இறக்கும் காலத்தில் இறைவனுடைய திருவடிகளில் மனதைச் செலுத்தி, உயிரை உடலிலிருந்து பிரித்துக்கொண்டால், இந்தப் பிறவியில் செய்த அனைத்து பாபங்களிலிருந்தும் விடுபடலாம். அந்திய காலத்தில் பிரஜ்ஞையுடன் கூடி இருப்பது அரிது. வாத பித்த கபங்களின் விபரீதங்களால் மூர்ச்சை ஏற்பட்டும் விடலாம். ஆகையினால் ப்ராண வியோக சமயத்தில் மனத்தை ஈசுவரனிடம் செலுத்தி ஸர்வ பாபங்களையும் போக்கிக் கொள்ளலாம் என்றும் நிச்சயமாக நம்பியிருக்கவும் முடியாது. நோயின் பிடியில் சிக்கி, தன் நிலை இழந்த மனதால் இறைவனைத் தியானிக்க முடியாது. என் செய்வது என வருந்துகிறார் அப்பையர்.

திருவடித் தாமரை பணிவது பாபங்களை களைந்திடும் – விளக்கம் 

இறைவன் திருவடியைப் பற்றினால், பாவங்கள் களையும் என்று அப்பையர் கூறுவதற்கு ஆதாரம் (ப்ரமாணம்) என்ன என்பதை முதலில் காண்போம்.

இறைவனின் பாத அபிஷேகங்களின் போது வேதத்தில் உள்ள (தைத்ரிய ப்ராஹ்மணம் 3.12.3) சில மந்திரங்கள் உரைக்கப்படும். அதில் ஒன்று

சரணம் பவித்ரம், விததம் புராணம் !
யேன பூதஸ்தரதி துஷ்க்ருதாநி !
யேன பவித்ரேன ஷுத்தேன பூதாஹ !
அதி பாப்மானமராதிம் தரேம !
லோகஸ்ய பவித்ரம் சரணம் நோ லோகே ஸ்திரம் த³தாது !

தைத்ரிய ப்ராஹ்மணம் (3.12.3). 

இறைவன் திருவடி எங்கும் நிறைந்திருக்கிறது, பழமையானது, புனிதமானது. அதுவே அடைக்கலம். அதன் மூலம் எல்லா உயிர்களும் தமது பாபகர்மங்களைத் தாண்டிச் செல்கின்றன. அதே புனிதமானதும், தூய்மையானதும் ஆன அத்திருவடிகளால் தாம் தூய்மை அடைவோமாக !.மிகுந்த பாபங்களையும் நன்கு கடந்துடுவோமாக!……இறைவன் திருவடி நமக்கு நல்ல புத்தியைக் கொடுக்கட்டும் ! 

என்கிறது தைத்ரிய ப்ராஹ்மணம் (3.12.3). 

இறைவன் திருவடிகள் , அறிவினை (ஞானம்) குறிப்பது. 

  1. இடது திருவடி குறிப்பது
    • அபர ஞானம்
    • கர்ம காண்ட ஞானம்
    • உள்ளத்தைப் பக்குவப்படுத்துவது
    • சரியை, (உடலால்) கிரியை (உடலால், வாக்கால்)
  2. வலது திருவடி குறிப்பது
    • பர ஞானம்
    • ஞான காண்ட ஞானம்
    • உண்மையை உணர்த்துவது
    • யோகம்(உள்ளத்தால்), ஞானம்

பாத ஸேவநம் என்பது இறைவனது திருவடி போற்றுதலைக் குறிக்கும். அதாவது, கர்ம காண்டத்தைக் கடைப்பிடித்து (இறையின் இடது திருவடி பற்றி), “சித்த ஸுத்தி” எனும் மனத்தூய்மையை அடைந்து, ஞான காண்டத்தை அறிந்து பரம்பொருளும் (பரமாத்மாவும்) நீயும் (ஜீவாத்மாவும்) ஒன்றே என்ற மெய்யறிவினை (ஆத்ம ஞானம்) அடைவதைக் குறிப்பதே “பதாம்போஜம் பஜ” என்ற சொற்றொடர் குறிக்கிறது.

தோஷத்ரயார்தம் – அல்லது திரிதோடங்கள் – ஓரிரு நோய் – விளக்கம்

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் 

வளிமுதலா எண்ணிய மூன்று 

என்கிறது திருக்குறள் (941).

நம் உடலில் வாதம், பித்தம், கபம் (சிலேட்டுமம்) அல்லது `வளி (காற்று) , அழல் (நெருப்பு) , கபம் (நீர்)’ என்ற மூன்றும் இருக்க வேண்டிய அளவில் சீராக இருக்க வேண்டும். அப்படி அல்லாது ஏதாவது ஒன்று குறைந்தாலோ அல்லது மிகுதியானாலோ அது நோயாக நமது உடலில் தோன்றிவிடும் என்று மருத்துவ உலக நூலோர் கூறுவதாக ஐயன் திருவள்ளுவர் கூறுகிறார்.

  1. வாதத்தில் முக்கியமாக எண்பது நோய்களாகும். நரம்பு வலி, நரம்பு பிடிப்பு, காக்காய் வலிப்பு, பக்கவாதம், வாயு, இரத்த அழுத்தம், இருதய நோய் முதலியவை இதில் அடங்கும்.
  2. பித்தத்தில் முக்கியமாக நாற்பது நோய்களாகும். செரியாமை, வயிற்றுவலி, வயிற்றுப்புண், மஞ்சட்காமாலை, இரத்த சோகை, இரத்த வாந்தி, கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆகியன கெட்டுப் போதல் போன்ற நோய்கள் இதில் அடங்கும்.
  3. சிலேத்துமத்தில் தொண்ணூற்றாறு நோய்கள் முக்கியமானதாகும். அவற்றில் மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு, தடுமன், இருமல், க்ஷயம், ஆஸ்துமா போன்றவை அடங்கும்.

இப்படி இருநூறுக்கும் அதிகமான நோய்களில் ஏதேனும் ஒன்று, வயது முதிர்ந்து, உயிர் பிரியும் தருணம் நம்மைத் தாக்கலாம். அப்போது  இறைவன் திருவடித் தாமரையை எப்படி தியானிப்பது என்று உழல்கிறார் அப்பையர்.

ஹிரண்ய கர்ப்பன் – ஒரு கண்ணோட்டம்

முன்னுரை

பிதாமஹர், வாலறிவன், ஹிரண்யகர்ப்பர், அப்ஜயோனி, பிரஜாபதி, விஸ்வஸ்ரு, விதாதா, விதி, கமலோத்பவ, விரிஞ்சி, அண்டஜ என்னெல்லாம் அழைக்கப்படும் நான்முகக் கடவுளான பிரம்மனைப் பற்றியது தசகம் 7. இந்த தசகத்தின் ஸ்லோகங்களை அறிய முற்படுமுன், பிரம்மனைப் பற்றிய ஒரு கண்ணோட்டம் தேவை நமக்கு. அடியேன் அறிய முற்பட்டதை தசகத்தின் முகவுரையாக அளிக்கிறேன்.

வேதாந்தப் பார்வை

பரமார்த்திகா நிலையில் நிர்குணனாக இருக்கும் பரப்பிரம்மன், மாயையால் பிரதிபலிக்கப்பட்டு, வரையரைகளாலான (அறிபவன்/அறிவது வேறுபாடு, காலம், இடம் போன்றவைகள்), வெளிப்பாடுடைய சகுண பிரம்மனாகிறான். மாயையின் தொடர்புடைய அந்த சகுணப் பிரம்மனின் வெளிப்படா நிலையில் ஈஸ்வரன் (காரணப் பிரம்மன்) என்றும், வெளிப்படும் நிலையில் (manifested state) ஹிரண்யகர்பா, பிரம்மா (நான்முக கடவுள்), காரியப் பிரம்மன் என்றும் அழைக்கப்படுகிறான். 

ஹிரண்யகர்பமே வெளிப்படும் முதல் படைப்பு என்று மறைகள் கூறுகின்றன. வித்தெனும் உள்ளார்ந்த நிலையில், வேர்,  தண்டு, கிளைகள், இலைகள், பூக்கள், காய்கள், கனிகளென மரம் வெளிப்படுவதைப்போல “காரிய ப்ரம்மன்” (வடிவுடை பரமன்) எனும் “ஹிரண்யகர்ப்பா”, மாயையின்  விக்க்ஷேப சக்தியால் வெளிப்படுகிறான்.

ஹிரண்யம் என்றால் பொன்/தங்கம் என்று பொருள்.  அறிவும் பொன்னும் ஒளிமயமானது என்பதால், இங்கே அதற்கு அறிவு என்ற பொருள். பொன் போன்ற ஒளி படைத்த அறிவால், அறியாமையெனும் இருள் நீங்கியது என்பர். கர்ப்பம் என்றால் கருப்பப்பை என்று பொருள். இந்த இடத்தில் அதற்கு உள்ளே என்ற பொருள்.  ஹிரண்ய கர்ப்பம் என்றால், அதனுள் ஒளிமயமான அறிவு என்ற பொருள். முடிவற்ற அறிவு என்பார்கள். அழியா அறிவதனை உள்ளடக்கிய கருவறை. 

அதாவது, அனத்தின் எல்லைகளையும், அனைத்துப் பொருட்களும், அனைத்து உயிரினங்களையும், அனைத்து அண்டங்களையும் அவைகளின் நுண்ணிய நிலையில் அடக்கிய கருப்பை என்று பொருள். இப்படி, முற்றிலும் வெளிப்பட்ட அனைத்து அண்டங்களின் நுண்ணிய நிலையை உள்ளடக்கிய கருப்பையே ஹிரண்யகர்ப்பம் எனக் கூறப்படுகிறது. காரிய பரமனின் முதல் வெளிப்பாடு என்பதனால்,  “ப்ரதமஜ” அல்லது “முதல்பிறவி” என்றும் பொன் கருவரை அழைக்கப்படுகிறது. இதற்கான சமஸ்க்ருத தொழில்நுட்பச் சொல் “ஸம்பூதி”. 

அறிவியல் (பௌதீக) கண்ணோட்டம்

பள்ளித் தோழன் ஒருவனை, நீங்கள் ஒரு மிக நீண்ட காலம் (உதாரணத்திற்கு 50 ஆண்டுகளுக்கு பிறகு) பிறகு ஒரு கூட்டத்தில் பார்க்கும் போது என்ன சொல்வீர்கள்? 

1. “அதோ ! என்னுடைய 5ம் வகுப்பு பள்ளித் தோழன். அதே அங்க அடையாளம். ஐம்பது ஆண்டுகளானாலும் நான் மறக்கவிலை. அவன் பெயர் தாமோதரன்” என்று கூறுவீர்களா?

அல்லது

2. “இடைவிடா தொடர்ச்சித் தாக்குதலால் எண்ணற்ற போட்டான்கள் என் விழித்திரையில் விழுந்து, பார்வை நரம்புகள் வழியாக மின்னனு அலையாய் சென்று தாலமஸ் பின்னுள்ள இருமேடு சென்று அங்கிருந்து என் பிரதானமான காட்சிப்புறனி வழியாக, ஸட்ரையேட் காட்சிப்புறனியில் வண்ணங்களை அடையாளம் கண்டு, பின் பொருட்களை நினைவுக்கு கொண்டுவரும் மூளையின் முன்பகுதி சென்று ஆராய்ந்து என் பள்ளித் தோழன் தாமோதரனை தான் கண்டேன்” என்பீர்களா?

இரண்டும் சரியான கூற்று தான்; முதல் கூற்று பொருள் என்று கூறமுடியாத மனம் ரீதியானது, இரண்டாவது பௌதீகப் பொருளான மூளை ரீதியானது. 

பொதுவாக, மனம் என்பது நம் எண்ணங்கள், உணர்வுகள், நினைவுகள், நம்பிக்கைகளின் ஒருபொருட் சொல்லாக கருதப்படுவது. மனம் பொருட்களால் ஆனது அல்ல. எனினும் மிகவும் சக்தி வாய்ந்தது.

மண்டை ஓட்டுக்குள், மூன்று பவுண்டு எடையுள்ள பாலாடைக்கட்டி போன்ற அமைப்பே,  மனம் என்று நாம் கூறுவதன் பொருள் வடிவமான மூளை என குறைந்த பட்சம் விஞ்ஞானிகளாவது கருதுகிறார்கள்.  நமக்கு சிந்தனையோ அல்லது உணர்வோ தோன்றினால்,  அதற்கு மூளையே காரணம் என்றும், மூளை ந்யூரான்கள் வழி மின்னணு அலைகளச் செலுத்தி நரம்பியல் ரசாயனங்களை உற்பத்தி செய்வதால் அந்த சிந்தனையோ உணர்வோ ஏற்படுகிறது என்றும் கூறுகிறார்கள். நரம்பியல் அறிவியல் அறிஞர்கள் பெரும்பாலானோர், மனம் என்பதற்கு தனி இருப்பு என்று ஒன்றுமில்லை என்று வலியுறுத்துகின்றனர். அது மூளையின் ஆற்றலே தவிர அது சுயேச்சையாக இயங்கும் தன்மை கொண்டதல்ல என்றும் கூறுகின்றனர்.

ஆக, அறிதிறன் நரம்பியல் (cognitive neuroscience), மனித மனதின் உயிரியல் அடித்தளங்களை (biological foundations) கண்டறிய முற்படுகிறது. எப்படி மனச்செயல்பாடுகள் (mental operations) மூளையின் தகவல் செயல்முறை அமைப்பிலிருந்து (information processing architecture) உருவெடுக்கின்றது என்பதை அறிவது ஒரு நோக்கு. எப்படி? மனித மனம், மூளை இரண்டையும் தனிநிலையில் ஆய்வதா அல்லது வேறு பார்வையில் ஆய்வதா? 

நம்முடைய அன்றாட உலகில் நாம் நமக்குச் சொந்தமான அனுபவங்களிலிருந்து, நம்மைச் சுற்றியுள்ள உலகம் கண்டு,  சமூக உலகில் பங்கேற்று, , நெறிமுறைகளிலிருந்து வழி தேடி, அழகான அனுபவங்களில் மகிழ்ந்து, அருமை நண்பர்களுடன் பரிவுடன் கலந்து, இந்த அனைத்து அனுபவங்களையும் உள்வாங்கி அதன் அர்த்தங்களைப் புரிந்து கொள்கிறோம். இப்படிப்பட்ட சூழலில் மனித மூளையை தனித்த ஒருவரின் நிலையிலிருந்து பௌதீக ரீதியில் பார்ப்பது எப்படி சரியான அணுகுமுறையாகும்?

அரோன் பார்பே, இல்லினாய்ஸ் பல்கலைக்கழக மன இயல் பேராசிரியருடன் இன்னும் இருவரும் சேர்ந்து நடத்திய ஆராய்ச்சியில் 

“அறிதிறன் நரம்பியலில் (cognitive neuroscience) பொதுவாக ஒருவரின் அறிவின் பிரதிநிதித்துவம் அவரது மூளையில் என்றும், அது ஒருவொருவருக்கிடையே நேருக்கு நேர் பரிமாற்றப்படுகிறது என கருதப்படுகிறது.  காந்த அதிர்வு அலை வரைவு (MRI), கதிரியக்கத் துழாவல் (CT Scan) போன்ற ஆய்வுகள் தனிப்பட் ஒருவரின் மூளயைத் துழாவி அதன் செயல்பாட்டை யூகிக்க முடியும். எங்களின் ஆய்வு அத்தகயை கருத்து சில முக்கியமான நிகழ்வுகளில் சரியில்லை என்பதை நிருபனம் செய்கிறது. இதை ஊர்ஜிதப்படுத்த, சமீபத்தில் ஒரே சமயத்தில் பலர் ஒரே விஷயத்தை சிந்தனை பரிமாற்றம் செய்யும் பொழுது அவர்களின் மூளைகளை அதே சமயத்தில் காந்த அதிர்வு அலகளைப் படம்பிடித்த போது, அவர்களின் மூளைகளின் அதே பகுதிகளில் மின்னணு அலைகளின் ஆக்கம் தெரிந்தது. ஆக, இந்த அறிதிறன் நரம்பியலின் மிகப் பெரிய சவால் என்னவென்றால், ஒருவரின் மூளையில் உறையாமல் அடுத்தவரிடமோ, சமுகத்திடமோ  வெளிக்குத்தகையிலிருக்கும் (outsourced) அறிவை எங்கனம் நாம் அறியமுடிவது என்பதே. ஒருவரின் அறிவாற்றல் என்பது பௌதீக உலகிற்கும், அடுத்தவர்களின் மூளைக்கும் பரவியுள்ளது”  என்று கூறுகிறார்கள்.

மேல்கூறிய கருத்துக்கள், ஆய்வுகள் நம்மை மற்றொரு முக்கியமான தத்துவத்திற்கு அழைத்துச் செல்கின்றன. அதுவே கூட்டுணர்வு (collective consciousness) என்பதாகும்.  கார்ல் ஜங் எனும் புகழ் பெற்ற மனநிலையியல் நிபணர், ஒருவருக்கொருவருடனும், அவர்களின் முன்னோர்களுடனும் தங்களது பகிர்ந்த அனுபவங்கள் மூலம் மனிதர்கள் இணைக்கப்பட்டுள்ளனர் என நம்புகிறார். நம் உள்ளுணர்வு என்பது, நம் சொந்த அனுபவங்கள், நினைவுகள் மட்டுமில்லாமல், மனித குலத்தின் அனுபவங்களும் நினைவுகளும் நிறைந்த களஞ்சியம். அனைத்து மனிதர்களின் உள்ளுணர்வுகளும் இப்படியே. இக்கூட்டுணர்வு மூலமே நாம் உலக வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கொடுக்கிறோம் என கார்ல் ஜங் கருதுகிறார்.

மனம் என்பது பொருளான மூளையின் செயல் அல்லது வினைப் பரிமாணம். கூட்டு மனம் (collective mind) என்பது, பகுதிகள்-முழுமை, தனிநபர்-சமூகம், நிலையான தன்மை-மாற்றம், பகுத்தறிவு-படைப்பாற்றல் இவைகளுக்கிடையே உள்ள எல்லைகள்/வேற்றுமைகளைக் கருதாமல், உறவுகளை ஏற்படுத்துகிறது.  அப்படிப்பட்ட கூட்டுமனம் ஒவ்வொருவரின் மனநிலையையும், கூட்டான மனநிலைக்குதவியும் அந்நிலைகளை புரிந்து கொள்கிறது. 

கூட்டு மனம் / கூட்டு உணர்வைப் படித்தறிய உலகம் முழுவதும் விரிவான விஞ்ஞான ஆய்வு நடக்கிறது.

உயர்நிலை தத்துவ கண்ணோட்டம்

இதுவரை பௌதீக அளவில், உலகத்தில் மனம், மூளை, உணர்வு என்பவைகளப்பற்றிய கருத்துக்களைப் பார்த்தோம் இப்பொழுது, இவைகளை உயர்நிலை தத்துவ ரீதியில் (உலகத்திலிருந்து அண்டங்கள் அடங்கிய ப்ரபஞ்ச நிலை) ஆராய்வோம்.

இரவில் விண்ணை நோக்குங்கள். எத்தனை நட்சத்திர மண்டலங்கள, கோளங்கள்? இந்த பிரபஞ்சத்தை நன்றாகப் பாரத்தபின் இவ்வினாக்கள் நம் மனதில் எழும்.

  1. இந்த நட்சத்திரம் சரி, இது தவறு; இந்த மண்டலம் சரியாக அமைந்துள்ளது, இது இல்லை என்று ஒப்பிடுகிறோமா?
  2. விண்மீன் திரைகளில் ஒன்றின் வெளிப்புற விளிம்புகளில் உள்ள ஒரு சிறிய (!) நட்சத்திரத்தை சுற்றி சுழலும் ஒரு முக்கியமற்ற (!) மண், நீர் கலந்த ஒரு பந்து மீது நாம் வாழ்கிறோம் என்று சிந்திக்கின்றோமா?
  3. உருவாக்கம், பராமரிப்பு மற்றும் அழிவு ஆகியவற்றின் தெளிவாக அமைக்கப்பட்ட செயல்முறைகளை நாம் காண்கிறோமா?
  4. இவைகளையெல்லாம் ஊடுருவி, சுற்றிப் பிணைக்கும் பேருணர்வு எனும் நூலை நாம் காண்கிறோமா?

இவ்வினாக்களுக்கு சரியான விடைகள் உண்டோ இல்லையோ தெரியாது; அது ஒவ்வொருவருன் மனநிலையைச் சார்ந்தது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாகப் புரிகிறது. இவற்றின் பின், எல்லாவற்றிலும் நாம் ஒரு ஒழுங்கு, ஒரு தர்மம்  (இந்த பிரபஞ்சத்தை கையாள்வதில் நமது செயல்களைத்தவிர)  பார்க்கிறோம், இல்லையா? இப்படிப்பட்ட ஒழுங்கு, தர்மத்தை எப்படி இப்பிரபஞ்சம் கடைப்பிடிக்கிறது? இந்த உத்தரவு எங்கிருந்து வருகிறது?  எங்கோ கூட்டு மனம் / கூட்டு நுண்ணறிவு / கூட்டுணர்வு ஒன்று இருந்து  இதை நிலைநாட்டிக் கொண்டிருக்க வேண்டும். அது மட்டும் உறுதி அல்லவா?  என் வார்த்தையை குறிக்கவும். நான் “கூட்டு மூளை” என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை.

என் வரையறுக்கப்பட்ட அறிவைப் பொருத்தவரை அந்த கூட்டு மனம் / கூட்டு நுண்ணறிவு / கூட்டுணர்வு (சமஷ்டி மனம்) என்பதனையே பொன் கருவறை என அழைக்கிறோம். வேதங்களின்படி இதுவே முதல் படைப்பு. 

பொன் கருவறை என்பது அனைத்தின் ஒன்று கூடிய மனம் (புத்தியும் சேர்ந்த) என்பதனால், அந்த அனைத்து நுண்நிலைகளின்  ஒருமித்த நிலை, உடல் மன வளாகத்திலிருக்கும் பொறிபுலன்களுக்கு அப்பாற்பட்டது. எனவே அப்பொறிபுலன்களுக்கு அக்கருவறை புலப்படாது. அந்நிலையில் மாயையின் வெளிப்படுத்தும் (உந்தும்) சக்தியினால், மன உடல் வளாகமுறை ஜீவன், தானே காரணம், தானே நுகர்வோன் என எண்ணி நுண்நிலை இருப்புகளை பருநிலை உலகாகவும், பொருள்களாகவும் வெளிப்படுத்துகிறது. வெளிப்படுத்தியதோடல்லாமல், அப்படி வெளிப்பட்ட உலகமும், பொருட்களும் நிலையானது என்ற தவறான புரிதலும் கொள்கிறது.

ஸம்பூதி உபாஸநா 

ஹிரண்ய கர்பத்தை தியானம் செய்வதே ஸம்பூதி உபாஸநா எனப்படும்.

ஸ்வாமி பரமாரத்தானந்தாவின் போதனைகளை இங்கு மேற்கோளாக காட்டுகிறேன்:

“ஹிரண்யகர்ப்பம் என்பது பொறி புலன்களுக்கு அப்பாற்பட்டது, அவைகளால் அதனை உணரமுடியாது என்றால் அந்த ஹிரண்யகர்பத்தை எப்படி தியானிப்பது? அதற்கு ஒரு யுக்தி உள்ளது.   ஒரு சின்னத்தை (ஆலம்பனம்) பயன்படுத்துவது. கூட்டு மனதின் (சமஷ்டி மனம்) சின்னமாக நம் மனதை (வ்யஷ்டி மனம்) பயன்படுத்துவது. அதாவது, கவனைத்தை நம் மனம்மேல் திருப்பி தியானிப்பதுவே ஹிரண்யகர்ப்ப தியானம்”. இதுவே ஒரு  எளிய விளக்கம்.

சரி, நம் மனம் எங்குள்ளது?  நமது சாஸ்த்திரங்கள், மனது மூளையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்று சொல்கின்றன. மூளை பொறி புலன்களால் அறியக்கூடிய ஒரு பருஉடல் உறுப்பு. மனம் காண இயலா ஒரு நுட்பமான கருவியாகும்.  மரணத்தின் போது, மூளை உடலுடன் எரிந்து சாம்பலாகும். மனம் பிழைத்து, உடல் எரிந்தபின்னர் இன்னொரு உடலைத்தேடி அலையும்.  அறிவியல் இந்த கருத்தை ஏற்கவில்லை.

மறைகள், நமது ஐம்புலன்களுக்கும் (இந்திரியம்) ஏற்ப உடலில் ஐம்பொறிகள் (கோலகம்) உள்ளதை உரைக்கின்றன. உதாரணமாக நமது பார்வைக்கு கண்களே கருவி. குருடர் என்று நாமழைக்கும் மனிதருக்கு பொறிகள் (கோலகம் – கண்கள்) உண்டு புலன் (இந்திரியம் – பார்வை) இல்லை. அதைப்போல நமது மனதின் பொறி (கோலகம்) இதயம் (ஹ்ருதயம்) என்று கூறுகிறர் ஆதி சங்கரர். விழிப்பு நிலையில், மனம் உடலை மேவி பணி புரியும். ஆழ் உறக்க நிலையில் உடலிலிருந்து விலகி அதன் இல்லமான (கோலகம்) இதயத்திற்கு திரும்பும்.  ஹிரண்யகர்பம் என்பது எல்லாம் வல்ல, எல்லாம் அறிந்த கூட்டு மனம்”.

ஸம்பூதி உபாஸநாவின் பலன்கள்

அடிப்படையில் இந்த வழிபாட்டில் பிரதானமாகப் பயன்படுத்தப்படும் நுட்பம், தியானம். இப்படி ஹிரண்யகர்ப்ப (ஸம்பூதியை) தியானிப்பவர்கள், பிரபஞ்சத்தை வழிபடுகிறார்கள். அதாவது அனைத்துப் படைப்புகளும் ஒன்று, இயற்றகையெனும் ப்ரக்ருதியும் ஒன்று என்ற அடிப்படை உணர்வுடன் வழிபடுவது. அந்த உணர்வில் அவர்களும், இயற்கையும் பிரபஞ்சமும் வேறு என்று அவற்றை வழிபடுகின்றனர். அதாவது, இறையும் நானும் வேறு என்ற உட்கருத்துடன் வழிபடுவது.

இவ்வழிபாட்டின் மூலம் இஞ்ஞானிகள் ஓப்பீட்டளவில் அழிவிலா நிலை  அடைந்தாலும், இயற்கையுடன் கலந்திணைந்து மரணத்தைக் கடந்து மறுபிறவி தவிர்ப்பரே (க்ரம முக்தி) அன்றி வீடுபேறு அடைவது என்பது இவ்வகை வழிபாட்டில் இயலாதது. ஏனெனில் அந்த தியானத்தின் உட்கருத்தில் இருமை உளது (நான் வேறு, இறை வேறு). 

அந்த வழிபாடு புரியும் ஞானிகள், பிரம்ம லோகம் என்னும் இறை உலகத்தை ஷுக்ல கதி என்ற பாதை வழி அடைவர் என்று மறைகள் கூறுகின்றன. அந்தப்பாதை இதயத்திலிருந்து தொடங்குவதாய்  மறைகள் கூறுகின்றன. மரணத்தின் போது (உடலை விட்டு உயிர் பிரியும் போது) நுண்ணுடலும், காரண உடலும் இதயத்திற்கு திரும்புகின்றன. அங்கிருந்து தோன்றும, 101 நாடிகளில் ஒன்றான சுஷும்ன நாடி வழியாக மேல்நோக்கி சென்று கபால உச்சி வழியாக, சூரியன் வழியாக பிரம்ம லோகம் அவைகள் அடைந்திடும் என்று மறைகள் உரைக்கின்றன. இதைப்பற்றிய விபரங்கள் இந்த முன்னோக்கில் அடங்க வில்லை என்பதை அறிக.

பிரம்ம லோகம் அடையும் இஞ்ஞானியர் அட்டமா சித்திகளை அடையக்கூடும். எனினும், அவைகளால் அடையும் மகிழ்வும் நிலையற்றதே என மறைகள் கூறுகின்றன.

தசகம் 7 – முதல் ஸ்லோகத்தை அடுத்த பதிவில் காண்போம்.

இறையருள் பெருக ! வளமுடன் வாழ்க !

ஶ்ரீமந் நாராயணீயம் – தசகம் 7 – முகவுரை

ஒருவரின் இயல்பு (“ஸ்வரூபம்”) என்பது, “சத்சித்அனந்தம், சச்சிதானந்தம், இருப்பு -அறிவு (உணர்வு)-பேரின்பம் என்றெல்லாம் அழைக்கப்படும் இருமையற்ற பரம்பொருளான பிரம்மம் என்பதே  என்று அறிந்துணர்வதே அனைத்து மனித முயற்சிகளின் இறுதி இலட்சியம் என்கின்றன நமது மறைகள். இந்த முயற்சிகளின் போது, நாம் பல பிறப்புகளையும் வடிவங்களையும் எடுக்கலாம். எனவே அரிதான இப்பிறவியில் மனிதராகப் பிறந்த, மிகவும் அதிர்ஷ்டசாலிகளான நாம், நமது உண்மை இயல்பான பரம்பொருளெனும் பிரம்மத்தை அறிய, இப்பிறவியிலேயே முயற்சிக்க வேண்டும்.

இம்முயற்சியில் நமக்கு உதவ, ஸ்ரீ. நாராயண பட்டத்திரி தனது காவிய படைப்பான ஸ்ரீமன் நாராயணீயத்தின் முதல் அத்தியாயத்தை (தசகம் 1) இருமையற்ற பிரம்மத்தின் பண்புகள், மகிமை மற்றும் மகத்துவத்தை விவரிப்பதன் மூலம் தொடங்கி, பிரம்மம் இங்கேயே குருவாயூரப்பனின் வடிவத்தில் உடனடியாகக் கிடைக்கிறது என்று கூறினார்.

பின்னர், பரவசத்தில் மூழ்கி, தசகம் 2 இல் பரம்பொருளான, குருவாயூரப்பனின் மகிமையான வடிவத்தை விவரித்தார்.

அடுத்த தசகம் 3, பக்தியில் கவனம் செலுத்துகிறது. பக்தி மார்கம், சுய உணர்தலுக்கான ஆரம்ப பாதையாகவும் இறுதியில் பிரம்மத்தை நோக்கியதாகவும் அவர் கருதுகிறார். இந்த தசகத்தில், தெய்வீக அருளைத் தேடும் ஒரு பக்தரின் உண்மையான இயல்பையும், “வைராக்யம் மற்றும் சிரத்தை”யின் அவசியத்தையும் வலியுறுத்தி அவர் விவரிக்கிறார்.

ஒரு பக்தன்/ ஆன்மீக சாதகன், தன்னுள் இருக்கும் இறையுணர்வினை/ஆன்ம ஆற்றலை அறிந்து அவ்வாற்றலைப் பயன்படுத்தி இறைநிலைக்கு உயர்ந்து இறைவனுடன் ஒன்றிணையும் நிலையே தியான யோகம் எனப்படுகின்றது. இதனைத் தமிழில் தவம் என்பர். இவ்யோக நெறிகள் பலவாகும். அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்றாக விளங்குவது அட்டாங்க யோகமாகும். இவ்வட்டாங்க யோகத்தையே

‘‘இயம நியமமே எண்ணிலா ஆசனம்

நயமுறு பிராணாயாமம் பிரத்தியா காரம்

சயமிகு தாரணை தியானம் சமாதி

அயமுறும் அட்டாங்க மாவது மாமே.

( திருமூலர் – திருமந்திரம்.10 பா.542) என்று திருமூலர் கூறுகிறார்.

தசகம் 4 இல், பட்டத்திரி, இந்த அஷ்டாங்க யோக நுட்பங்களை கோடிட்டுக் காட்டுகிறார். பக்தர்கள் ஆதி அந்தமிலா, நீக்கமற நிறை, இருமைகளிலா பரம்பொருளான குருவாயூரப்பனை அறிந்துணர தியானம் இன்றியமையாத சாதனம்.

அறிவதற்கரிதான இந்த பரம்பொருள் தத்துவத்தை தியானிப்பது என்பது, தேய்ந்து சிதையும் உடல்-மன வளாகத்திற்குள் பிணைக்கப்பட்டு, புறநோக்குடன் பொருளின்பம் தேடும் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு மிகவும் கடினம். எனவே, பட்டத்திரி தசகம் 5 துவங்கி, படிப்படியான அணுகுமுறையின் மூலம் பரம்பொருளான குருவாயூரப்பனை அறிய உதவுகிறார்.

பேரழிவுக் காலமதில் தன்னிடம் ஒடுங்கிய அனைத்தையும், பரம்பொருளான குருவாயூரப்பன் தன் இயக்க இச்சையால், உலகு படைத்திட்ட பரிணாம செயல்முறைகளை விவரிக்கின்றார் தசகம் 5 இல். அண்டங்களனைத்துமடங்கிய மொத்த நுண்நிலை வெளிப்பாடான “ஹிரண்யகர்பம்”, பருநிலை வெளிப்பாடான “விராட்” இரண்டுமே பரம்பொருளான குருவாயூரப்பனே என எடுத்துரைக்கிறார். ஆக, பரம்பொருளை தியானிக்க ஞானியர் புரியும் இரு உபாசனைகளை (ஹிரண்ய கர்ப உபாஸநா, விராட் உபாஸநா) கோடிட்டுக் காட்டுகிறது இந்த தசகம்.

அதைத் தொடர்ந்து “விராட்” என்று அழைக்கப்படும் அண்ட மொத்த பருநிலை வடிவத்தை விளக்குகிறார். வேதங்களில் போற்றப்படும்படி உள்ள, பதினான்கு உலகங்களைக் கொண்ட அண்ட உடல், எண்ணற்ற கைகள், கால்கள், முகங்கள் போன்ற ஒரு வடிவத்தை அவர் முன்வைக்கிறார். தசகம் 6 இல் விராட் ரூப வடிவத்தின் பல்வேறு பகுதிகளை விவரிக்கத் தொடங்குகிறார். அந்தச் செயல்பாட்டில் அவர் பல்வேறு பகுதிகளை பிரபஞ்சத்தின் பல்வேறு பகுதிகளுடன் அடையாளம் காண்கிறார். இது “விராட் உபாஸநா” புரிய உதவம், ஆன்மீக சாதகர்களுக்கு.

“பருநிலையில் முக்குணங்களுடனாகிய “விராட்” வடிவத்தில் கவனம் செலுத்தக்கூடிய இந்த தியான செயல்முறைக்குப் பிறகு, பட்டத்ரி பக்தர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்கிறார் தசகம் 7ல். இதில் குருவாயூரப்பனாக காட்சி தரும் பிரம்மத்தின் வெளிப்பாடு நுட்பமாகிறது. இதில் பரம்பொருளான குருவாயூரப்பனே, “ஹிரண்யகர்ப்பர், நான்முகக் கடவுள், படைப்பாளர் என்றெல்லாம் அழைக்கப்படும் பிரம்மாவின் வடிவமெடுத்து, அண்டங்களின் படைப்புத் தொழிலை நான்முகனாக நடத்துவதை கூறுகிறார் பட்டத்ரி.இது “ஹிரண்யகர்ப உபாஸநா” புரிய உதவம், ஆன்மீக சாதகர்களுக்கு.

பரம்பொருளான, ஶ்ரீ குருவாயூரப்பன் அருளினாலே, தசகம் 7 பற்றிய எனது கல்வியை, இந்த கருட பஞ்சமி நாளில் துவங்கியுள்ளேன். விரைவில், எளியோன் யான் அறிந்ததை, தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இறையருள் பெருக ! வளமுடன் வாழ்க !

Sriman Narayaneeyam – Dasakam 7 – Introduction

 

Understanding and Realising that one’s own nature (“svarupa”) is nothing but the embodiment of Existence-Knowledge-Bliss (called the non dual Brahman),  is the ultimate goal of all  human endeavours. These endeavours may cover several births and forms of ours. We, the extremely fortunate ones to be born as humans in this birth, therefore should endeavour to Understand and Realise the Brahman, our true Selves. 

To help us in our endeavour, Sri. Narayana Bhattathri begins the first Chapter (Dasakam 1) of his epic creation Sriman Narayaneeyam by describing the characteristics , glory and greatness of the non dual Brahman and states that Brahman is readily available, right here in the form of Lord Guruvayurappan Himself. 

Subsequently, overcome with ecstasy, he describes the glorious form of Lord Guruvayurappan in Dasakam 2. 

In the next Dasakam 3, focuses on devotion, which he considers as the earliest path to Self Realisation and ultimately to the Brahman. He describes the true nature of a devotee seeking the divine grace stressing the need for “Vairagya and Shraddha”.

In Dasakam 4, Bhattathri outlines the Ashtanga Yoga techniques, the eight fold discipline of Yoga. This will enable the devotees to practice meditation on the Absolute Brahman, the Existence-Consciousness-Bliss.

As concentrating and meditating on an abstract non dual concept of Existence-Consciousness-Bliss, is extremely difficult for ordinary mortals like us bound inside a decaying body-mind complex, Bhattathri adopts an alternate step by step approach by first describing the Cosmic Evolution processes in Dasakam 5 followed by a presentation of the Cosmic Gross Form called as “Virat”. He presents a picture of the Cosmic Body consisting of the fourteen worlds with innumerable hands, legs, faces etc as the collective living form of all the worlds as extolled in the Vedas. This gross manifestation is with Its inherent three “Gunas” viz., Satva, Rajas and Tamas. This is essentially to facilitate the devotees to do “Virat Upasana”, meditate on the Virat Rupa of Brahman.

He then starts describing the various parts of the form of Virat Rupa in Dasakam 6. In that process he identifies the various parts with the various regions of the Cosmos. This is primarily to assist the faithful devotees to meditate on the form/part of the Brahman in which the devotee is comfortable. 

After this meditation process where the devotees are able to concentrate on Virat form with three “gunas”, Bhattthri is now taking the devotees to the next level where the manifestation of Brahman becomes subtler and the manifested form has “two gunas” viz. Predominant Rajas and traces of Satva., called. “Hiranya Garbha”, generally known as “Brahma”: the Creator.

With the Blessings of Lord Guruvayurappan, I have commenced my study of this Dasakam 7. I will be sharing with you shortly, whatever little knowledge that I get from the study.

God Bless

ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 4

ஸ்லோகம்

आनन्दाद्यः कमपि च घनीभावमास्थायरूपं
शक्त्या सार्धं परममुमया शाश्वतं भोगमृच्छन् । भोगमिच्छन्
अध्वातीते शुचिदिवसकृत्कोटिदीप्ते कपर्दिन्
आद्ये स्थाने विहरसि सदा सेव्यमानो गणेशैः ॥ ४॥

ஆநந்தாத்ய: கமபி ச கநீபாவமாஸ்தாயரூபம்
ஶக்த்யா ஸார்தம் பரமமுமயா ஶாஶ்வதம் போகம்ருச்சந் । (போகமிச்சந்)
அத்வாதீதே ஶுசிதிவஸக்ருத்கோடிதீப்தே கபர்திந்
ஆத்யே ஸ்தாநே விஹரஸி ஸதா ஸேவ்யமாநோ கணேஶை: ॥ 4॥

தமிழாக்கம்

பேரின்பப் பெருங் கடல்நீரின்  உறைபனியென
பெயரிலா வடிவமுடன்  உமையொரு பாகனாய்
அழியாப் பேரின்பம் விழைந்து,  இருமூன்று
பாதைகளுக் கப்பால் கோடை கால கோடிசூரிய
ஒளியுடனே என்றும்  முதல்வனாய் உலவுகிறாய், 
முக்கணங்கள் போற்றிடும் செஞ்சடையனே !! 4

சொற்களின் பொருள்

கபர்திந் - ஜடாதாரிந் - சடைமுடி தரித்தோனே (நமஹ் கபர்திநே ச - என்று ஶ்ரீருத்ரம் கூறுகிறது)

ஆநந்தாப்த்ய: - பேரின்பக் கடலின் (இன்பப் பெருக்கின்) அப்தி - நீர், கடல்

கநீபாவம் - உறைவடிவமாக (இறுக்கமாக) கநீ - உறைந்த, இறுகிப்போன

கமபி ச  - (கிமபி ச) ஏதோ ஒரு, வர்ணிக்க முடியாத 

ரூபம் - வடிவத்தை

ஆஸ்தாய - எடுத்துக்கொண்டு

ஶக்த்யா - சக்திதேவியாகிய (மாயையுடன்) 

உமயா  - உமையோடு

ஸார்தம் - கூடியவராய் 

பரமம் - மேலான

ஶாஶ்வதம் - அழிவிலா, நிலையான 

போகம்ருச்சந் । (போகமிச்சந்) - போகம் இச்சந் - இன்பத்தை விரும்பியவராய்

அத்வாதீதே - ஆறு பாதைகளிக்கப்பால், ஆதாரங்களுக்கப்பால்

ஶுசி கோடி திவஸ க்ருத் - கோடைகால கோடி சூரியனுக்கு நிகரான

தீப்தே - ஒளியுடன் 

கணேஶை: - கணங்களால் 

ஸேவ்யமாநோ - வழிபடப்படுவராய் 

ஸதா - எப்பொழுதும்

ஆந்நே ஸ்தாநே - முதலிடத்தில்

விஹரஸி - உலவுகிறீர்

பொருள் விளக்கம்

ஆதிதேவன் வேதங்கள் வாயிலாக அறியப்படுகிறார் – வேதங்கள் சிவபெருமானையே முழுமுதற் கடவுளாக அநுமானத்தின் மூலமாக நமக்கு விளங்க வைக்கிறது என்ற உட்கருத்தை முந்தைய ஸ்லோகத்தில் கூறிய அப்பைய்ய தீக்‌ஷிதர், இந்த ஸ்லோகத்தில் அவ்வித ஆதி தேவனாகிய பரமேசுவரனுக்கு, 

  1. எவ்வித ஸ்வரூபம், 
  2. எந்த ஸ்தானம், 
  3. எவ்வித பரிவாரங்கள் 

என்பதை விரித்துரைக்கின்றார். இறைவனின் உயர்ந்த நிலையை வர்ணிக்கும் ஸ்லோகம் இது. உயர்ந்த நிலையை தியானிப்பவன் எப்பொழுதும் உயர்ந்த நிலையிலேயே இருப்பான். 

இறைவனின் ஸ்வரூபம்

இறைவன் துன்பமே இல்லாத பேரின்ப வடிவமாக இருக்கிறார். இதனை “இன்பமே எந்நாளும் துன்பமில்லை” என்றார் திருநாவுக்கரசர். 

இறைவன் இருப்பது ஆனந்தமலை, ஆனந்தக்கடல். “ஆநந்தாப்த்ய”: “கநீபாவம், அதாவது பேரின்பக் கடலின் (இன்பப் பெருக்கின்), உறைவடிவமாக (இறுக்கமாக) என்பது. ஜலம் உறைந்து பனிக் கட்டியாவது போல் ஆனந்த வெள்ளம் கெட்டியாகி ஒரு ஸ்வரூபமானது என்று சொல்லக்கூடியது பரமேசுவரனின் ஸ்வரூபம். இது நிர்விகல்ப சமாதி நிலையைக் குறிப்பது.

அவருடைய சக்தியே உமையாகி அவரோடு சேர்ந்தது. இதனைக் குறிப்பதே “ஶக்த்யா ஸார்தம் பரமமுமயா”  என்ற சொற்றொடர்.  சக்திதேவியாகிய (மாயையுடன்) உமையோடு கூடியவராய் என்பது சவிகல்ப சமாதியைக் குறிக்கும். 

“ ஶாஶ்வதம் போகம்ருச்சந்” என்ற சொற்றொடருக்கு, இரு விளக்கங்கள் கூறப்படுகின்றன:

  1. இந்த உமையொருபாகனான இறைவனே, உடல் எடுத்து, இந்த பிரபஞ்சத்தில் உள்ள இன்பத்தை அனுபவிக்க விரும்புகிறார் என ஒரு விளக்கம். (பால கிருஷ்ணன் ஆலிலையிலிருந்து கொண்டு, தனது வலது கால் கட்டைவிரலையே சுவைப்பது போல ) 
  1. பரம்மானந்த ஸ்வரூபமான பரம்பொருள் மாயா சக்தியுடன் இணைந்து, உலகில் அனைத்து உயிர்களுக்கும் ஆனந்தத்தைக் கொடுக்க விரும்புகிறார் என்று மற்றொரு விளக்கம்.

அது பழச்சுவையென அமுதமென அறிதற்கு

அரிதென எளிதென அமரரும் அறியார்

என்று இதனை அழகாக வர்ணிக்கின்றார் மாணிக்கவாசகர். 

அத்3வாதீதே – இறைவனின் இடம் (ஸ்தானம்) – விளக்கம்

அத்3வாதீதே என்பது ஆறு பாதைகளைக் கடந்து, ஆறு ஆதாரங்களுக்கு அப்பால், ஆறு தத்துவங்களுக்கு அப்பால்  என்ற பொருளாகும்.  அத்வா என்றால் மார்கம். அத்வாதீதம் என்பது மார்கத்தின் முடிவு (மார்கத்தைக் கடந்தது)

ஆகம சாஸ்த்திரங்களில் இது விரிவாக கூறப்பட்டுள்ளது. இவைகளை உடல், மனம், வாக்கிற்கு அப்பாற்பட்டவராக, ஆன்மீக சாதனையின் எல்லையாக, அதாவது 

  1. மூலாதாரம் முதலான ஆறு ஆதாரங்களைக் கடந்து என்றும்
  • மூலாதாரம் –  தொப்புளுக்குக் கீழ்
  • ஸ்வாதிஷ்டானம் – தொப்புளுக்குக் கீழ்
  • மணிபூரகம் – தொப்புள்
  • அநாஹதம் – ஹ்ருதயம்
  • விஷுத்தி – கழுத்து
  • ஆஞ்ஞா – புருவமத்தி

 2.  இயற்கையின் வெளிப்பாடுகளாகளைக் கடந்ததாகவும்

  • வர்ணம் – எழுத்து
  • பதம் – சொல்
  • மந்த்ரம் – மந்திரம்
  • புவநம் – பிரபஞ்சம்
  • தத்துவம் – ஐம்பூதத் தத்துவங்கள்
  • கலா – ஸூக்‌ஷும ஐம்பூதங்கள்.

அறியலாம்.

ஆக, அரூபமான பரமேசுவரனும் லோகானுக்ரஹத்தின் பொருட்டு லீலா விக்ரஹமெடுத்துக் கொள்ளுகிறார் என்பது சாஸ்திரங்களின் கொள்கை. அவர் இருப்பதோ கோடி ஸூர்யப்ரகாசமான ஒரு ஸ்தானம். அது ஸ்ருஷ்டிக்கு முன்னால் பரமேச்வரனின் இச்சையால் ஆனது. அந்த ஸ்தானம் அத்வாக்கள் என்ற தத்துவங்களுக்கு அப்பாலுள்ளது. வர்ண, பத, மந்த்ர, புவன, தத்வ, கலா என்பன ஆறு அத்வாக்கள், மூலாதார, ஸ்வாதிஷ்டான, மணிபூர, அனாஹத, சிவபதமடைய வேண்டியவர் செல்ல வேண்டும் என்ற உட்கருத்துடையது இந்த ஸ்லோகம்.

அந்த ஸ்தானத்தில் தன் அம்சம் பொருந்தின சிறந்த கணங்களால் ஸேவிக்கப்படுகிறார்.(கணங்கள் – தேவ, ரிஷி, பூத கணங்கள்). 

ஸ்லோகத்தின் கருத்துரை

ஆனந்தமே வடிவான சிவபெருமானை, மாயையுடன் (சக்தியுடன்) கூடி, ஆனந்தத்தை விரும்புவர் போல் செயல் புரியும் பரமேஸ்வரனை, அனைத்து தாவர ஜங்கமும் (பூத கணங்களாய்ப்) போற்றுகின்றன.. 

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே

என்ற திருவாசகமே இந்த ஸ்லோகத்தின் சாரத்தைப் பிரதிபலிக்கிறது.

ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 3

ஸ்லோகம்

इन्द्रं मित्रं वरुणमनिलं पुनरजं विष्णुमीशं
प्राहुस्ते ते परमशिव ते मायया मोहितास्त्वाम् ।
एतैः साकं सकलमपि यच्छक्तिलेशे समाप्तं
स त्वं देवः श्रुतिषु विदितः शम्भुरित्यादिदेवः ॥ ३॥

இந்த்ரம் மித்ரம் வருணமநிலம் பத்மஜம் (புநரஜம்) விஷ்ணுமீஶம்
ப்ராஹுஸ்தே தே பரமஶிவ தே மாயயா மோஹிதாஸ்த்வாம் ।
ஏதை: ஸாகம் ஸகலமபி யச்சக்திலேஶே ஸமாப்தம்
ஸ த்வம் தேவ: ஶ்ருதிஷு விதித: ஶம்புரித்யாதிதேவ: ॥ 3॥

தமிழாக்கம்

அவரவர் உன் மாயையால் மருவுகொண்டு உனை
அமரன் மித்ரன் வருணன் வாயு பிரம்மன் விஷ்ணு 
ஈசனென அழைத்திடுவர் உறுதியுடன் நிச்சயித்து !
இவரனைவரும் எவராற்றலின் துளியில் அடங்கிடுமோ
அப்பரம் ஆதிசம்புவே நீயென அருமறைகள் விளி !! 3

சொற்களின் பொருள்

பரம சிவ - சிவ பெருமானே (மேலான பேரின்ப வடிவே)

தே தே - (படைப்பின் மூல காரணத்தை ஆராய்கிற) அவரவர்கள்

தே- உம்முடைய

மாயையா - மாயையினால்

மோஹிதாஹ - மயக்கமடைந்தவர்களாய் 

த்வாம்- (உலக முதல்வராகிய) உம்மை

இந்த்ரன் - இந்திரன் என்றும்

மித்ரன் - மித்ரன் என்றும்

வருணன் - வருணன் என்றும்

அனிலம் - வாயு என்றும்

பத்மஜம் - ப்ரம்மா - நான்முகன் என்றும்

விஷ்ணு - திருமால் என்றும்

ஈஸம் - ஈசன் (ருத்ரன்) என்றும்

ப்ராஹு - ப்ரகர்ஷ்யேந ஆவுஹு - நிச்சயமாக கூறுகிறார்கள்

ஏதை: ஸாகம் - இவர்கள் எல்லோரும் சேர்ந்து

ஸகலமபி - அனைத்தும்

யத் - எவருடைய

சக்திலேஶே - இறையின் பேர் ஆற்றலின் சிறுதுளியிலே

ஸமாப்தம் - (இவர்கள் அனைவரின் ஆற்றல்களும்) அடங்கிவிடுமோ

ஸஹ - அந்த 

தேவஹ - பரம்பொருளான 

த்வம் - தாங்கள்

ஆதி தேவஹ - முதற்கடவுளான

ஷம்புஹு - சம்பு 

இதி - என்று 

ஶ்ருதிஷு - வேதங்களில்

விதித: - அறியப்படுகிறீர்

விளக்கம்

பகவான் ஷ்ருஷ்டி கர்த்தா. அவருடைய ஸ்வரூபத்தை எவராலும் அறிய முடியாது. ஆனால் அவர் பக்திக்கு வசப்பட்டவர் என்று முதல் ஸ்லோகத்திலும்,

படைப்பு இருப்பதால், படைத்தவன் ஒருவன் இருக்க வேண்டும். ஜடப்பொருளாலும், வரையறைகளுக்கு உட்பட்ட ஜீவன்களாலும் படைக்க முடியாது என்பதனால், அனைத்து ஆற்றலும், அறிவையும் கொண்ட இறைவன் ஒருவனால் தான் இதனைப் படைக்க முடியும். எனவே கடவுள் இருக்கிறார் என்ற அறிவுப்பூர்வமான அநுமானத்தை

அப்பையர், இரண்டாவது ஸ்லோகத்திலும் கூறினார். 

இந்த மூன்றாவது ஸ்லோகம் இந்த அனுமானத்தை  

“ஆதிதேவன், வேதங்கள் வாயிலாக அறியப்படுகிறார் – வேதங்கள் சிவபெருமானையே முழுமுதற் கடவுளாக அநுமானத்தின் மூலமாக நமக்கு விளங்க வைக்கிறது” 

என்ற ஷ்ருதிப் ப்ரமாணத்தை கூறுகிறது.

“வேதங்கள் ஐயா என ஓங்கி அகழ்ந்து அகன்ற நுண்ணியனே” என்கிறார் மாணிக்க வாசகர். இதுவே இந்த ஸ்லோகத்தின் சாரம்.

இந்த நுண்ணியனை,

உயர்வறுயர்நலம் உடையவன் எவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் எவனவன்
அயர்வரும் அமரர்கள் அதிபதி எவனவன்
துயரரு சுடரடி தொழுதெழு என் மன்னே!  

என்று நம்மாழ்வாரும்

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 

என அருணகிரிநாதரும்

விறகில் தீயினன் பாலிற்படு நெய்போல்
மறைய நின்றுளன் மாமணி சோதியான்
உறவுகோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய முன்நிற்குமே 

என திருநாவுக்கரசரும்

பூதலயம் ஆகின்ற மாயை முதல் என்பர் சிலர் 
பொறி புலன் அடங்கும் இடமே பொருள் என்பர் சிலர் 
கரண முடிவு என்பர் சிலர் குணம் போன இடம் என்பர் சிலபேர்
நாத வடிவு என்பர் சிலர் விந்துமயம் என்பர் சிலர் 
நட்டநடுவே இருந்த நாம் என்பர் சிலர் உருவமாம் என்பர் சிலர் 
கருதி நாடில் அருவு. என்பர் சிலபேர்
பேதம்_அற உயிர் கெட்ட நிலையம் என்றிடுவர் சிலர் 
பேசில் அருள் என்பர் சிலபேர்
பின்னும் முன்னும் கெட்ட_சூனியம் அது என்பர் சிலர் 
பிறவுமே மொழிவர் இவையால் பாதரசமாய் மனது சஞ்சலப்படும் அலால் பரம சுக நிஷ்டை பெறுமோ
பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம்_அற நிறைகின்ற பரிபூரணானந்தமே 

என்று தாயுமானவரும் கூறுகின்றனர்.

இப்படி, அறியதற்கு அரிதான, பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமயமான இறைவனுக்கு ஒரு வடிவத்தை கூறுவதுபோல அமைந்துள்ளது இந்த ஸ்லோகம்.  இறைவனை அறிபவர், “அவரவர் தம்தம் தறிவறி வகை வகை” என்கிறார் நம்மாழ்வார்.

ஆயிரம் தெய்வம் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள் - பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்டாமெனல்
கேளீரோ !  

என பாரதி பண் பாடினான். அப்படிப்பட்ட சாஸ்த்திரம் இறைவனை எப்படி யாருக்கு அறிய வைக்கவேண்டும் என்று வகுத்தறிந்துள்ளது. எனவே

  1. மந்த அதிகாரிக்கு – ஈஸ்வரன் வைகுண்ட வாசி, கைலாஸ நாதன் (நிமித்த காரணம்) 
  2. மத்யம அதிகாரிக்கு – ப்ரபஞ்சமே ஈஸ்வரன்(உபாதாந காரணம்)
  3. உத்தம அதிகாரிக்கு – உன்னிடத்தில் உணர்வாக இருப்பவரே இறைவன் (விவர்த்த காரணம்)

சிவ – சொல் விளக்கம்

சிவ என்றால் மங்கலம், இன்பம் எனப்படும். அதாவது பொறிகளைப் பயன்படுத்தாமல் அறிவால் அறியக்கூடிய இன்பம் எனப்பொருள். இது பேரின்பம். 

“அது பழச்சுவையென அமுதென அறிதற்கு அரிதென எளிதென அமருரும் அறியார் “ என்றும், “உலப்பலா ஆனந்தமாய் தேனினைச் சொரிந்து” என்றும் வர்ணிக்கின்றார் மாணிக்கவாசகர்.

மித்ரம் வருணம் – விளக்கம்

வேத மந்திரங்களில் பெரும்பாலும் மித்ரனையும் வருணனையும் சேர்த்தே சொல்லுவர். வேதத்தில் வருணன் என்பது இருளையும், கரு நீலக் கடலையும், குளிர்ச்சியையும் குறிக்கும். வேத மந்திரங்கள் இதைத் தெளிவாகக் கூறும். மித்ரன் என்பது பல பொருள்களில் வழங்கப்பட்டாலும் சூரியன் என்பதே அதிகம் புழங்கும் அர்த்தம். சூர்ய நமஸ்கார மந்திரங்களில் முதல் மந்திரம் மித்ராய நம: என்பதாகும்.

அரன் நாரணன் நாமம்; ஆன்விடை புள் ஊர்தி;
உரைநூல் மறை; உறையும் கோயில்- வரை,நீர்
கருமம் அழிப்பு, அளிப்பு; கையது வேல் நேமி
உருவம் எரி கார்மேனி ஒன்று

பொய்யாழ்வார்

என்று பொய்யாழ்வர் இந்த மித்ர வருண தத்துவத்தை விளக்கிகிறார். அதாவது,

நாமம்/பெயர்– சிவன், நாராயணன், வாகனம் – ரிஷபம், கருடன், நூல்கள் – ஆகமம், வேதம், வசிப்பிடம் – மலை, கடல் (கயிலை, பாற்கடல்), தொழில்/கருமம் – அழித்தல், காத்தல், ஆயுதம் – திரிசூலம், சக்ராயுதம், உருவம் – அக்கினிப் பிழம்பு, மேகத்தின் கருப்பு, ஆனால் உடல் ஒன்றுதான் (சங்கர நாராயணன், அர்த்த நாரீ)

இதைத் தான் வேதம், மித்ர-வருண என்று சேர்த்துச் சொல்கிறது.

இந்த பெரிய இயற்கை நிகழ்வை, விஞ்ஞான உண்மையைச் சொல்வதால் வேதத்தை என்றுமுள்ள சத்தியம் என்கிறோம்.

காரண ப்ரம்மன் அனைத்திற்கும் மூலகாரணமான இறைவன், பரம்பொருள். கார்ய ப்ரம்மன் தேவதைகள். கார்ய ப்ரம்மர்களுக்கு பொறுப்புகள் உள்ளன. காரண ப்ரம்மத்தின் ஆற்றலின் ஒரு சிறு துளியே இத்தேவதைகளனைத்தின் ஆற்றல். இதனை

ஏகா ச த³ஶ ஶதம் ச ஸஹஸ்ரம் சாயுதம் ச
நியுதம் ச ப்ரயுதம் சார்பு³த³ம் ச ந்யர்பு³த³ம் ச ।
ஸமுத்³ரஶ்ச மத்⁴யம் சான்தஶ்ச பரார்த⁴ஶ்ச
தன்மே மன: ஶிவஸங்கல்பமஸ்து ॥ 13॥

என ஸிவ ஸங்கல்ப உபநிஷத் கூறுகிறது 

அந்த அந்த புராணத்தில் அந்தந்த தேவதைகள் காரணப் பரம்மனாக வழிபடப்படுகிறார்.  உண்மையில் காரண ப்ரம்மத்திற்கு நாம ரூபங்கள் இல்லை. மித்ரம், வருணம் என்று இரு தேவதைகளை கோடிட்டுக் காட்டி இறைவன் எனும் சிவனுடைய ரூபத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், ரூபமில்லா இறைவனை நமக்கு உணர்த்துகிறார் அப்பையர் இந்த மந்திரத்தில்.

ஸ்லோகத்தின் கருப்பொருள்

மனம் வடிவத்தைப் பற்றிக் கொண்டாலும், உண்மையில் இறைவனுக்கு வடிவமில்லை என்ற அறிவுடன் இருக்க வேண்டும்.

சைவமுதல் அளவிலாம் சமயமும் வகுத்து
சமயங்கடந்த மோன சமரச நிலையும் வகுத்த நீ 
மாலறவும் சைவமுதல் மதங்களாகி
மதாதீதமான அருள்மரபு வாழீ 

என்று தாயுமானவர் கூறுவதும் இதுவே.

உண்மையில் வணங்குகின்ற எனக்கும் வடிவமில்லை, வணங்கப்படும் இறைக்கும் வடிவமில்லை. அறியாமையால் என்னை உருவமாக கருதி, காணும் அனைத்தும் நாம, ரூபம் உள்ளவை என அறியாமையினால் எண்ணாத எண்ணமெல்லாம் ஏங்கி ஏங்கித் தவிக்கிறேன். தனித்தன்மைகள் உண்மை என எண்ணுவது மாயை. உணர்ச்சிகள் உண்மை அல்ல, எனினும் உணர்ச்சிகளுக்கு ஒரு வடிகால் தேவை. 

இத்தகைய எண்ணத்தில் நிலைத்திருக்க, மனதை சமநிலைப்படுத்தி, ஒருமுகப்படுத்த வேண்டும். அதற்கு உதவும், அப்பையரின் இந்த ஸ்லோகத்தின் விசாரம். 

ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 2

ஸ்லோகம்

क्षित्यादिनामवयववतां निश्चितं जन्म तावत्
तन्नास्त्येव क्वचन कलितं कर्त्रधिष्ठानहीनम् ।
नाधिष्ठातुं प्रभवति जडो नाप्यनीशश्च भावः
तस्मादाद्यस्त्वमसि जगतां नाथ जाने विधाता ॥

க்ஷித்யாதிநாமவயவவதாம் நிஶ்சிதம் ஜந்ம தாவத்
தந்நாஸ்த்யேவ க்வசந கலிதம் கர்த்ரதிஷ்டாநஹீநம் ।
நாதிஷ்டாதும் ப்ரபவதி ஜடோ நாப்யநீஶஶ்ச பாவ:
தஸ்மாதாத்யஸ்த்வமஸி ஜகதாம் நாத ஜாநே விதாதா॥

தமிழாக்கம்

புவிமுதல் அங்கமுடை பூதங்களனைத்திற்கும்
உண்டு தோற்றம் என்பது உறுதிபட நிச்சயம் !
வடித்தவனெனும் நிலைகளம் இலாமல் அவை
வடிவங்களென அறியப்படுவதே இல்லை !
தாவரமும் தன்வயமற்ற சங்கமமும் ஒன்றினைத்
தோற்றுவிக்க இயலாது என்பதனால், நாதனே
உலகிற்கு முதல்வனாய் இருந்திடும் உனையே
உருவாக்கமதின் உட்பொருளென அறிவேனே !! 

சொற்களின் பொருள்

நாத - உலகின் தலைவரே!

க்ஷித்யாதிநாம - க்ஷிதி ஆதிநாம - பூமி முதலான (பூமி, பஞ்ச பூதங்கள்) 

அவயவவதாம் - உறுப்புகளுடன் கூடியவைகளுக்கு

ஜந்ம - தோற்றம் (தோன்றியிருக்க வேண்டும்)

தாவத் - என்பது 

நிஶ்சிதம் - உறுதி

கர்த்ரு அதிஷ்டாந ஹீநம் - உருவாக்கியவனின் இருப்பு இல்லாமல் 

க்வசந - எப்பொருளும்

தத - அவை

கலிதம் ஏவ - அறியப்பட்டதே

நாஸ்தி - இல்லை

ஜடோ - உயிரற்ற பொருளால் (ஜடத்தால்) 

அதிஷ்டாதும் - ஒன்றைப் படைப்பதற்கு

ந ப்ரபவதி - இயலாது

அநீஶஶ்ச பாவ: அபி - (வைரயறைகளுடன் கூடிய, தன்வயமற்ற) உயிர,களாலும் 

ந (ப்ரபவதி) - முடியாது

தஸ்மாத் - எனவே

த்வம் - நீங்கள்

ஜகதாம் - உலகிற்கு

ஆத்யஹ - முதல்வராக (காரணமாக)

அஸி - இருக்கிறீர்கள் 

விதாதா - தங்களைப் படைப்பின் காரணமாக

ஞாதே - அறிகிறேன்

விளக்கம்

இந்த பிரபஞ்சம் எண்ணற்ற நிறங்களையும், எண்ணற்ற வடிவங்களையும் உடையதாக இருக்கிறது. இந்த படைப்பு தோன்றியிருக்கிறது என்பது உண்மை. மேலும் படைப்பவன் (கர்த்தா) இல்லாமல், பொருள் இல்லாமல் எந்த ஒரு படைப்பும் இல்லை. எனவே கடவுள் இருக்கிறார். இதனை வேதம் கூறுகிறது. “உலகு ஆதி பகவன் முதற்றே” என்று திருவள்ளுவர் கூறுகிறார். இந்த உலகானது கடவுளை முதலாக உடையதுதான். உலக முதல்வன் ஒருவன் உளன்.  உலகத்திற்கு ஆதி இறைவன். 

பெரியோரின் சொற்களே இந்த இறைவனின் இருப்பிற்கு ஆதாரம் (ப்ரமாணம்). திருவள்ளுவரே கூறுகிறார்

உலகத்தார் உண்டுஎன்பது இல்என்பான் வையத்து
அலகையா வைக்கப் படும் 

என்று குறள் 850ல்.

இந்த ஸ்லோகம் “ஈஸ்வர அர்த்தித்வ நிரூபணம்” – கடவுளின் இருப்பைக் கூறும் ஸ்லோகம் இது. மேலும் 

உயிருள்ளவற்றிலிருந்து உயிரற்றவை தோன்றுகின்றன. உணர்வற்ற பொருளால் இந்த உலகைப் படைக்க முடியாது. சிற்றறிவு உள்ள உயிர்களால் இந்த உலகைப் படைக்க இயலாது.

என்கிறது இந்த ஸ்லோகம்.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதும் இல்லை. நம்முடைய வரையறைகள் நமக்குத் தெரிகின்றது. நமக்குமேல் ஒரு சக்தி இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். அந்த சக்தி “ஆனந்தமயமாய்,  அறிவாய்   இருக்கிறது” என்று கூறுகிறது வேதம். 

வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால்
கால்நிலம் தோயாக் கடவுளே …..

என வானவில்லின் தோற்றத்திற்கு இறைவனை ஒப்பிடுகிறது நாலடியார். எப்போது வரும், எப்போது மறையும் என்பது நமக்குத் தெரியாது.

அத்தகைய “கடவுள் இல்லை என்று சொல்பவன் தன்னையே இல்லை என்று சொல்பவனாகிறான், கடவுள் இருக்கிறார் என்று ஏற்றுக்கொள்பவன் தன்னைக் கடவுளாகவே உணர்கிறான்” என்றும் கூறுகிறது வேதம். எனவே கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும், இறைவனை மறவா மனம் தேவை.

ஜகத் (படைப்பு) காரியம். காரணமில்லாமல் காரியம் இல்லை. ஜடப்பொருளோ, ஜீவர்களோ காரணமாக இருக்க முடியாது. எப்படியோ, காரணம் என்று ஒன்று இருக்க வேண்டும். இறை தத்துவம் இருக்கிறது என்பதற்கு இது ப்ரமாணம்.

ஆக, இறைவன் இருக்கிறான் என்பது குருட்டு நம்பிக்கை அல்ல. அறிவுப்பூர்வமான நம்பிக்கை. எப்படி உடலுக்குப் பின்னால் உயிர் தத்துவம், உணர்வுத் தத்துவம் இருக்கிறதோ, அப்படி இந்த மஹா பிரபஞ்சத்தின் ஆதாரமாக ஓர் உயிர் தத்ததுவம் இருந்தே ஆக வேண்டும் என்று அறிவுப்பூர்வமான அநுமானத்தால் இறையின் இருப்பை புரிந்து கொள்ள வேண்டும். இதனையே வள்ளுவர் முதல் குறளில் பயன்படுத்துகிறார்.

எழுத்தெல்லாம் அகர முதல - இது தெரிந்தது
உலகு ஆதிபகவன் முதற்றே - இது தெரியாதது

தெரிந்ததைக் கொண்டு தெரியாததைப் புரிந்துகொள்வது. இந்த ஸ்லோகம் இதனை விளக்குகிறது.

  1. அனைத்திற்கும் மூலகாரணம் எது?
  2. அந்த மூல காரணம் இருக்கிறதா, இல்லையா?
  3. இருந்தால், அதற்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன?
  4. அதனுடன் தொடர்பு தேவையா?
  5. அத்தகைய தொடர்பால் என்ன கிடைக்கும்?

என விசாரம் செய்யத் தூண்டும் ஸ்லோகம் இது.

ஆத்மார்ப்பண ஸ்துதி – ஸ்லோகம் 1

ஸ்லோகம்

कस्ते बोद्धुं प्रभवति परं देवदेव प्रभावं
यस्मादित्थं विविधरचना सृष्टिरेषा बभूव ।
भक्तिग्राह्यस्त्वमिह तदपि त्वामहं भक्तिमात्रात्
स्तोतुं वाञ्छाम्यतिमहदिदं साहसं मे सहस्व ॥ १॥

கஸ்தே போத்தும் ப்ரபவதி பரம் தேவதேவ ப்ரபாவம்
யஸ்மாதித்தம் விவிதரசனா ஸ்ருஷ்டிரேஷா பபூவ |  
பக்திக்ராஹ்யஸ்த்வமஸி ததபி த்வாமஹம் பக்திமாத்ராத் 
ஸ்தோதும் வாஞ்சாம்யதிமஹதிதம் ஸாஹஸம் மே ஸஹஸ்வ

தமிழாக்கம்

எவரிடம் விதம்விதம் சிருட்டியின் தோற்றம் 
அவர்தனின் பெருமை அறிய வல்லார் உளரோ!
அடைவர் உனை இருப்பினும் பேரன்பினாலே !
அவா எனக்கு அன்பினால் உனைப் போற்றவே !
அடியனின் இம்முரட்டுத் துணிவு பொறுத்திட்டு
அருள் புரிந்திடுவாயே விண்ணவரின் தேவனே !! 1 

சொற்களின் பொருள்

தேவதேவ - தேவர்களுக்கெல்லாம தேவனாக விளங்குபவனே!

யஸ்மாத் - எவரிடமிருந்து

இத்தம் - இத்தகைய 

விவிதரசனா - விதவிதமான (ஆச்சர்யமான)

ஏஷா - இந்த 

ஸ்ருஷ்டி - படைப்பானது

பபூவ - தோன்றியதோ (தோன்றி, நிலைபெற்று, ஒடுங்குகிறதோ)

தே- (அத்தகைய சிறப்பு வாய்ந்த) உம்முடைய

பரம் - மேலான

ப்ரபாவம் - சிறப்புகளை 

கஹ - எவர் 

போத்தும் - அறிவதற்கு, புரிந்து கொள்வதற்கு

ப்ரபவதி - வல்லார் ?

ததபி - இருந்த போதிலும்

த்வாமஹம் - த்வம் இஹம் - நீங்கள் இங்கு

பக்திக்ராஹ்யா - பேரன்பினால் அடையப்படுபவராக இருக்கிறீர்

அஹம் - நான்

த்வாம் - உங்களை 

பக்திமாத்ராத் - பக்தியினால் மட்டும்

ஸ்தோதும் - போற்றித் துதிப்பதற்கு

வாஞ்சாமி - விரும்புகிறேன்

மே- என்னுடைய

இதம் - இந்த 

அதிமஹத - அதிக முரட்டுத்தனமான 

ஸாஹஸம் - துணிச்சலை

ஸஹஸ்வ - பொருத்தருள்வீராக

விளக்கம்

“தேவர்களுக்கு தேவனே! எவரிடமிருந்து இத்தகைய விதவிதமான, வியப்பான இந்த படைப்பானது தோன்றியதோ, அத்தகைய சிறப்பு வாய்ந்த உம்முடைய மேலான, தன்நிகரற்ற சிறப்புகளை, பெருமைகளை, எவரே அறிவதற்கு வல்லவர்? இருந்தபோதிலும், நீங்கள் இங்கு பேரன்பினால் அடையப்படுபவர். நான் உங்களை பக்தியினால் மட்டும் போற்றித் துதிப்பதற்கு விருப்பமுடையவனாக இருக்கிறேன். என்னுடைய இந்த அதிக முரட்டுத்தனமான துணிச்சலைப் பொறுத்தருள்வீர்களாக” என்று இறைவனின் இலக்கணம், பெருமை, அவனை உணரும் வழி இவற்றுடன் துவக்குகிறார் முதல் ஸ்லோகத்தில். இதில் அப்பையரின் பணிவினை நாம் அறியலாம்.

இறைவனின் பெருமை 

இறையின் பெருமையை புகழ்ந்து முடிக்க முடியாது. அதனால்தான்

அம்பரமாம் புள்ளித்தோல் ஆலாலம் ஆரமுதம்
எம்பெருமான் உண்டசதுர் எனக்கறிய இயம்பேடீ
எம்பெருமான் ஏதுடுத்தங் கேதமுது செய்திடினுந்
தன்பெருமை தானறியாத் தன்மையன்காண் சாழலோ!!

தனது பெருமை நோக்காது எத்துணை எளியவனாயும் போந்து எந்தச் செயலையும் திருவருள் காரணமாகப் பிறர் பொருட்டுச் செய்பவன் எங்கள் இறைவன். ஆகவே, புள்ளித் தோலை ஆடையாக உடுத்தமை, ஆலாலத்தை ஆரமுதாக உண்டமை முதலிய எல்லாம் அவனுக்குப் பெருமை ஆவனவேயன்றிச் சிறுமையாகா என “தன்பெருமை தானறியாத் தன்மையன்காண் சாழலோ” என்றார் மாணிக்கவாசகர். 

பகவத் கீதையில் (10.19) “நாஸ்த்1யன்தோ1 விஸ்த1ரஸ்ய மே”- தெய்வீக மகிமைக்கு முடிவே இல்லை என்றும், 

நான்தோ1 ‌ஸ்தி1 மம தி3வ்யானாம் விபூ4தீ1னாம் ப1ரந்த1ப1 |
ஏஷ தூ1த்3தே3ஶத1ஹ ப்1ரோக்1தோ1 விபூ4தே1ர்விஸ்த1ரோ மயா II

பகவத் கீதை 10.40

“எதிரிகளை வென்றவனே! என் தெய்வீக மகிமைகளுக்கு முடிவே இல்லை. நான் உன்னிடம் சொன்னது என் நித்திய மகிமையின் அடையாளம் மட்டுமே” என்றும் (10.40) 

பகவான் கண்ணன் கூறியதை நினைவு கூற வேண்டும்.

படைப்பெனும் வியப்பு

“குதம் ஆஜாதா குதம் இயம் வ்ருஷ்டி” – இவ்வுலகமும் உடலும் எங்கிருந்து வந்தது என்கிறது நாஸதீய ஸூக்தம் (6). 

“ஐன்மாத்ஸத் யதஹ” – பிரம்மம் என்பது யாரிடமிருந்து (உலகின்) தோற்றமும், எஞ்சிய பகுதியும் என்கிறது பிரம்ம சூத்திரம் 1.1.2. இதனை “தடஸ்ய லக்‌ஷணம்” என்பர், அதாவது படைப்பின் காரணத்தை அநுமாநம் செய்கிறோம். 

விதம் விதமான பல்வேறு படைப்பின் தோற்றம் என்பதற்கு “மனஸா அபி அசிந்தய ரசநா ரூபஸ்ய” என ஆதி சங்கராச்சார்யர், 

எண்ணற்ற விதவிதமான படைப்புகளின் ஆச்சர்யத்தை வர்ணிக்கின்றார். 

இதனையே

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின்
நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன !!

என மாணிக்கவாசகர் கூறுகிறார். எனவே, படைப்பையும், படைப்பின் சிறப்பையும், படைப்பின் காரணமான பரம்பொருளையும் அனுதினமும் மறவாது சிந்தித்தல் வேண்டும். 

அன்பெனும் பக்தி

அத்தகைய இறைவன் “அன்பெனும் பிடியுள் அகப்படும் மலை” என வள்ளலாரும், “பக்தி வலையில் படுவோன் காண்க” என மாணிக்கவாசகரும் கூறுகின்றனர்.

“ காதலாகி கணிந்து கண்ணீர் மல்கி, ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது” என்று திருஞான சம்பந்தர் கூறுகிறார். 

“ப4க்1த்யா த்1வனன்யயா ஶக்1ய அஹமேவம்விதோ4 ‌ர்ஜுன | – அர்ஜுனா! அலாதியான கலப்படமற்ற பக்தியினால் மட்டுமே என்னை உன் முன்னால் நின்று இருக்கும் வடிவத்தில் அறிய முடியும்” என கண்ணன் கீதையில் (11.54) அறிவுறுத்துகிறான் இதனையே. 

சிவானந்த லஹரியில் ஆதி சங்கரரின் இந்த பக்தியின் வெளிப்பாட்டினை பல ஸ்லோகங்களில் காணலாம்.  ஆக, நிலையிலா இன்பத்தை தரக்கூடிய உலக இன்பப் பொருட்களின் மீதுள்ள பற்றை நீக்கி, நிலையான இன்பமே வடிவான இறையிடத்தில் அன்பை வைக்க வேண்டும். 

தேனுக்குள் இன்பம் கருப்போ ணிவப்போ
வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்
தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தார்போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே

திருமந்திரம்

அத்தேனுக்குள் இன்பமென, ஊணுக்குள் ஒளிந்திருக்கும் இறைவனை ஊணுருகும் பக்தியாலே உணரமுடியும் என்பதை வலியுறுத்துகிறார் அப்பைய தீட்சிதர்.

அப்பையரின் பணிவு

இந்த ஸ்லோகத்தில்,  “ஸாஹஸம் மே ஸஹஸ்வ – என்னுடைய இந்த அதிக முரட்டுத்தனமான துணிச்சலைப் பொறுத்தருள்வீர்களாக” என்ற சொற்றொடரின் மூலம் அப்பைய தீக்‌ஷிதரின் அடக்கத்தை நாம் அறியலாம்.

கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து 

திருக்குறள் 130

என்று திருவள்ளுவர் கூறுவது போல, கற்க வேண்டியதைக் கற்று (கற்று) , கோபம் வராமல் தன்னைப் பாதுகாத்து (கதம் காத்து), அடக்கமாக இருக்கும் (அடங்கல்) அப்பையரிடம் அறக்கடவுள் (தர்ம தேவதை) குடிகொண்டிருப்பதை, (அறம் செவ்வி ஆற்றின் நுழைந்து) அவரின் பணிவின் மூலம் நாம் அறிய வேண்டும்.

ஆக,

  1. இறைவன் படைப்பிற்கு காரணம்
  2. இறைவனை முழுமையாக அறிய எவராலும் இயலாது
  3. அன்பினால் மட்டுமே அவரை உணரந்து கொள்ள முடியும்
  4. அன்பை வளர்க்க வேண்டுமெனில், ஆண்டவனைப் போற்றிப் புகழ்ந்து மனமுறுகிப் பாட வேண்டும்.
  5. பணிவுடன் பாட வேண்டும். அடக்கத்துடன் ஆண்டவனைப் போற்றிப் புகழந்து பாடினால், மனமாசுகள களையப்படும். மனம் தெளிவடையும். தெளிந்த மனம், இறைவனை க்ரஹிக்கும் ஆற்றல் பெறும்

இதுதான் இந்த ஸ்லோகம் நமக்கு அளிக்கும் அறிவுரை.

அப்பைய தீக்‌ஷிதரின் “ஆத்மார்ப்பண ஸ்துதி” – முகவுரை

“ஸ்துதி” என்றால் புகழுரை. ஆத்மார்ப்பணம் (ஆத்ம அர்ப்பணம்) என்பது தன்னையே (தன்னிடமிள்ள அனைத்தையும்) இறைவனுக்கு அர்ப்பணித்தலைக் குறிப்பதாகும்.

“அன்றே என் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும்

குன்றே அனையாய் என்னை ஆட்கொண்டபோதே

கொண்டிலையோ”

என மாணிக்க வாசகர் கூறுவது போல, 

“துதீய வஸ்து கோவிந்தம் துப்யமேவ ஸமப்ரததே”, அதாவது, உன்னுடைய பொருளை உனக்கே அர்பணிக்கிறேன் என கங்கை நீரை கங்கையிலே அர்ப்பணிப்பது போல,

ஆத்மார்ப்பண ஸ்துதி, நமது அஹங்காரத்தை பழுக்க வைத்து, பக்தியில் லயமாக்குகிறது. பின் அதனை அறிவால் அழித்து ஜீவன் முக்தனாகுவதற்கு வழி வகுக்கிறது.

தன்னுடையது என்ற எண்ணத்தை விடுவதே தானம் (“ஸ்வத்வ நிவ்ருத்திஹி தானம்”) என்கிறார் ஆதி சங்கராச்சார்யர்.

அதனால்தான் யாகங்களில் “இதம் ந மம” – இது என்னுடையதல்ல என ஒவ்வொறு தெய்வத்திற்கும் அளிக்கிறோம். (“ஸோமாய ஸ்வாஹா, ஸோமாய இதம் ந மம” – சோமனுக்கு கொடுத்துவிட்டேன், சோமனுக்குத்தான், எனக்கு இல்லை)

ஆக,

உயிர்களாகிய நாம் சிற்றறிவு உடையவர்கள், இறைவன் அனைத்தும் அறிந்தவன் என்ற சீவன்-சிவன் என்ற வேறுபாடின் (“ஜீவேஸ்வர பேதம்”) அடிப்படையில்தான் இந்த பக்தி நூல் (“பக்தி க்ரந்தம்”) உள்ளது. ஆழ் உறக்கத்தைத் தவிர மற்ற அனைத்து நிலைகளிலும்,  உடல், உணர்ச்சி, விவேக சக்தி இவைகள் நம்மில் வேறு வேறாகவே இருக்கின்றன. த்வைத பக்தி செய்தால்தான் அத்வைத ஞானத்திற்கான மனப்பக்குவத்தை நாம் அடையலாம்.

தே1ஷாம் ஸத1த1யுக்1தா1னாம் ப4ஜதா1ம் ப்1ரீதி1பூ1ர்வக1ம் |
த3தா3மி பு3த்3தி4யோக3ம் த1ம் யேன மாமுப1யாந்தி1 தே1 ||

பகவத் கீதை 10.10

த்வைத பக்தியை நன்கு கடைப்பிடிப்பவர்களுக்குத்தான் அத்வைத ஞானத்தை அளிக்கிறேன் என்று கண்ணன் கீதையில் (10.10) கூறுகிறான்.

துன்பம் கலவாத இன்பம் இறைவன் மட்டுமே. நாம் அனுபவிக்கின்ற புலனின்பங்கள் யாவும் துன்பம் கலந்தவையே. இறையின்பத்தை புலன்களால் உணர முடியாது. எனவே இறைவனை வடிவமுடையவனாக பாவனை செய்து, அவ்வடிவங்களைப் போற்றி, தொழுது, இறையின்பத்தை புலனின்பம் போன்று அனுபவிக்கின்றோம்.

ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமிலார்க்கு ஆயிரம் நாமங்கள் பாடித் தெள்ளேனம் கொட்டாமோ 

என்றார் மாணிக்கவாசகர்.

ஆகவே நாம் புரியும் பக்திக்குப் பின்னால்

  1. இறைவனைப் பற்றிய அறிவு
  2. உயிரைப் பற்றிய அறிவு
  3. உலகம்,உறவுகள் முதலியவை துன்பம் கலந்த இன்பத்தைத்தான் தருகிறது என்ற அறிவு
  4. இந்த இன்ப துன்ப அனுபவிப்பு, பிறவிகள் தோறும் தொடர்வது என்ற அறிவு

இவைகள் இடைவிடாமல் இருந்தால்தான் பக்தி நமக்கு ஆனந்தத்தைக் கொடுக்கும். இல்லையெனில் அதுவும் வெறும் இன்பம் கலந்த துன்ப முயற்சியே. “புல்லாய்ப் பூண்டாய் புழுவாய்…..இத்தாவர சங்கமத்துள் எல்லாம் பிறப்பும் பிறந்து இளைத்தேன்” 

என மாணிக்கவாசகர் கூறுவதை அறிய வேண்டும்.

இறைவனைப் பற்றிய அறிவினைப் பெற்றவுடன் இறைவனிடத்தில் அன்பு தோன்றும். இறைவனிடத்தில் அந்த அன்பு அனைத்தையும் செலுத்த உதவ வேண்டும்  என்று அவனையே பிராரத்தனை செய்ய வேண்டும்.

அத்தகைய பிராரத்தனைகளே, அப்பைய தீக்‌ஷிதரின் அறுபது ஸ்லோகங்கள் அடங்கிய “ஆத்மார்ப்பண ஸ்துதி”.

வரும் ஏப்ரல் துவங்கி, ஒவ்வொரு திங்களிலும், இரண்டு அல்லது மூன்று ஸ்லோகங்களுக்கான விளக்கங்களைக் காண்போம். 

பின் குறிப்பு

விளக்கங்களனைத்தும், பூஜ்யஶ்ரீ ஓம்காரானந்த ஸ்வாமிகளின் அருளுரைகளிலிருந்து, அடியேன் அறிய முற்பட்டது.  பிழைகள் அனைத்தும் என் தவறுகளால் மட்டுமே (அறிவதில், புரிவதில், புரிந்ததைக் கூறுவதில்). தவறுகளைத் திருத்திக் கொள்ள, அடியேனுக்கு அறிவுரை வழங்கவும். மிக்க நன்றி.

“Crowmmunications” – I want to understand

Since childhood days I have watched with wonder how my mom and other lady members in our family call out crows and offer food to them before we commence our lunch. This is a routine affair.

I also learnt as a child that we should be like crows when it comes to sharing food. Crows call out fairly loudly all their family and friends to come and share the food what they got. I have also seen and heard their SOS when one of their clan is injured (sometimes fatally wounded/shot).

How do they communicate with each other in their meetings during their “business as usual” days? I am neither an Ornithologist nor an avid bird watcher to understand this. According to Ornithologists at Cornell Lab, communications by crows may be more complex than other birds.

Strange enough, I now regularly watch with awe their meetings . I decided to record the proceedings. In the month of January 2025, I witnessed 5 such meetings. These meetings happened fairly regularly at the end of the day between 17.45 to 18.30 hrs (just around the sun set time). Their meetings lasted for not more than 5 minutes

I have no clue whatsoever on their communications. But I did notice a striking similarity with how we communicate in a group. The voice modulations, gesticulations (vigorous shaking of their tails), display of restlessness, manoeuvring to get strategic seat for effective communication etc were all there for me to see.

Here is a video clip.

What were they trying to communicate?

Were they trying to share their experiences on a daily basis?

Were they discussing strategies for handling the forthcoming summer?

Were they concerned about the menace from the ever growing population of pigeons?

Were they talking about the radiations fron the Cell Phone towers?

I have absolutely no clue. I can’t hear, I can’t see, I can’t think, yet my intellect surely tells me that they had SOMETHING in them that sets an agenda for them to discuss daily, even though THAT which sets the agenda and which EXISTS is beyond my sensory perceptions.

After all, Vedas tell me that, THAT SOMETHING which is beyond my sensory perceptions EXIST inside me and in-fact is ME (tat tvam asi). Vedas do tell me that the same EXISTS inside them too.

That something that EXISTS in me and as me and in those crows too, is what I want to understand and nothing else.

For me understanding THAT SOMETHING is enough. Rest are all perishables and really doesn’t matter.